நாம் அடிக்கடி கேள்விப்படும்/ உபயோகிக்கப்படும் சொற்பிரயோகம் தான் சிவபூஜையில் கரடி. உண்மையில் பூஜைக்கும் கரடிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் வேறு மிருகங்களை பற்றி சொல்லாமல் கரடியை மட்டும் சொல்கிறோம்? அப்படி பூஜை செய்யும்போது கரடி வந்தால் பூஜை செய்பவருக்கு அல்லது கரடிக்கு என்னவாகும் என்றெல்லாம் நான் யோசித்ததுண்டு.
கரடிக்கு மனிதர்கள் செய்யும் பூஜைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் அது ஒருவேளை பூஜை செய்யும்போது வந்தால் நிச்சயம் ஒதுங்கி போகாது. பூஜை செய்பவர்களை தாக்கி கடிக்க முயற்சிக்கும். பூஜை செய்பவர்கள் அதைப்பார்த்தால் பூஜையை அப்படியே விட்டு விட்டு ஓடுவர் என்பது உண்மை. எனவே பூஜையில் கரடி வந்தால் பூஜை நடக்காது என்பதை தெரிவிக்கவே இந்த சொல் வழக்கில் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
நான் இந்த சொல்லாடலை நினைக்க காரணம் இருக்கிறது. நான் முன்பு எழுதியிருந்தபடி, எங்கள் அப்பா தினம் காலையில் வயலுக்கு சென்று திரும்பியதும் குளித்து புற்று மண்ணில் சிவலிங்கம் செய்து பூஜை செய்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அவர்களது பூஜை முடிய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அந்த நேரத்தில் யாரும் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆனால் அப்பா பூஜை செய்யும்போது 'கரடி' போல குறுக்கிட்டு இடையூறு செய்தார் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல. எங்கள் ஊர் மணியக்காரர் தான். அவர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊரைச்சேர்ந்தவர். அதோடு எங்களுக்கு தூரத்து உறவினரும் கூட.
(1980 க்கு முன்னால், கிராமங்களில் அரசுக்கு வரவேண்டிய நிலவரி வசூலிப்பதற்கும் மற்றும் மற்றைய வருமான (Revenue) சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிப்பதற்கும் மணியக்காரர் என்றும் கணக்கப்பிள்ளை என்றும் அலுவலர்கள் இருந்தார்கள். 1980 ல் திரு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இந்த பதவிகளை அவசர சட்டத்தின் மூலம் நீக்கிவிட்டு கிராம வளர்ச்சி அலுவலர் என்ற ஒரே பதவியை ஏற்படுத்தினார். அவர்கள் அப்போது முழு நேர அரசு ஊழியர்கள் இல்லை என்றாலும் கிராமத்தில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஏனெனில் அவர்கள் நினைத்தால் ஒன்றுக்கும் உபயோகமில்லாத நிலத்திற்கு வரியை உயர்த்த முடியும். மாட்டு வண்டியை தெருவில் நிறுத்தினால் வரி வசூலிக்க முடியும்.அதனாலேயே அவர்களை யாரும்பகைத்துக்கொளவதில்லை.)
அந்த நிகழ்வு நடந்த நாளில், எங்கள் ஊருக்கு தாசில்தார் தேசிய சேமிப்பு திட்டத்திற்கு வைப்பு நிதி பெற வந்திருந்தார். அவர் வருவதை முன்பே தண்டோரா போட்டு தெரிவித்திருந்தனர். அன்றும், ஏன் இன்றும் கூட அரசின் சேமிப்பு பத்திரங்கள் வற்புறுத்திதான் விற்கப்படுகின்றன! எல்லோரும் தாசில்தார் வந்ததும் சாவடி அருகில் கூடினர். அப்பா பூஜையில் இருந்ததால் உடனே போகமுடியவில்லை.
அப்பா வரவில்லை என கணக்கப்பிள்ளை சொல்லியிருக்கிறார்.
உடனேதாசில்தார் 'ஏன் அவர் வரமாட்டாராமா? போய் அழைத்து வாருங்கள்' என சொன்னதும் மணியக்காரர் 'நானே போய் அழைத்து வருகிறேன்' என சொல்லி எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவிடம் எங்கள் அப்பா எங்கே எனக்கேட்டதும் அவர்கள் பூஜையில் இருப்பதாகக் கூறி, பூஜை முடிந்தும் வருவார் என கூறினார்கள்.
அவர் உடனே.'என்ன பெரிய பூஜை! தாசில்தார் வந்திருக்கிறார். அவர் கூப்பிட்டிருக்கும்போது வரவேண்டாமா? எனக்கூறிவிட்டு விடுவிடு என்று அப்பா பூஜை செய்யும் இடத்திற்கே வந்து சப்தம் போட்டு அப்பாவைக்கூப்பிட்டார்.
அம்மா 'அவர்களை பூஜை செய்யும்போது தொந்தரவு செய்யாதீர்கள்' என சொல்லியும் கேட்காமல் அப்பா பூஜை செய்யும்போது இடையூறு செய்தார். ஆனால் அப்பா எதுவுமே நடக்காதது போல் பூஜையிலே ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சிவ பூஜையை நடக்க விடாமல் இப்படி தடுக்கிறாரே என்ன ஆகுமோ என பேசிக்கொண்டார்கள்.
அப்பா பூஜை முடிந்தவுடன் தாசில்தாரை போய் பார்த்து வந்தார்கள். அப்பாவும் மணியக்காரரிடம் 'ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' எனக்கேட்கவில்லை. எல்லோரும் அப்பாவிடம் 'அவர் உறவினாயிருந்தும் உங்களைப்பற்றி அறிந்திருந்தும் இவ்வாறு செய்தாரே?' என சொன்னபோதும் அப்பா ஒன்றும் சொல்லவில்லை.
இது நடந்து ஓரிரு நாட்களில் அந்த மணியக்காரருக்கு 'பக்க வாத நோய்' வந்து கையும் காலும் செயலிழந்து வாய் பேசமுடியாமல் குழறுகிறார் என செய்தி வந்த போது 'சிவ பூஜையை தடுத்ததால் தான் அவருக்கு இந்த தண்டனை' என்று ஊரே சொல்லியது. அவர் கடைசிவரை அவ்வாறு இருந்தே காலமானார்.
'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தாற்போல்' அவருக்கு ஏற்பட்டது அவரது உடற்கூறு காரணமாக நடந்திருக்கலாம். அவர் அப்பாவின் பூஜையை தடுத்ததற்கும் அவருக்கு ஏற்பட்ட வியாதிக்கும் தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனாலும் கூட 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற பழமொழி உண்மைதானோ!
ஞாயிறு, 15 நவம்பர், 2009
வெள்ளி, 6 நவம்பர், 2009
நினைவோட்டம் 15
ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகள் வரை தான் அரியலூரில் படித்தேன்.ஆனாலும் அங்கு கிடைத்த அனுபவங்களும் பயிற்சிகளும் பிற்காலத்தில் உதவியது என்பது உண்மை. இப்போது நினைத்தாலும், நான் படித்த பள்ளியும், அதன் எதிரே இருந்த நாங்கள் நோட்டு புத்தகங்கள் வாங்கும் 'நடேசன் ஸ்டோர்'- ம், மதியம் நாங்கள் சாப்பிட செல்லும் செட்டி ஏரியின் படிக்கட்டுகளும் ஏரியில் பூத்திருந்த தாமரைப்பூக்களும்
என்னை 1954 ம் ஆண்டுக்கே அழைத்து சென்று ஆறாம் வகுப்பு மாணவனாக்குகிறது என்பது நிஜம்.
எனது மாமா வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜாஜி நகரில் இருந்தது. அங்கிருந்து நான் படித்த பள்ளி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். காலையில் எனது மாமா மகனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவேன். மாலையில் பள்ளி விட்டதும் மாமா கோர்ட்டிலிருந்து வரும்போது எங்களை அவரது மாட்டு வண்டியில் அழைத்து வந்துவிடுவார்.
எனது மாமாவின் வீட்டிற்கு 'Law Mansion' என்ற பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அந்த பெயரின் பொருள் புரியாதபோதிலும் அதனால் கவரப்பட்டு எனது புத்தகங்களின் மேல் அட்டையில் எனது பெயருக்குப் பின்னால் B.A.B.L என எழுதி 'Law Mansion' எனக்குறிப்பிட்டு இருப்பேன். எனது மாமா வழக்கறிஞராக இருந்ததால் அவருக்கு வரும் கட்சிக்காரர்கள், வழக்கு வெற்றி பெற்றதும் வந்து மாமாவை வாழ்த்தியதைப்பார்த்து, நாமும் இவ்வாறு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.
எங்களது மாமா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் குற்றவியல் வழக்குகளையும் எடுத்து நடத்தியதால் வீட்டில் எந்த நேரமும் வழக்காடும் கட்சிக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கட்சிக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் படிக்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சரியான 'மண்டகப்படி' கிடைக்கும்.
எனது மாமா மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். காலையில் 5 மணிக்கே எழுப்பிவிட்டு படிக்க சொல்வார். மாலையில் திரு கல்யாணசுந்தரம் அய்யர் என்ற ஆசிரியரை டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் நன்றாக படித்தாலும் அவசியம் டியூஷன் ஆசிரியரிடம் படிக்கவேண்டும்.
இந்த நேரத்தில் நான் எனது டியூஷன் ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களைப்பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர்.கண்டிக்கவேண்டிய வேளையில் கண்டித்து சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவார். அவர் போன்ற கடமையில் கண்ணான ஆசிரியர்கள் இப்போது குறைவு என்றே நான் சொல்லுவேன். நான் சேர்ந்த முதலாம் ஆண்டு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிகள் அறிவித்தபோது என்னை கட்டாயப்படுத்தி பெயர் கொடுக்கசொல்லி கலந்துகொள்ளவைத்தார். என்னை பேச தயார் படுத்தி இரண்டு போட்டியிலும் முதல் பரிசை பெற காரணமாயிருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் பின்னால் மேடையில் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சரளமாக தடையின்றி, பயமின்றி பேச உதவியது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
நான் கடலூரில் வங்கியில் மேலாளராக இருந்தபோது,அவர் பண்ருட்டியில் அவரது மூத்த மகன் வீட்டில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டேன். அவரை, பார்க்க சென்றபோது என்னைப்பெருமையுடன் அவரது குடும்பத்தார்க்கு அறிமுகப்படுத்தியபோது, நான் நானாக இல்லை என்பதே உண்மை. அவரது மகன் தாசில்தாராக இருந்தும் அவர் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லை என்பதை அறிந்தபோது எனது ஆசான் எவ்வாறு தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும், இவர் போன்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகம் இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். காரணம் உங்களுக்கே தெரியும். தாசில்தாரராக இருந்த அவர் மகன் நினைத்திருந்தால் வானொலிப்பெட்டி என்ன தொலைக்காட்சிப்பெட்டியையே பெற்றிருக்கமுடியும்!
அப்போது நினைத்துகொண்டேன், சும்மாவா சொன்னார்கள் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று!
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
என்னை 1954 ம் ஆண்டுக்கே அழைத்து சென்று ஆறாம் வகுப்பு மாணவனாக்குகிறது என்பது நிஜம்.
எனது மாமா வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜாஜி நகரில் இருந்தது. அங்கிருந்து நான் படித்த பள்ளி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். காலையில் எனது மாமா மகனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவேன். மாலையில் பள்ளி விட்டதும் மாமா கோர்ட்டிலிருந்து வரும்போது எங்களை அவரது மாட்டு வண்டியில் அழைத்து வந்துவிடுவார்.
எனது மாமாவின் வீட்டிற்கு 'Law Mansion' என்ற பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அந்த பெயரின் பொருள் புரியாதபோதிலும் அதனால் கவரப்பட்டு எனது புத்தகங்களின் மேல் அட்டையில் எனது பெயருக்குப் பின்னால் B.A.B.L என எழுதி 'Law Mansion' எனக்குறிப்பிட்டு இருப்பேன். எனது மாமா வழக்கறிஞராக இருந்ததால் அவருக்கு வரும் கட்சிக்காரர்கள், வழக்கு வெற்றி பெற்றதும் வந்து மாமாவை வாழ்த்தியதைப்பார்த்து, நாமும் இவ்வாறு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.
எங்களது மாமா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் குற்றவியல் வழக்குகளையும் எடுத்து நடத்தியதால் வீட்டில் எந்த நேரமும் வழக்காடும் கட்சிக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கட்சிக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் படிக்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சரியான 'மண்டகப்படி' கிடைக்கும்.
எனது மாமா மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். காலையில் 5 மணிக்கே எழுப்பிவிட்டு படிக்க சொல்வார். மாலையில் திரு கல்யாணசுந்தரம் அய்யர் என்ற ஆசிரியரை டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் நன்றாக படித்தாலும் அவசியம் டியூஷன் ஆசிரியரிடம் படிக்கவேண்டும்.
இந்த நேரத்தில் நான் எனது டியூஷன் ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களைப்பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர்.கண்டிக்கவேண்டிய வேளையில் கண்டித்து சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவார். அவர் போன்ற கடமையில் கண்ணான ஆசிரியர்கள் இப்போது குறைவு என்றே நான் சொல்லுவேன். நான் சேர்ந்த முதலாம் ஆண்டு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிகள் அறிவித்தபோது என்னை கட்டாயப்படுத்தி பெயர் கொடுக்கசொல்லி கலந்துகொள்ளவைத்தார். என்னை பேச தயார் படுத்தி இரண்டு போட்டியிலும் முதல் பரிசை பெற காரணமாயிருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் பின்னால் மேடையில் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சரளமாக தடையின்றி, பயமின்றி பேச உதவியது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
நான் கடலூரில் வங்கியில் மேலாளராக இருந்தபோது,அவர் பண்ருட்டியில் அவரது மூத்த மகன் வீட்டில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டேன். அவரை, பார்க்க சென்றபோது என்னைப்பெருமையுடன் அவரது குடும்பத்தார்க்கு அறிமுகப்படுத்தியபோது, நான் நானாக இல்லை என்பதே உண்மை. அவரது மகன் தாசில்தாராக இருந்தும் அவர் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லை என்பதை அறிந்தபோது எனது ஆசான் எவ்வாறு தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும், இவர் போன்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகம் இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். காரணம் உங்களுக்கே தெரியும். தாசில்தாரராக இருந்த அவர் மகன் நினைத்திருந்தால் வானொலிப்பெட்டி என்ன தொலைக்காட்சிப்பெட்டியையே பெற்றிருக்கமுடியும்!
அப்போது நினைத்துகொண்டேன், சும்மாவா சொன்னார்கள் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று!
நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி
லேபிள்கள்:
நினைவுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)