ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

நினைவோட்டம் 44

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர் திரு கண்ணன்.
எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். அதிகம்
பேச மாட்டார். எனக்கு மட்டுமல்ல நண்பர் திரு துரைராஜ்
மற்றும் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் நண்பர்.

S.S.L.C தேர்வு முடிந்த அன்று (1960 பிப்ரவரி) இரவு,
விருத்தாசலம் இராஜராஜேஸ்வரி திரை அரங்கில்
‘சகோதரி’ திரைப்படத்தை அவரோடு இரண்டாம் காட்சி
பார்த்து விடைபெற்றேன். அதற்கு பிறகு தொடர்பே
இல்லை. திரும்ப பணி ஓய்வு பெற்று சென்னை
திரும்பியவுடன், நாற்பத்துஆறு ஆண்டுகள் கழித்து,
ஆண்டு நண்பர் துரைராஜ் அவர்களின் மகனின்
திருமணத்தில் சந்தித்தது போது ஏற்பட்ட உணர்வையும்,
மகிழ்ச்சியையும், எழுத்தில் விளக்க இயலாது.

அடுத்து எனது நினைவில் நிற்கும் நண்பர்
திரு கிருஷ்ணமூர்த்தி. அவர் பள்ளி இறுதி தேர்வு
முடித்து, கல்கத்தா சென்றார். அங்கு வேலை
பார்த்துக்கொண்டே படித்ததாக கேள்வி. அவர்
இப்போது எங்கு இருக்கிறார் எனத்தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது தினம்
காலை 9 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.
நானும் அவரும் அய்யனார் கோவில்
தெருவிலிருந்து மணிமுத்தா ஆற்றை (?)
கடந்து தினம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

அடுத்து எனக்கு பிடித்த நண்பர் திரு இராஜாமணி.
அவருடைய தந்தை இரயில்வே துறையில்
இருந்தார். விருத்தாசலத்தில் படிப்பு முடித்து
நான் திருச்சி புனித வளவனார் (St.Joseph)
கல்லூரியில் சேர்ந்தபோது அவர் திருச்சி
ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பு
படித்து பின் ‘வாரங்கலி’ல் உள்ள வட்டார
பொறியியல் கல்லூரியில்(R.E.C) படித்து
பொறியாளராக ஆனார் என்பது வரை
தெரியும். இப்போது எங்கிருக்கிறார்
எனத்தெரியவில்லை.

எனது இன்னொரு நண்பர் திரு பார்த்தசாரதி
சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து
மருத்துவராகிவிட்டார்.அவர் இருப்பிடமும்
தெரியவில்லை.

என்னால் மறக்கமுடியாத நண்பர்
திரு சிகாமணி. அவர்தான் என்னோடு
மனோகரா நாடகத்தில் ‘வசந்தசேனையாக’
நடித்தவர். அவரும் நண்பர் திரு பழமலை போல்,
தமிழ் பேராசிரியராக பணியாற்றியதாக கேள்வி.

என்னோடு படித்த இன்னொரு நண்பர்
திரு இராஜசேகரன் ராஸ். அவரை எல்லா
ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். என் அண்ணனிடம்
டியூஷன் படித்தவர். அண்ணாமலை பல்கலை
கழகத்தில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம்
பெற்று தமிழ்நாடு வேளாண் தொழில்கள் கழகத்தில்
(Tamilnadu Agro Industries Corporation) வேலை
பார்த்தார் என்பது வரை தெரியும்.

இன்னொரு நண்பரான திரு C.சுப்பிரமணியன்
எனது உறவினரும் கூட. பத்தாம் வகுப்பு படிக்கும்போது
எங்கள் வீட்டில் தங்கியிருந்து படித்தார்.எங்களது
வகுப்பில் இன்னொரு C.சுப்பிரமணியன் இருந்ததால்
தனது ஊரின் பெயரின் முதலெழுத்தான R ஐ சேர்த்து
R.C. சுப்பிரமணியன் என மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்து ஆசிரியப்பயிற்சி பெற்று
ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்
சொந்த ஊரான இராஜேந்திரப்பட்டினத்தில்
வேளாண்மை செய்து வருகிறார்.

இன்னும் பல நண்பர்களை பற்றி எழுத
நினைத்தாலும், பதிவின் நீளம் கூடும் என்பதால்
பள்ளி நண்பர்களைப்பற்றிய நினைவுகளை
இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

5 கருத்துகள்:

  1. நண்பர்களைப் பற்றியும்,அவர்களோடு சேர்ந்து கழித்த இனிய நாட்கள் பற்றியும் நினைப்பதே ஒரு சுகம்தான்!தொடரட்டும் பசுமை நிறைந்த நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. பசுமை நிறைந்த நினைவுகள் தொடரும்.

    பதிலளிநீக்கு
  3. Your trip down memory lane recalling your association with friends from school days made interesting reading.
    Indeed such moments are worth recalling and on many occasions may prove to be rejuvenating . Vasudevan

    பதிலளிநீக்கு
  4. Your nostalgic trip down memory lane made interesting reading, what with kaleidoscopic range of experiences. It is but a fact that school days and memories associated with it are carried till the end. Vasudevan

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! மறக்கமுடியாத நிகழ்வுகளை பகிர்வதே ஒரு சுகம் தான்.

    பதிலளிநீக்கு