வெள்ளி, 6 நவம்பர், 2009

நினைவோட்டம் 15

ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகள் வரை தான் அரியலூரில் படித்தேன்.ஆனாலும் அங்கு கிடைத்த அனுபவங்களும் பயிற்சிகளும் பிற்காலத்தில் உதவியது என்பது உண்மை. இப்போது நினைத்தாலும், நான் படித்த பள்ளியும், அதன் எதிரே இருந்த நாங்கள் நோட்டு புத்தகங்கள் வாங்கும் 'நடேசன் ஸ்டோர்'- ம், மதியம் நாங்கள் சாப்பிட செல்லும் செட்டி ஏரியின் படிக்கட்டுகளும் ஏரியில் பூத்திருந்த தாமரைப்பூக்களும்
என்னை 1954 ம் ஆண்டுக்கே அழைத்து சென்று ஆறாம் வகுப்பு மாணவனாக்குகிறது என்பது நிஜம்.

எனது மாமா வீடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜாஜி நகரில் இருந்தது. அங்கிருந்து நான் படித்த பள்ளி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். காலையில் எனது மாமா மகனுடன் சேர்ந்து பள்ளிக்கு நடந்தே சென்றுவிடுவேன். மாலையில் பள்ளி விட்டதும் மாமா கோர்ட்டிலிருந்து வரும்போது எங்களை அவரது மாட்டு வண்டியில் அழைத்து வந்துவிடுவார்.

எனது மாமாவின் வீட்டிற்கு 'Law Mansion' என்ற பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அப்போது அந்த பெயரின் பொருள் புரியாதபோதிலும் அதனால் கவரப்பட்டு எனது புத்தகங்களின் மேல் அட்டையில் எனது பெயருக்குப் பின்னால் B.A.B.L என எழுதி 'Law Mansion' எனக்குறிப்பிட்டு இருப்பேன். எனது மாமா வழக்கறிஞராக இருந்ததால் அவருக்கு வரும் கட்சிக்காரர்கள், வழக்கு வெற்றி பெற்றதும் வந்து மாமாவை வாழ்த்தியதைப்பார்த்து, நாமும் இவ்வாறு வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஒருவேளை அவ்வாறு செய்திருக்கலாம்.

எங்களது மாமா ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர். அவர் குற்றவியல் வழக்குகளையும் எடுத்து நடத்தியதால் வீட்டில் எந்த நேரமும் வழக்காடும் கட்சிக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு கட்சிக்காரர்கள் இருந்தாலும் நாங்கள் படிக்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சரியான 'மண்டகப்படி' கிடைக்கும்.

எனது மாமா மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். காலையில் 5 மணிக்கே எழுப்பிவிட்டு படிக்க சொல்வார். மாலையில் திரு கல்யாணசுந்தரம் அய்யர் என்ற ஆசிரியரை டியூஷன் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் நன்றாக படித்தாலும் அவசியம் டியூஷன் ஆசிரியரிடம் படிக்கவேண்டும்.

இந்த நேரத்தில் நான் எனது டியூஷன் ஆசிரியர் திரு கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களைப்பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மிகவும் எளிமையானவர். நேர்மையானவர்.கண்டிக்கவேண்டிய வேளையில் கண்டித்து சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்துவார். அவர் போன்ற கடமையில் கண்ணான ஆசிரியர்கள் இப்போது குறைவு என்றே நான் சொல்லுவேன். நான் சேர்ந்த முதலாம் ஆண்டு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டிகள் அறிவித்தபோது என்னை கட்டாயப்படுத்தி பெயர் கொடுக்கசொல்லி கலந்துகொள்ளவைத்தார். என்னை பேச தயார் படுத்தி இரண்டு போட்டியிலும் முதல் பரிசை பெற காரணமாயிருந்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் தான் பின்னால் மேடையில் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டத்தில், சரளமாக தடையின்றி, பயமின்றி பேச உதவியது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

நான் கடலூரில் வங்கியில் மேலாளராக இருந்தபோது,அவர் பண்ருட்டியில் அவரது மூத்த மகன் வீட்டில் இருக்கிறார் எனக்கேள்விப்பட்டேன். அவரை, பார்க்க சென்றபோது என்னைப்பெருமையுடன் அவரது குடும்பத்தார்க்கு அறிமுகப்படுத்தியபோது, நான் நானாக இல்லை என்பதே உண்மை. அவரது மகன் தாசில்தாராக இருந்தும் அவர் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி கூட இல்லை என்பதை அறிந்தபோது எனது ஆசான் எவ்வாறு தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் என்பதை அறிந்ததும், இவர் போன்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகம் இருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். காரணம் உங்களுக்கே தெரியும். தாசில்தாரராக இருந்த அவர் மகன் நினைத்திருந்தால் வானொலிப்பெட்டி என்ன தொலைக்காட்சிப்பெட்டியையே பெற்றிருக்கமுடியும்!

அப்போது நினைத்துகொண்டேன், சும்மாவா சொன்னார்கள் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை' என்று!

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. வணக்கம்.

    அக்கால ஆசிரியர்களை நோக்க உண்மையில் இன்றைய பள்ளிகளின் மாணவரின் நிலை குறித்த பரிதாபம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு