சனி, 25 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 29

அப்போதெல்லாம் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியராக இருப்பார்கள்.
அவர்கள் ஆங்கிலம் அல்லாமல் வேறொரு பாடமும் எடுப்பார்கள்.

அப்படி எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்த
M.R.G என அன்புடன் அழைக்கப்பட்ட திரு.M.R.கோவிந்தசாமி அவர்கள்,
ஆங்கிலத்தோடு சமூகவியல் (Social Studies ) பாடமும் நடத்தினார்.

அவருடைய வகுப்பு என்றாலே எங்களுக்கு சந்தோஷம் தான். ஆங்கில படத்தையும், சமூக பாடத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நகைச்சுவையோடும்,உவமையோடும் அவர் நடத்தியதால்,அவரது வகுப்புகளை எவரும் தவற விட்டதில்லை.

சமூக இயல் பாட வகுப்பு என்றால், அநேகருக்கு நான் முன்பே சொன்னதுபோல் அது எட்டிக்காய்தான்.
அந்த பாடத்தில் வரும் வரலாற்று சம்பவங்களையும் அது நடைபெற்ற வருடங்களையும், தேதிகளையும் நினைவில்
இருத்தி தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்ததுதான் காரணம்.

எட்டாம் வகுப்பில் எப்படி எங்கள் ஆசிரியர் திரு E .C. நாத் அவர்கள் சமூகவியல் பாடத்தை சுவைபட நடத்தி விரும்பச்செய்தாரோ,அது போல
திரு M.R.G அவர்கள் சிரிக்க சிரிக்க பேசி அந்த பாடத்தின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கினார் என்பதே நிஜம்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இருந்த கவர்னர் ஜெனெரல்கள் பெயர்களையும்,அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தம் அல்லது சட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டபோது,
திரு.M.R.G அவர்கள் அவைகளை நினைவில் வைக்க மிக
சுலபமான வழிகளை சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அப்போது இருந்த சமஸ்தானங்களின்(Princely states)
குறுநில மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்து
இறந்தால்,அவர்களுக்கு பின் அந்த சமஸ்தானங்களை
ஆள குடி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு
முடிசூட்டுவது வழக்கமாக இருந்தது.

இதை ஒழிப்பதற்காக, அப்போது இருந்த கவர்னர் ஜெனெரல் ஒருவர் அந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி,அவைகளை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர ஏற்படுத்தியதுதான் Doctrine of lapse
எனப்படும் தத்து எடுப்பதை தடுக்கும் திட்டம்.

அந்த திட்டத்தை கொண்டுவந்தது யார் என்பதை நினைவில் இருத்த எங்கள் M.R.G அவர்கள் சொன்னது ....?

புதன், 8 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 28

விருத்தாச்சலத்தில் படித்த அந்த மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டவை அநேகம். அதற்கு காரணம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள். இந்த நேரத்தில் அவர்களை நினைத்து வணங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் என் மனதில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவர்களுடைய தன்னலமில்லா சேவையே
என்பது தான் உண்மை.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் மறக்க முடியாதவர்கள் பலர்.அவர்களைப்பற்றி எழுதுவது அவர்களுக்கு நான் தரும் மரியாதை என எண்ணுகிறேன்.

எனக்கு தமிழிலே ஆர்வம் வரக்காரணமாக இருந்த எங்கள் தமிழாசிரியர் புலவர் குப்புசாமி அய்யா அவர்கள்.ஒன்பதாம் வகுப்பிலிருந்து S.S.L.C வரை மூன்று ஆண்டுகளும் அவர் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

தூய வெள்ளை ஜிப்பாவுடனும் தோளில் துண்டுடனும் அவர் வகுப்பறையில் நுழையும்போதே எங்களுக்கு உற்சாகம் கரை புரண்டோடும். காரணம் அவர் பாடம் நடத்திய விதம். எவ்வளவு கடினமான பாடலானாலும் பொருள் புரியும் வண்ணம் சொற்களை பிரித்து அவர் சொல்லிக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

தமிழில் இலக்கண பாடம்தான் கடினம் என்பார்கள். நான் முன்பே சொன்னது போல அப்போதெல்லாம் பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் என இரு பாடப்பிரிவுகள் உண்டு.

அனைவரும் கட்டாயமாக பொதுத்தமிழைப்படித்தாக வேண்டும்.சிறப்புத்தமிழ் எடுக்காதவர்கள் வடமொழிப்பாடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இலக்கண பாடம் இருந்ததால் சிறப்புத்தமிழ்தான் கடினமாக இருக்கும்.

ஆனால் திரு குப்புசாமி அய்யா அவர்கள் இலக்கண பாடம் நடத்தினால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.

'நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றுபட சேர்வதுதான் தளை' என வலது கையையும் இடது கையையும் இணைத்து அவர் தளைக்கு சொன்ன வரையறை (Definition)விளக்கம் இன்னும் என் நினைவில் இருந்து மறையவில்லை.

அவர் எங்களுக்கு வெண்பா எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுத்ததும்,
'தன்னிகரில்லாத் தமிழ்' என ஈற்றடி கொடுத்து எங்களுக்குவெண்பா போட்டி வைத்ததும் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.

(அவர் வைத்த போட்டியில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டதும், எங்களில் சிலர் பின்னால் கவிஞர்கள் ஆனதும் தனிக்கதை.அந்த வகுப்புத்தோழர்களைப்பற்றி பின்பு எழுதுவேன்.)

எங்களை தமிழில் தவறு இல்லாமல், பேசவும் எழுதவும் வைத்தவர் திரு குப்புசாமி அய்யா அவர்கள் என்பதும்தமிழின் மேல் பற்றும் பிடிப்பும் எங்களுக்கு ஏற்பட, அவர் ஒரு காரணமாக இருந்தார்
என்பதும் மறுக்கமுடியாத,மறைக்கமுடியாத உண்மை.

இப்போது உள்ள இளைஞர்கள் தமிழில் சரியாக எழுத, பேச தடுமாறுவதைப் பார்க்கும்போது அவர் போன்ற தமிழ் ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத்தெரியவில்லை.

'கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த பாடமும் கடைசிவரை வராது' என்பார்கள். ஆனால் குப்புசாமி அய்யா அவர்கள் சொல்லிக்கொடுத்த பாடம் இன்றுவரை எங்களிடம் இருக்கிறது என்பதை
பெருமையுடன் சொல்லுவேன்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி