ஞாயிறு, 15 நவம்பர், 2009

சிவபூஜையில் கரடி!

நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.

கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நான் இந்த சொல்லாடலை நினைக்க காரணம் இருக்கிறது. நான் முன்பு எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அவர்களது பூஜை முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அந்த நேரத்தில் யாரும் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் அப்பா பூஜை செய்யும்போது 'கரடி' போல குறுக்கிட்டு இடையூறு செய்தார் ஒருவர்.

அவர் வேறு யாருமல்ல. எங்கள் ஊர் மணியக்காரர் தான். அவர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊரைச்சேர்ந்தவர். அதோடு எங்களுக்கு தூரத்து உறவினரும் கூட.

(1980 க்கு முன்னால், கிராமங்களில் அரசுக்கு வரவேண்டிய நிலவரி வசூலிப்பதற்கும் மற்றும் மற்றைய வருமான (Revenue) சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதற்கும் மணியக்காரர் என்றும் கணக்கப்பிள்ளை என்றும் அலுவலர்கள் இருந்தார்கள். 1980 ல் திரு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இந்த பதவிகளை அவசர சட்டத்தின் மூலம் நீக்கிவிட்டு கிராம வளர்ச்சி அலுவலர் என்ற ஒரே பதவியை ஏற்படுத்தினார். அவர்கள் அப்போது முழு நேர அரசு ஊழியர்கள் இல்லை என்றாலும் கிராமத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஏனெனில் அவர்கள் நினைத்தால் ஒன்றுக்கும் உபயோகமில்லாத நிலத்திற்கு வரியை உயர்த்த முடியும். மாட்டு வண்டியை தெருவில் நிறுத்தினால் வரி வசூலிக்க முடியும்.அதனாலேயே அவர்களை யாரும்பகைத்துக்கொளவதில்லை.)

அந்த நிகழ்வு நடந்த நாளில், எங்கள் ஊருக்கு தாசில்தார் தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வைப்பு நிதி பெற வந்திருந்தார். அவர் வருவதை முன்பே தண்டோரா போட்டு தெரிவித்திருந்தனர். அன்றும், ஏன் இன்றும் கூட அரசின் சேமிப்பு பத்திரங்கள் வற்புறுத்திதான் விற்கப்படுகின்றன! எல்லோரும் தாசில்தார் வந்ததும் சாவடி அருகில் கூடினர். அப்பா பூஜையில் இருந்ததால் உடனே போகமுடியவில்லை.

அப்பா வரவில்லை என கணக்கப்பிள்ளை சொல்லியிருக்கிறார்.
உடனேதாசில்தார் 'ஏன் அவர் வரமாட்டாராமா? போய் அழைத்து வாருங்கள்' என சொன்னதும் மணியக்காரர் 'நானே போய் அழைத்து வருகிறேன்' என சொல்லி எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவிடம் எங்கள் அப்பா எங்கே எனக்கேட்டதும் அவர்கள் பூஜையில் இருப்பதாகக் கூறி, பூஜை முடிந்தும் வருவார் என கூறினார்கள்.

அவர் உடனே.'என்ன பெரிய பூஜை! தாசில்தார் வந்திருக்கிறார். அவர் கூப்பிட்டிருக்கும்போது வரவேண்டாமா? எனக்கூறிவிட்டு விடுவிடு என்று அப்பா பூஜை செய்யும் இடத்திற்கே வந்து சப்தம் போட்டு அப்பாவைக்கூப்பிட்டார்.

அம்மா 'அவர்களை பூஜை செய்யும்போது தொந்தரவு செய்யாதீர்கள்' என சொல்லியும் கேட்காமல் அப்பா பூஜை செய்யும்போது இடையூறு செய்தார். ஆனால் அப்பா எதுவுமே நடக்காதது போல் பூஜையிலே ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிவ பூஜையை நடக்க விடாமல் இப்படி தடுக்கிறாரே என்ன ஆகுமோ என பேசிக்கொண்டார்கள்.

அப்பா பூஜை முடிந்தவுடன் தாசில்தாரை போய் பார்த்து வந்தார்கள். அப்பாவும் மணியக்காரரிடம் 'ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' எனக்கேட்கவில்லை. எல்லோரும் அப்பாவிடம் 'அவர் உறவினாயிருந்தும் உங்களைப்பற்றி அறிந்திருந்தும் இவ்வாறு செய்தாரே?' என சொன்னபோதும் அப்பா ஒன்றும் சொல்லவில்லை.

இது நடந்து ஓரிரு நாட்களில் அந்த மணியக்காரருக்கு 'பக்க வாத நோய்' வந்து கையும் காலும் செயலிழந்து வாய் பேசமுடியாமல் குழறுகிறார் என செய்தி வந்த போது 'சிவ பூஜையை தடுத்ததால் தான் அவருக்கு இந்த தண்டனை' என்று ஊரே சொல்லியது. அவர் கடைசிவரை அவ்வாறு இருந்தே காலமானார்.

'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல்' அவருக்கு ஏற்பட்டது அவரது உடற்கூறு காரணமாக நடந்திருக்கலாம். அவர் அப்பாவின் பூஜையை தடுத்ததற்கும் அவருக்கு ஏற்பட்ட வியாதிக்கும் தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனாலும் கூட 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பழமொழி உண்மைதானோ!

வெள்ளி, 6 நவம்பர், 2009

நினைவோட்டம் 15

ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகள் வரை தான் அரியலூரில் படித்தேன்.ஆனாலும் அங்கு கிடைத்த அனுபவங்களும் பயிற்சிகளும் பிற்காலத்தில் உதவியது என்பது உண்மை. இப்போது நினைத்தாலும், நான் படித்த பள்ளியும், அதன் எதிரே இருந்த நாங்கள் நோட்டு புத்தகங்கள் வாங்கும் 'நடேசன் ஸ்டோர்'- ம், மதியம் நாங்கள் சாப்பிட செல்லும் செட்டி ஏரியின் படிக்கட்டுகளும் ஏரியில் பூத்திருந்த தாமரைப்பூக்களும்
என்னை 1954 ம் ஆண்டுக்கே அழைத்து சென்று ஆறாம் வகுப்பு மாணவனாக்குகிறது என்பது நிஜம்.

எனது மாமா வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜாஜி நகரில் இருந்தது. அங்கிருந்து நான் படித்த பள்ளி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். காலையில் எனது மாமா மகனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவேன். மாலையில் பள்ளி விட்டதும் மாமா கோர்ட்டிலிருந்து வரும்போது எங்களை அவரது மாட்டு வண்டியில் அழைத்து வந்துவிடுவார்.

எனது மாமாவின் வீட்டிற்கு 'Law Mansion' என்ற பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அந்த பெயரின் பொருள் புரியாதபோதிலும் அதனால் கவரப்பட்டு எனது புத்தகங்களின் மேல் அட்டையில் எனது பெயருக்குப் பின்னால் B.A.B.L என எழுதி 'Law Mansion' எனக்குறிப்பிட்டு இருப்பேன். எனது மாமா வழக்கறிஞராக இருந்ததால் அவருக்கு வரும் கட்சிக்காரர்கள், வழக்கு வெற்றி பெற்றதும் வந்து மாமாவை வாழ்த்தியதைப்பார்த்து, நாமும் இவ்வாறு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.

எங்களது மாமா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் குற்றவியல் வழக்குகளையும் எடுத்து நடத்தியதால் வீட்டில் எந்த நேரமும் வழக்காடும் கட்சிக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கட்சிக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் படிக்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சரியான 'மண்டகப்படி' கிடைக்கும்.

எனது மாமா மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். காலையில் 5 மணிக்கே எழுப்பிவிட்டு படிக்க சொல்வார். மாலையில் திரு கல்யாணசுந்தரம் அய்யர் என்ற ஆசிரியரை டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் நன்றாக படித்தாலும் அவசியம் டியூஷன் ஆசிரியரிடம் படிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் நான் எனது டியூஷன் ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களைப்பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர்.கண்டிக்கவேண்டிய வேளையில் கண்டித்து சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவார். அவர் போன்ற கடமையில் கண்ணான ஆசிரியர்கள் இப்போது குறைவு என்றே நான் சொல்லுவேன். நான் சேர்ந்த முதலாம் ஆண்டு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிகள் அறிவித்தபோது என்னை கட்டாயப்படுத்தி பெயர் கொடுக்கசொல்லி கலந்துகொள்ளவைத்தார். என்னை பேச தயார் படுத்தி இரண்டு போட்டியிலும் முதல் பரிசை பெற காரணமாயிருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் பின்னால் மேடையில் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சரளமாக தடையின்றி, பயமின்றி பேச உதவியது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

நான் கடலூரில் வங்கியில் மேலாளராக இருந்தபோது,அவர் பண்ருட்டியில் அவரது மூத்த மகன் வீட்டில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டேன். அவரை, பார்க்க சென்றபோது என்னைப்பெருமையுடன் அவரது குடும்பத்தார்க்கு அறிமுகப்படுத்தியபோது, நான் நானாக இல்லை என்பதே உண்மை. அவரது மகன் தாசில்தாராக இருந்தும் அவர் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லை என்பதை அறிந்தபோது எனது ஆசான் எவ்வாறு தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும், இவர் போன்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகம் இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். காரணம் உங்களுக்கே தெரியும். தாசில்தாரராக இருந்த அவர் மகன் நினைத்திருந்தால் வானொலிப்பெட்டி என்ன தொலைக்காட்சிப்பெட்டியையே பெற்றிருக்கமுடியும்!

அப்போது நினைத்துகொண்டேன், சும்மாவா சொன்னார்கள் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

புதன், 7 அக்டோபர், 2009

நினைவோட்டம் 14

அப்போதெல்லாம் பொதுத்தமிழ் என்று ஒரு பாடம் எல்லோரும் படித்தாகவேண்டும். சிறப்புத்தமிழ் என்ற பாடம் விருப்ப பாடமாக இருந்தது. சிறப்புத்தமிழுக்கு பதில் வடமொழி(சமஸ்கிருதம்) படிக்கலாம்.

அப்பா எனக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்திருந்ததால், வட மொழி படிப்பது சுலபமாக இருக்கும் என்று, அதை சிறப்புப்பாடமாக எடுக்க சொன்னார்கள். அப்பா சொன்னதால் நான் வடமொழியை எனது சிறப்பு பாடமாக எடுத்தேன். மேலும் எனது இரண்டாவது அண்ணன் அதே அரியலூர் பள்ளியில் வடமொழியை இரண்டாம் பாடமாக எடுத்து படித்து, பின் இண்டர்மீடியட்டிலிலும் அதையே எடுத்து படித்திருந்ததால் எனக்கு அந்த பாடத்தை எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லாதிருந்தது.

ஆனால் முதன்முதல் வடமொழி வகுப்புக்கு சென்றபோது எனக்கு அந்த ஆசிரியரிடமிருந்து வரவேற்பு சரியாக இல்லை. காரணம் எனக்கு திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும், நான் வடமொழி தெரியாத குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், என்னால் அந்த மொழியை படிக்கமுடியுமா என நினைத்ததாலும், 'என்னப்பா, உனக்கு சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தால் வருமா?' என சந்தேகத்தோடே அவர் கேட்டபோது, நான் 'சார் எனக்கு ஹிந்தி எழுத்துகள் தெரியுமாதலால், நிச்சயம் நன்றாக படிப்பேன் சார்' என்றேன். அவர் என்னை எழுதச்சொல்லி பார்த்துவிட்டு, திருப்தி அடைந்தவராய் பாடங்களை தொடர்ந்தார்.

ஆனால் எனது வடமொழி படிப்பு தொடர்ந்து நீடிக்கவில்லை. காரணம், அரியலூருக்கு வந்த எனது பெரியம்மா மகன், என்னிடம் 'ஏன் சமஸ்கிருதம் எடுத்தாய். வேறு பள்ளிக்கு மாற்றி சென்றால், அங்கு அந்த பாடம் இல்லாவிட்டால் உன்னால் அப்போது சிறப்புத்தமிழ் எடுத்து படிக்க முடியாது, காரணம், மேல் வகுப்புக்கு போகப்போக சிறப்புத்தமிழ் கடினமாயிருக்கும். எனவே இப்போதே சிறப்புத்தமிழுக்கு மாறிவிடு.' என அறிவுரை சொன்னார்.

அவர் சொற்படி நான் சிறப்புத்தமிழ் வகுப்புக்கு செல்வதாக கூறியதும், எந்த ஆசிரியர் 'எனக்கு வடமொழி சொல்லிக்கொடுக்க தயங்கினாரோ அவரே 'ஏன் அங்கு போகிறாய்?, நீ நன்றாகத்தானே படிக்கிறாய். வேண்டாம் இங்கேயே இரு' என்றார்.

ஆனால் நான் என் அண்ணன் சொன்னபடி, பள்ளி அலுவலகத்தில் சென்று அனுமதி பெற்று சிறப்புத்தமிழ் வகுப்புக்கு சென்றேன். என்னைப்பார்த்ததும் தமிழ் ஆசிரியர், 'வாப்பா, தமிழ் துரோகி! இப்போதுதான் தமிழ் படிக்க ஆசை வந்ததா?' எனக்கூறி வரவேற்றார். நான் அவரிடம் பொதுத்தமிழ் படிப்பது ஏனோ அவருக்கு அப்போது தெரியவில்லை. என்ன இப்படி சொல்கிறாரே, பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாமோ என நினைத்தாலும், ஒன்றும் சொல்லாமல் வகுப்பில் அமர்ந்தேன்.

ஆனாலும் வேறொரு மொழி கற்க முடியாமல் போனாலும், சிறப்புத்தமிழ் படித்ததால்தான் தாய்மொழி மேல் ஒரு பற்று வந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நினைவோட்டம் 13

எனது கடந்த கால நிகழ்வுகளைப்பற்றி மனதில் அசை போடும்போது , எங்கள் அப்பாவைப்பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது.எனவே அவ்வப்போது என் அப்பாவைப்பற்றியும் எழுதுவேன்.

புற்றீசல் போல் இப்போது உள்ள தனியார் பள்ளிகள் அப்போது இல்லை.தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. மேலும் பள்ளிகளில் பாடங்கள் முழுக்க முழுக்க தமிழில்தான் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகமே(ஜில்லா போர்டு ) நடத்தி வந்தன. அந்த பள்ளிகள் எல்லாம் கழக உயர்நிலைப்பள்ளிகள் என அழைக்கப்பட்டன.

அப்படி அரியலூரில் இருந்த கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்து சென்றபோது ஜூலை மாதம் ஆகிவிட்டது. பள்ளியில் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தன. நான் ஒரு சிற்றூரில் உள்ள பள்ளியில் படித்திருந்ததால் நுழைவுத்தேர்வு வைத்தே என்னை தேர்வு செய்தார்கள்.

ஒருவித தயக்கத்தோடும் பயத்தோடும் 'பர்ஸ்ட் பாரம்' எனப்படும் ஆறாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். அதுவரை தரையில் மணலில் உட்கார்ந்து படித்த எனக்கு, 'டெஸ்க்' எனப்படும் மரத்தால் ஆன இருக்கையில் அமர்ந்து படிப்பதும், கட்டைப்பேனா வைத்து மசிக்கூட்டிலிருந்து மசியை(Ink) தொட்டு எழுதியது போக ஊற்றுப்பேனா(Fountain Pen) மூலம் எழுதுவதும், புதுமையாக இருந்தன.

நான் பாடங்கள் ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து சேர்ந்ததால் வகுப்பு ஆசிரியர் 'உனக்கு எப்படிடா தனியாக திரும்பவும் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது?' என சலித்துக்கொண்டார். ஏனெனில் அந்த நாட்களில்,ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எனக்கு அப்பா முன்பே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருந்ததால் எனக்கு அந்த பாடங்கள் அவ்வளவு கடினமாகத்தெரியவில்லை.

ஆனால் முதல் நாளே எனக்கு வந்தது "சோதனை". மாலையில் பள்ளி விட மணி அடித்ததும் வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக கிளம்பியபோது பேனாவை எங்கோ விட்டுவிட்டேன். வீட்டிற்கு வந்து பார்த்ததில் பேனாவை தொலைத்துவிட்டேன் என்றதும், அழுதபடி எனது மாமா மகனிடம் சொன்னேன். அவரும் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அவர், மறுநாள் காலையில் பேனா தொலைந்தது பற்றி எழுதி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் அவர் அந்த கடிதத்தை எல்லா வகுப்புகளிலும் காட்ட அனுமதி கொடுப்பார் என்றும் கவலை வேண்டாம் எனக்கூறி அவரே கடிதம் எழுதிக்கொடுத்தார்.

மறுநாள் அதை தலைமை ஆசிரியரிடம் எடுத்து சென்று கையொப்பம் வாங்கி, ஒவ்வொரு வகுப்பாக எடுத்து சென்று காண்பித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இருந்த, ஆசிரியர்கள் அதை மாணவர்களிடையே படித்து காண்பித்து, பேனா கிடைத்தால் என்னிடம் தருமாறு கூறினார்கள். ஆனால் S.S.L.C எனப்பட்ட பள்ளி இறுதி வகுப்பு ஆசிரியர் ஒருவர் மட்டும் எனது கடிதத்தை சத்தம் போட்டு வாசித்துவிட்டு சொன்னார். 'வைத்தவன் மறந்து போனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.' என்று.

அதுதான் நான் கற்ற முதல் பாடம். பேனா கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 2

சப்தம் கேட்டதும் திரும்பிப்பார்த்தபோது, மேலே உத்திரத்தில் இருந்து ஒரு கட்டுவிரியன் ('வளகழப்பான்' என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது) எனது கட்டிலில் விழுந்து கீழே இறங்கி ஓடியது.

எனக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுதாகரிப்பதற்குள் அது ஓடி மறைந்துவிட்டது. அன்று இரவு முழுவதும் விளக்கை அணைக்காமல் கட்டிலில் உட்கார்ந்தே இருந்தேன்

இருமல் வராமல் இருந்திருந்தால், என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே அன்று இரவு தூங்கவில்லை. பிறகு அதை மறந்தே போனேன்

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்து கதவை திறந்தபோது அதே விரியன் பாம்பு , நடு ஹாலில் ஓடிக்கொண்டிருந்தது. அதை அடிப்பதற்காக கழியைத்தேடியபோது திரும்பவும் அது மறைந்துவிட்டது. அன்று இரவும் தூக்கமில்லை.

மறு நாள் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, சார், எப்படி தைரியமாக அங்கு தங்கி இருக்கிறீர்கள். வேறு வீடு மாறிவிடுங்கள்' என்றார்கள். வேறு வீடு கிடப்பது கடினம் என்பது எனக்குத்தானே தெரியும்.நானும் விளையாட்டாக சொன்னேன். 'உங்களோடே இருக்கிறேனே, பாம்போடு இருப்பதா கஷ்டம்" என்று.

அவ்வாறு சொல்லிவிட்டேனே தவிர தினம் எனக்கு சிவராத்திரிதான். எங்கு பாம்பு வந்து கடித்துவிடுமோ என்ற பயம் தான். ஒரு மாதம் கழிந்து காலையில் எழுந்து பல் விளக்க குளியல் அறைக்கு சென்றேன். வலது கையில் பிரஷை எடுத்துக்கொண்டு இடது கையால் குளியல் அறையின் கதவில் இருந்த கொக்கியை தள்ளினேன். கையில் 'ரப்பர் பேண்ட்' (Rubber Band) போன்று ஒன்று நழுவி விழுவதை உணர்ந்ததால் விளக்கை போட்டேன்.
பார்த்தால் என்கையில் இருந்து நழுவியது வேறொன்றுமில்லை 'அந்த' கட்டுவிரியன் தான்.

கதாசிரியர்கள் பயத்தைப்பற்றி வர்ணிக்கும்போது 'வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன' என்றும் தொண்டையில் பந்து அடைத்ததுபோல் இருந்தது என்றும் எழுதுவார்கள். எனக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை எழுத்தில் எழுத இயலாது.

ஏதோ ஒரு சக்தி என்னை உந்த, உடனே அருகில் இருந்த ஒரு உடைந்த நாற்காலியின் கைப்பிடியை எடுத்து இடது கையாலேயே அந்த விரியனின் நடு முதுகில் எனது பலத்தையெல்லாம் கொடுத்து அழுத்தினேன். வலி தாங்காத அந்த விரியன் தனது உடலை அந்த குச்சியில் சுற்றி தப்பிக்க பார்த்தது. நான் எனது அழுத்தத்தை விடாததால் அதனுடைய முயற்சி பலிக்கவில்லை. அதற்கு உயிர் இல்லை என தெரிந்து கொண்டபிறகு அதே குச்சியால் எடுத்து வெளியே போட்டேன். பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைவிட கடுமையானது என்பதும், விரியன் கடித்தால் உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் நிச்சயம் என்பதும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் இன்று கூட கிராமங்களில் கோபத்தில் திட்டும்போது 'உன்னை விரியன் புடுங்க' என்கிறார்கள்.

அந்த நேரத்தில் எனது அப்பா பல பேரை பாம்பு கடியிலிருந்து காப்பாற்றியதும் அவர்கள் வாழ்த்தியதும் எனது நினைவுக்கு வந்தது. மூன்று முறை அந்த விரியனால் கடிபட இருந்தும், உயிர் தப்பியதன் காரணம் அப்பாவின் பலனை எதிர்பாராத சேவைதான் என்பதில் இன்று வரை எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருவேளை சிலர் இதை நம்ப மறுக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை தர்மம் தலை காத்தது என்பது என் விஷயத்தில் சரியே.

எனவே பழமொழிகள் என்பவை வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல. அவை வாழ்ந்து அனுபவித்தவர்களின் வெளிப்பாடுகள் என்பதே நிஜம்!

பின்குறிப்பு:- நான் பாம்பைக்கொன்றது பற்றி எனது கோட்டயம் வங்கி நண்பர்களிடம் சொன்னபோது, மகிழ்ந்தது மட்டுமல்லாமல், பெருங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் அரைத்து வீட்டின் சன்னல் மற்றும் கதவருகே வைக்க சொன்னார்கள். அப்படி வைத்தால் பாம்புகள் வராதாம். நானும் அவ்வாறே செய்ததில் பின்பு எந்த பாம்பும் வரவில்லை.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தர்மம் தலை காக்குமா? 1

"தர்மம் தலை காக்கும்!' 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.' போன்ற பழமொழிகளை கேட்கும்போது, இவை வெறும் அலங்கார சொற்கள்தானா அல்லது அனுபவத்தின் வெளிப்பாடா என்ற ஐயம் எனக்கு இருந்ததுண்டு.

ஆனால் எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டபோது அந்தபழமொழிகள் நூற்றுக்கு நூறு உண்மை எனத்தெரிந்துகொண்டேன்.

நான் முன்பே எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து பல பேர்களின் உயிரைக்காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக எந்த பணமும் வாங்கியதில்லை. அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் அப்பாவை பார்த்து, "அய்யா நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் நல்லா இருக்கணும்' என வாழ்த்தி செல்லும்போது நான் சிறுவனாக இருந்து வேடிக்கை பார்த்ததுண்டு. அந்த சொற்கள் வெறும் உபசார வார்த்தைகள் என்றும், அவைகளுக்கு எந்த பொருளும் இல்லை என நினைத்ததும் உண்டு. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னால் அந்த வாழ்த்துகள் தான்என்னைக்காப்பாற்றபோகிறது என்பதை அப்போது நான் உணரவில்லை.

1993 டிசம்பர் இறுதியில் எனக்கு பதவி உயர்வு காரணமாக கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊருக்கு மாற்றல் வந்த போது பிள்ளைகளை படிப்பின் காரணமாக நான் மட்டும் சென்று பணியில் அமர்ந்தேன். மிகவும் கஷ்டப்பட்டு (அதைப்பற்றி பின் எழுதுகிறேன்) ஓராண்டிற்குப்பின் வாடகைக்கு, நகரின் மையப்பகுதியில் உள்ள திருநக்கர கோவிலின் தெற்கு வாசலில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினேன். அந்த வீடு சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம். கேரள கட்டிட அமைப்பில் நான்கு பெரிய அறைகளும் பெரிய சமையல் அறையும் குளியல் அறையும் கொண்ட வீடு அது. வீட்டை சுற்றி பெரிய தோட்டமும் அதில் தென்னை மரங்களும், மாமரங்களும், வீட்டை யாரும் சரிவர பராமரிக்காததால் முழங்கால் உயரத்திற்கு செடிகொடிகளும் புதர்போல் இருந்தன நான் ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்ததால், அந்த வீட்டை முழுமையாக உபயோக்கிக்காமல் முன் அறையில் மட்டும் தங்கி அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.

காலையில் 7 மணிக்கு வீட்டைவிட்டு சென்றால் இரவு வீட்டிற்கு 8 மணிக்கு தான் திரும்புவேன். பகலில் யாரும் இல்லாததால் வீடு அரவம் இல்லாமலிருந்தது. இரவு திரும்பும்போது நான் வெகு ஜாக்கிரையாகத்தான் செடிகொடிகளை தாண்டி வீட்டைத்திறந்து நுழைவேன். ஒரு நாள் இரவு சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். திடீரென இருமல் வந்ததால் துப்புவதற்காக விளக்கை போட்டுவிட்டு எழுந்தபோது 'பொத்' என சப்தம் கேட்டது.

பொறுத்திருங்கள் !

திங்கள், 15 ஜூன், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 6

பசி வந்திட பத்தும் பறந்து போம் என்பது பழமொழி.
என்னதான் வேலையில் மூழ்கி இருந்தாலும் வேளா வேளைக்கு சாப்பிடாவிட்டால் வயிற்றுக்குள் போராட்டமே நடக்கும் என்பதுதான் உண்மை.

அதனால் தான் 'வயிற்றுக்கு சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றான் தேசியக்கவி பாரதி. நாம் மாய்ந்து மாய்ந்து உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான்.

'ஒரு சாண் வயிறே இல்லாட்டா, உலகினில் ஏது கலாட்டா?' என்பதும் 'எல்லாமே வயிற்றுக்கு தாண்டா' என்பதும்தான் நிதர்சனம்.

ஆனால் நாம் உணவு கிடைக்கும்போதெல்லாம் நம்மால் வயிற்றை நிரப்பிக்கொள்ளமுடியாது.காரணம் நமது வயிற்றின் கொள்ளளவு 946 ml தான் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே கொள்ளளவுக்கு மேல் நம்மால் சாப்பிடமுடியாது. அப்படி அளவுக்கு மீறி சாப்பிட்டால் அவஸ்தைதான்.

அதனால்தான் வள்ளலார் 'பசித்திரு' என்றார்.ஆனாலும் மார்க் ட்வைன் வேடிக்கையாய் சொல்லுவார். " நீங்கள் விரும்புவதை சாப்பிடுங்கள். சாப்பிட்ட உணவு உள்ளே சென்று போராடட்டும்" என்று!

நம்முடைய ஔவை பாட்டிக்குகூட இந்த உணவு உண்ணும் விஷயத்தில் போராட்டம் இருந்தது போலும். ஔவைப்பாட்டி உணவு கிடைக்காதபோது பசியை பொறுத்துக்கொண்டும் , கிடைக்கும்போது வேண்டியமட்டும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் வாழ தன வயிறு ஒத்துழைக்கவில்லையே என
ஆதங்கத்தில்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

என வயிற்றோடு வாழ்தலே அரிது என்கிறார்.

ஆனால் வயிறு என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்தலே அரிது என நம் பாட்டிக்கு தெரியாதா என்ன!

சனி, 13 ஜூன், 2009

நினைவோட்டம் 12

எங்களது அப்பா தீவிர சைவராக இருந்ததால் எங்களுக்கு சைவக்கடவுளர்களின் பெயரையே வைத்திருந்தார்கள். சைவராய் இருந்தும் எங்கள் ஊரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களுக்கும் தர்மகர்த்தாவாக இருந்தார்கள்.

இறைப்பணியோடு மருத்துவப்பணியும் செய்து வந்ததால் எங்கள் ஊரில் காலரா நோய் வந்து மக்கள் கஷ்டப்பட்டபோது காலரா மருந்தை தபால் மூலம் வரவழைத்து நோய்வாய்ப்பட்ட அனைவருக்கும் எந்த வித கட்டணமும் வாங்காமல் கொடுத்து பல உயிரைக்காப்பாற்றியிருக்கிறார்கள்.(மருத்துவ வசதிகள் நகரில் உள்ளவர்களுக்கே கிடைக்காத காலம் அது)

அதுவுமல்லாமல் பாம்பு கடித்து வருபவர்களுக்கு பச்சிலை கொடுத்து எண்ணற்ற பேரை காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு யாரோ சொல்லிக்கொடுத்த அந்த வைத்தியத்தை அவர்கள் இறக்கும் வரையில் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பாராது, எந்த நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காது வைத்தியம் செய்திருக்கிறார்கள். இதற்காகவே இரவில் வருபவர்களுக்காக திண்ணையிலேயே மருந்துடனும் ஒரு சொம்புவில் தண்ணீருடனும் படுத்துக்கொள்வார்கள். காரணம் நடு இரவில் வருபவர்களால் வீட்டில் உள்ளவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதுதான்.

எங்கள் ஊரிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊர்களிலும் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்ததால் இரவு நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்பவர்களும் அறுவடை காலங்களில் காவலுக்கு செல்பவர்களும் பாம்பு கடித்து எங்கள் வீட்டிற்கு எந்த நேரத்திலும் சிகிச்சைக்கு வருவது வழக்கம். பாம்பு கடிக்குமல்லாமல் நண்டுவாக்கிளி, ஜலமண்டலம் போன்ற கொடிய ஜந்துக்களின் கடிக்கும் அவர்கள் அந்த பச்சிலை வைத்தியம் செய்து வந்தார்கள். அப்பாவால் மரணத்தின் பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அநேகம்.

அப்பா செய்து வந்த அந்த பச்சிலை வைத்தியத்தை அவருக்கு பிறகு எங்கள் வீட்டில் யாரும் தொடராது ஒரு துரதிருஷ்டம் என நான் நினைக்கிறேன்.

நினைவுகள் தொடரும்

வே. நடனசபாபதி

புதன், 20 மே, 2009

நினைவோட்டம் 11

முன்பே எழுதியிருந்தபடி எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிலை. விருத்தாசலம் பள்ளியில் சேர்ந்தால் ஹாஸ்டல் இல்லாததால் வீட்டிலிருந்து தினம் 5 மைல்(8 கிலோமீட்டர்) நடந்து சென்று வரவேண்டும். அதனால் அங்கு சேர்க்க அப்பாவுக்கு விருப்பமில்லை. அரியலூரில் வழக்கறிஞராக இருந்த எனது மாமா வீட்டில் தங்கிக்கொண்டு அரியலூர் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த சமயத்தில் எங்களது அப்பாவைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். எங்கள் அப்பா விவசாயி ஆனாலும் கூட நாங்கள் மேலே படிக்க வேண்டும் என விரும்பினார். அவர் மாயவரத்தில் மெட்ரிகுலேஷன் படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் தாத்தா இறந்துவிட்டதால் மேலே படிக்காமல் விவசாயத்தை பார்க்க ஊரிலேயே தங்கிவிட்டதால் தான் படிக்காததை தன் பிள்ளைகளாவது படிக்கவேண்டும் என என்னையும் எனது அண்ணன்களையும் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படித்து வெவ்வேறு துறைகளில் நாங்கள் பணிபுரிய உதவினார். அதனால்தான் எனது அண்ணன்களில் மூத்தவர் மின்சார வாரியத்தில் தலைமைப்பொறியாளராகவும், இரண்டாமவர் வேளாண் மரபியல் ஆராய்ச்சியாளராகவும், மூன்றாமவர் கல்வியாளராகவும், நான்காமவர் கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராகவும் நான் வங்கியாளனாகவும் ஆக முடிந்தது.

அப்பா ஒரு தீவிர சைவ பக்தர். தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அதுபோல் மாலையில் 'அனஷ்டானம்' செய்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்துதான் சாப்பிடுவார்கள். இந்த வழக்கத்தை அவர்கள் இறக்கும் வரையில் தொடர்ந்து வந்தார்கள்.
எனக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் நான் மூன்றாவது படிக்கும்போதே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரிலிருந்து உயர்நிலை பள்ளியில் படித்துவந்த மூன்று நான்கு பேருக்கும் இரவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் சொல்லிக்கொடுத்தார்கள். அப்போதெல்லாம் மின் இணைப்பு இல்லை. வீட்டில் லாந்தர் விளக்கில்தான் படித்தோம். இரவு சாப்பாடு ஆனதும் திண்ணையில் அமர்ந்து நாங்கள் விளக்கை சுற்றி உட்கார்ந்து கொண்டு அப்பா சொல்லிக்கொடுத்ததை எழுதியதும் படித்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது.

நினைவுகள் தொடரும்
வே. நடனசபாபதி

புதன், 13 மே, 2009

நினைவோட்டம் 10

ஐயாவிடமிருந்து எப்போது 'விடுதலை' கிடைக்கும் என அறியாமையால் ஏங்கிக்கொண்டிருந்த நான், ஐந்தாவது வகுப்பு வந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் அந்த வருஷம் முடியும் போது அவரிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதால். ஆனால் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் அவரிடம் படித்திருந்தால் பல வேறு விஷயங்கள் அவரிடமிருந்து பெற்றிக்க முடியும். அந்த மாதிரியான தன்னலம் கருதாத ஆசிரியர் இனி யாருக்கும் கிடைப்பாரா எனபது சந்தேகமே. ஐயாவைப்பற்றி எழுதுவதானால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.

ஐந்தாவது வந்த மாணவர்களில் சிலர் நாம் தான் 'விட்டு விடுதலையாகி' செல்கிறோமே என்பதால் சற்று விஷமம் செய்ய ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் ஐயா ' நான் நினைத்தால் உங்களை குதிரையாகவும் மாற்ற முடியும் அல்லது கழுதையாகவும் மாற்ற முடியும்' என சொல்லுவார். அப்போது நான் நினைப்பதுண்டு. இவர் எப்படி மனிதர்களை மிருகங்களாக மாற்ற முடியும் என்று. பின்புதான் அதன் பொருள் புரிந்தது. பள்ளி முடிந்து செல்லும்போது உயர் நிலைப்பள்ளியில் சேர பள்ளி மாற்று சான்றிதழ் ( Transfer Certificate ) தேவை. அதை தரும்போது அதில் நடத்தை என்ற இடத்தில் நன்று என எழுதினால் நிச்சயம் பள்ளியில் சேரலாம். அதுவல்லாமல் மோசம் என்றோ சுமார் என்றோ எழுதி கையொப்பமிட்டு கொடுத்தால் பள்ளியில் சேர முடியாது. அதைத்தான் ஐயா குதிரையாகவோ அல்லது கழுதையாகவோ மாற்றுவேன் என பொருள் பட சொல்லியிருக்கிறார். 'அந்த' நாளும் எனக்கு வந்தது. தேர்வு முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பின் ஐயா கூப்பிட்டு வாழ்த்தி சான்றிதழை கொடுத்தார். நல்ல வேளையாக என்னை 'குதிரை' யாகத்தான் மாற்றியிருந்தார்!! மிகவும் சந்தோஷத்தோடு சான்றிதழை வாங்கிக்கொண்டு திரும்பினேன். இனி எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதில் அப்பாவுக்கு கவலை. எனக்கோ சிறையிலிருந்து விடுதலை யாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி.ஆனால் எனக்கு அப்போது தெரியாது அந்த மகிழ்ச்சி தற்காலிகம்தான் என்பது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

ஆனால்!!!

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது 'ஒளி' என்ற கையெழுத்து பத்திரிகையில்வந்த 'ஆனால்' என்ற தலைப்பில் வந்த ஒரு கவிதையை படிக்க நேர்ந்தது.
(எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் பெண்ணாடம் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும்போது வெளியிட்ட கையெழுத்து பத்திரிகை அது) அதை எழுதியவரும் அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவர்தான்.விவரம் புரியாத வயதில் படித்தபோதும் அந்த கவிதை என்னைக்கவர்ந்த காரணத்தால் ஐம்பத்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதை என்னால் மறக்க முடியவில்லை. அந்த கவிதை இதோ.

எல்லா கடலும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கடலாகும்!

எல்லா மரமும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மரமாகும்!

எல்லா மனிதனும் ஒன்றானால் எவ்வளவு பெரிய மனிதனாவான்!

எல்லா கைகளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய கைகளாகும்!

எல்லா வாளும் ஒன்றானால் எவ்வளவு பெரிய வாளாகும்!

அந்த மனிதன் அந்த கையில் அந்த வாளை எடுததோங்கி

அந்த மரத்தை வெட்டிச்சாய்த்து அந்த கடலில் விட்டெறிந்தால்

டும் டுமீல் என்று எத்தனை பெரிய சப்தமிடும்!

அப்போது நான் சிறுவனாக இருந்த காரணத்தால் அந்த கவிதையின் விளைவாக எழுந்த கற்பனை என்னை ஈர்த்திருக்ககூடும்.

இன்றைக்கு ஒருவேளை அந்த கவிதையை இப்படி எழுதினால்?

எல்லா மதங்களும் ஒன்றானால் எத்துணை மகிழ்ச்சி உண்டாகும்

எல்லா மனங்களும் ஒன்றானால் எத்துணை பெரிய மாற்றம் வரும்

இணைந்த மதங்களும் கலந்த மனங்களும்

இங்கு எத்தனை எத்தனை அமைதி தரும்!!!!

கற்பனை நிஜமாகுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

வே.நடனசபாபதி

திங்கள், 20 ஏப்ரல், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 5

உருவத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

உருவத்தில் சிறியதாய் இருப்பவர்கள் என்றால் நம்மில் பலருக்கு ஏளனம்தான். அவர்களைப்பற்றி நம்மிடையே தான் எத்தனைவழக்குச்சொற்கள்!

'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
குள்ளனைக்கொண்டு ஆழம் பார்.
போன்றவை பல உண்டு.

ஆனால் உருவத்தில் சிறியவர்கள் உண்மையில் புத்திசாலிகள் என்பதும் அவர்கள் அசாதாரணமானவர்கள் என்பதும்தான் உண்மை.

அகத்தியர் குள்ளமானவர் தான். ஆனால் அவர் செய்த சாதனைகள் சாதாரணமானவையா?

மன்னன் மகாபலியை மண்ணுக்குள் அனுப்பிய வாமனர் கூட உருவத்தில் சிறியவர் தான்.

தேசிய கவி பாரதி கூட காந்திமதி நாதனுக்கு 'சின்ன பயல்'ஆகத்தானே தெரிந்தார்!

நம்முடைய கிரிக்கட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர்கள் கூட உயரம் குறைந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் தான் மற்றவர்கள் எட்டமுடியாத உயரத்தை எட்டியுள்ளார்கள் என்பதுதானே நிஜம்!

அவ்வளவு ஏன் நாம் கண்டு களிக்கும் சர்க்கஸில் பபூன்களாக வரும் உயரம் குறைந்த அன்பர்கள் செய்யும் சாகசங்கள் மற்ற எல்லாராலும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை.

உயரத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ அல்லது உருவத்தில் பெரியவர்களாக இருப்பவர்களோ செய்ய முடியாததை உருவத்தில் சிறியவர்களாக இருப்பவர்கள் சாதிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

கடல் பெரியதாக இருந்தாலும் அதனுடைய தண்ணீர் உபயோகமாகாது. ஆனால் அதன் அருகே உள்ள சிறு ஊற்று கூட குடிப்பதற்கான தண்ணீரை தரும் என்பதை ஔவைப்பாட்டி கூட
'கடல்
பெரிது மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்' என்கிறார்.

பனம் பழத்தினுடைய விதை பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து வரும் மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும் நல்ல வெயிலில் ஒருவருக்கு கூட அதன் நிழலில் தங்கமுடியாது. ஆனால் ஆலமரத்தின் பழமும் சிறியது. அதனுடைய விதையும் மீனின் முட்டையினுடைய அளவை விட மிக சிறியதே ஆயினும் அது மரமாக வளர்ந்து தன்னுடைய விழுதுகளின் மூலம் கிளைகளை பரப்பி வளர்ந்து தரும் நிழலில் ஒரு அரசனுடைய நால் வகைப்படைகளும் தங்கமுடியும் என்பதை

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்


என 'வெற்றிவேற்கை' யில் அதிவீரராம பாண்டியர் சொல்கிறார்.
எனவே ஒருவரின் தோற்றத்தை வைத்து எடை போடுவது சரியல்ல.

திங்கள், 13 ஏப்ரல், 2009

நினைவோட்டம் 9

ஐயா பாடம் மட்டும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை ஆடல் பாடலும் சொல்லிக்கொடுத்தார்.பாடம் கற்றுத்தருவதில் இருந்த அதே கண்டிப்பு கலைகளைக் கற்றுத்தருவதிலும் இருந்தது.

பிள்ளையார் சதுர்த்தியில் தொடங்கி ஆயுத பூஜை வரை எங்களுக்கு பாடங்கள் இருக்காது. அதற்கு பதில் மதியம் எங்களுக்கு கோலாட்ட பயிற்சி கொடுப்பார்.

இன்றைக்கு 'தாண்டியா' ஆட்டம் என அதிசயத்தோடு நாம் காணுகின்ற ஆட்டத்தை ஐம்பதுகளிலேயே எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார் என்பது சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.

கோலாட்டம் ஆடுவதற்கு ஒவ்வொருவரும் ஒரு ஜோடி கோலாட்ட கழிகளை கொண்டு வரவேண்டும். கோலாட்ட கழிகள் சுமார் 15 அங்குல நீளத்தில் நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருக்கும்.நாங்கள் பிள்ளையார் சதுர்த்தி வருவதற்கு முன்பே எங்கள் ஆசாரியாரிடம் சொல்லி கோலாட்ட கழிகளை தயார் செய்து விடுவோம். கழிகளை அடையாளம் காண்பதற்காக வெவ்வேறு வண்ணம் பூசி எடுத்து செல்வோம்.

ஐயா விநாயக சதுர்த்தி அன்று அவைகளை வைத்து படைத்து கொடுப்பார். ஐயா ஜால்ரா தாளத்தோடு பாட நாங்களும் பாடிக்கொண்டு ஆடவேண்டும். திரு அருட்பா போன்ற பாடல்களை சொல்லிகொடுப்பார்.

கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் என்று ஒன்று உண்டு. ஒரு வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாக விடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் எங்களிடம் கொடுத்து எங்களின் ஒரு கோலாட்ட கழியில் சுற்றிக்கொள்ள சொல்வார்.அதை இடது கையில் பிடிக்கவேண்டும் பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க சொல்வார்.

ஐயா ஜால்ரா போட்டு பாட ஆரம்பித்ததும் நாங்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும்.ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் 'மூவ்மென்ட்' உண்டு.

பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும்.அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.

ஐயா உடனே எல்லா கயிற்றையும் பிடித்துக்கொண்டு அவற்றை பிரித்து யார் கயிறு தவறாக சுற்றி இருக்கிறதோ அவர்கள் தலையில் அதே கோலாட்ட கழியை வைத்து இன்னொரு கோலாட்ட கழியால் வேகமாக அடிப்பார். சில சமயம் அவர் கையிலிருக்கும் ஜால்ராவால் வேகமாக தட்டுவதும் உண்டு. அந்த வலியை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்! ஐயாவிடம் இந்த தண்டனை வாங்காதவர்கள் யாரும் இல்லை.

பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' எனப்படும் தெய்வத்திற்கான வாழ்த்துபாடலகளை எல்லோரையும் மனப்பாடம் செய்ய சொல்லுவார். இந்த பாடல்களை விஜயதசமிக்கு பிறகு ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று கோலாட்டம் அடித்து அந்த பாடலை பாடவேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் யார் பாடுவது ஐயாவே தீர்மானித்து அவர்களை பாட சொல்லுவார்.

விஜயதசமி அன்று எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்த பின் பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து ஊரில் உள்ள எல்லா கோவில்களிலும் கோலாட்டம் அடிப்போம்.
பின்பு படிக்கும் பிள்ளைகளின் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கோலாட்டம் அடிக்கவேண்டும். சில வீட்டு முன்னால் பின்னல் கோலாட்டமும் இருக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் 'வாழி' பாட்டு பாடவேண்டும். கடைசியாக அந்த வீட்டு பிள்ளைகள் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தோடு பணம் வைத்து ஆசி பெறுவது வழக்கம். பின்பு கோலாட்டம் ஆடிய பிள்ளைகளுக்கு அந்த வீட்டில் அவல் பொரி வெல்லம் போன்றவைகளை தருவார்கள்.

இந்த ஆட்ட பாட்டங்கள் சுமார் 10 நாட்களுக்குமேல் இருக்குமாதலால் எங்களுக்கெல்லாம் 'குஷி' தான். ஏனென்றால் ஐயாவின் கெடுபிடி அப்போது இருக்காது என்பதால்.

இத்தனை வருடங்கள் ஆகியும் இப்போது கூட என்னால் கோலாட்டத்தை மறக்க முடியவில்லை என்றால் அதற்கு ஐயா கொடுத்த கடும் பயிற்சியே ஆகும்.

'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!'

என வள்ளலாரின் அருட்பாவை நாங்கள் பாடி ஆடியது இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

திங்கள், 6 ஏப்ரல், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 4

'கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றாலும் கூட 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' என்கிறது குறள்.

அதனால்தான் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றனர் நம்முடைய முன்னோர்கள்.

'பணம் பந்தியிலே' என்றும், 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்றும் 'பணம் பத்தும் செய்யும்' என்றும் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்றும் நமது பழமொழிகளும் வழக்கு சொற்களும் பணத்தின் அருமைப்பற்றி நமக்கு தெரிவிக்கின்றன.

வறுமையில் வாழ்வோர் வெளியில் நடமாடக்கூட தயங்குவர் என்பதை 'தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்;' என்கிறது விவேக சிந்தாமணி.

கண்ணதாசன் கூட ஒரு பாட்டிலே சொல்லுவார்,
'கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி' என்று.
சொந்த பந்தங்கள் கூட பணம் உள்ளவரைத்தான் மதிக்கும் என்பதால் 'கொண்டு வந்தால் சகோதரி' என்றும் சொல்வதுண்டு. இதற்கு விதிவிலக்காக 'கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்' என்போரும் உண்டு.

ஆனால் ஔவையோ தாய்கூட பணம் இல்லாவிட்டால் மதிக்கமாட்டாள் என்கிறார். கையிலே பணம் இருந்தால் படிக்காதவனாக இருந்தாலும் கூட எல்லோரும் அவனை வரவேற்பார்களாம். பணம் இல்லாதவனை கட்டிய மனைவியும் விரும்பமாட்டாள். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் விரும்பமாட்டாளாம்!.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளுமவேண்டாள் (;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா (து) அவன்வாயிற் சொல்

எனவே 'ஊரோடு ஒத்துவாழ்' என்ற பழமொழிக்கேற்ப நாமும் பணம் சம்பாதிப்போம் நாணயமான வழியில்!

திங்கள், 30 மார்ச், 2009

நினைவோட்டம் 8

'நீறில்லா நெற்றிபாழ்' என்ற ஔவையாரின் கருத்தே ஐயாவுடையதும் என்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் திருநீறு பூசி வரவேண்டும் என்பது அவருடைய கட்டளை ஆக இருந்தது.

அப்போது ஊரில் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்ததும், வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடித்த ஒரு சிலர் கூட எதிர்க்காததாலும் அந்த கட்டளைக்கு எதிர்ப்பேதும் இல்லை. அப்படி வராத மாணவர்கள் நெற்றியில் ஐயாவின் உத்திரவுப்படி சட்டாம்பிள்ளை சாணியை பூசிவிடுவான். நல்ல வேளையாக எனக்கு அந்த 'அனுபவம்' ஏற்பட்டதே இல்லை!

அப்படி ஒரு தடவை திருநீறு பூசி வராத ஒரு மாணவனின் நெற்றியில் சாணியை சட்டாம்பிள்ளை பூசிவிட்டான். அந்த மாணவன் அழுதுகொண்டே போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட எங்கள் ஊரில் பெட்டி கடை நடத்தி வந்த அந்த பையனின் அப்பா சண்டைக்கே வந்துவிட்டார். காரணம் அவர் ஒரு இஸ்லாமியர். அவர்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் எனத்தெரியாததால் சட்டாம்பிள்ளை அவ்வாறு செய்துவிட்டான்.

அந்த வயதில் பிற மதங்களைப்பற்றியும் அவர்களின் பழக்க வழக்கங்கள் தெரியாததால் அந்த தவறைச்செய்துவிட்டான். உடனே ஐயா அவரிடம் மன்னிப்பு கேட்டதுமல்லாமல் சட்டாம்பிள்ளையை சரியாக 'கவனித்துவிட்டு' அவனை அந்த பொறுப்பிலிருந்தும் எடுத்துவிட்டார்.

பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் திருநீறோடு இருக்கவேண்டுமென்பது ஐயாவினுடைய கட்டளை. ஒரு நாள் ஐயா இரவில் ஊரை சுற்றி 'ரவுண்ட்' வரும்போது எங்கள் வீட்டில் படிக்கும் சத்தம் கேட்காததால் உடனே எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். நான் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எங்கள் அப்பாவிடம் 'எங்கே பையன்?' என விசாரித்துக்கொண்டிருந்தபோது அம்மா என்னிடம் 'ஐயா வந்திருக்கிறார், சீக்கிரம் சாப்பிட்டு போ' என்றார்கள்.

அப்போதுதான் எனக்கு திருநீறு பூசாமல் சாப்பிட உட்கார்ந்துவிட்டோமே என நினைத்ததும் பயம் வந்துவிட்டது. ஐயா வெறும் நெற்றியைப்பார்த்தால் நிச்சயம் அடிப்பார். ஐயா அடிப்பதை யாருமே தடுக்கமாட்டார்கள் என்பதால் அம்மாவிடம் 'அம்மா நான் சாப்பிட்டுமுடிப்பதற்குள் திருநீறு கொண்டுவாருங்கள்' என்றேன். திருநீறு வைத்திருக்கும் சம்புடவம் ஐயா உட்கார்ந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்ததால் அம்மா ஐயாவுக்கு தெரியாமல் மறைத்து எடுத்து வந்ததும், நான் சாப்பிட்ட உடன் நெற்றியில் பூசிக்கொண்டு வெளியில் வந்ததும் இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது.

ஐயா வீட்டுக்கு வருகிறார் என்றால் எங்களுக்கு எப்போதுமே பயம்தான். ஏனெனில் வந்தால் சும்மா போகமாட்டார். ஏதாவது மனக்கணக்கு போடுவார். சரியான விடை சொல்லாவிட்டால் நிச்சயம் 'மண்டகப்படி' கிடைக்கும். அதனாலேயே ஐயா அன்று வந்ததும் என்ன கேட்பாரோ என பயந்துகொண்டே சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தேன்.அப்போது ஐயா என்னிடம் 'என்ன சாப்பிட்டே?' என்றார். நான் 'இட்லி ' என்றதும் உடனே ஐயா 'ஒரு கிழவி 25 இட்லிகளை ஒரு இட்லி காலணா வீதம் விற்றால் அவளுக்கு எவ்வளவு கிடைக்கும்?' என கணக்கு போட்டதும் நான் அவரைப்பார்த்த பயத்தில் தப்பு தப்பாக பதில் சொல்லி அப்பா அம்மா முன்னால் கிள்ளு வாங்கியதும் இதோ நேற்றுதான் நடந்தது போல் உள்ளது.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

புதன், 25 மார்ச், 2009

குளத்துப்பறவைகள்

பணி மூப்பு எனபது பணியில் உள்ள அனைவருக்கும் வருவதே. ஆனால் சிலர் பணி மூப்பு காலம் நெருங்கும்போது ஒருவித சோகத்தோடு இருப்பார்கள்.
எனது பொது மேலாளர் சொல்லுவார் 'நாம் பணியில் சேரும்போதே எப்போது ஒய்வு பெறப்போகிறோம் என்பது தெரியும். அப்படி இருக்கையில் அதற்காக கவலைப்படுவானேன்?' என்று.

மத்திய, மாநில அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றதும் அவர்களால் யதார்த்த வாழ்க்கைக்கு வர பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம். பணியிலே இருக்கும்போது கார் கதவைத்திறந்துவிட ஒருவர், கோப்புகளை தூக்கிவர ஒருவர், 
அறைக் கதவைத்திறந்துவிட ஒருவர் என அநேகம் பேர் இருப்பர். ஆனால் ஓய்வு பெற்ற மறுநாள் அவரை பார்க்ககூட வீட்டிற்கு ஒருவரும் வர மாட்டார்கள்.

அதேபோல பணமும் வசதியும் படைத்த பலர் ஒரு காலத்தில் அவைகளை இழந்து நிர்கதியாய் நிற்க வேண்டிய நிலை வரலாம்.
இதைத்தான் 'வெற்றிவேற்கை'யில் அதிவீரராமபாண்டியர் கூறுவார்.

'குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்'


இந்த 'அதிர்ச்சி'யை தாங்கமுடியாத பணி மூப்பு பெற்ற அலுவலர்களில் பல உடல் நிலை சரி இல்லாமல் போவதும் மிக விரைவில் இவ்வுலகை விட்டு போவதும் நாம் பார்க்கின்ற ஒன்றுதான்.

மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்கும் கூட பணி மூப்பு என்பதே இல்லை. மற்ற பணியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வயதில் ஒய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. இதை மனதளவில் அறிந்துகொண்டு அதை எதிர் நோக்குபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் என்னைப்போன்று வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த கவலை இல்லை. ஏனெனில் வங்கியில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூட இந்த 'வசதிகள்' கிடையாது. எனவே பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பணி மூப்பு எங்களில் அநேகம் பேரை பாதித்ததே இல்லை.

ஆனாலும் நாங்களும் ஒரு வித 'அதிர்ச்சியை'எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணியில் இருக்கும்போது நம்மை சுற்றி வந்த நண்பர்கள் நாம் ஒய்வு பெற்றதும் திடீரென காணாமல் போவதுண்டு. காரணம் நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதுதான்.

எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டது. பணியில் இருக்கும்போது இரவு பதினோரு மணிக்கு கூட என்னைக்கூப்பிட்டு அவர்களது மாற்றல் பற்றியும், அவர்களது பதவி உயர்வு பற்றியும், அவர்களுக்கு தரப்பட்ட Charge Sheet பற்றியும் மணிக்கணக்கில் பேசியவர்கள் உண்டு. விடுப்புக்காக சென்னை வந்திருந்த போது எனது சொந்த வேலையைக்கூட செய்யவிடாமல் தொந்தரவு செய்தவர்களும் உண்டு. ஆனால் ஒய்வு பெற்று வந்தவுடன் அவர்கள் நான் இருப்பதை மறந்தே போனார்கள்.

இப்படிப்பட்டவர்களைப்பற்றி ஔவை பாட்டி சொல்லும்போது, குளத்திலே நீர் இருக்கும்போது உள்ள பறவைகள் நீர் வற்றியதும் அந்த குளத்தைவிட்டு செல்வதை போன்றவர்கள உண்மையான நண்பர்கள் அல்லர். ஆனால் அந்த குளத்தில் நீர் உள்ள போதும், இல்லாத போதும் கூடவே இருக்கின்ற அல்லி, தாமரை போன்றவர்களே உண்மையான நண்பர்கள் என்கிறார்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

எனக்கு இந்த 'பறவைகளை' பற்றி முன்பே அறிந்திருந்ததால் நான் வருத்தப்படவோ கவலைப்படவோ இல்லை. ஆனாலும் கூட அல்லி, தாமரை போல நண்பர்கள் இன்னும் எனக்கு உண்டு எனபதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

சனி, 21 மார்ச், 2009

யாக்கை நிலையாமை

'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்றார் கண்ணதாசன்.

அவருக்கு வேண்டுமானால் 'மரணமில்லாமல்' இருக்கலாம்.
ஆனால் நம்மைப்போன்றோர்க்கு ?

பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டும் என்பது இயற்கை.
இதையேதான் கவியரசர் இன்னொரு பாடலில் சொல்லுவார்.

'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது' என்று

நம்மில் பலர் தாங்கள் நிரந்தரமானவர்கள் என எண்ணிக்கொண்டு அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை. இவர்களை சுற்றி இருக்கின்ற துதிபாடிகள் அள்ளி வீசும் புகழ்ச்சியிலேயே மிதந்துகொண்டு இருக்கும் இவர்கள் ஒரு நாள் இவ்வுலைகைவிட்டு மறைய நேரிடும் என்பதும் அப்புறம் இவர்களை யார் நினைத்து பார்ப்பார்கள் என்பதையும் அறிந்தால் இவர்கள் நிச்சயம் அடக்கியே வாசிப்பார்கள்.

மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் மதிப்பு. இறந்த மறு வினாடியே அவன் பிணம் தான். பேச்சு வழக்கில் கூட 'பிணத்தை எப்போது எடுக்கிறார்கள்? என்பார்களே தவிர அவனது பெயரைச்சொல்லி எப்போது எடுப்பார்கள் எனக்கேட்கமாட்டார்கள். எல்லா 'காரியத்தையும்' முடித்துவிட்டு அவனை ஒரேயடியாக மறப்பது தான் உலக வழக்கு.(சில விதி விலக்கு இருக்கலாம்)

இதைப்பற்றி திருமூலர் திருமந்திரந்திலே சொல்லுவார்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

மனிதன் இறந்தபிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டு, பின்பு அவனுக்கு பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றி மறந்துபோகிறார்களாம்.

இந்த உண்மையை அறிந்தோமானால் வாழும் காலம் வரை நாம் அடக்கமாகவும், எளிமையாகவும் வாழ்வது நிச்சயம்!

வியாழன், 19 மார்ச், 2009

நினைவோட்டம் 7

ஐயா பிள்ளைகளுக்கு சிம்மசொப்பனம் போல் தோன்றினாலும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். யார் யார் வீட்டில் குழந்தைகள் இருந்தனவோ அவர்கள் வீட்டிற்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்வார்.

பெண்களுக்கு கல்வி,தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் என பேசப்படுவதற்கு முன்பே அதாவது ஐம்பதுகளில் அதை தன்னால் முடிந்த அளவு செய்தார் என்பதை இப்போது நினைத்தாலும் அவருடைய சமுதாய நோக்கு எனக்கு சற்று ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

பள்ளியில் படிக்க மாதம் கட்டணம் எட்டணா (ஐம்பது பைசா) தான் வசூலித்தார். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண் குழந்தைகளுக்கும் தாழ்த்தபட்டோரின் குழந்தைகளுக்கும் கட்டணம் வாங்காமலே பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பது பெருமைப்படவேண்டிய செய்தி.

தினந்தோறும் அரசர்கள் நகர் வலம் வருவதுபோல இரவில் தெரு வலம் வருவார். யார் வீட்டில் பிள்ளைகள் படிக்கும் சத்தம் கேட்கவில்லையோ உடனே அந்த வீட்டுக்குள் நுழைந்துவிடுவார். பாடம் படிக்காத மாணவர்களை அவர்கள் பெற்றோர் முன்பே நன்றாக 'கவனித்து' விடுவார். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானே செய்கிறார் என்பதால் அவர் அடிப்பதை தடுக்க மாட்டார்கள்.எனவே அவருக்கு பயந்துகொண்டு நாங்கள் சத்தம் போட்டு சிம்னி விளக்கு முன்னால் படித்துக்கொண்டு இருப்போம்.(அப்போது மின் இணைப்பு வராத காலம்)

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை ஆசிரியர்கள் தற்போது இவ்வாறு பள்ளி நேரம் முடிந்த பின்னும் மாணவர்கள் பற்றி அக்கறை எடுத்துகொள்கிறார்கள்? (பள்ளி நேரத்திலேயே அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தாலே அதிகம்!)

ஒரு தடவை ஐயா விருத்தாசலம் சென்றிருந்த நேரம். இரவு நாங்கள் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த போது எங்களது எதிர் வீட்டில் இருந்த கிளிமங்கலத்து மாமா என அழைக்கப்பட்டவர், 'டேய் பசங்களா! சாமிநாத வாத்தியார் விருத்தாச்சலத்திலிருந்து வரும்போது ஆற்றுக்கிட்டே அரணை கடிச்சு செத்துட்டார் டோய்" என்றார். உடனே நாங்கள் எல்லோரும் சந்தோஷத்தில் 'ஒ' என்றதும் பக்கத்தில் யாரோ கனைக்கும் சப்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தால் ஐயா நின்றிருந்தார். அவ்வளவுதான். எங்களது சந்தோஷம் மறைந்து சப்த நாடியும் ஒடுங்கி வீட்டுக்குள் மறைந்துவிட்டோம். ஐயா வருவது தெரிந்தே அந்த மாமா அவ்வாறு செய்தார் என்பது பின்னால் தெரிந்தது.

எதற்கு சொல்கிறேன் என்றால் ஐயா நமக்கு நல்லதிற்குத்தானே செய்கிறார் என அறியாத காலம் அது. அவர் இறந்துவிட்டார் எனக்கேள்விப்பட்டதும் விடுதலை கிடைத்ததாக நினைத்து சந்தோஷப்பட்டோம்.

ஆனால் பின்னாளில் ஐந்தாவது முடித்து அரியலூரில் ஆறாவது (முதல் பாரம்) படித்துக்கொண்டிருந்தபோது உண்மையிலே ஐயா இறந்ததை கேள்விப்பட்டதும் என்னை அறியாமலே கண்ணில் நீர் வந்தது என்பதும் சொந்த உறவினர் மறைந்ததுபோல் எண்ணி அழுதேன் என்பதும் நிஜம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

ஞாயிறு, 15 மார்ச், 2009

கம்பசித்திரம்

சிலசமயம் ஒரு கஷ்டமான வேலையைப்பற்றி பேசும்போது, அது என்ன கம்பசித்திரமா என சொல்வது வழக்கம்.

ஆனால் கவிச்சக்ரவர்த்தி கம்பன் ஒரு கவிஞன் என்பது தான் தெரியும். அவன் கவிதை எழுதியதோடு சித்திரமும் வரைந்தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஏன் கம்ப சித்திரம் என சொல்கிறோம் என்பது நம்மில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம்.

இரவிவர்மா போன்ற கைதேர்ந்த ஓவியர்கள் வரைந்த சித்திரங்களில் அவர்கள் உருவாக்கிய காட்சிகளை அல்லது உருவங்களை பார்க்கும்போது நாமே நேரில் அவைகளை/அவர்களை பார்ப்பது போல் உணரமுடியும். அதுபோல கம்பனோ தூரிகை உபயோகிக்காமலேயே கவிதையில் சித்திரம் தீட்டியுள்ளான் என்பதை அவன் கவிதையை படித்தமாத்திரத்திலேயே அறியமுடியும்.

கம்ப ராமாயணத்தை படிக்கும்போது கம்பனுடைய கற்பனைத்திறனும் சொற் திறனும் அவன் குறிப்பிடுகின்ற காட்சியை நம்முன் நேரில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது அனுபவிக்கவேண்டிய உண்மை. அனுமான் இலங்கைக்கு செல்ல கடலைத்தாண்டுகிறான். அதைப்பற்றி சுந்தர காண்டத்தில், கடல் தாவும் படலத்தில்


வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை

தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்

கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்

மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.


என்கிறான் கம்பன்.

அதாவது அனுமான் தன் வாலை உயரே தூக்கி, வலிமையான கால்களை மடக்கி, மார்பைக் குறுக்கி, பெருமை மிகு தோள்கள் பூரித்துப் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி,காற்றின் விரைவைக் கொண்ட கைகளை முன்னே நீட்டி, தலை பிரம்மலோகத்தை அளாவ, மற்றவர் கண் காணமுடியாதவாறு மிகுந்த உயரத்தில் வேகத்தோடு தாவினானாம்.

இந்த பாடலை படிக்கும்போது, நம் கண் முன்னே விரிந்து படர்ந்த கடலும், அதன் மேலே அனுமான் கால் மடக்கி கைநீட்டி பறப்பதும் முப்பரிமாண காட்சியாக தெரிவதை நிச்சயம் நம்மால் உணரமுடியும்.

உண்மையில் சித்திரம் வரைவதே கடினம். அப்படி வரைந்தாலும், நம்மில் சிலர் வரைந்த சித்திரங்களின் கீழே அவை என்ன,என்று எழுதினால்தான் நமக்கு தெரியும். இல்லாவிட்டால் அவை தெனாலிராமன் சுவற்றில் குதிரை வரைந்த கதையாகிவிடும். கவிதையின் மூலம், நாமே நேரில் பார்ப்பது போன்ற காட்சிகளை உருவாக்குவது என்பது கடினமான காரியம். அதை கம்பன் செய்திருப்பதால்தான் அதை கம்பசித்திரம் என்கிறோம்!

புதன், 11 மார்ச், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 3

மரங்கள்!
மரங்களைப்பார்க்கையில் நமக்கு அவைகள் நிழல் தருவதும் மழை பெற உதவுவதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் மரங்களைப்பற்றி இயற்கை ஆர்வலர்களிடம் கேட்டால் அவை எவ்வாறு காற்றில் மாசு படா வண்ணம் எவ்வாறு நம்மை காப்பாற்றுகிறது என்று விபரமாக சொல்வார்கள்.
ஒரு தாவர இயல் நிபுணரிடம் கேட்டால் அவை எந்தெந்த குடும்பத்தைச்செர்ந்தவை என்றும் அவைகளின் தாவர இயல் சிறப்பு பற்றியும் விளக்குவார்கள்.
ஒரு விவசாய விஞ்ஞானியிடமோ அல்லது ஒரு வன இயல் நிபுணரிடமோ கேட்டால் அவைகளை எவ்வாறு வளர்ப்பது என்றும் நல்ல மரங்களை எவ்வாறு கண்டறிவது என்றும் சொல்வார்கள்.
ஒரு மனித வள மேம்பாட்டு நிபுணரிடம் கேட்டால் மரங்கள் மூலம் தலைமைப்பண்பு பற்றி விளக்குவார்கள்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பார்வையில் மரங்களைப்பற்றி பேசக்கூடும்.
ஆனால் நம் ஔவை பாட்டிக்கோ நல்ல மரங்கள் என்றால் என்ன தெரியுமா? கொப்பும் கிளையுமாய் காட்டிலே வளர்ந்து நிற்பவை நல்ல மரங்கள் அல்லவாம். படித்தவர்கள் நிறைந்த சபையில் படிக்க தெரியாமல் நிற்கிறவனே நல்ல மரம் என்று படிக்காதவர்களை,


கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன்மரம்


என சாடுகிறாள்.பாட்டியின் பாடலில் கிண்டலை விட ஆதங்கமே உள்ளது என்பதுதான் உண்மை.

பாட்டியின் சாடலை அங்கதம் எனவும் சொல்லலாம்.

சனி, 28 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 6

தமிழில் புரோ நோட் எனப்படும் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது உள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை.இதை ஆங்கிலத்தில் Demand Promissory Note என சொல்வார்கள். எங்களுக்கு ஐயா சொல்லிக்கொடுத்த பிராமிசரி நோட் இதோ.

தென்னாற்காடு ஜில்லா, விருத்தாசலம் தாலுக்கா, தெற்கு வடக்கு புத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் நடனசபாபதி ஆகிய நான், மேற்படி ஊரைச்சேர்ந்த குப்புசாமி மகன் இராமசாமிக்கு எழுதிக்கொடுத்த பிராமிசரி நோட்டு.
ஐயா, நான் எனக்காகவும்,எனது குடும்ப செலவுக்காகவும் தங்களிடம் வாங்கிய அசல் ரூபாய் 2000 த்தை (இரண்டாயிரத்தை), 6 சதவிகித வருஷ வட்டியோடு தாங்கள் விரும்புகிறபோது தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன்.

கையொப்பம்

தேதி (ரெவின்யு ஸ்டாம்ப்பில்)

நெட்டெழுத்து உட்பட

கையொப்பம்


சாட்சிகள்

1.
2.

கிராமத்தில் அந்த காலத்தில் எழுத படிக்கத்தெரியாதவர்கள் இருந்ததால் பிராமிசரி நோட்டை எழுதத்தெரிந்தவர்கள் எழுதிக்கொடுப்பது வழக்கம். அப்படி எழுதிக்கொடுப்பவர்கள் நெட்டெழுத்து உட்பட என எழுதி கையொப்பம் இடவேண்டும். கடன் வாங்குபவர் கையெழுத்து இடுவது வழக்கம். கடன் வாங்குபவர் கையெழுத்து போடத்தெரியாவிட்டால் கைரேகை இடுவது வழக்கம். பிராமிசரி நோட்டுகள் மூன்று ஆண்டுகளுக்குப்பின் காலாவதி ஆகிவிடும் என்பதால் மூன்று ஆண்டுகளுக்குள் முழு பணத்தையும் தரமுடியாவிட்டால் ஒரு பகுதி பணத்தையாவது கொடுத்து பிராமிசரி நோட்டின் பின்புறம் வரவு வைக்கவேண்டும். இல்லாவிட்டால் கடன் வாங்கியவர் மீது வழக்கு தொடரமுடியாது.

இதை ஐயா சொல்லிக்கொடுத்தபோது இது எப்படி எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைத்தது உண்டு. ஆனால் வங்கியில் சேர்ந்த பிறகு இந்த பிராமிசரி நோட்டில் எழுதப்படவேண்டிய வாசகங்கள் வேறு வகையில் கைகொடுத்தது என்பது ஆச்சரியமான உண்மை.

1970- ல் அதாவது வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதிற்கு பிறகு வங்கிகளில் உள்ள விண்ணப்பங்கள், கடன் பத்திரங்கள் போன்றவைகள் அந்தந்த மாநில மொழியில் இருக்கவேண்டும் என அரசு அறிவித்தபோது எங்கள் வங்கியும் அவற்றை தமிழில் அச்சடிக்க விரும்பி அந்த பணியை ஒரு தமிழ் நாட்டில் உள்ள ஒரு அச்சகத்திற்கு வழங்கியது.

அப்படி அச்சடிக்கப்பட்டவைகள் எங்கள் கிளைக்கு வந்தபோது நான் தற்செயலாக Demand Promissory Note- ஐ பார்த்தபோது அதில் ஒரு முக்கியமான சொல் விடுபட்டிருந்ததை பார்த்தேன்.அந்த படிவத்தில் Order என்ற வார்த்தைக்கான தமிழாக்கம் இல்லை. ஒரு Demand Promissory Note -ல் On Demand, Promise, Order என்ற மூன்று சொற்களும் கட்டாயம் இருக்கவேண்டும். அதாவது தாங்கள் விரும்புகிறபோது , தங்களிடமாவது தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது, திருப்பித்தருகிறேன் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றவை இருக்கவேண்டும். வங்கிக்கு வந்த படிவத்தில் 'தங்கள் உத்திரவு பெற்றவர்களிடமாவது' என்ற வார்த்தை இல்லாததால் அது Demand Promissory Note ஆக கருதமுடியாது. தவறுதலாக அந்த படிவத்தில் கடனாளியிடம் கையெழுத்து வாங்கி கடன் கொடுத்தால் பின்னால் கோர்ட்டுக்கு போக நேர்ந்தால் வங்கிக்குத்தான் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனே எங்கள் கிளை மேலாளரிடம் காண்பித்தேன்.

அவருடைய தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் நான் காண்பித்த குறையை ஒத்துக்கொண்டு உடனே அந்த படிவங்களை மேற்கொண்டு உபயோகத்தில் விடாதிருக்க ஆவன செய்தார்.

அந்த நேரத்தில் எங்கள் ஐயா சொல்லிக்கொடுத்தது எப்படி உதவியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் என்னால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 5

கணக்கில் ஐயா கொடுத்த பயிற்சிதான் பின்னால் வங்கியில் சேர்ந்தபோது 'கால்குலேடேர் ' உதவி இல்லாமல் கூட்டல் கழித்தல் போன்றவைகளை செய்யமுடிந்தது.

ஐயா மாலை 4 மணிக்கு மற்ற ஆசிரியர் போனதும் கணக்கு மற்றும் பொது அறிவு வகுப்புகள் நடத்துவார். நாங்கள் எல்லோரும் சிலேட்டுடன் தயாராக நிற்கவேண்டும். அவர் கணக்கை போட்டு முடித்து ஒன்று,இரண்டு, மூன்று என சொல்லிமுடிப்பதற்குள் விடையை எழுதி சிலேட்டை கீழே வைத்துவிடவேண்டும். இல்லாவிடில் அடிதான். பிறகு ஒவ்வொருவரிடமும் வந்து விடையைப்பார்ப்பார். தப்பாக போட்டவர்களுக்கு. கிள்ளோ அல்லது குட்டோ நிச்சயம்.

சிலசமயம் கணக்கை பாட்டாகவே பாடி போடுவார். அப்படி அவர் பாடி போட்ட ஒரு கணக்கு 55 வருஷங்களானாலும் இன்னும் நினைவில் இருக்கிறது.


கட்டியால் எட்டுக்கட்டி,

கால், அரை, முக்கால் மாற்று,

செட்டியார் சென்று போனார்,

சிறுபிள்ளை மூன்று பேரு,

கட்டியும் உடைக்கொணாது,

கணக்கையும் போடவேண்டும்.


இறந்துபோன செட்டியார் ஒருவர்க்கு மூன்று பிள்ளைகள். அவர் விட்டுச்சென்ற எட்டு தங்க கட்டிகளை சமமாக பிரிக்கவேண்டும். அதுதான் கணக்கு.

இப்போது வேண்டுமானால் இந்த கணக்கு மிக எளிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்போது அது கஷ்டமாகத்தான் இருந்தது. இது போன்று பல கணக்குகள். கணக்கோடு பொது அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையானவைகளையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசி வரை வராது என்பார்கள்.

ஆனால் ஐயாவின் பாடங்கள் அந்த பழ மொழியை பொய்யாக்கி ஊரில் உள்ள அனைவருக்கும் கடைசிவரை கை கொடுத்தது என்பது உண்மை. அந்த கால கட்டத்தில் வங்கிகளின் கிளைகள் இன்று போல் எல்லா இடங்களிலும் இல்லை. அதோடு எல்லோரும் சுலபமாக கடனும் வாங்கிவிட முடியாது. எனவே ஊரில் வசதி படைத்தவர்கள் தேவைப்பட்டவர்களுக்கு பிராமிசரி நோட் எழுதி வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பார்கள். அதனால் அனைவருக்கும் பிராமிசரி நோட்டை பற்றி தெரியவேண்டும் என்பதற்காக ஐயா எங்களுக்கு எப்படி பிராமிசரி நோட் எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்தார். அதோடு முக்கிய தொழில் விவசாயமாக இருந்ததால் குத்தகை சீட்டு எப்படி எழுதுவது என்பதையும் சொல்லிக்கொடுத்தார்.

என் கூட படித்தவர்கள் ஐந்தாவதுக்கு மேல் படிக்காததால் அவர்கள் ஊரிலேயே தங்கி பாரம்பரிய தொழிலான விவசாயத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக எல்லோருக்கும் ஐயா சொல்லிக்கொடுத்தது வாழ்க்கைக்கு உபயோகமாக இருந்தது என்பது உண்மை. இந்த பிராமிசரி நோட் எழுதுவதை கற்றுக்கொண்டது பதினேழு வருஷங்களுக்குப்பின்னால் வங்கியில் பணி புரியும்போது எனக்கு எப்படி உதவியது என்பதை பிறகு சொல்கிறேன்.

தமிழில் பிராமிசரி நோட் எப்படி இருக்கும் என்பது இப்போது அநேகம் பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்காக அதை தருகிறேன்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

சனி, 14 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 4

எங்கள் ஐயாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அப்போது (ஐம்பதுகளில்) ஐந்தாவது வரை மொழிப்பாடமாக ஆங்கிலம் கிடையாது என்பதால் அவர் பாடம் எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாடங்கள் எடுப்பதற்கு வேறு ஆசிரியர்கள் இருந்தார்கள்.

காலையில் பத்து மணிக்கு முன்பும் மாலை ஐந்து மணிக்கு பின்பும் அவரது ராஜ்ஜியம் தான். காலையில் எல்லோரும் நேரத்துக்கு வரவேண்டும் என்பதில் அவர் மிகவும் கண்டிப்பானவர். அனைவரும் திருநீறு பூசி வரவேண்டும். எங்கள் ஊரில் வைணவ சமயத்தினரோ அல்லது மற்ற மதத்தினரோ இல்லாததால் இந்த கட்டளைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. முதலில் வரும் மாணவன் அல்லது மாணவி 'வேர்த்து' எனப்படும் வருகைப்பதிவேட்டை சிலேட்டில் எழுதவேண்டும். எழுதுபவர் தன்பெயருக்கு நேராக 0 இலக்கமிட்டு ஆரம்பிக்கவேண்டும். பின்பு வருபவர்களுக்கு 1,2,3 என இலக்கம் தரப்படும். ஐயா வந்ததும் சாவடியின் எரவாணத்தில் செருகியிருக்கும் நீண்ட பிரம்பை எடுத்துக்கொண்டு வந்து நிற்பார். முதலில் வந்தவர் 'வேர்த்தை' படிக்க ஆரம்பித்ததும் அப்பெயருக்கு உரியவர்கள் வந்து அவர் முன்னால் கையை நீட்டவேண்டும். அவரவர் எண்ணுக்கு தகுந்தாற்போல் கையில் அடி விழும். யாராவது கையை பின்னுக்கு இழுத்தால் கூட ஒரு அடி கிடைக்கும். இந்த அடிக்கு பயந்து கொண்டு அனைவரும் போட்டிபோட்டுக்கொண்டு சீக்கிரம் செல்வோம்.

பிறகு கடவுள் வாழ்த்து உண்டு. அனைவரும் மனப்பாடம் செய்து வரவேண்டும். யாரைவேண்டுமானாலும் பாடச்சொல்லுவார். பாடாவிட்டாலோ அல்லது தவறாக பாடினாலோ அருகில் கூப்பிட்டு தொடை சிவக்கும் வண்ணம் கிள்ளுவார். பெண்பிள்ளைகளாக இருந்தால் தலையில் வலிக்கும் வண்ணம் குட்டு விழும். காலையில் கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு எனப்படும் ஒன்று முதல் பதினாறு வரை உள்ள எண்களின் பெருக்கல் தொகைகளை பார்க்காமல் சொல்லவேண்டும். அதோடு இல்லாமல் அளவை வாய்ப்பாடும் சொல்லவேண்டும்.

எனக்கு இன்னும் கூட அவைகள் நினைவுக்கு வருகின்றன.

4 பார்த்திங் 1 பென்னி

12 பென்ஸ் 1 ஷில்லிங்

20 ஷில்லிங் 1 பவுண்ட்

(சுதந்திரம் அடைந்து சில வருடங்களே ஆகிருந்த படியால் ஆங்கில நாணய வாய்ப்பாடும் இருந்தது)

1 ரூபாய் எடை 1 தோலா

3 தோலா 1 பலம்

8 பலம் 1 சேர்

5 சேர் 1 வீசை

8 வீசை 1 மணங்கு

20 மணங்கு 1 பாரம்.

(அப்போது ஒரு ரூபாய் வெள்ளியில் இருக்கும்)

சரியாக சொல்லாதவர்களை குனியவைத்து முதுகில் செங்கல் வைத்து படிக்க சொல்வார். சரியாக சொல்லும் வரை கல்லை எடுக்கமாட்டார். மாலையில் தான் கணக்கு போடச்சொல்வார். இது போன்று பல வாய்ப்பாடுகளை ஒப்பிக்கவேண்டும்.
தமிழைப்பொறுத்தவரை ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஆத்திச்சூடி,உலக நீதி, வெற்றி வேற்கை, கொன்றை வேந்தன், விவேக சிந்தாமணி, நன்னெறி, நல்வழி, அறப்பளீஸ்வரர் சதகம்,குமரேச சதகம் முதலியவைகளை படித்து மனப்பாடம் செய்து விட வேண்டும். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து சொல்லும் வரை விடமாட்டார். முன்பே சொன்னது போல் மனப்பாடம் செய்யாவிட்டால், அடியோ, குட்டோ, கிள்ளலோ நிச்சயம்.

அவர் அடிப்பதைப்பற்றி வீட்டில் சொல்லமுடியாது. ஏனெனில் பிள்ளைகள் படிக்காவிட்டால் ஆசிரியர் அடிப்பது தவறில்லை என நினைத்த காலம் அது!. ஐயா அடிக்கும்போது எப்போது இவரிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என எண்ணியதும் உண்டு. ஆனால் அப்படி மனனம் செய்ததால் தான் இன்னும் நான் படித்த பாடல்கள், வாய்ப்பாடுகள் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அந்த பயிற்சி பின்னால் பணியில் இருந்தபோது எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருந்தது.


நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 2

காளமேகப்புலவர் சிலேடைப்பாடல்கள் பாடுவதில் வல்லவர். இந்த பாட்டில் மக்கள் பயன்படுத்திவந்த எண் அளவைகளைவைத்து அவர் ஆடியிருக்கும் சொற்சிலம்பம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நம் பழந்தமிழர் உபயோகித்த பல அளவைகள் இப்போது வழக்கத்தில் இல்லை. அந்த அளவைக்குறிக்கும் சொற்களும் இப்போது வழக்கொழிந்துவிட்டன். அதனால்தான் அளவைகளை அமைத்து காளமேகப்புலவர் பாடிய இந்த பாடலை கீழே தந்திருக்கின்றேன்.


முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் --விக்கி

இருமாமுன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன்று ஓது.


அதாவது, நமக்கு இறைவன் கொடுத்த இரண்டு கால்களுடன் மூன்றாவது காலான ஊன்றுகோல் வைத்து நடக்கின்ற முதுமைப்பருவம் வருமுன்பு, நம்முடைய தலையில் நரை தோன்று முன்பு, எம தூதர்களைக்கண்டு அஞ்சுவதற்கு முன்பு, விக்கல் எடுத்து இருமுவதற்கான வேளை வருமுன்பு, சுடுகாட்டிற்கு செல்லுமுன்பு, காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் ஏகாம்பரநாதரை துதிப்பாயாக என்பதே இதன் பொருள்.

இந்த பாடலை கூர்ந்து கவனித்தால் முக்கால், அரை, காலரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா மற்றும் கீழரை போன்ற என அளவைகள் உள்ளது தெரியும். நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த அளவைகளைப்பற்றி தெரியும்? உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

புதன், 11 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 3

எங்கள் பள்ளி மேனேஜ்மென்ட் பள்ளி என சொல்லப்பட்ட தனியார் பள்ளி. ஐயா தான் அதற்கு தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் எல்லாம்.
ஐயா திருமணமாகாதவர் என்பதால் ஆலமரத்துக்கு அருகில் இருந்த சாவடி எனப்படும் ஒரு அறை உள்ள கட்டிடம்தான் அவரது இருப்பிடம். அதிலேயே பள்ளியின் ஆவணங்களையும் வைத்திருப்பார்.
வகுப்புகள் மரத்தின் கீழே நடத்தப்பட்டதால் காலை வேலைகளில் வெயில் அடிக்கும்போது ஆலமரத்துக்கு மேற்கு பகுதியிலும் மாலை வேலைகளில் மரத்திற்கு கிழக்குப்பகுதிக்கும் வகுப்புகள் மாற்றப்படும். மழைக்காலங்களில் அருகில் உள்ள வீட்டு திண்ணைகள் தான் எங்களது தற்காலிக வகுப்பறைகள்.

ஊரின் நடுவே செல்லும் வீதி அருகே ஆலமரம் இருந்ததால் வீதியிலிருந்து பள்ளியை பிரித்தது ஒரு வேலி மட்டுமே. மரத்தின் கீழ்தான் வகுப்பு என்பதால் அனைவரும் ஆற்று கொட்டப்பட்டிருக்கும் மணல் தரையில் தான் உட்கார்ந்து படித்தோம். கிழக்குப்பகுதிக்கும் மேற்குப்பகுதிக்கும் இடையே இருந்த இரண்டு பன்னீர் மரங்களும், அதைச்சுற்றி நடப்பட்டிருந்த கருநுச்சி செடிகளும், சாவடிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளும் தான், எங்கள் பள்ளியின் பூங்கா. மாலையில் அனைவரும் அருகில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றவேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஐயா எங்களை அருகே உள்ள ஆற்றிலிருந்து மணல் கொண்டு வந்து மரத்தடியில் கொட்டச்சொல்வார்.

பள்ளிக்கு விடுமுறை என்பது பண்டிகை நாட்களில் தான். ஞாயிறு விடுமுறை இல்லை. பள்ளி நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐயா விடும் வரை. அனேகமாக ஐந்து மணிக்கு பின் ஆறு மணிக்குள் வீட்டுக்கு செல்வோம். சில ஞாயிறுகளில் ஐயா விருத்தாசலம் செல்வதாக இருந்தால் அன்று காலை ஆறுமணிக்கு எல்லோரும் பள்ளி செல்லவேண்டும். ஐயா சில கணக்குகளை கொடுத்து அவைகளை வீட்டில் போட்டு வருமாறு சொல்லிவிட்டு புறப்படுவார்.

அந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஏனெனில் அன்று ஐயாவிடம் அடி வாங்காமல் வீட்டிற்கு வந்து எல்லோரும் கூடி அமர்ந்து கணக்குகளைப்போட்டுவிட்டு விளையாடச்செல்லலாம். எனவே அந்த நாளுக்குக்காக நாங்கள் காத்திருப்போம்.

நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த கதைகள்

பிரபல எழுத்தாளர் ஓ ஹென்றி அவர்கள் எழுதிய கதைகள் யாவுமே வித்தியாசமானவை. அவரது கதையின் முடிவில் தான் முக்கியமான திருப்பம் அல்லது முடிச்சை வைத்திருப்பார்.

அந்த பாணியில் எழுதப்பட்ட, நான் படித்த சிறுகதையின் சுருக்கம் இதோ!

ஒரு கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் கல்லூரியின் கடைசி நாளின்போது ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அதாவது 25 ஆண்டுகளுக்குப்பின் அனைவரும் அதே கல்லூரியின் உணவு விடுதியின் முன் அவசியம் கூடவேண்டும் என்பதாகும்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப்பின் மூவர் மட்டுமே அந்த இடத்தில் சந்திக்கின்றனர். அதில் ஒருவர் பெண். அனைவரும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். மாலைவரை வேறு யாரும் வராததால் மாலை தேநீர் அருந்திவிட்டு பிரிந்து செல்கின்றனர். ஒருவேளை தாங்கள் சென்ற பிறகு யாராவது வந்தால் அவர்களுக்கு தாங்கள் வந்ததை தெரிவிக்கவேண்டுமே என நினைக்கும்போது அங்கு ஒரு பிச்சைக்காரர் மட்டும் இருப்பதைப்பார்க்கின்றனர். அவரிடன் சென்று தங்களது பெயர்களைக்கூறி தங்களது வகுப்பு நண்பர்கள் வந்தால் அவர்களிடம் இதுவரை காத்திருந்ததை சொல்லுமாறு கேட்டுகொள்கின்றனர். அவரும் 'சரி' என்கிறார்.
அவர்கள் சென்ற பிறகு அவர் தனக்குத்தானே சொல்லிகொள்கிறார்."நல்லவேளை அவர்களுக்கு என்னைத்தெரியவில்லை நானும் அவர்களது வகுப்புத்தோழன் என்று"

சனி, 7 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 2

கடலூர் (முந்தைய தென்னார்க்காடு) மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே இருக்கும் தெ.வ.புத்தூர் என்கிற தெற்கு வடக்கு புத்தூர்தான் நான் பிறந்த ஊர்.
ஊர் என்று பேர் தானே ஒழிய நான்கு பெரிய தெருக்களும் ஒரு சின்ன தெரு மட்டுமே உண்டு. விவசாயம் தான் முதன்மைத்தொழில். ஊருக்கு சரியான பாதை கிடையாது.(நான் சொல்லுவது ஐம்பதுகளில்) அருகிலுள்ள விருத்தாசலம் போக சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று கருவேப்பிலங்குறிச்சியில் பஸ் ஏறவேண்டும்.வழியில் ஊரருகே உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் இருந்தால் வெள்ளம் வடியும் வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லாவிடில் தெப்பகட்டை மூலம் ஆற்றை தாண்டலாம். (தெப்பக்கட்டை என்பது ஒரு பெரிய மரத்துண்டில் இருபுறமும் கயறு கட்டி இருவர் பிடித்துக்கொண்டு நீந்தி வருவர். பயணிகள் கட்டையை இருகைகளாலும் கோர்த்துப்பிடித்துக்கொண்டு அவர்கள் கூடவே சென்றால் அக்கரையை அடைந்துவிடலாம்.) நினைத்துப்பார்த்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. ஆனால் எல்லோரும் அவ்வாறுதான் மழைக்காலங்களில் பயணம் செய்தோம். (பல முயற்சிக்கு பிறகு 1957 -ல் ஒரு தரைப்பாலம் கட்டி அதை பலமுறை வெள்ளம் அடித்துக்கொண்டு போனபின் தற்போது பெரிய பாலம் கட்டிவருகிறார்கள்.)
ஊரில் ஒரே ஒரு துவக்கப்பள்ளி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அதற்கு மேல் படிக்க ஒன்று எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள விருத்தாசலம் செல்லவேண்டும் அல்லது பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெண்ணாடம் (அ) பதின்மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் செல்லவேண்டும். இதன் காரணமாகவே பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. தற்போது நிலைமை மாறியிருக்கிறது. ஊரில் இருந்த பள்ளிக்கு கட்டிடம் ஏதுமில்லை.

ஊருக்குள் நுழைந்ததும் உள்ள பெரிய ஏரியின் கரையில் இருந்த ஆலமரம் தான் பள்ளிக்கூடம். அதன் கீழ்தான் எல்லா வகுப்புகளும் நடந்தன. பள்ளியை நடத்தியவர் ஐயா என மரியாதையுடன் ஊர் பெரியவர்களாலும் பயத்துடன் மாணவர்களாலும் அழைக்கப்பட்ட திரு சாமிநாத ஐயர்  ஆவர்.அவரிடம்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.அவர் நடத்திய பாடங்கள் அப்போது வேம்பாய் கசந்தாலும் பிற்காலத்தில் அவை எவ்வாறு உதவியது என்பதை பின் விவரிக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை அவரைப்போன்ற ஆசிரியரை நான் இதுவரை பார்க்கவில்லை.
நினைவுகள் தொடரும்.

வே.நடனசபாபதி

புதன், 4 பிப்ரவரி, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 1

எனக்குப்பிடித்த பாடல்களை பதிவு செய்ய இருக்கிறேன். அப்படி எனக்குப்பிடித்த பாடல் ஒன்றை கீழே தந்துள்ளேன்.


இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி

என் கொணர்ந்தாய், பாணாநீ என்றாள் பாணி;

வம்பதாம் களபமென்றேன்; பூசு மென்றாள்,

மாதங்கம் என்றேன்; யாம் வாழ்ந்தே மென்றாள்;

பம்புசீர் வேழமென்றேன்; தின்னு மென்றாள்;

பகடென்றேன்; உழுமென்றாள் பழனந்தன்னைக்;

கம்பமா என்றேன்; நல்களியாம் என்றாள்;

கைம்மாஎன் றேன்; சும்மா கலங்கினாளே!



தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு அதே போல் ஒரு பொருளைக்குறிக்க பல சொல் உண்டு.
இந்த பாடலை இயற்றியவர்
பொன் விளைந்த களத்தூரைச்சேர்ந்த அந்தகக்கவி வீரராகவர் ஆகும்.
இவர் பிறவியிலேயே கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாணன் என்ற கவி இராமன் என்ற சிற்றரசனைப்பாடி பரிசு பெற்று வருகிறான். அவனது மனைவி 'என்ன பரிசு கொண்டு வந்தாய்?' என்று கேட்பதுபோல் உள்ளது இந்த பாடல்.

பாணன் களபம் என்றதும் அதை சந்தனம் எனப்போருள்கொண்டு பூசிக்கொள் என்கிறாள். இல்லை இல்லை மாதங்கம் என்றதும் அதை பொன் என்று பொருள் கண்டு நன்றாக வாழ்வோம் என்கிறாள். இல்லை இல்லை வேழம் என்றதும் கரும்பு எனப்பொருள் கொண்டு தின்னுங்கள் என்கிறாள். இல்லை இல்லை பகடு என்றதும் எருமை எனப்பொருள் கொண்டு நிலத்தை உழும் என்கிறாள். இல்லை இல்லை கம்பமா என்றதும் கம்பு மா எனப்போருள்கொண்டு நல்ல களி செய்யலாம் என்கிறாள். இல்லை இல்லை கைம்மா என்றதும் வேறு பொருள் தெரியாததால் கலங்கி நிற்பதாக அருமையாக இயற்றியுள்ளார்.
உண்மையில் பாணன் பரிசாகப்பெற்று வந்தது யானை ஆகும். அது பாணிக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் வெவ்வேறு பொருளைச்சொல்லி பாணன் மூலமாக நமக்கு யானைக்கு களபம்,மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா என்ற மாற்று சொற்களும் உண்டு என்பதை அழகாக தெரிவிக்கின்றார். இதை பெருமையோடு எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தபோது அவர் சொன்னார் நல்ல வேளை பாணன் இந்த காலத்தில் இதை சொல்லவில்லை சொல்லியிருந்தால் பாணி கைம்மாவுக்கு தோசை என்றிருப்பார். பாணன்தான் கலங்கியிருப்பார் என்றாரே பார்க்கலாம்! .

திங்கள், 2 பிப்ரவரி, 2009

நம்பிக்கை

படித்துக்கொண்டு இருக்கிறேன்
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை

உண்மையாய் உழைக்கிறேன்
உயர்வேன் என்ற நம்பிக்கை

விழுந்தாலும் முயற்சிக்கிறேன்
எழுவேன் என்ற நம்பிக்கை

எல்லோருக்கும் முடிந்தவரை உதவுகிறேன்
என்னைப்போல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை

தவறாது வாக்கு அளிக்கிறேன்
தருவார்கள் நல்லாட்சி என்ற நம்பிக்கை

எழுதிக்கொண்டிருக்கிறேன்
யாரேனும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை

படுக்க செல்கிறேன்
விழிப்பேன் என்ற நம்பிக்கை

நம்பிக்கைதான் வாழ்க்கை
வாழ்க்கைதான் நம்பிக்கை

பின் குறிப்பு: ஒரு போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை. ஒரு சில காரணங்களால் அனுப்ப இயலவில்லை. அதனால் இங்கே தந்திருக்கிறேன்.

வே.நடனசபாபதி

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

நினைவோட்டம் 1

ஜூலை 31,2004 என்னால் மறக்க இயலாத நாள்!

ஏனெனில் அன்றுதான் எனது பணி மூப்பு அடைந்து ஒய்வு பெறும் நாள்.
35 ஆண்டுகள் பணி செய்த வங்கியிலிருந்து விடை பெறும் நாள். அனேகமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி தராத நாளாக இருக்கும் என்பார்கள்.

ஆனால்என்னைப்பொறுத்தவரையில் அந்த நாளை நான் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தேன். ஏனெனில் எட்டு ஆண்டு காலம் குடும்பத்தை சென்னையில் விட்டுவிட்டு ஊர் ஊராக பணி நிமித்தம் சுற்றியதால் எப்போது வீடு திரும்புவோம் என காத்திருந்த காலம் அது.

தலைமை அலுவலகம் சென்று அனைவரிடமும் விடை பெறும்போது துக்கம் தொண்டையை அடைத்ததென்னவோ உண்மை. ஆனாலும் பணி மூப்பு என்பது அனைவருக்கும் வரும் என்று தெரிந்திருக்கும்போது அதைப்பற்றி கவலைப்படுவது சரியல்ல என்பது எனது எண்ணமாக இருந்ததால் அந்த நாளை நான் வழக்கமான நாள் போலவே எடுத்துக்கொண்டேன்.

ஒய்வு பெரும் நாள் வருமுன்பே எனது உடைமைகளை சென்னைக்கு அனுப்பிவிட்டதால் ஒரே பெட்டியுடன் (38 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேரும்போது சென்றதுபோல்) மறுநாள் சென்னை திரும்பினேன்.

என்னை சந்தித்த நண்பர்கள் என்னை எனது அனுபவங்களை ஏன் புத்தகமாக எழுதக்கூடாது எனக்கேட்டபோது நான் எழுதினால் யார் வெளியிடுவார்கள் என எண்ணி அந்த கருத்தை செயலாக்க விரும்பவில்லை. பின்பு வீட்டில் கணினி வாங்கி இணையத்தொடர்பு பெற்றதும் வலைப்பதிவுகளை படிக்கத்தொடங்கியதும் நாமும் வலைப்பதிவில் எழுதலாமே என நினைத்தபோது எப்படி தொடங்குவது எனத்தெரியாததால் எனது நண்பர் ஒருவரிடம் உதவி செய்யுமாறு கேட்டேன். அவரும் உதவுவதாக கூறினாலும் அவரது பணி சுமைக்காரணமாக அவரால் உதவ முடியவில்லை.

தற்செயலாக தமிழ் மணத்தில் நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களின் 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி' என்ற எளிய எல்லோருக்கும் புரியும்படி எழுதப்பட்ட தொடர் கட்டுரையைப்படித்தவுடன் நானும் வலைப்பதிவை தொடங்கிவிட்டேன்.

இந்த தொடரில் எனது பள்ளிப்பருவம் முதல் பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள், சந்தித்த சோதனைகள் மற்றும் சாதித்த சாதனைகளை எழுத இருக்கிறேன்.

சிலருக்கு இது சுயபுராணம் போல் தோன்றினால் என்னை மன்னிக்க. இடையிடையே எனக்குப்பிடித்த கவிதைகள் மற்றும் செய்திகளை வேறு தலைப்பில் வெளியிட இருக்கிறேன்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

வெள்ளி, 30 ஜனவரி, 2009

சோதனைப்பதிவு- முன்னோட்டம்

இணைய தள அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்!

தமிழ்மணத்தில் வரும் வலைப்பதிவுகளைப்பார்க்கும்போது நாமும்
ஒரு பதிவைத்தொடங்கலாமே என்ற எண்ணம் கடந்த ஓர்
ஆண்டுகாலமாக இருந்தாலும் எப்படித்தொடங்குவது எனத்
தெரியாததால் தொடங்கவில்லை.

நண்பர் திரு. மஸ்தூக்கா அவர்களின் அதிரை வலைப்பதிவில்
சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி என்ற
தொடரைப்படித்ததும் இதோ ஆரம்பித்துவிட்டேன். மருத்துவம்
படிக்க ஆசைப்பட்டு இடம் கிடைக்காததால் வேளாண்மை
அறிவியல் படித்து மாநில மற்றும் மத்திய அரசின் வேளாண்
துறைகளில் பணி ஆற்றி பின் வங்கியில் சேர்ந்து 35 ஆண்டு
காலம் பணி புரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.

எனது நினைவலைகளில் வருபவைகளை எழுத இருக்கிறேன்.
மூத்த வலைப்பதிவாளர்கள் ஊக்கம் தர வேண்டுகின்றேன்.

இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க கிரியா ஊக்கியாக
இருந்த நண்பர் திரு.மஸ்தூக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள் பல.


வே.நடனசபாபதி