ஞாயிறு, 31 ஜனவரி, 2010

நினைவோட்டம் 16

முன்பே சொன்னதுபோல் பள்ளி நாட்களில் எங்கள் மாமா பள்ளி முடியும்போது கோர்ட்டிலிருந்து வந்து அழைத்து சென்றுவிடுவார். அப்படி அவர் வராத நாட்களில் நாங்கள் பள்ளி விட்டதும் நேரே வீட்டுக்கு வந்துவிடுவோம்.


வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.வேறெங்கும் செல்ல அனுமதி கிடையாது. வந்ததும் கைகால் கழுவி டிபன் சாப்பிட்டுவிட்டு டியூஷனுக்கு தயாராக வேண்டும். எப்போதாவது சினிமாவுக்கு செல்ல அனுமதி உண்டு. அப்படி இரண்டு ஆண்டுகளில் பார்த்த படங்கள் மலைக்கள்ளன்,கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் குணசுந்தரி ஆகிய மூன்றும் தான்!

காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகள் முடிந்ததும் தரப்படுகின்ற 'புராகிரஸ் ரிப்போர்ட்' டில் மாமாவிடம் கையெழுத்து வாங்குவதற்கு நாங்கள் பயப்படுவோம். எண்பது சதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் ஏன் நூறு சதவிகிதம் வாங்கவில்லை என கேட்டு அடிப்பார். மாமா வீட்டில் இருக்கும்போது நாங்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருப்போம். மாதத்தில் சில நாட்கள் அவர் திருச்சி செல்வார். அந்த நாட்கள் தான் எங்களுக்கு சுதந்திரமான நாட்கள். நான் முன்பு எழுதியிருந்தது போல் ஐயாவிடமிருந்து தப்பித்தோம் என சந்தோஷப்பட்டது தற்காலிகம்தான் என்பது நான் மாமாவின் கண்டிப்பைப் பார்த்ததும் அறிந்துகொண்டேன்.

அங்கு படிக்கும்போதுதான் தேவிகுளம் பீர்மேடு, மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்ககோரிபோராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது பள்ளிகளை மூடச்சொல்லி போராட்டகாரர்கள் பள்ளிமுன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். வேலை நிறுத்தம் காரணமாக பள்ளி மூடப்பட்டதால், சந்தோஷப்பட்டு, இதுபோல் அடிக்கடி வேலைநிறுத்தம் நடக்ககூடாதா என எண்ணியதுண்டு. ஆனால்இந்த சந்தோஷமே பிற்காலத்தில் வெறுப்பாக மாறும் எனஅப்போது நினைக்கவில்லை. பின்பு கேரளாவில் பணியில் இருந்தபோது அடிக்கடி 'பணிமுடக்கம்' என்ற பெயரில் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது கண்டு வருத்தப்பட்ட நாட்கள் அநேகம். (அது பற்றி பின் எழுதுகிறேன்)

ஞாயிற்றுகிழமை என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் அன்றுதான் எனக்கு வெளியே சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.


அரியலூரில் ஒவ்வொரு ஞாயிறும் சந்தை எனது பள்ளி அருகே உள்ள திடலில் நடக்கும். அங்கு என்னை அனுப்பி காய்கறி வர சொல்வார்கள்.அங்கு போய் வர சுமார் ஒரு மணி என்பதால் நான் அந்த வேலையை மிகவும்

மகிழ்ச்சியோடு செய்யகாத்துகொண்டிருப்பேன் என்னென்ன வேண்டும் என்பதை கேட்டு மனதில்வாங்கிக்கொண்டு போய் வாங்கிவரவேண்டும்.

காய்கறிகளின் பெயர்களை, நினைவில் இருத்துவது மட்டுமல்ல, ஒவ்வொன்றிலும் எவ்வளவு வாங்கவேண்டும் என்பதையும், அவைகளை வாங்க கொடுத்த காசையும் நினைவில் கொண்டு திரும்ப வந்து கணக்கை சரியாக தரவேண்டும்.

ஊரில் ஐயா கொடுத்த பயிற்சிதான் எனக்கு அப்போது உதவியது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி