வியாழன், 24 பிப்ரவரி, 2011

நினைவோட்டம் 40

நான் முன்பே சொல்லியிருந்தபடி, நண்பர் கிருஷ்ணன்
படிப்பில் சூட்டிகையாக இருந்தும், Composite கணிதம்
படிக்கவேண்டும் என்பதற்காகவே, S.S.L.C
படிக்கும்போது என் அண்ணனிடம் கணித மற்றும்
ஆங்கில பாடங்களுக்காக ‘டியூஷன்’ படித்தார்.

(கிருஷ்ணனைப்போலவே, அவரது இரு மகன்களும்,
மகளும் படிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்கள் பள்ளியில்
நன்றாக படித்து கணிதத்தில் நூற்றுக்கு நூறு
மதிப்பெண்கள் பெற்றபோதும், என் அண்ணனிடம்
அவர்களையும் டியூஷன் படிக்க வைத்தார்.
காரணம் அவருக்கு அவரது ஆசிரியர் மேல் இருந்த
மதிப்பு,நம்பிக்கை ஏன் பக்தி என்று கூட சொல்லலாம்.
அவர்கள் இப்போது மருத்துவராகவும் பொறியாளராகவும் இருக்கிறார்கள்)

கிருஷ்ணனும் நானும் பள்ளிப்படிப்பை முடித்தபின்
மருத்துவம் படிக்க நினைத்தோம். நான் முன்பே
எழுதி இருந்தபடி, எனக்கு மருத்துவக்கல்லூரியில்
இடம் கிடைக்கவில்லை. அவருக்கும் கிடைக்காததால்,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேதியல்
பட்டபடிப்பில் சேர்ந்தார். ஓராண்டு முடிந்ததும்
திரும்பவும் மருத்துவக்கல்லூரியில் படிக்க முயற்சித்து,
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தும் விட்டார்.

ஆனால் விடுதியில் இருந்தால், படிக்கமுடியாது
என்று புரசைவாக்கத்தில் ‘ராக்ஸி’ திரை அரங்கம்
(தற்போது அது இடிக்கப்பட்டு அங்கே சரவணா
ஸ்டோர்ஸ் வந்துவிட்டது) அருகே உள்ள ஒரு
தங்கும் விடுதியில் இருந்து படித்தார்.
அவர் மருத்துவம் படித்து முடிப்பதற்குள்
(அப்போது மருத்துவ படிப்பை 5 ஆண்டுகள்
படிக்கவேண்டும்) நான் வேலையில் சேர்ந்துவிட்டேன்.

நான் எப்போது டில்லியிலிருந்தோ அல்லது
பெங்களூருவிலிருந்தோ சென்னை வந்தாலும்,
என்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்து
அழைத்துவந்து, அவருடன் தங்கவைத்து
திரும்பவும் எழும்பூர் இரயில் நிலையம்
வந்து வண்டி ஏற்றிவிடுவார்.

மருத்துவம் படித்து முடித்து அரசு பணிக்கு
செல்லாமல், விருத்தாசலத்தில் அவரது தந்தையார்
(அவரும் ஒரு புகழ் பெற்ற குழந்தை நல மருத்துவர்)
நடத்திவந்த குழந்தை நல மருத்துவ மனையில்
சேர்ந்து அவருடைய தந்தையாருடன் மருத்துவ
சேவையை செய்ய ஆரம்பித்தார். அவரது
தந்தை மறைவுக்கு பிறகு அந்த மருத்துவ
மனையை அவர்தான் நடத்திவருகிறார்.

கிருஷ்ணனுடைய மருத்துவ மனையில்
எப்போது கூட்டம் தான். அதற்கு காரணம்
டாக்டர் கிருஷ்ணனுடைய அணுகுமுறை தான்.
அவரிடம் வரும் பெற்றோர்களிடம், குழந்தைக்கு
மருத்துவம் செய்வதோடு அவர்களுடைய
குறைகளைக்கேட்டு அவர்களுக்கு ஆறுதல்
சொல்வதால்,அவர்கள் ஒரு மருத்துவரிடம்
வந்ததுபோல் உணராமல் தங்களது உறவினரைக்
காண வந்தது போல் தங்களது சொந்த
கஷ்டங்களையும் சொல்லி ஆறுதல் பெறுவதை
நான் நேரில் கண்டிருக்கிறேன்.

பணவசதி இல்லாதவர்களையும்‘கசக்கி பிழியும்’
இந்த காலத்தில் மிக குறைந்த கட்டணத்தில்
மருத்துவம் பார்ப்பதால் இவரை நாடி வருவோர்
அதிகம்.

ஒரு தடவை எனது அண்ணன் திரு சபாநாயகம்
அவர்கள் கிருஷ்ணனைப்பார்க்க போயிருந்தார்.
அப்போது அவரால் குணப்படுத்தப்பட்ட
குழந்தையின் பெற்றோர் வந்து ‘டாக்டர் ஐயா,
எங்கள் குழந்தை பிழைத்தது உங்களால்தான்.
நீங்கள் தான் எங்களது சாமி’ என்றபோது
கிருஷ்ணன் எனது அண்ணனைக்காட்டி,
‘உங்கள் நன்றியை இவருக்கு சொல்லுங்கள்.
எல்லாம் இவர் போட்ட பிச்சைதான்.இவர் மட்டும்
கண்டிப்பாக பாடம் சொல்லிக்கொடுக்காமல்
இருந்திருந்தால் நான் இப்படி இருந்திருக்க
மாட்டேன்’ என்று அடக்கமாக சொல்லி
தனது ‘குரு பக்தி’யை வெளிச்சம்போட்டு
காண்பித்தபோது, என் அண்ணனுக்கே
என்னவோல் போல் ஆகிவிட்டதாம்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய
பிள்ளைகளுக்கு கல்வி தருவதற்காக
ஒரு பள்ளியையும் நிறுவி உள்ளார்.

அந்த பள்ளி ஆரம்பித்த புதிதில் எனது
அண்ணனை ஆலோசகராக போட்டு
அவரிடம் பள்ளியை சிறப்பான முறையில்
நடத்து பற்றி ஆலோசனை கேட்டதும் உண்டு.

அந்த பள்ளியை அவரது துணைவியார்
கவனித்து வந்தாலும், பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, அவரே அறிவியல்
பாடங்களை நடத்துவதும் உண்டு.

ஒரு தடவை எங்களது அம்மா உடல் நிலை
சரி இல்லாதபோது டாக்டர் கிருஷ்ணனிடம்
காட்டி சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான
கட்டணத்தை கொடுத்தபோது அதை வாங்க
மறுத்ததோடு, ‘சிகிச்சை பார்த்தது
நடனமாயிருந்தால் (என்னை ‘நடனம்’
என்று அழைப்பதுண்டு)பணம் கொடுத்திருப்பீர்களா?
என்று கேட்டாராம். இதை எங்கள் அம்மா
இறக்கும் வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கும் நேரம் பாராது, உழைத்துக்கொண்டுதான்
இருக்கிறார். காலையில் 7 மணிக்கு பள்ளிக்கு சென்று
மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, 10 மணிக்கு
மருத்துவ மனை வந்தால்,மதியம் 3 மணி வரை
நோயாளிகளை கவனித்துவிட்டு சாப்பிட செல்கிறார்.
திரும்பவும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்
அவரது சேவை 10 மணி தாண்டி கூட இருக்கும்.

குமரகுருபரரின்

மெய்வருத்தம்பாரார்
பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும்
மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார்
அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்


என்ற பாடல் கிருஷ்ணனுக்காகவே
பாடியதாக எண்ணுகிறேன்.


காலையிலிருந்து இரவு வரை
(இடையே சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு)
முகம் கோணாமல் பணிபுரிந்து கொண்டிருக்கும்
மருத்துவர் கிருஷ்ணன் எனது நெருங்கிய நண்பர் என்று
சொல்லிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.



நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

6 கருத்துகள்:

  1. கிருஷ்ணனின் நண்பரின் நண்பன் என்று சொல்வது எனக்குப் பெருமை!அவருக்கு என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. நட்பின் பதிவு நன்றாக உள்ளது . திரு கிருஷ்ணனை போல் அனைத்து மருத்துவர்களும் இருந்து விட்டால் ? வாசுதேவன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!.

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்??!!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு. எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர் திரு. K .காமராஜ்.M.D. சிவகாசியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தலைவர் காமராஜரின் மறு அவதாரம் என்று தான் சொல்ல வேண்டும். நான் 2005 ஆம் ஆண்டிற்கு அப்புறம் உயிருடன் இருப்பது அவரது மருத்துவத்தினால் தான். அவரைப்பற்றி எழுதினால் பக்கம் காணாது. தனி பதிவு எழுதுகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே! மருத்துவர்களில் Dr.கிருஷ்ணன் போன்றவர்களும் உண்டு என்பதே என் பதிவின் நோக்கம். Dr.காமராஜ் அவர்கள் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு