சனி, 1 ஜனவரி, 2011

நினைவோட்டம் 35


அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்!

நானும் வலைப்பதிவு தொடங்கி விளையாட்டு போல
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 2009 ஆம் ஆண்டு
31
பதிவுகளும், 2010 ஆம் ஆண்டு 39 பதிவுகளுமாக
ஆக மொத்தம் 70 பதிவுகள் இட்டிருக்கிறேன்.

நான் நினைத்ததை எல்லோரும் விரும்பும் வண்ணம்
சொல்வது அவ்வளவு எளிதல்ல என்பதை நன்கு
அறிவேன்.இருப்பினும் எனது வலைப்பதிவிற்கு
வருவோருக்கு, கூடியவரை சுவாரஸ்யமான
செய்திகளை தருவதே என் நோக்கம்.

நான் நினைவோட்டம் 1 இல் சொல்லியதுபோல
இந்த தொடரில் எனது பள்ளிப்பருவம் முதல்
பணி மூப்பு வரை நான் அனுபவித்த வேதனைகள்,
பணி புரியும்போது சந்தித்த சோதனைகள் மற்றும்
சாதித்த சாதனைகளை எழுத ஆரம்பித்திருக்கிறேன்

ஒரு சிலருக்கு அலுப்பைத்தந்தால்
(‘
அறுவைபோல் இருந்தால்)
என்னை மன்னிக்கவேண்டுகிறேன்.

இதோ எனது நினைவோட்டம் மீண்டும் தொடர்கிறது.

நான் படித்த பள்ளியில் ஆசிரியராகவும்,
எனக்கு கணக்கு பாடத்தில் ஆர்வம் வர
காரணமாக இருந்த எனது அண்ணனைப்பற்றி
எழுது முன்பு, எனது பள்ளித்தோழர்கள்
சிலரை பற்றி நினைத்துப்பார்க்கிறேன்.

எனக்கு ஓராண்டு மூத்த மாணவரான நண்பர்
திரு பார்த்தசாரதி பற்றி அவசியம் சொல்லவேண்டும்.
அவர் தமிழில் அப்போதே புலமை பெற்றவர்.

எனது வகுப்பு நண்பர்கள் துரைராஜ் மற்றும் கண்ணன்
மூலம் அவர் எனக்கு பழக்கம். அப்போதே அவர் நிறைய
வெண்பாக்கள் தமிழ் அன்பன்என்ற புனைபெயரில்
எழுதுவார்.

அவர் S.S.L.C (1959) தேர்வில் மாநிலத்திலேயே,
சிறப்பு தமிழில் 95 க்கு மேல் மதிப்பெண் பெற்று,
முதலாம் இடத்தைப்பிடித்தார். (அப்போதெல்லாம்
தமிழ் ஆசிரியர்கள் 65 மதிப்பெண்களுக்கு மேல்
தரமாட்டார்கள்.)

அதற்காக அவர் எங்கள்  உரை நூல்
(
கோனார் உரை நூல் போன்றது)வெளியிட்ட
பதிப்பாளர்களிடமிருந்து முதற் பரிசு பெற்றுள்ளார்.
திருப்பனந்தாள் ஆதீனத்தின் மெடலையும் பெற்றவர்
அவர். அவரது ஆசிரியரான, எனது அண்ணன்
திருமணத்திற்கு எழுதிய வாழ்த்து மடலில்,


அன்றிலுக்கு காதல் சொல்லித்தரவேண்டுமா? என்
ஆசானுக்கு நான் சொல்லித்தெரிய வேண்டுமா?”

என்று குறிப்பிட்டிருந்த அவரது கற்பனை நயமிக்க
வரிகள் இன்னும் என் நினைவில் உள்ளது.
(
அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்)

அவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை
பட்டம் முடித்து, பின்னர் சட்டம் படித்துவிட்டு ,ரிசர்வ் வங்கியில் சேர்ந்தாலும், அவரது எழுத்துப்பணியை நிறுத்தவில்லை.
கல்பனா தாசன்என்று கவிஞர் கண்ணதாசன்
அவருக்கு வைத்த புனைப்பெயரோடு இன்றும்
எழுதிக்கொண்டிருக்கிறார்.

அடிக்கடி புதிய பார்வைஎன்ற இதழில்
அவரது படைப்புக்களை பார்க்கலாம். தொலைக்காட்சித்  தொடருக்கு உரையாடலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். பல நூல்களை படைத்திருக்கிறார்.

இப்போது பணி ஓய்வு பெற்று சென்னையில்  பொழுதுபோக்கிற்காக
ஒரு பல்பொருள் அங்காடி நடத்தி  வருவதாக அறிகின்றேன்.

என்னால் மறக்கமுடியாத பள்ளி நண்பர்களுள்
திரு பார்த்தசாரதியும் ஒருவர்.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. Reminiscences are undoubtedly interesting and well written. I am sure all future blogs would also be equally interesting and informative. Vasudevan

    பதிலளிநீக்கு
  2. நல்ல நட்பையும்,நண்பர்களையும் எப்போதும் மறக்க முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டின் முதல் நாள் வந்தமைக்கும், கருத்து தந்தமைக்கும், நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டின் முதல் நாள் என்பதிவுக்கு வந்து,ஊக்கமளித்ததற்கு நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு