திங்கள், 4 ஜூலை, 2011

நினைவோட்டம் 50

அரசு நடத்திய பேச்சுப்போட்டியில், இரண்டாம் பரிசை
பெற்றிருந்தாலும் எனக்கு வருத்தமில்லை. காரணம்
முதல் பரிசுக்கும் இரண்டாம் பரிசுக்கும் ஒரே
மாதிரியான பரிசுப்பொருள்தான்.

ஏன் அப்படி கொடுத்தார்கள் என விசாரித்தபோதுதான்
தெரிந்தது விவரம்.அரசின் சார்பில் போட்டி நடத்தி பரிசு
கொடுப்பது என முடிவு எடுத்தபோது பரிசுப்பொருட்களை
‘வாங்கும்’பணியை விருத்தாசலம் தாசில்தார்
தலையில் கட்டிவிட்டார்களாம்!!

இந்த மாதிரி செலவுகளுக்கெல்லாம் அரசின்
கஜானாவிலிருந்து பைசா பெயராதாம்.எனவே
கீழ்மட்டத்தில் உள்ள அலுவலர்கள்தான் தங்கள்
கைக்காசை செலவு செய்யவேண்டும்.

அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து இவைகளுக்கு
செலவு செய்ய அவர்களது நிதிநிலை அனுமதிக்காது.

எனவே அவர்கள் தங்கள் பதவியின் ‘அதிகாரத்தை’
உபயோகித்துதான் இந்த மாதிரியான விழாக்களுக்கு
தேவையான பொருட்களை வாங்குவார்களாம்.

எங்களது போட்டிக்கான பரிசை வாங்கப்பணித்த,
தாசில்தார்,விருத்தாசலம் கடைவீதியில் இருந்த,
எழுதுபொருள் மற்றும் பாடப்புத்தகங்கள் விற்கும்
ஸ்ரீனிவாச செட்டியார் கடைக்கு சென்று,பரிசுக்காக
ஏதாவது பொருள் தரும்படி கேட்டிருக்கிறார்.
(இப்போதும் அந்த கடை இருக்கிறதா
எனத்தெரியவில்லை)

கேட்பவர் தாசில்தார் என்பதால் முடியாது என
சொல்லமுடியாமல்,கதையின் உரிமையாளரான
திரு ஸ்ரீனிவாச செட்டியார் அவர்கள் இருப்பதிலேயே
மிகவும் குறைவான விலையுள்ள பொருளான ஒரே
விலையுள்ள இரண்டு பேனாக்களை கொடுத்துள்ளார்.

பணம் கொடுக்காமல் வாங்கியதால், முதல் மற்றும்
இரண்டாம் பரிசுக்காக வெவ்வேறு பொருட்களை
வாங்காமல், அவர் கொடுத்ததை வாங்கி வந்து
எங்களுக்கு கொடுத்து விட்டார்.

எது எப்படியோ மாணவர்களாகிய எங்களுக்கு,அந்த
பேனா உபயோகமான பரிசுதான்.

அந்த போட்டியில் பரிசு கிடைத்ததால் ஏற்பட்ட
தன்னம்பிக்கையால்(!)அடுத்து அறிவித்த
‘ஐக்கியநாடுகள் சபை’ பற்றிய பேச்சுப்போட்டிக்கும்
பெயர் கொடுத்திருந்தேன்.

நன்றாக பேச்சை தயார் செய்து பேசியும், எனக்கு
அந்த போட்டியில் பரிசு கிடைக்கவில்லை.

காரணம் கலந்துகொண்ட மற்ற நண்பர்கள்
என்னைவிட நன்றாக பேசியதால்! வழக்கம்போல்
நண்பர் பழமலைதான் முதல் பரிசை தட்டிச்சென்றார்.

எங்கள் பள்ளியில் குறிப்பிட்ட பாடம் நடத்தும்
ஆசிரியர் வராவிட்டால்,அந்த வகுப்பு நேரத்தில்,பாடம்
நடத்தும் பணி இல்லாமல் இருக்கும் ஆசிரியரை,
மாற்று ஆசிரியராக அனுப்புவது வழக்கம்.

காரணம் ஆசிரியர் இல்லாவிட்டால் மாணவர்கள்
சத்தம் போட்டுக்கொண்டு மற்ற வகுப்புகளுக்கு
இடையூறாக இருப்பார்கள் என்பதால்.

இது எல்லா பள்ளிகளிலும் நடக்கும் வழக்கமான
ஒன்றுதான்.

இவ்வாறு வரும் ஆசிரியர்களில் பெரும்பாலோர்
மாணவர்களை ஏதாவது படிக்க சொல்லிவிட்டு
உட்கார்ந்துவிடுவார்கள்.தங்களுடைய ஓய்வு நேரத்தில்,
ஏன் வீணாக பேசி தங்களுடைய ‘சக்தி’யை
வீணாக்கவேண்டும் என்பதால். வேறு சிலரோ
அரசியலைப் பற்றி பேசி மாணவர்களை தங்களது
வழிக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள்.

மற்றும் சிலர் மாணவர்களுக்கு விருப்ப "பாடமான"
திரைப்படங்களை ப்பற்றி பேசி கலகலப்பை
உண்டாக்குவார்கள்.

எனது அண்ணன் திரு சபாநாயகம் இவர்களிலிருந்து
சற்று வித்தியாசமானவர்.அவரே எழுத்தாளராக
இருந்ததால், அவர் மாற்று ஆசிரியராக வரும்போது,
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வை.கோவிந்தன்,
தி.ஜானகிராமன் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள்
எழுதிய சிறுகதைகளைச் சுவைபட சொல்வார்.

நாங்கள் படிக்கும்போது துணைப்பாடங்களாக
சிறுகதைத்தொகுப்பை வைத்தது இல்லை.
(இப்போது இருப்பதாக அறிகிறேன்)

எனவே சிறுகதைகளை,பாடமாக வைக்காத
காலத்தில் இந்த சிறுகதை அறிமுகம்,வழக்கமான
பாடங்களையே கேட்டு அலுத்துப்போன
மாணவர்களுக்கு, ஒரு புதிய அனுபவமாகவும்,
மாற்று மருந்து போலவும் இருந்தது என்பது நிஜம்.

இன்றைக்கு அநேகம் பேர் ‘கதை சொல்லி’களாக
இருக்கிறார்கள். ஆனால் ‘கதை சொல்லி’ என்ற
சொற்றொடர் வழக்குக்கு வருமுன்பே அவர்
கதை சொல்லியாக இருந்தார் என்பதை
நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

எங்களுக்கு அந்த வயதில் அநேக பிரபல
எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை
அவரையே சேரும்.அவரது கதை சொல்லும் திறனால்
ஈர்க்கப்பட்டு மாணவர்களில் சிலர் கவிஞர்கள் ஆகவும்
எழுத்தாளர்களாக ஆகவும் ஆனதும் உண்மை.

சிறுகதைகள் மட்டுமல்லாமல் கல்கியின் ‘சிவகாமியின்
சபதம்’ போன்ற நாவல்களையும் எல்லோரும் இரசிக்கும்
வண்ணம் சொல்லுவார்.

நாவல் என்பதால், ஒரே வகுப்பில் முழு நாவலையும்
சொல்லமுடியாது என்பதால், இதழ்களில் தொடரும்
எனப் போடப்படுவதைப்போல நாவல் சொல்வதையும்
தொடரும் எனச்சொல்லி, எல்லோரையும் ஆவலுடன்
காக்க வைத்து, அடுத்ததடவை மாற்று ஆசிரியாக
வரும்போது விட்ட இடத்திலிருந்து தொடங்குவார்.
அதற்காகவே மாணவர்கள் திரும்பவும் எப்போது
அவர் மாற்று ஆசிரியராக வருவார் எனக்
காத்திருப்பார்கள்.

சில சமயம் ஒரு மாறுதலுக்காக கதை சொல்லாமல்,
‘Quiz’ எனப்படும் புதிர் போட்டியையும் நடத்தியிருக்கிறார்.

புதிர் போட்டியை எங்கள் பள்ளியில்
அறிமுகப்படுத்தியவரும் அவரே.இன்றைக்கு
வேண்டுமானால், இந்த போட்டி ஒன்றும் புதிதாக
இல்லாமல் இருக்கலாம்.

1957-60 களில் இந்த மாதிரி ஒரு போட்டி நடத்துவதே
ஒரு புதுமைதான். இப்படி போட்டியை நடத்தலாம்
என்பதே அநேக அரசுப்பள்ளிகளில் அப்போது
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே அவர் மாற்று ஆசிரியராக வருகிறார் என்றால்
மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

மாற்று ஆசிரியராக வரும்போதுதான், இப்படி என்றால்
அவரது பாடமான கணிதத்தை நடத்தும்போதும்,
அவரது ‘பாணி’யே தனிதான்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

5 கருத்துகள்:

  1. வெறும் மாற்று ஆசிரியர் அல்ல;மிக மாறுதலான ஆசிரியர்தான்!இனிய நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், புதிய தகவலை தந்தமைக்கும் நன்றி
    திரு குடந்தை அன்புமணி அவர்களே!

    பதிலளிநீக்கு