வெள்ளி, 23 ஜூலை, 2010

எனக்குப்பிடித்த பாடல்கள் 7

சாதிகள் எத்தனை சாதியடி!


ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடைமொழி, அறுபதுகளில் காணாமல் போனது உண்மை.அதுவும்சிற்றூர்களில் இருந்து நகரத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்தபோது சாதிகள் காணமல் போயின.

இன்னும் சொல்லப்போனால் பெயருக்கு பின்னால் சாதியைப்போடுவதை பெருமையாய் கருதிய இந்த சமூகம், இன்ன சாதி என சொல்லிக்கொள்ளவே தயங்கியது அல்லது விரும்பவில்லை எனலாம்.

எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்புக்கு அரியலூர் செல்ல பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டபோது எனது பெயருக்கு பின்னால் எனது சாதியை எழுதித்தான் கொடுத்தார்கள்.

காணாமல் போயிருந்த சாதிப்பற்று(வெறி) திரும்பவும் தலை தூக்கியிருப்பது கவலைக்கு உரியதுதான்.

இன்றைக்கு எங்குபார்த்தாலும் திடீரென புதிய புதிய சாதிச்சங்கங்கள் தோன்ற தொடக்கியுள்ளன.

இதுவரை இல்லாத இவைகள் திடீரென முளைக்க காரணம்? இதற்கு முன்பு சாதிகளே இல்லையா என யோசித்ததில், ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்த்து, தங்களுக்கும் 'வாக்கு வங்கி' உள்ளது என்ற தோற்றத்தை உண்டாகி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி அதன் மூலம் பலன் பெற சிலர் முயற்சிக்கிறார்களோ என நினைக்கிறேன்.

இந்த சுயநலவாதிகளுக்கு, அவர்கள் சாதி மக்களை முன்னேற்றும் எண்ணம்இல்லை என்பதே உண்மை. தங்கள் சுய நலத்திற்காக சாதி என்ற போர்வையை உபயோகிக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

அரசியலில் நுழைந்த சாதி, இன்று திரைத்துறையில், அலுவலகத்தில், கல்லூரியில், பள்ளியில் என எல்லா இடங்களிலும் புகுந்து நம்மை பிரித்து வைக்கிறது என்றே நினைக்கிறேன்.

இல்லாவிட்டால் நாம் என்றாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், தங்கவேலு, வி.ஆர்.இராமசாமி பாலையா போன்ற நடிகர்கள் என்ன சாதி என்று நினைத்து பார்த்திருக்கிறோமா? இன்றோ ஒவ்வொரு நடிகரும் தாங்கள் இன்ன சாதி என்பதை தங்கள் சாதிச்சங்கங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளிப்படுத்த தொடங்கியுள்ளார்கள். இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லை.

இந்த சாதி வெளிப்பாடு அவ்வை பாட்டி காலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதனால்தான் அதை நேரடியாக சாடாமல், இரண்டே சாதிதான் இருப்பதாக அடித்து சொல்கிறார் 'நல்வழி' யில்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி


என்னைப்பொறுத்தவரை இவ்வுலகில் 'உழைக்கும் சாதி' உழைக்கா சாதி' என இரண்டு வகை சாதிகள் நான் இருப்பதாகத்தான் கருதுகிறேன்.

'திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 'என கவிஞர் பட்டுகோட்டையார் சொன்னதுபோல, மக்களாக பார்த்து சாதியை விட்டால் ஒழிய இந்த வியாதியை(சாதியை) தடுக்கமுடியாது.

ஆனால் இது நடக்கும் என்பது சந்தேகமே. இருந்தாலும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!!!

வியாழன், 15 ஜூலை, 2010

நினைவோட்டம் 25

இன்றைக்கு நாம் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் கூட நடந்து செல்வதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது ஆட்டோ (அ) ஷேர் ஆட்டோவிலோ பயணிக்கிறோம்.

ஆனால் ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பேரூந்து வசதி இல்லாத காலகட்டத்தில், எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விருத்தாச்சலத்திற்கு நடந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

நாங்கள் அனைவரும் காலை ஏழுமணிக்குள்சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை (அ) இட்லியை ஒரு சிறிய தூக்கில் எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.

பேசிக்கொண்டே கூட்டமாக சென்றதால் பயண அலுப்போ, களைப்போ தெரியாது.போகிற வழியில் எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறுக்கு ரோடு என அழைக்கப்படும் கருவேப்பிலங் குறிச்சி என்ற ஊரைத்தாண்டியதும் சுமார் இரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பக்கமும் காடு இருக்கும்.

காட்டில் ஓடும் ஓடைக்காக இரண்டு இடங்களில் சறுக்கல் எனும் தரைப்பாலமும்,ஒரு இடத்தில் மதகும் இருக்கும். அந்த சறுக்கல்கள் பெரிய சறுக்கல் என்றும் சின்ன சறுக்கல் என்றும் அழைக்கப்பட்டன.(இப்போது அவைகள் எல்லாம் காணாமல் போய் புதிய பாலங்கள் வந்துவிட்டன) மழைக்காலங்களில் காட்டு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஓரிரு நாட்கள் பள்ளி செல்ல முடியாது. காரணம் அந்த சறுக்கல்களில், அதுவும் சின்ன சறுக்கலில் தண்ணீரின் ஓட்டமும், இழுப்பும் அதிகமாக இருக்கும்.

காடு உள்ள பாதையின் வழியில், சில இடங்களில் விளாமரங்கள் இருக்கும். நடந்துசெல்லும்போது அவற்றில் பழுத்துதொங்கும் விளாம்பழங்களை கல்லால் அடித்து, பறித்து சாப்பிட்டுக்கொண்டே செல்வோம். (இன்றைய இளைஞர்களில் எவ்வளவு பேர் விளாம் பழங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் எனத்தெரியவில்லை.)

காட்டைத்தாண்டியதும் விருத்தாசலத்தின் எல்லைக்கோவிலான வேடப்பர் கோவில் வரும். பிறகு இருக்கும் சித்தலூர் என்ற ஊரையும் தாண்டி விருத்தாசலம் அருகே ஓடும் மணிமுத்தாறு ஆற்றைக்கடந்து பள்ளியை அடையும்போது சரியாக மணி ஒன்பது ஆகிவிடும்.

வகுப்புக்கு சென்று பைகளை வைத்துவிட்டு காலை வழிபாட்டு நிகழ்ச்சிக்கு செல்வோம். மாலை வகுப்புக்கள் முடிந்து நாலே கால் மணிக்கு பள்ளிவிட்டதும்,அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வரும்போது மாலை ஆறரை மணிக்குமேல் ஆகிவிடும்.

வீட்டுக்கு வந்து கைகால் கழுவி ஏதாவது சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தால் தூக்கம் கண்ணை சுழற்றும். இரவு உணவை முடித்துவிட்டு படுக்கத்தான் தோன்றும்.

ஆரம்பத்தில் இவ்வாறு சென்று வருவது கடினமாக இருந்தாலும், ஓரிரு மாதங்களில் விருத்தாச்சலத்திலேயே தங்க போவதால்,நண்பர்களோடு சென்று வருவது சில நாட்கள் தானே என்ற எண்ணம் அந்த கஷ்டத்தை மறக்கச்செய்தது.



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி