வியாழன், 29 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 6

பேராசிரியர்கள் வரும் வரை நேரத்தை செலவிட,
நண்பர்கள் தங்கள் எண்ணங்கள் அல்லது
திறமைகளை வெளிப்படுத்தலாம் என, நண்பர்
நாச்சியப்பன் அழைத்தும்,தயக்கத்தாலோ அல்லது
யார் ஆரம்பிப்பது என்பதாலோ,யாரும் எழுந்து
சென்று பங்கேற்கவில்லை.

எங்களில் சிலர் திரு நாச்சியப்பனையே பாட்டுப்பாடி
தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.
(அந்த காலத்தில் எங்கள் வகுப்பின் ஆஸ்தான
பாடகரே திரு நாச்சியப்பன் தான்.பல்கலைக்கழகத்தில்
நடக்கும் விழாக்களில் திரு நாச்சியப்பன்
பாடியிருக்கிறார்.பின்னால் அவர் ஆசிரியப்பணியில்
சேர்ந்து, பிறகு துறைத்தலைவரான பின்னும்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற
எல்லா கலை நிகழ்ச்சிக்களிலும் அவர்தான்
ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறார்.)

அவரும் எந்த தயக்கமும் இன்றி ‘நிச்சய தாம்பூலம்’
என்ற திரைப்படத்தில் வரும் ‘மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்’ என்ற
பாடலைப்பாடியதும் ஒரே கைத்தட்டல்தான்.

பின் நண்பர்கள் சிலர் துணுக்கு செய்திகள் சொன்னாலும்,
நண்பர் முருகானந்தம் சொன்ன நகைச்சுவை
துணுக்குகளுக்குத்தான் அதிக வரவேற்பு.

நண்பர் திரு முத்துக்குமாரன் மன வளக்கலை
பற்றி சொல்ல ஆரம்பித்தார்.அப்போது,
பேராசிரியர்கள் அரங்கத்திற்குள் நுழைந்ததால்,
அவரது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

எங்களுக்கு இறுதி ஆண்டு வேளாண் வேதியல் பாடம்
நடத்திய பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள்,
மூன்றாம் ஆண்டு வேளாண் தாவர இயல் பாடம்
நடத்திய பேராசிரியர் நாராயண பிரசாத் அவர்கள்,
முதலாம் ஆண்டு வேதியல் பாடம் நடத்திய
பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்,முதலாம்
ஆண்டு தாவர இயல் பாடம் நடத்திய பேராசிரியர்
ஈஸ்வரன் அவர்கள், மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல்
செய்முறை பயிற்சி கொடுத்த பேராசிரியர்
நாராயணசாமி அவர்கள், மற்றும் தற்சமயம்
வேளாண் புலத்தின் முதல்வர் (Dean) ஆக உள்ள
முனைவர் ஜெ.வசந்தகுமார் அவர்கள் ஆகிய
பேராசிரியர்கள் உள்ளே நுழைந்ததும் உடனே
நாங்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை
செய்தோம். சிலர் (என்னையும் சேர்த்து)அருகில்
சென்று வணங்கியும் வந்தோம்.

எங்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள்,
துணைப்பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள் என
35 பேர் இருந்தாலும்,இயற்கை எய்திவர்கள் போக
இருப்பவர்களில் சிதம்பரத்தில் உள்ளவர்களை
மட்டும் அழைத்து மரியாதை செய்யலாம் என
நண்பர்கள் நினைத்து, அவர்களை மட்டும்
அழைத்திருந்தார்கள்.(காரணம் எங்களது
ஆசியர்களில் அநேகம் பேர் எழுபத்தி ஐந்து
வயதை தாண்டிவயர்கள் என்பதாலும்,
தமிழ் நாட்டில் பல இடங்களில் வசிப்பதால்
அவர்களால் கலந்துக்கொள்ள இயலாது
என்பதாலும் தான்.)

அப்படியும் இரு பேராசிரியர்கள் ஊரில்
இல்லாததால் கலந்துகொள்ள இயல்வில்லை.

எல்லோரும் அமர்ந்த பின்,நண்பர் நாச்சியப்பன்
காலையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துடன்
நிகழ்ச்சிகளை தொடங்கிவிட்டதால்,அதனுடைய
தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியையும் தொடரலாம்
எனக்கூறி, நண்பர் Dr. அந்தோணி ராஜை
வரவேற்புரை நிகழ்த்த அழைத்தார்.

அதற்கு முன்பு இயற்கை எய்திய பேராசிரியர்களுக்கு
மரியாதை செலுத்தும் வகையில்,எல்லோரும்
எழுந்து நின்று மௌன அஞ்சலி செய்தோம்.
நண்பர் அந்தோணி ராஜ் அவருக்கே உரித்த
பாணியில் பழைய நினைவுகளை முன் கொண்டு
வந்து நிறுத்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அவர் பேசும்போது,‘எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டில்
இருவர் பொடிபோடுவார்கள். ஒருவர் மறைந்த
திரு அண்ணாதுரை அவர்கள் இன்னொருவர்
நமது பேராசிரியர் கலியபெருமாள் அவர்கள்.
ஆனால் அவர்கள் பொடி போடுவது யாருக்கும்
தெரியாது.’ என்றபோது எழுந்த சிரிப்பலையில்
பேராசிரியர் கலியபெருமாள் அவர்களும்
கலந்துகொண்டார்.

நண்பர் அந்தோணி ராஜ் வரவேற்புரை
நிகழ்த்தியபோது எடுத்த புகைப்படம் கீழே.





அதன் பிறகு ஒவ்வோர் பேராசிரியருக்கும் எங்கள்
நண்பர்களில் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை
செய்யவும்,இன்னொருவர் நினைவுப்பரிசு
கொடுக்கவும் நண்பர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த வேளாண் புல
முதல்வர் ஜெ.வசந்தகுமார் அவர்களுக்கு எங்கள்
வகுப்பு நண்பர் Dr. சந்திரகாந்தன் துண்டு
போர்த்தியபோது, நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.
‘மாணவரை ஆசிரியர் கௌரவிக்கிறார்' என்று.
பிறகுதான் தெரிந்தது முனைவர் ஜெ.வசந்தகுமார்
அவர்கள், எங்கள் வகுப்புத்தோழர் Dr. சந்திரகாந்தன்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விரிவாக்க
பேராசிரியராக இருந்தபோது அவருடைய
மாணவராக இருந்தார் என்று.

அதன் பிறகு நண்பர் நாச்சியப்பன் ‘நாங்கள் அன்புடன்
நடனம் என அழைக்கும் எனது அறைத்தோழரான
நடனசபாபதியை ‘மலரும் நினைவுகள்’ என்ற
தலைப்பில் பேச அழைக்கிறேன் என்று
என்னைப்பேச அழைத்தார்.

முன்பே நண்பர் நாச்சியப்பன் நான்காண்டு
காலம் பாடம் நடத்திய ஆசிரியர்களைப்பற்றி
நான் பேசவேண்டும் என சொல்லியிருந்ததால்,
என்ன பேசவேண்டும் என்பதை மனதளவில்
தயார் செய்து வைத்து இருந்தேன்.என்னைக்
கூப்பிட்டவுடன் பேச மேடைக்கு சென்றேன்.


தொடரும்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 5

மதிய உணவு முடிந்து,அரங்கத்துக்கு திரும்பு முன்,
பல்கலைக்கழகத்தை சுற்றிப்பார்க்க நண்பர்கள்
ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அதனால் சாப்பிட்டவுடன்.பேருந்தில் பயணம்
செய்தபடியே பல்கலைக்கழக வளாகத்தை
சுற்றிப்பார்த்தோம்.

நண்பர் திரு நாச்சியப்பன் கூடவே வந்து ஒவ்வொரு
இடத்தையும் பற்றி சொல்லி,எங்களுக்கு
நினைவூட்டியபோது ஒரு Conducted Tour ல்
செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது.

முதலில் ‘பட்டமளிப்பு விழா’ நடக்கும்,ஸ்ரீனிவாச
சாஸ்த்ரி ஹால் வழியாக சென்றபோது,அந்த
இடத்துக்கு பல முறை பல விழாக்களுக்கு சென்று
பிரபலங்களின் பேச்சைக்கேட்டதும்,அங்கே
இறுதியாண்டு தேர்வை எழுதியதும்,அங்கே
பட்டம் பெற்றதும் மனதில் நிழலாடின.

அந்த கட்டிடத்தின் மேற்கு பக்கமாக எங்களது
ஊர்தி சென்றபோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
காரணம்,அங்கு நாங்கள் படிக்கும்போது இருந்த
விசாலமான விளையாடும் இடமும்,அந்த
இடத்துக்கு அழகு சேர்த்த சாலை ஒர மரங்களும்
காணாமல் போய் இருந்தன.

அவைகளுக்கு பதில் அங்கே காங்க்ரீட் கட்டிடங்கள்
முளைத்திருந்தன. பல்கலைக்கழகத்திற்கு
பெருமை சேர்த்த Pavilion அருகே இருந்த பரந்த
மைதானம் விரிவாக்கம் என்ற செயலால்
சுருக்கப்பட்டு இருப்பதையும்,ஒரு அழகான இடம்
அலங்கோலமாக்கப் பட்டு இருப்பதையும் பார்த்து
மனம் வெதும்பினேன்.

பின் அருகே புதிதாய் முளைத்திருந்த
மருத்துவக்கல்லூரியையும்,அதன் அருகே
அமைந்திருந்த பல கட்டிடங்களையும்
பார்த்தோம்.

மருத்துவக்கல்லூரி வந்ததால், ஸ்ரீனிவாச
சாஸ்த்ரி ஹாலுக்கு வடபுறம்,காலி நிலமே
இல்லை.எங்கும் கட்டிடங்கள்தான்.

அங்கு இருந்த Boating Canal காணாமல்
போயிருந்தது. அப்போது நண்பர் நாச்சியப்பனிடம்,
பல்கலைக்கழகத்திற்கே பெருமை சேர்த்த
Boating Canal எங்கே என்றபோது,அந்த
இடத்தில்தான் மருத்துவக்கல்லூரி
அமைந்திருப்பதாக அவர் சொன்னபோது,
எங்களுக்கு சொல்லமுடியாத வருத்தம்.

வெளி நாட்டு பல்கலைக்கழகங்கள் போல்,
நாங்கள் படித்த பல்கலைக்கழகத்திலும் அந்த
கால்வாய் இருந்ததையும், அப்போதைய
மாணவர்கள் அதில் படகு ஒட்டி பயிற்சி
பெற்றதையும் சொன்னால், இன்றைய
மாணவர்கள் நிச்சயம் நம்பமாட்டார்கள்.

அந்த கால்வாய் ஓரமாய் இருந்த கட்டிடங்களில்
எங்களது இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு
பாடங்கள் நடத்தப்பட்டதும், இறுதித்தேர்வு சமயம்,
அந்த கால்வாய் அருகே இருந்த மரங்களின்
கீழே அமர்ந்து நாங்கள் படித்ததும் எல்லாமே
ஒரு கனவுபோல் ஆகிவிட்டதை உணர்ந்தோம்.

கனத்த மனதோடு வந்தபோது, இன்னும்
பல (ஏ)மாற்றங்களை கண்டோம்.

சர்.சி.பி.இராமசாமி அய்யர் நூலகம் அருகே
வந்த போது, எங்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
அந்த நூலகத்திற்கு எதிரே நாங்கள் படிக்கும்போது
அமைக்கப்பட்டிருந்த பூங்கா,இன்று அழகிய
பூச்செடிகளோடும் மரங்களோடும் உருமாறியிருந்தது,.

இங்குதான் நாங்கள் இறுதியாண்டு படிக்கும்போது
தோட்டக்கலை பாடத்திற்கான புல்வெளி (Lawn)
அமைக்கும் பயிற்சியை எடுத்துக்கொண்டது
நினைவுக்கு வந்தது.

நாங்கள் படிக்கும்போது தங்கியிருந்த Eastern Hostelன்
நுழைவு வாயில்,ஒரு பெரிய பூதாகரமான
கட்டிடத்தால் மறைக்கப்பட்டிருந்தது. விடுதியை
ஒட்டி Hostel Day அன்று நடைபெறும் Carnival க்காக
Stall கள் போடப்படும் இடமும் காணப்படவில்லை.

நாங்கள் பண்டகசாலைக்கோ அல்லது எங்களது
பண்ணைக்கோ செல்லும் Eastern Hostel ன்
கிழக்கு வாயிலும் மூடப்பட்டு இருந்தது.

மீனாட்சி கல்லூரி கட்டிடம்,மற்றும் நிலவியல்
(Geology)துறை அருகே இருந்த காலிமனைகளும்
கட்டிடங்களாக மாறியிருந்தன.

ஆனால் அஞ்சல் அலுவலகம் உள்ள கட்டிடம்
மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அன்று
இருந்தது போல் இருந்தது.

எங்களது வேளாண் புலம் அமைந்திருந்த
இடத்தில், நாங்கள் படிக்கும்போது ஒரு கட்டிடம்
மட்டும் தான் இருந்தது. எதிரே சற்று தள்ளி
மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

இன்றோ நிறைய கட்டிடங்கள் எழும்பியிருந்தன.
அருகிலே Helipad தளமும் இருந்ததை கண்டோம்.

‘எங்கெங்கு காணிலும் சக்தியடா’ என்றார்
புரட்சிக்கவி. இங்கோ எங்கெங்கு காணிலும்
கட்டிடங்களடா என பாடலாம் போல.

மாறிவரும் சூழ்நிலைக்கு புதிய கட்டிடங்கள்
தேவைதான். ஆனால் அவை இயற்கை அழகை
சிதைக்காமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
என நினைத்துக்கொண்டேன்.

திரும்ப அரங்கத்திற்கு, வந்து காலையில் விட்ட
அறிமுகத்தை தொடர்ந்தோம்.அது முடிந்தபோது
மாலை மணி 5 இருக்கும்.மாலை 6.30 மணிக்கு
பேராசிரியர்களை பாராட்டும் நிகழ்ச்சி என்பதால்
அதற்கு முன்பாக நண்பர்கள் அனைவரும்
புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.பிறகு
குடும்பத்தோடும் புகைப்படம்
எடுத்துக்கொண்டோம். அவைகள் கீழே.











பிறகு பேராசிரியர்கள் வரும் வரை நண்பர்கள்
விரும்பினால்,பாட்டு பாடியோ நகைச்சுவை
துணுக்குகள் சொல்லியோ,அல்லது வேறு
சுவாரஸ்யமான செய்திகளை சொல்லியோ
நேரத்தை செலவிடலாம் என நண்பர்
நாச்சியப்பன் சொன்னார்.


தொடரும்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 4

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து,Dr.இராமலிங்கம்
பேசியபின் அறிமுகப்படுத்திக்கொள்ள முதன்
முதலில் மேடை ஏறியவர் முனைவர்
ச.அந்தோணி ராஜ் அவர்கள்.அவர் திருச்சி
வேளாண் கல்லூரியில் முதல்வராக (Dean)
பணியாற்றி ஓய்வு பெற்றதாக சொன்னார்.

இவரைப்பற்றி கொஞ்சம் சொல்லலாம் என
எண்ணுகிறேன்.மிகவும் சூட்டிகையானவர்.
புகுமுக வகுப்பிலிருந்து மூன்றாம் ஆண்டு
வேளாண் இளம் அறிவியல் வரை தேர்வுகளில்
முதல் இடத்தைப் பிடித்தவர்.

எங்களோடு படிக்கும்போதே தினம் நூலகம்
சென்று மறு நாள் நடக்க இருக்கும் பாடம் பற்றிய
புதிய தகவல்களை படித்துவந்து,ஆசிரியர்களிடம்
கேள்விகள் கேட்டு திக்குமுக்காட வைப்பார்.

அப்போதே படித்து பட்டம் பெற்ற பின் தன் பெயருக்கு
பின்னால் N.L என்று போட ஆசை என்று சொன்னவர்.
அது என்ன என்று தெரியாமல், நாங்கள் கேட்டபோது
N.L என்றால் Nobel Laureate என விளக்கம்
சொன்னவர்.

அவரது தன்னம்பிக்கையை எண்ணி நாங்கள்
வியப்புற்றது உண்மை.

‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’


என்ற திருவள்ளுவர் சொன்னதுபோல்
நினைத்ததால் தான் முனைவர் பட்டம் பெற்று
கல்லூரி முதல்வராக வந்தார் என எண்ணுகிறேன்.
என்னைப்பொருத்தவரை அவர் எப்போதும் ஒரு NL தான்.
அதாவது Noble Laureate!

எனக்கும் இவருக்கும் எண்ண அலை (Wave Length)
ஒன்றாக இருந்ததால் நண்பராக இருந்தோம். ஆனால்
இறுதி ஆண்டில் ஏதோ ஒரு சிறிய காரணத்திற்காக
கருத்து வேறுபாடு கொண்டு பேசாமல் இருந்தோம்.
(மற்ற நண்பர்கள் பற்றி ‘நினைவோட்டம்‘ தொடரில்
விரிவாக எழுத இருக்கிறேன்)

நண்பர் அந்தோணி ராஜை தொடர்ந்து,
ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தோடு மேடை
ஏறி தங்களையும் தங்கள் குடும்பத்தையும்
அறிமுகப்படுத்திக்கொண்டு,தாங்கள் பணி ஆற்றிய
இடம் வகித்த பதவியின் பெயர் முதலியவைகளை
சொன்னார்கள்.

நண்பர்கள் ஒவ்வொருவரும் மேடை ஏறும்போதும்
ஒரே கலாட்டாதான்.கல்லூரியில் படிக்கும்போது
அவர்களுக்கு வைத்த புனைப்பெயரை சொல்லி,
அவர்கள் படிக்கும்போது அடித்த ‘லூட்டியை’
நினைவூட்டி, அரங்கத்தில் கலகலப்பூட்டியபோது,
நாங்கள் 45 வயது குறைந்து,படித்த அந்த
காலத்திற்கே போனதுபோல் உணர்ந்தோம்.

அந்த நேரத்தில் நண்பர் திரு மீனாட்சி சுந்தரம்
அந்த சந்திப்புக்கு வரவில்லையே என
வருத்தப்பட்டேன்.அவர் வந்திருந்திருந்தால்,
எல்லோரையும் இன்னும் கலாட்டா செய்து
எங்களது சந்திப்பை மேலும்
கலகலப்பாக்கியிருப்பார்.

நண்பர்களை கலாட்டா செய்யும்போது,நாங்கள்
குடும்பத்தோடு வந்திருக்கிறோம் என்பதோ,
உயர்ந்த பதவியில் இருந்து பணியாற்றி ஓய்வு
பெற்று மூத்த குடிமகன்களாக,ஏன்
பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாக இருக்கிறோம்
என்பதோ அந்த கணத்தில் நினைவுக்கு
வரவில்லை!

ஒவ்வொரு நண்பரும் பேசி முடித்ததும்
அவருக்கும் அவர் துணைவியாருக்கும்,
அனைவர் சார்பிலும் ஒரு நினைவுப்பரிசு
கொடுக்க, நண்பர்கள் நாச்சியப்பனும்,
கோவிந்தசாமியும் ஏற்பாடு செய்து
இருந்தார்கள்.

எங்கள் வகுப்புத்தோழர் திரு சரவணன் அவர்கள்
(தேசிய பஞ்சாலைக் கழகத்தில் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குனராக,(CMD)பதவி வகித்து
ஒய்வு பெற்றவர்) எல்லோருக்கும் தன் செலவில்
நினைவுப்பரிசாக நான்கு சிறிய மேசை விரிப்பையும்,
சிறிய துண்டுகளையும் கொடுத்து எங்களை
வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

நண்பர் திரு முருகானந்தம்(அகில இந்திய
வானொலியில் நிலைய இயக்குனராக இருந்தவர்)
தான் தலைவராக இருக்கும் வானொலி உழவர்
சங்கம் வெளியிடும் வானொலி உழவர் சங்க
செய்திக்கதிர் இதழ் ஒன்றை அனைவருக்கும்
வழங்கினார்.

இந்த அறிமுகப்படலம் தேநீர் இடைவேளைக்குப்
பிறகும் மதியம் ஒரு மணி வரை தொடர்ந்தது.
இன்னும் மேடை ஏறவேண்டியவர்கள் 5 பேர்
இருந்ததால் மதிய உணவுக்கு பிறகு அறிமுகத்தை
தொடரலாம் என முடிவெடுத்து மதிய உணவு
ஏற்பாடு செய்து இருந்த விருந்தினர் விடுதிக்கே
பேருந்தில் திரும்பினோம்.


தொடரும்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 3

அரங்கத்தை அடைந்தபோது எங்களுக்கு ஒரு
ஆச்சர்யம் காத்திருந்தது. அரங்கத்திற்கு வெளியே
‘A Meet of Classmates after 45 Years’ என்ற
பதாகையையும், நாங்கள் 1966 ஆம் ஆண்டு
பிரிவு உபசார விழாவின் போது எடுத்துக்கொண்ட
புகைப்படத்தை பெரிதாக்கியும், வைத்திருந்தார்கள்.

அந்த புகைப்படம் கீழே.








புகைப்படத்தின் அருகே சென்றதும், ஒவ்வொருவரும்
தாங்கள் அதில் எங்கே இருக்கிறோம் எனத்தேடியது
வேடிக்கையாக இருந்தது. பெரும்பான்மையோருக்கு
புகைப்படத்தில் அவர்களையே அடையாளம்
தெரியாததால், ‘நான் எங்கப்பா இருக்கிறேன்?’
என கேட்டுக்கொண்டே ‘காணாமல்’ போன
தங்களை தேடிக்கொண்டிருந்தார்கள்!
நான் அவர்களில் சிலருக்கு உதவினேன்.

பின் உள்ளே சென்றதும் நண்பர் முனைவர்
கோவிந்தசாமி அவர்கள் வருகை தந்தவர்களின்
பெயரை பதிவு செய்துகொண்டு, எழுத ஒரு சிறிய
நோட்டு புத்தகம், Ball Point பேனா,வந்திருந்தவர்களின்
முகவரி,வழங்கப்பட இருக்கின்ற உணவு பற்றிய
Menu அட்டை, அன்றைய மற்றும் மறுநாள்
நிகழ்ச்சிகளின் நிரல் ஆகியவைகளை கொண்ட
ஒரு அழகிய பையை தந்தார்.

உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, வகுப்புத்
தோழர்களில் இயற்கை எய்திய நண்பர்கள்
14 பேர்கள் தவிர, மீதி உள்ள 56 பேர்களில்,
வெளி நாட்டில் இருப்பதாலும், உடல் நலக்குறைவு
மற்றும் வீட்டில் உள்ள முக்கிய பணிகள்
காரணமாகவும் வராத 20 பேர்கள் போக,
36 நண்பர்கள்(பெரும்பாலோர் குடும்பத்தோடு)
வந்திருந்தனர் என்று.

எல்லோரும் பதிவு செய்துவிட்டு அரங்கத்தில்
அமர்ந்ததும்,தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி
தொடங்கியது.

அதற்கு பிறகு இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த
நண்பர்களில் ஒருவரான நாச்சியப்பன் எழுந்து
இயற்கை எய்திய வகுப்பு தோழர்களின்
பெயரைப்படித்து,அவர்களுக்கு அஞ்சலி
செலுத்துவோம் எனக்கூறியதும் எல்லோரும்
எழுந்து நின்று மௌன அஞ்சலி
செலுத்தினோம்.

பின் நண்பர் நாச்சியப்பன்,'மேடையில் யாரும்
அமரப்போவதில்லை.எனவே ஒவ்வொருவராக
அகர வரிசைப்படி மேடைக்கு குடும்பத்தோடு
வந்து, குடும்ப உறுப்பினர்களை
அறிமுகப்படுத்துங்கள்.பின் உங்களைப்பற்றியும்,
நீங்கள் படித்து முடித்து சென்ற பிறகு என்ன
பொறுப்பில் இருந்தீர்கள் என்பதையும் மற்றும்
உங்கள் குடும்பத்தைப்பற்றியும் சொல்லுங்கள்.’
என்று சொன்னார்.

அப்போது அவர் சொன்ன இன்னொரு செய்தியும்
எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும்
தந்தது.எங்களோடு முதலாம் ஆண்டு படித்து விட்டு,
இரண்டாம் ஆண்டில் மருத்துவம் படிக்க இடம்
கிடைத்ததும்,வேளாண் பட்டப் படிப்பை தொடராமல்
விட்டு சென்று சென்னை மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்து மருத்துவராகி, வடலூரில்
மருத்துவ சேவை செய்து வரும்
டாக்டர் வா.இராமலிங்கம் அவர்களும்
அங்கு வந்திருக்கிறார் என்பதே அந்த செய்தி.

நண்பர்கள் நாச்சியப்பனும் கோவிந்தசாமியும்
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள் எனக்
கேள்விப்பட்டதும், தானும் அந்த சந்திப்பில்
கலந்துகொண்டு, தன்னோடு முதலாம் ஆண்டு
படித்த பழைய நண்பர்களை கண்டு அளவளாவ
டாக்டர் வா.இராமலிங்கமும் விரும்பினார்
என்பதை அறிந்து எங்கள் எல்லோருக்கும்
அளவில்லா சந்தோஷம்.

அவர் மேடை ஏறி தன்னைப்பற்றி சொல்லிவிட்டு
இறங்கியதும்,நண்பர் நாச்சியப்பன்,
‘Dr.இராமலிங்கம், வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும்,
ஊரன் அடிகள் எழுதிய ‘புரட்சித்துறைவி வள்ளலார்’
என்ற நூலையும், உயர் இரத்த அழுத்தத்தை
கட்டுப்பாட்டில் வைப்பது பற்றிய சிறு குறிப்பு
ஒன்றையும், அரை கிலோ குண்டு
வறு கடலையையும் தந்திருக்கிறார்.’ என்று
சொன்னபோது அனைவரும் கைத்தட்டல்
மூலம் டாக்டர்.இராமலிங்கத்திற்கு
நன்றி தெரிவித்தோம்.

(இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிடவேண்டும்.
எங்கள் பல்கலைக்கழகத்தில், வேளாண் பட்டப்படிப்பு
வரக் காரணமாக இருந்த காட்டுமன்னார் கோவில்
தொகுதியின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
வேளாண் பெருந்தகையுமான, திரு வாகீசம் பிள்ளை
அவர்களின் மகன் தான் டாக்டர்.இராமலிங்கம்
என்பதே அது.)

பின் அறிமுகப்படலம் ஆரம்பமாயிற்று.


தொடரும்

திங்கள், 12 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 2

ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வீட்டிலிருந்து
துணைவியாருடன் மதியம் 12.30 மணிக்கு கிளம்பி,
கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்துகள்
நிலையத்திற்கு ஆட்டோவில் சென்று 1.30 மணிக்கு
புறப்படும் பேருந்துக்காக காத்திருந்தேன்.

1.15 மணிக்கு பேருந்து வந்தாலும், புறப்பட்டது
என்னவோ 1.45 மணிக்குத்தான்.பேருந்து
திருவான்மியூரை அடையவே மணி 3.00 ஆகிவிட்டது.
புதுவைக்கு 20 கிலோ மீட்டர் முன்பே உள்ள
சாலை ஒர தேநீர் விடுதியில் நின்றுவிட்டு
புதுவையை அடைந்தபோது மணி 4.45.

அன்று ஆடி வெள்ளி ஆதலால் புதுவை - கடலூர்
சாலையில் இரண்டு மூன்று இடங்களில் சாலையை
மறித்து பந்தல் போட்டு இருந்ததால்,பேருந்து
நேர் வழியில் செல்லாமல் பாகூர் வழியே
சென்றதால், 20 கிலோ மீட்டரில் உள்ள கடலூரை
அடைந்தபோது மாலை மணி 6.15 ஆகிவிட்டது.

அப்போது நாங்கள் சிதம்பரத்தை
அடைந்திருக்கவேண்டும்.கடலூரை விட்டு கிளம்பி
பேருந்து சிதம்பரம் அடைந்த போது இரவு மணி 7.30.

சிதம்பரம் அடைந்தவுடன்,நண்பர்கள் நாச்சியப்பன்,
மற்றும் கோவிந்தசாமியை தொடர்பு கொண்டு,
நாங்கள் வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தியதும்,
அவர்கள் எங்களுக்காக பல்கலைக்கழக விருந்தினர்
விடுதியில் அறை ஒதுக்கியிருப்பதாகவும், அங்கு
வகுப்பு நண்பர்கள் முனைவர் கோவிந்தராஜன்
மற்றும் திரு ஜெயராமன் இருந்து வருவோருக்கு
உதவி செய்துகொண்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

நல்ல வேளையாக எனது அண்ணன் மகன்
திரு ஞானவேலன் பணி நிமித்தம் சிதம்பரத்தில்
தங்கியிருந்தார்.அவர் வந்து எங்களை அண்ணாமலை
நகரில் அஞ்சலகம் அருகே அமைந்திருந்த
பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு
அழைத்து சென்றார்.

நாங்கள் படித்தபோது இருந்த விருந்தினர் விடுதி
தற்போது புதிய தோற்றத்துடன் காணப்பட்டது.விடுதியை
விரிவாக்கம் செய்து பக்கத்தில் குளிர்சாதன வசதிகள்
உள்ள பல புதிய அறைகள் கட்டியிருந்தார்கள்.

இந்த சந்திப்புக்கு வருபவர்களை நல்ல முறையில்
வரவேற்று அறைகள் ஒதுக்கும் பணியில் இருந்த
திரு ஜெயராமன் எங்களுக்கான அறையின்
திறவுகோலை தந்தார். பின்பு வெளியே சென்றிருந்த
நண்பர் கோவிந்தராஜனும் வந்து சந்தித்தார்.

பேருந்து நிலயத்தின் அருகில் இருந்த உணவகத்தில்
இரவு உணவை முடித்துவிட்டதால், பயண அசதியின்
காரணமாக உடனே படுக்க சென்றுவிட்டோம்.

மறுநாள் (13/08/2011) காலை வழக்கம்போல்
5.30 மணிக்கே எழுந்து குளித்து தயாரானபோது,
தங்கியிருந்த அறைக்கே காபி வந்துவிட்டது.

8 மணிக்கு சிற்றுண்டி அருந்த சென்றபோது,வகுப்புத்
தோழர்களை,அவர்தம் குடும்பத்தோடு சந்தித்தேன்.
சிலர் பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள்.

முடி துறந்தவர்கள் சிலர்,முடி வெளுத்தவர்கள் சிலர்,
என எல்லோரிடமும் முதுமை ஊஞ்சலாடியதால்
அநேகம் பேரை அடையாளமே கண்டுபிடிக்கமுடியவில்லை.

45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பதால்,அன்னியோன்யமாக
இருந்த நண்பர்கள், இப்போது அன்னியராக தெரிந்தார்கள்.
பழைய முகங்கள் ‘புதிய’ முகங்களாக தெரிந்தன.

டேய்,வா,போ என அழைத்த நெருங்கிய நண்பர்களை,
வாங்க,போங்க என மரியாதையோடு அழைத்தது
விசித்திரமாகவும் வியப்பாகவும் இருந்தது.

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டு,
குடும்பத்தினரை அறிமுகம் செய்துகொண்டோம்.
என் வகுப்பில் எல்லோரோடும் பழகியது நானாகத்தான்
இருக்கும்.அப்படி இருந்தும் நண்பர் திரு மாணிக்கவேல்,
என்னைப்பார்த்து, 'உங்கள் பெயர்...?'எனக்கேட்டபோது,
எனக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.

எங்களை வகுப்பில் அகர வரிசைப்படி தான் உட்கார
சொல்வார்கள்.எனவே நான் எனக்கு முன்பு உள்ள
நண்பர்களின் பெயரைச்சொல்லி அவர்களுக்கு
அடுத்த பெயர் என் பெயர் என்ற போதும்.
அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆனால்,இரண்டு ஆண்டுகாலம் அறைத்தோழனாகவும்,
இரண்டு ஆண்டு காலம் பக்கத்து அறையிலும்
இருந்த எனது நெருங்கிய நண்பன்
திரு தருவை முத்து கிருஷ்ணனைப் பார்த்ததும்,
நேரே அவனி(ரி)டம் சென்று ‘என்னைத்தெரிகிறதா?’
என்றதும் ‘டேய் நடனசபாபதிதானே!’ என
என்னை அடையாளம் கண்டுகொண்டதால்
ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லி மாளாது.

பிறகு எல்லோரும் சிற்றுண்டி அருந்த சென்றோம்.
காலை சிற்றுண்டி வழங்க, விடுதியில் உள்ள
சாப்பிடும் அறையில் அருமையாக ஏற்பாடு
செய்திருந்தார்கள் நண்பர்கள் கோவிந்தசாமியும்
நாச்சியப்பனும்.

திருமண வீட்டில் உபசரிப்பதுபோல் இருவரும்
அங்கும் இங்கும் சென்று,அனைவரையும்
கவனித்துக்கொண்டார்கள்.

எங்களை, நாங்கள் படித்த இடத்திற்கு அழைத்து
செல்ல வேளாண் புலத்தின் பேருந்தையும் ஏற்பாடு
செய்து இருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் பேருந்தில் கிளம்பி செல்லும்போது,
பல்கலைக் கழகத்தின் நடுவே உள்ள திருவேட்களம்
என்ற சிற்றூர் மாறியிருப்பதையும், வயல்கள் இருந்த
இடத்தில் அநேக கட்டிடங்கள் எழும்பி இருப்பதையும்
பார்த்துக்கொண்டே,வேளாண் புலத்தின் அரங்கத்தை
அடைந்தோம்.


தொடரும்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 1

“பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”
என்பார்கள். ஆனால் நாங்கள் பேசினோம்!
ஆம். மணிக்கணக்கில்!!!

நாங்கள் என்றால்,
1962 ஜூன் முதல் 1966 மே வரை,
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,
வேளாண் புலத்தில் (Faculty of Agriculture)
வேளாண் இளம் அறிவியல் (B.SC(Agriculture))
படித்த மாணவர்கள்.

(முதலாமாண்டு 75 பேராக இருந்த நாங்கள்,
இரண்டாம் ஆண்டிலே இருவர் மருத்துவம் படிக்க
சென்று விட்டதாலும், மூவர் படிப்பை
தொடராததாலும், படிப்பை முடித்து வெளியே
வரும்போது 70 பேராக இருந்தோம்.)

படித்து முடித்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு
நாங்கள் படித்த இடத்தில் குடும்பத்தினரோடு
ஆகஸ்ட் 13 & 14 தேதிகளில் சந்தித்த போது,
பேசாமல் இருக்கமுடியுமா?

1966 மே மாதம் நடந்த பிரிவு உபசார
விழாவில் இரத்த திலகம் திரைப்படத்தில்
வரும் பாடலான ‘பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடித்திரிந்த பறவைகளே, பழகிக் கழித்த
தோழர்களே,பறந்து செல்கின்றோம்’ என்ற பாடலை
வகுப்புத் தோழர்களான திரு முகம்மது உஸ்மானும்,
திரு நாச்சியப்பனும் பாடியபோது, எல்லோருடைய
மனத்திலும் ஒரு இனம் புரியா சோகம்
எழுந்தது உண்மை.

நான்காண்டு காலம் ஒன்றாக தங்கி,உண்டு,
உறங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு,
சிலசமயம் சண்டை போட்டுக்கொண்டு வாழ்ந்த
நாட்கள் இனி வராது என்பதால் ஏற்பட்ட
சோகம் அது.

அதிலே வரும் ‘எந்த ஊரில் எந்த நாட்டில் என்று
காண்போமோ?’
என்ற வரிக்கான பொருளை இந்த
ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தான்
புரிந்துகொண்டோம்.

நாம் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு
சந்திக்கவேண்டும் என்று எங்களில் சிலர்
(என்னையும் சேர்த்து) பிரியும்போது
சொல்லிக்கொண்டோம்.என்னவோ
தெரியவில்லை.படித்துமுடித்து மேல்படிப்புக்கு
சென்றவர் சிலர்,வேலைக்கு சென்றவர் சிலர்,
என நெல்லிக்காய் சிதறியதுபோல் திசைக்கு
ஒருவராக பிரிந்துவிட்டோம்.யாருமே 25 ஆண்டு
முடிந்த போது சந்திக்க முயற்சிக்கவில்லை.

ஆனால் 30 ஆண்டுகள் முடிந்தபின்,அதாவது
1996 ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
வேளாண் வேதியல் பேராசிரியராக பணிபுரிந்த
எங்கள் வகுப்பு நண்பர் முனைவர்.ஆர்.கோவிந்தசாமி
அவர்கள்,நாம் அனைவரும், நாம் படித்த இடத்தில்
சந்திக்கலாம் என்றும், அவரவர்களுக்கு தெரிந்த
நண்பர்களின் முகவரியை தருக என எங்களில்
சிலருக்கு அஞ்சல் அனுப்பியிருந்தார். வகுப்பு
நண்பர்கள் அனைவருடைய முகவரிகளும்
அப்போது கிடைக்காததால் அந்த முயற்சி
பலன் இல்லாமல் போயிற்று.

பின்பு 41 வருடங்கள் கழித்து அதாவது
2007 ல் நண்பர்கள் திரு சி. முருகானந்தம்,
திரு ஆர். பாலசுப்ரமணியன்,திரு முருகையன்
மற்றும் திரு கலியபெருமாள் ஆகியோரின்
முயற்சியால் புதுவையில் கூடினோம்.ஆனால்
பாதிபேருக்கு மேல் வரவில்லை.வந்தவர்களில்
சிலர் குடும்பத்தோடு வரவில்லை.

தங்கும் வசதி மற்றும் ஏனைய ஏற்பாடுகள் நன்றாக
இருந்தும் நாங்கள் படித்த இடத்தில் சந்திக்காமல்
வேறு இடத்தில் சந்தித்ததில், எங்களுக்கு
ஏமாற்றமே.திரும்ப மறு ஆண்டு சிலர் மட்டும்
கோடைக்கானலில் சந்தித்தனர்.

திடீரென 12/07/2011 அன்று ஒரு அஞ்சல் எனக்கு
வந்தது. பிரித்து பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி.
அண்ணாமலை நகரிலிருந்து,எனது வகுப்பு
தோழர்களான பேராசிரியர் முனைவர்
ஆர்.கோவிந்தசாமியும்,பேராசிரியர் முனைவர்
இராம.நாச்சியப்பனும் கூட்டாக ஒரு வேண்டுகோளை,
சுற்றறிக்கையாக அனுப்பியிருந்தார்கள்.

1966 Agri Batch மாணவர்களின் சந்திப்பு, அண்ணாமலை
நகரில் ஆகஸ்ட் 13, மற்றும் 14 தேதிகளில் நடத்த
திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது எங்களுக்கு
பாடம் நடத்திய பேராசிரியர்களை அழைத்து
கௌரவிக்க இருப்பதாகவும்,மேலும் இந்த சந்திப்பை
நடத்த எங்களது வகுப்பு நண்பர்கள்
முனைவர் ச.அந்தோணி ராஜ், திரு சி.முருகானந்தம்,
திரு ஆர். பாலசுப்ரமணியன் ஆகியோருடன் கலந்து
ஆலோசித்து முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து
இருந்தார்கள்.

எங்கள் வகுப்பு நண்பர்களில் 19 பேரின் தற்போதைய
முகவரி தெரியாததால் அவர்களுடைய முகவரியை
தெரிந்தவர்கள் தந்து உதவுமாறும் கேட்டிருந்தார்கள்.
இந்த சந்திப்பை வெற்றிகரமாக நடத்த அனைவருடைய
ஒத்துழைப்பையும் கோரி இருந்தார்கள்.

அந்த சுற்றறிக்கை மிக்க மகிழ்ச்சியை
கொடுத்தாலும்,எங்களது வகுப்பு தோழர்களில்
17 பேர் இயற்கை எய்திவிட்டனர் என்று அதில்
தெரிவித்து இருந்த செய்தி வருத்தத்தை தந்தது.

அந்த அஞ்சல் கிடைத்த உடனே நண்பர்
முனைவர் கோவிந்தசாமியை தொலை பேசியில்
அழைத்து எனது மகிழ்ச்சியை தெரிவித்ததோடு,
நான் என் மனைவியோடு அந்த சந்திப்பில் பங்கு
பெறுவதையும் உறுதி செய்தேன்.என்னிடம் உள்ள
நண்பர்கள் சிலரது முகவரியையும் தந்தேன்.

பின்பு முனைவர் நாச்சியப்பனும் என்னை தொடர்பு
கொண்டு நான் வருவது அறிந்து தனது
மகிழ்ச்சியை தெரிவித்தார்.(திரு நாச்சிப்பன்
இரு ஆண்டுகள் என்னுடைய அறைத்தோழராகவும்,
இரண்டு ஆண்டுகள் பக்கத்து அறை தோழராகவும்
இருந்தவர்)

பின் என்னோடு தொடர்புகொண்டு இருக்கும்
நண்பர்களிடம் பேசி அவர்கள் வருவதை
பற்றியும் அறிந்து கொண்டேன்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி சிதம்பரம் செல்ல
‘ரதி மீனா’ பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டு
அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.


தொடரும்

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மறுபிறவி உண்டா? 7

ஒரு குலுக்கலோடு எங்களது கார் ஒரு பக்கத்திற்கு
ஒதுக்கித் தள்ளப்பட்டது போன்ற உணர்வு.என்ன
நடக்கிறது என நினைப்பதற்குள் எங்களது கார்
சாலையைவிட்டு இறங்கி அருகே இருந்த வீட்டின்
சுற்றுச்சுவரை தொட்டுக்கொண்டு,‘கிறீச்’ என்ற
ஓசையோடு நின்றது.

காருக்குள் இருந்த நாங்கள் முன்னும் பின்னும்
தள்ளப்பட்டு, ஒருவழியாக முன்பு அமர்ந்து இருந்த
நிலைக்கே வந்த போதுதான் நாங்கள் அந்த
அதிர்ச்சியிலிருந்து மீண்டோம்.

ஓட்டுனர் முரளியிடம் எப்படி நமது கார் நேருக்கு
நேர் மோதாமல் தப்பித்தது என்று கேட்டவுடன்,
அவர்,‘சார் அந்த கார் நமக்கு நேராக வருவதைப்
பார்த்ததும் விபத்தை தடுக்க என்னால் முடிந்த
அளவு ‘ஸ்டியரிங்கை’ உடனே இடப்பக்கம்
ஒடித்துவிட்டேன். நல்ல வேளையாக சாலைக்கு
அருகில் பள்ளம் ஏதும் இல்லாததால், கார்
கவிழவில்லை.அதனால் நாம் தப்பிவிட்டோம்.
மேலும் நமது அதிர்ஷ்டம் வீட்டு சுவர் மேலும்
நமது கார் மோதவில்லை. எல்லாம் கடவுள்
செயல்.’என்றார்.

நானும் நண்பர் திரு தனஞ்சயனும் அவருக்கு
நன்றி சொல்லி கீழே இறங்க முயற்சித்தபோது,
கார், சுவர் அருகே இருந்ததால் எங்களால் கதவைத்
திறக்க இயலவில்லை

திரு முரளி வண்டியை விட்டு கீழே இறங்க
முயற்சித்தபோது,அவரால் கதவையே
திறக்கமுடியவில்லை.அப்போதுதான் கவனித்தோம்
காரின் முன்பக்க கதவும் பின் இருக்கை கதவும்,
எதிரே வந்த மாருதி கார் பக்கவாட்டில் அதிவேகமாக
உராய்ந்து இடித்ததன் காரணமாக திறக்கமுடியாத
அளவுக்கு காரின் Body Frame இல் அவை இரண்டும்
ஒட்டிக்கொண்டு விட்டன என்பதை.

பின்பு திரு முரளி காரை சிறிது முன்னோக்கி
பக்கவாட்டில் நகர்த்தி நிறுத்தி இடப்பக்கம்
வழியாக இறங்கினார். நாங்களும் இறங்கி
எங்களை நோக்கி வந்த மாருதி கார் என்னவாயிற்று
என இறங்கிப் பார்க்கையில் அந்த காரை
ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு,வலது
முழங்கையில் இரத்தம் வழிய,வெளிறிய முகத்தோடு
எங்களை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

அதற்குள் அந்த சரக்குந்தும்,அரசுப்பேருந்தும்
நிற்காமல் போயே போய் விட்டன.அந்த இடம்
ஊருக்கு வெளியே இருந்ததால் எங்களைத்தவிர
வேறு யாரும் இல்லை.சத்தம் கேட்டு நாங்கள்
காரை நிறுத்தி இருந்த இடத்துக்கு அருகே உள்ள
வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார்.

நான் மாருதி கார் ஒட்டிவந்தவரைப் பார்த்து‘என்ன
சார் இப்படி உங்கள் முன்னால் இரண்டு வாகனங்கள்
செல்லும்போது,எதிரே ஏதேனும் வண்டி வருகிறதா
எனப் பார்க்காமல் படு வேகமாக வந்து இப்படி
செய்துவிட்டீர்களே? நல்ல வேளை நாம்
அனைவரும் தப்பித்தோம்.உங்களால் எங்களது
காருக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்?’ என்றேன்.

அவரால் சரியாகப்பேசமுடியவில்லை.அதற்கு காரணம்
அந்த விபத்து தந்த அதிர்ச்சி அல்ல.அவர் உட்கொண்டு
இருந்த,‘உற்சாக பானம்’தான்.அதனால் தான் நிதானம்
இல்லாமல் காரை ஒட்டிவந்திருக்கிறார்.

அவரால் சரியாகப்பேசமுடியவில்லை என்றதும்,
நான் ஒட்டுனர் முரளியிடம் தமிழில்,‘இங்கு அருகில்
ஏதேனும் காவல் நிலையம் உள்ளதா? என்றேன்.
(முரளிக்கு தமிழ் தெரியும்)

உடனே அந்த காருக்கு சொந்தக்காரர்,என்னிடம்,
‘சார்.போலீஸிடம் எல்லாம் போகவேண்டாம். இது
என்னுடைய தவறுதான். இந்த சேதமடைந்த
கதவுகளை சரி செய்ய ஆகும் செலவை, நான் தந்து
விடுகிறேன். நான் நாளை மறுநாள் Gulf
செல்லவேண்டும். போலீசுக்கு போனால் என்னால்
ஊருக்கு போகமுடியாது. நான் போகாவிட்டால்
எனது வேலை போய்விடும்.’என்று தமிழில்
சொன்னார். அவருக்கு தமிழ் தெரியும் போலும்.

நான்‘உங்கள் கைக்கு என்னவாயிற்று?’என்றபோது,
அவர் ‘ஒன்றுமில்லை சார். எனது வலது கையை
கார் கதவுக்கு வெளியே வைத்து காரை
ஒட்டிவந்தேன். அதிர்ஷ்டவசமாக முழங்கை
அருகே ஒரு பெரிய சிராய்ப்பு அவ்வளவுதான்.’
என்றார்.

அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த அந்த
வீட்டுக்காரர்,அவரை தனியே அழைத்து ஏதோ
சொன்னார். ஆனால் அவர் தலையை ஆட்டிவிட்டு
வந்துவிட்டார்.அநேகமாக அவர் பணம் ஏதும்
தரவேண்டாம் என சொல்லியிருப்பார் போலும்.

நான் திரு தனஞ்சயனைவிட்டு அவரிடம் பேச
சொன்னேன்.அவர் செவ்வாய் தான் வெளி நாடு
செல்வதால்,மறுநாள் அதாவது திங்கள் அன்று
கண்ணூர் வருவதாகவும், பணிமனையில்
காரைக் காட்டி கதவுகளை மாற்ற ஆகும் செலவை
அறிந்து அந்த தொகையை கொடுப்பதாகவும்
சொன்னார். அவரது சொல்லை ஏற்று நாங்கள்
எங்கள் காருக்கு திரும்பினோம்.

காரின் வலப்பக்கம் உள்ளம் இரு கதவுகளும்
சேதமடைந்து விட்டதால் ஒரு பெரிய துண்டைக்
கொண்டு அவைகளை நடுவில் உள்ள Frame இல்
கட்டிவிட்டு, முரளி காரை எடுத்தார். வண்டியை
மெதுவாகத்தான் ஓட்டினார்.போகும் வழியில்
உள்ள வடகரை, மாஹே, தலைச்சேரி போன்ற
ஊர்களில் எல்லாம் எங்களை வினோதமாக
பார்த்தார்கள்.ஒருவழியாக காலை 11 மணி
சுமாருக்கு கண்ணூர் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காரை டி‌வி‌எஸ் பணிமனைக்கு அனுப்பி,
புதிய கதவுகள் மாற்ற எவ்வளவு ஆகும் கேட்டு
வைத்திருந்தோம்.அந்த 'மாருதி' காரின் உரிமையாளர்
சொன்னதுபோல் திங்கள் அன்று எங்கள்
தலைமையகத்திற்கு வந்து பணிமனை சொன்ன
பணத்தை கொடுத்து சென்றார்.

உண்மையிலேயே போற்றத்தக்க மனிதர் அவர்.
காரணம் அவர் அன்று வராமல் வெளிநாடு
சென்று இருந்தால் எங்களால் ஒன்றும் செய்து
இருக்கமுடியாது.

அதற்குள் நான் விபத்தில் சிக்கிய விபரம் அறிந்த
NMGB நண்பர்கள் வந்து விசாரித்துவிட்டு என்னிடம்
‘ஏன் சார் மாற்றாலாகிப் போகும்போது காரில்
சென்றீர்கள். இரயிலில் சென்று இருக்கலாமே?’
என்றனர்.

நான் சொன்னேன் ‘இப்படித்தான் 2001 இல்
இரயிலில் சென்றேன்.விபத்து நடக்கவில்லையா?
அதுபோல் நடக்கவேண்டும் என்று இருந்தால்
எப்படியும் நடக்கும்.’ என்றேன்.

நான் இந்த பதிவுகளின் ஆரம்பத்தில் சொன்னதுபோல்
மறுபிறவி என்பது இறந்து,பின் பிறக்க
வேண்டுமென்பதில்லை.இருக்கும்போதே மரணத்தின்
வாயிலைத் தொட்டு திரும்பி வருவது கூட
மறுபிறப்புத்தான்.

எனக்கு ஏற்பட்ட இந்த ஐந்து நிகழ்வுகளில்
முதல் நிகழ்வு நடந்தபோது நான் அறியா சிறுவன்.
இரண்டாவது நிகழ்வு நடந்தபோது விளயாட்டுத்தனம்
உள்ள கல்லூரி மாணவன். எனவே அவைகள்
எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் மற்ற மூன்று நிகழ்வுகளும் என்னுள்
பாதிப்பை ஏற்படுத்தியது நிஜம்.

தத்துவ ரீதியாக சொன்னால் நாம் இவ்வுலகில்
வாழ்வது நம் கையில் இல்லை.நாம் எவ்வளவு
நாட்கள் வாழப்போகிறோம் என்பதும் நமக்கு
தெரியாது. நாம் வாழ்வது கடவுளின் கொடை
என்றோ இயற்கையின் நியதி என்றோ அவரவர்
விருப்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் என்னைப் பொருத்தவரையில்,இந்த நிகழ்வுகள்
எனக்கு ஒன்றை உணர்த்தின.நான் இன்னும்
செய்யவேண்டிய பணிகளை முடிக்காத
காரணத்தால்தான் இந்த விபத்துகளில் இருந்து
தப்பியிருக்கிறேன் என்று.

இந்த பதிவை எழுத ஆரம்பித்தபோது
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஒரு திரைப்பட
பாடலோடு முடிக்க எண்ணியிருந்தேன். அதையே
திரு சென்னை பித்தன் அவர்களும் தனது கருத்தாக
சொல்லியிருந்ததால் அதையே எழுத இருந்தேன்.

ஆனால் சிட்னி(ஆஸ்திரேலியா) வாழ் பொறியாளர்
திரு N.பக்கிரிசாமி அவர்களின் கருத்தைப்
பார்த்தபிறகு எனது கருத்தை மாற்றிக்கொண்டு
கவிஞர் வாலி அவர்களின் வேறொரு பாடலை
மேற்கோள் காட்டி முடிக்கிறேன்.

‘எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்கையில் தோல்வி இல்லை.’