திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 27

ஒரு வழியாக எனது அண்ணனுக்கு விருத்தாசலம்
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.

விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.

விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.

வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.

சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.

நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.

காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),

ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),

ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),

ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),

ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),

ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),

அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.

சாப்பாடு 50 பைசா தான்.

(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)



நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. வணக்கம்.

    இவ்விலைப்பட்டியல் எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்களா?

    அல்லது நாட்குறிப்பு எழுதும் வழக்கமுண்டா?

    அறிய விழைகிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! நான் நாட்குறிப்பு எழுதுவது இல்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன். மூன்று ஆண்டுகள் தினம் ‘கோமள விலாஸ்’ என்ற அந்த ஹோட்டலில் சாப்பிட்டு வந்ததால் அந்த விலைப்பட்டியல் பசுமரத்தாணி மனதில் பதிந்துவிட்டது.

      நீக்கு