சனி, 8 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 8

மறுநாள் (14-08-2011) காலை 5 மணிக்கே எழுந்து
குளித்து கோவிலுக்கு செல்ல தயாரானோம்.6 மணிக்கு
சுடச்சுட கொடுக்கப்பட்ட காபியை குடித்துவிட்டு,
பேருந்தில் நடராஜர் கோவிலுக்கு கிளம்பினோம்.
சிலர்,வேறு அலுவல்கள் இருந்ததால் எங்களுடன்
வரவில்லை.

எங்களது வகுப்புத்தோழர்கள் கோவிந்தசாமியும்,
ஜெயராமனும் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
செய்து இருந்தனர்.

(நண்பர் ஜெயராமன் அவர்கள் தீவிர வைணவர்.
அப்போதே(1962 ல்) நெற்றியில் ‘திருமண்’ இட்டே
வகுப்புக்கு வருவார். அவர் எங்கள் ஊருக்கு அருகில்
உள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரை அடுத்த சிற்றூரை
சேர்ந்தவர். எங்கள் வகுப்பில் திருமணமான மாணவர்
அவர்தான்.எனக்கு தூரத்து உறவினரும் கூட.)

நாங்கள் கோவிலுக்கு சென்றபோது, ஆந்திர
மாநிலத்திலிருந்து நிறைய பேர் வந்திருந்ததால்,
நடராஜர் நடனமாடும் ‘கனகசபை’க்கு சென்று
அருகில் மூலவரை தரிசிக்க கூட்டம் அலை
மோதியது. அதனால் அருகே உள்ள
கோவிந்தராஜப்பெருமாள் சன்னிதி
அமைந்திருக்கும் திருச்சித்திர கூடத்தில் நின்று
நடராஜப் பெருமானையும், கோவிந்தராஜப்
பெருமாளையும் ஒரு சேர தரிசித்தோம்.

(நடனமாடும் அம்பலத்தரசன் தெற்கு திசை நோக்கி
இருப்பதாலும்,கோவிந்தராஜப்பெருமாள் கிழக்கு
திசை நோக்கி சயன நிலையில் இருப்பதாலும்,
அந்த இடத்தில் நின்று வணங்கினால் இரு
கடவுளையும் ஒரே நேரத்தில் வணங்கமுடியும்.
இது தில்லைக்கே உள்ள சிறப்பு.)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வணிகவியலில் முனைவர் பட்டம் பெற்று
தற்சமயம் கோவிந்தராஜப்பெருமாள் சன்னிதியில்
தலைமை பட்டராக இருப்பவர், நண்பர்
ஜெயராமனுக்கு வேண்டியவர்.அவர் எங்களை
திருமால் சன்னிதிக்குள் அழைத்து சென்று
தரிசனம் செய்ய உதவினார்.

பிறகு தாயார் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்து
விட்டு, வெளியே வந்து சிவகாமி அம்மன்
சன்னிதிக்கும் சென்று தரிசனம் செய்தோம்.

ஒரே குழுவாக வந்த நாங்கள் கோவிலுக்குள்
சென்றதும்,அங்கிருந்த கூட்டம் காரணமாக
பிரிந்துவிட்டதால் அனைவரும் ஒரே நேரத்தில்
கோவிலை விட்டு வர இயலவில்லை. எல்லோரும்
வந்து பேருந்தில் ஏறி கிளம்பும்போது மணி 9
ஆகிவிட்டது. அதனால் தில்லை காளி அம்மன்
கோவிலுக்கு செல்ல இருந்த திட்டத்தை, கைவிட்டு
விருந்தினர் விடுதிக்கு திரும்பினோம்.

நண்பர் ஜெயராமன் தன் செலவில் எல்லோருக்கும்
பெருமாள் கோவிலிலிருந்து பிரசாதம் வாங்கி
வந்திருந்தார். அதையும், காலை சிற்றுண்டியையும்
சாப்பிட்டுவிட்டு,10 மணி சுமாருக்கு பிச்சாவரம்
நோக்கி பேருந்தில் பயணித்தோம்.

பேருந்து கிளம்பியதும்,எனக்கு 1963 ஆம் ஆண்டு
பிச்சாவரம் சென்றது நினைவுக்கு வந்தது.

அப்போது நாங்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.
எங்களது வேளாண் தாவரவியல் பேராசிரியர்
டாக்டர் இராஜசேகரன் அவர்கள், எங்களை ஒரு
ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு உள்ள
சுரபுன்னை காடுகளைக் காண்பிக்க அழைத்து சென்றார்.

நாங்கள் அனைவரும் சைக்கிளில் சென்றோம்.எங்கள்
பேராசிரியரோடு எங்கள் பல்கலைக்கழ தாவரவியல்
துறையைச்சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.காசிநாதன்
அவர்களும் வந்திருந்தார்.

நாங்கள் அப்போது சென்றது 10 கிலோ மீட்டர்
தொலைவில் இருந்த தெற்கு பிச்சாவரத்துக்கு.
பிச்சவரத்தில் உள்ள உப்பங்கழி(Backwater) கடலில்
கலக்கும் இடம் அருகே உள்ள ஒரு சிற்றூரில்
சைக்கிளை விட்டுவிட்டு,படகில் ஏறி சுரபுன்னை
காடுகளை பார்த்ததும்,அந்த தாவரங்கள் பற்றி
பேராசிரியர்கள் விரிவாக சொன்னதும்
நினைவுக்கு வந்தது.

ஆனால் இந்தக் தடவை பேருந்து வடக்கு நோக்கி
பயணித்து கிள்ளை என்ற ஊரை கடந்து வடக்கு
பிச்சாவரத்தை அடைந்ததால்,15 கிலோ மீட்டர்
பயணிக்க வேண்டியதாயிற்று.

பிச்சாவரம் பற்றி அநேகம் பேருக்கு தெரிந்து
இருக்கும். தெரியாதவர்களுக்காக விவரம் இதோ.
சிதம்பரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள கடலை ஒட்டியுள்ள இந்த ஊரில்தான்
அலையாத்தி (சுரபுன்னை) காடுகள் உள்ளன.
உலகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது காடு
இது என்பதும் இதனுடைய பரப்பளவு சுமார்
2800 ஏக்கர்கள் என்பதும் இங்கு அரிய வகையைச்
சேர்ந்த Avicennia மற்றும் Rhizophara போன்ற
தாவரங்கள் உள்ளன என்பதும் நாம்
பெருமைப்படவேண்டிய விஷயம்.

ஆனால் இத்தகைய காடுகள் பற்றி 1975 வரை
சிதம்பரத்தில் உள்ளவர்களுக்கே (விஞ்ஞானிகள்,
தாவரவியல்,கடல்வாழ் உயிரியல் மற்றும்
வேளாண் அறிவியல் மாணவர்களைத் தவிர)
தெரியாமல் இருந்தது ஆச்சர்யமே.

1975 ஆம் ஆண்டு திரு இராம.வீரப்பன்
அவர்களால் எம்.ஜி, ஆர் அவர்களை வைத்து
எடுக்கப்பட்ட ‘இதயக்கனி’ திரைப்படத்தில்
சண்டைக்காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டு,
அவை படத்தில் காண்பிக்கப்பட்டதும் தான்
அநேகருக்கு இந்த இடம் பற்றி தெரிய வந்தது.

பின் திரு எம்.ஜி, ஆர் முதல்வர் ஆனதும்
இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றலாத்துறை
சுற்றுலாத்தலமாக மாற்றியது வரலாறு.

சமீபத்தில் வந்த திரு கமலஹாசனின்
‘தசாவதாரம்’ திரைப்படமும், இந்த அழகான
காட்டின் ஒரு பகுதியை நமக்கு காட்டியது
நினைவிருக்கலாம்.

நாங்கள் பிச்சாவரம் அடைந்தபோது அங்கே
ஏராளமான வாகனங்கள் இருப்பதைப் பார்த்ததும்
தான் தெரிந்தது, நாங்கள் தவறான நாளை
தேர்ந்தெடுத்து இருக்கிறோமென்று.

மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை
இருந்ததால் அநேக சுற்றுலா பயணிகள்
விடுமுறையைக்கழிக்க அங்கே
முகாமிட்டிருந்தனர்.அந்த கூட்டத்தின் நடுவே
நம்மால் படகுப்பயணம் மேற்கொண்டு அந்த
அலையாத்திக்காடுகளை பார்க்கமுடியுமா என்ற
சந்தேகம் எங்களுக்கு.

நாங்கள் இறங்கி விசாரித்தபோது, அப்போது
மொத்தம் நான்கு படகுகள்தான் இயக்கப்படுகின்றன
என்றும், வரிசைப்படி அந்த படகில் பயணிக்க நேரம்
ஆகும் என்று தெரிந்தது. இருந்தாலும் காத்திருந்து
பார்த்து செல்வது நாங்கள் முடிவெடுத்ததால்
நண்பர் கோவிந்தசாமி அவர்கள் எங்களுக்காக
வரிசையில் நின்று பயணச்சீட்டு எடுத்தார்.

எங்கள் குழுவுக்கு 6 படகுகள் தேவைப்பட்டதால்
எங்களுக்கு நேரம் 12 மணியிலிருந்து 1.45 வரை
ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு படகிலும் 8 பேர்
பயணிக்கலாம் என்றும் ஒவ்வொருவருக்கும்
100 ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள்.

நாங்கள் அங்கு சென்றபோது நேரம் காலை 10.45.
பயணிகளை ஏற்றி சென்ற படகு வரும் வரையில்
நாங்கள் படகுத்துறை அருகே இருந்த தங்குமிடத்தில்
அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது நான் கரையில் இருந்து எடுத்த
புகைப்படங்கள் கீழே.















எங்களுக்கான படகு வரும் வரையில் நான் எனது
அறைத் தோழனான முத்துக்கிருஷ்ணனோடு
பேசிக்கொண்டு இருந்தேன்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. சிதம்பரம் அருகில்தான் பிச்சாவரம் என்பது உங்கள் கட்டுரைபடித்தபின்தான் தெரிந்தது. அடு்த்தமுறை செல்லும்போது கண்டிப்பாய் போகவேண்டும். பயணக்கட்டுரை எளியநடையில் அமைந்திருந்தது. படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கடம்பவன குயில் அவர்களே!. பிச்சாவரம் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்களுடன் அருமையான பயணக்கட்டுரை.

    பதிலளிநீக்கு
  5. கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு