திங்கள், 29 ஆகஸ்ட், 2011

மறுபிறவி உண்டா? 6

வண்டி நகர்ந்தது நிம்மதியை தந்தாலும்,யாருக்கும்
மகிழ்ச்சியை தரவில்லை. பயணிகளிடம் வழக்கமாக
காணப்படும் உற்சாகம் இல்லை.யாரும் எதுவும்
பேசாததால்,நாங்கள் இருந்த பெட்டியில் ஒரே
மரண அமைதி.

அந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த,
பரப்பணங்காடி என்ற நிலையத்தை அந்த இரயில்
மெதுவாக ஊர்ந்து சுமார் 9.30 மணி வாக்கில்
அடைந்தது.

வண்டி பிளாட்பாரத்தில் நின்றதும்,‘திபு திபு’என்று
நிறைய இளைஞர்கள் ஏறினார்கள்.எங்கள்
அனைவரிடமும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும்
நலம் விசாரித்துவிட்டு அனைவருக்கும் ரொட்டியும்
பழமும் கொடுத்தார்கள்.அவர்கள் யார் என்று
விசாரித்தபோது அவர்கள் இந்திய சனநாயக வாலிபர்
சங்கத்தை(DYFI) சேர்ந்தவர்கள் என்றும்,அந்த
வண்டியில் Pantry Car துண்டிக்கப்பட்டு விட்டதால்
எங்களுக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காது என்பதால்
அவைகளைக் கொண்டுவந்ததாக சொன்னார்கள்.

எங்களுக்கு அந்த நேரத்தில் சாப்பிடக்
கொடுக்கவேண்டும் என நினைத்த அவர்களின்
தன்னலமில்லா சேவைக்கு நன்றி சொல்ல
வார்த்தைகள் வரவில்லை என்பது உண்மை.

அந்த இரயில் நிலையத்தை விட்டு வண்டி
நகரத்தொடங்கியவுடன், கைபேசியில்
குறிப்பலை (Signal) கிடைத்ததால்,விபத்து பற்றி
விவரமாக சொல்லலாமென்று திரும்பவும் வீட்டை
தொடர்புகொண்டேன்.

அதற்குள் சென்னையில் என் வீட்டில் ஒரே
பதட்டமும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.நான்
மாலையில் தொடர்புகொண்டபோது
தொலைக்காட்சியில்,எந்த செய்தியும் விபத்து
பற்றி தெரிவிக்காததால்,நான் சிறிய விபத்து
என்று சொன்னபோது, என் மனைவி அதை
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் நான் தொலை பேசியில்,பேசி முடித்தவுடன்,
எல்லா தொலைக்காட்சிகளிலும் அந்த விபத்து பற்றி
கூறி அநேகம் பேர் உயிர் இழந்தனர் என்றும் நிறைய
பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அதைக்கேட்டு என் மனைவிக்கு சந்தேகம்
வந்திருக்கிறது.நான் பேசிவிட்டு உடனே
தொலைபேசியை வைத்துவிட்டதால்,ஒருவேளை
நான் மருத்துவமனையிலிருந்து பேசியிருக்கலாம்
என்றும், விவரமாக சொன்னால், தான் பயப்படுவோம்
எனக்கருதி உடனே இணைப்பை துண்டித்துவிட்டதாகவும்
எண்ணி,பதட்டத்தோடு திரும்பவும் என்னை தொடர்பு
கொள்ள முயற்சித்திருக்கிறார்.

தொலைத்தொடர்பு கிடைக்காததால்,கண்ணூரில்
என்னோடு பணிபுரியும் நண்பர் திரு உமா மகேஸ்வரனின்
துணைவியார்,சென்னையில் பணிபுரிந்துவந்ததால்
அவரைக்கூப்பிட்டு விஷயத்தை சொல்லி,என்னைப்பற்றி
விசாரிக்க சொல்லியிருக்கிறார்.

அவர் திரு உமா மகேஸ்வரனிடம் விசாரித்து நான்
நலமுடன் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.இருந்தும்
என் மனைவிக்கு சந்தேகம் தீரவில்லை.என் குரலைக்
கேட்டவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி ‘எங்கிருந்து
பேசுகிறீர்கள்?’என்பதுதான்.நான் ‘இரயிலில்
வந்துகொண்டிருக்கிறேன்.காலையில் சென்னை
வந்துவிடுவேன்.’என சொன்னவுடன் தான் அவருக்கு
நிம்மதி.பிறகு விவரத்தை சொல்லிவிட்டு,
என் மகனிடமும் மகளிடமும் பேசினேன்.

பிறகு வண்டியில் இருந்த சிலர்,அவர்களது
வீட்டுக்கு பேச விரும்பியபோது,எனது
கைப்பேசியைக்கொடுத்து பேசச்சொன்னேன். அந்த
பயணிகளில் ஒருவர் மணிப்பூரை சேர்ந்தவர்.

இரவு 10.30 மணி வாக்கில் ஷோரனூர் சந்திப்பை
அடைந்தது எங்களது இரயில்.அங்கும் அநேகம் பேர்
வந்து என்ன நடந்தது என என்னிடம் விசாரித்தார்கள்.
திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்லும் இரயில்
வந்ததும், அது மங்களூர் செல்லமுடியாது என்பதால்
அதில் இருந்த Guard Van ஐ எங்கள் வண்டியில்
இணைத்து சென்னை செல்ல அனுமதித்தார்கள்.

காலையில் ஈரோடு சந்திப்பு வந்ததும் எங்களது
வண்டியைப்பற்றித்தான் பேச்சு. காலை 'ஹிந்து'
தினத்தாளில், அந்த விபத்து பற்றி செய்தி தந்துவிட்டு
என்னைப்போன்ற பயணிகளின் பேட்டியையும்
போட்டிருந்தார்கள். அதைப்பார்த்து என்னை தொடர்பு
கொண்டவர்கள் அநேகம்.அவர்கள் அனைவருக்கும்
நான் நலமுடன் இருக்கிறேன் என்று சொல்வதற்குள்
சென்னையே வந்துவிட்டது.

சென்னையை எங்களது இரயில் அடைந்த நேரம்
மதியம் சுமார் 12.30 மணி. என்னோடு புது தில்லியிலும்,
சென்னையிலும்,கோவையிலும் பணிபுரிந்த நண்பர்
திரு க.வாசுதேவன் என்னிடம் தொலைபேசியில்
தொடர்புகொண்டு, நான் இரயிலில் வருவதை அறிந்து
என்னை அழைத்து செல்ல,சென்னை சென்ட்ரல்
இரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

நான் வண்டியை விட்டு கீழே இறங்கியதும் தான்
தாமதம், என்ன நடந்தது என்பதை அறிய சென்னையில்
உள்ள தொலைக்காட்சி நிருபர்கள் அனைவரும்
என்னை சுற்றி நின்று விவரத்தைக் கேட்டனர். நான்
நடந்தைச் சொல்லிவிட்டு, மறக்காமல் எங்களுக்கு
உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
சொன்னேன்.

நண்பர் திரு வாசுதேவனோடு வீடு வந்து சேர்ந்தபோது,
என் மனைவிக்கும், மகனுக்கும்,மகளுக்கும் ஏற்பட்ட
மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல இயலாது.
அதற்குள் எனது பேட்டி எல்லா தொலைக்காட்சியிலும்
ஒளி பரப்பப்பட்டதால், எனது உறவினர்களும்
நண்பர்களும் நான் விபத்திலிருந்து தப்பியது அறிந்து
தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள்.

அன்று மாலை நண்பர் திரு சந்தானகிருஷ்ணனின்
மகள் திருமண வரவேற்பில் நான்
கலந்துகொள்ளவில்லை.காரணம் திருமண வீட்டில்
இதைப்பற்றி எல்லோரும் விசாரிப்பார்கள் என்பதால்.
மறுநாள் காலை திருமணத்திற்கு சென்று வந்தேன்.
அப்படியும் என்னிடம் அந்த நிகழ்வு பற்றி
விசாரிப்பவர்களை தவிர்க்க இயலவில்லை.

மூன்று நாள் விடுப்பு முடிந்து திரும்ப கண்ணூருக்கு
இரயிலில் கிளம்பி,ஷோரனூர் சென்று அங்கிருந்து
காரில் கண்ணூர் சென்றடைந்தேன்.அலுவலகத்திலும்
என்னிடம் நலம் விசாரித்து, நீண்ட நாள் வாழ
வாழ்த்தியவர்கள் எடுத்துக்கொண்டது கிட்டத்தட்ட
அரைநாள்.

இரயில்வே துறையினர் வழக்கம்போல் ஒரு
விசாரணைக்கமிஷன் அமைத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவி செய்து தன் பணியை முடித்துக்கொண்டது
வேறு கதை.

அந்த விபத்தில் சிக்கிய இரயில் பெட்டிகள்,
அந்த பாலத்துக்கு அருகிலேயே கிட்டத்தட்ட
ஓராண்டுக்குமேல் வைக்கப்பட்டிருந்ததால்,அந்த
பாலத்தை கடக்கும்போது,அவைகளைப்பார்த்ததும்
என்னை அறியாமலேயே ஒரு சோகம்
பற்றிக்கொள்ளும்.

இந்த ஆண்டு சனவரியில் கொல்லூர் மூகாம்பிகை
அம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும்போது,
அதே இரயிலில் கடலுண்டி பாலத்தை
கடக்கும்போது ஒன்றைக்கவனித்தேன்.அந்த
ஆற்றின் தென்கரையில் பாலத்துக்கு அருகே,
அந்த ஊர் மக்கள் விபத்தில் இறந்தவர்களுக்காக,
நினைவுமண்டபம் கட்டியிருந்ததை.

எந்த அளவுக்கு அந்த விபத்து அவர்களை பாதித்து
இருந்தால்,அவர்கள் இந்த நினைவிடத்தை
அமைத்திருக்கவேண்டும். நல்ல உள்ளம் கொண்ட
அவ்வூர் மக்கள் நீண்டகாலம் வாழ மனதுக்குள்
வேண்டினேன்.

என் நினைவு உள்ளவரை இந்த விபத்து என் மனதில்
இருந்து மறையாது என்பது நிச்சயம்.


ஐந்தாவது தடவையாக நான் மயிரிழையில்
மரணத்திலிருந்து தப்பியது 2003 ஜூன் மாதத்தில்.
சிண்டிகேட் வங்கியிலிருந்து Deputation ல்
North Malabar Gramin Bank வந்த என்னை,மூன்று ஆண்டு
கால பணி முடிந்ததும், வங்கிக்கு திரும்ப
அழைக்கப்பட்டு, மணிப்பாலில் உள்ள எங்கள்
தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன்.

மாற்றலாகி செல்லும் எனக்கு பிரிவு உபசார
விழாவை,எர்ணாகுளம் பகுதி அலுவலக
வங்கி நண்பர்கள், எர்ணாகுளத்தில்
ஜூன் 7 ஆம் தேதி (சனிக்கிழமை)மாலை
வைத்திருந்தனர். அன்று காலை கண்ணூரில்
இருந்து காலை கிளம்பி மதியம் எர்ணாகுளம்
அடைந்தேன்.விழா முடிய இரவு 8 மணி
ஆகிவிட்டதால், இரவு அங்கேயே தங்கி
காலையில் 4 மணிக்கு காரில் கிளம்பினேன்.

என்னுடைய தனிச்செயலர் திரு தனஞ்சயனும்
என்னுடன் பயணித்தார். காரை ஒட்டுனர்
திரு முரளி ஓட்டிவந்தார்.காலை சுமார் 7.30 மணி
வாக்கில் கோழிக்கோடு நகரை அடைந்தோம்.
அங்கே ஒரு உணவகத்தில் காலை சிற்றுண்டியை
முடித்துவிட்டு,8 மணிக்கு கிளம்பினோம்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில்
வாகனங்கள் அதிகம் இல்லை.25 கிலோ மீட்டர்
தூரத்தில் இருந்த கொயிலாண்டியைக்கடந்து,
12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பயோளி என்ற ஊர் (ஒட்டப்பந்தய வீராங்கனை
P.T.உஷா வின் ஊர்) அருகே சென்ற போது
எதிரே ஒரு சரக்குந்து (Truck) வந்துகொண்டு
இருந்தது. அதைத் முந்திக் கொண்டு கேரள
அரசின் பேருந்து ஒன்று வந்தது. அதைப்பார்த்த
ஒட்டுனர் முரளி காரை சாலையின் இடப்புறம்
ஒதுக்கி ஓட்டினார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த
இரு வாகனங்களையும் தாண்டிக்கொண்டு ஒரு
மாருதி கார் அதிவேகமாக எங்களுக்கு நேரே
வந்துவிட்டது. அது வந்த வேகத்தைப்பார்த்ததும்,
நிச்சயம் நேருக்கு நேர் மோதல் தான்
(Head on Collision) என நினத்த போது
‘டமால்’ என்ற காதைக் கிழிக்கும்படியான
சப்தம் கேட்டது.


தொடரும்

8 கருத்துகள்:

  1. என்ன சப்தம்?எங்கிருந்து வந்தது? சீக்கீரம் சொல்லுங்க சார்!சஸ்பென்ஸ்
    தாங்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    அடுத்த பதிவில் அந்த ‘சஸ்பென்ஸ்’ தெரிந்துவிடும்.தயவு செய்து பொறுத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. Modern Charles degaulle. Ofcourse the difference is he survived numerous attempts on his life and in your case series of events ... Thanks for remembering me and making a mention in this episode.

    Vasudevan

    பதிலளிநீக்கு
  4. Next time, tell me when you book a ticket to somewhere, I have someone in mind book the same vehicle. Kidding.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே!

    என்னை பிரான்சின் முன்னாள் அதிபர் சார்லஸ் டி காலே அவர்களோடு ஒப்பிட்டு இருக்கிறீர்கள். இந்த அளவிலாவது அவரோடு என்னை ஒப்பிடும் அளவுக்கு(!) இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    உங்களை மறவாது குறிப்பிட்டதை சொல்லி இருக்கிறீர்கள்.‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதை அறிந்தவன் நான் என்பது உங்களுக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!

    அடுத்ததடவை பயணம் செய்யும்போது அவசியம் உங்களுக்கு தெரிவிக்கிறேன். சரிதானே!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

    http://blogintamil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  8. எனது வலைப்பூவை, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே!

    பதிலளிநீக்கு