திங்கள், 14 நவம்பர், 2011

நினைவோட்டம் 58

எங்களது S.S.L.C தேர்வு அந்த ஆண்டு பிப்ரவரி
மாதம் 22 ஆம் தேதி (திங்கட் கிழமை) ஆரம்பித்து
26 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முடிந்தது
என் நினைக்கிறேன்.

திங்களன்று காலையில் ஆங்கிலம் முதல் தாளும்,
பிற்பகலில் ஆங்கிலம் இரண்டாம் தாளும்,
செவ்வாய் அன்று காலையில் தமிழ் முதல் தாளும்,
பிற்பகலில் தமிழ் இரண்டாம் தாளும்,புதனன்று
பிற்பகலில் தமிழ் மொழிபெயர்ப்பு தாளும்
பிற்பகலில் இந்தியும், வியாழன் அன்று காலையில்
கணிதமும், பிற்பகலில் அறிவியலும்,வெள்ளி
அன்று காலையில் சமூகவியல் தேர்வுகளும்
இருந்தன.

இப்போதெல்லாம் ஒரு நாளில் ஒரு பாடத்திற்கான
தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.மற்றும் ஒரு
தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையே ஒன்று
அல்லது இரண்டு நாட்கள் இடைவெளிகூட
இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு முன் நன்றாக
திரும்பவும் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

நாங்கள் தேர்வு எழுதியபோது இந்தமாதிரி தேர்வுக்கு
இடையே நாட்கள் இல்லாததால்,தேர்வுகளுக்கு
முதல் நாள் அன்று இரண்டு பாடங்களுக்கு
படிப்பது என்பது நினைத்துப்பார்க்கமுடியாத செயல்.

அதுவும் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கான
தேர்வுகள் ஒரே நாளில் இருந்தபோது, எப்படி இரண்டு
வருட பாடங்களை திரும்பவும் Revise செய்து
படித்தோம் என்று இன்றைக்கு நினைத்தாலும்,
மலைப்பாக இருக்கிறது.

இன்றைக்கு இவ்வாறு தொடர்ந்து ஒரே நாளில் இரு
தேர்வுகள் வைத்தால் கல்வியாளர்கள் ஒருமித்த
குரலில் ஆட்சேப்பிப்பார்கள் என்பது நிச்சயம்.ஆனால்
நாங்கள் படித்தபோது யாரும் மாணவர்களுக்கு இது
சுமையாக இருக்குமே,மன அழுத்தம் தருமே என்று
குரல் கொடுக்கவில்லை.

நான் தேர்வுக்கு என்னை நன்றாக தயார் செய்து
கொண்டு தேர்வு நாளை எதிர்நோக்கி இருந்தேன்.
பிப்ரவரி 22ஆம் தேதி காலையில் ஆங்கிலம்
முதல் தாள் தேர்வை நன்றாக எழுதிவிட்டு
வெளியே வந்தேன்.

அங்கே காத்திருந்த என் அண்ணன் ‘எப்படி
எழுதியிருக்கிறாய்? எல்லா கேள்விகளுக்கு பதில்
எழுதினாயா? என்றெல்லாம் கேட்டபோது அருகே
இருந்த ஒரு ஆசிரியர்,‘சபா,அவனைத் தொந்தரவு
செய்யாதே.மதியம் உள்ள இரண்டாவது தேர்வு
எழுதியபின் விவரம் கேட்டுக்கொள்ளலாம்’
எனக்கூறி அவரை மேற்கொண்டு கேள்விகள்
கேட்பதைத் தடுத்துவிட்டார்.

அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு மதியம்
தேர்வுக்கான,ஆங்கிலம் இரண்டாம் தாள்
பாடங்களை படித்துவிட்டு தேர்வை எழுதினேன்.

இரண்டாம் நாளில் தமிழ் இரண்டு தேர்வுகளையும்
நன்றாகவே எழுதினேன்.மூன்றாம் நாள் காலை தமிழ்
மொழிபெயர்ப்பு தேர்வு.அதில் ஒரு பத்தியை (Paragraph)
ஆங்கிலத்தில் கொடுத்து தமிழாக்கம் செய்யச்
சொல்வார்கள்.இன்னொரு பத்தியை தமிழில் கொடுத்து
அதை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க சொல்வார்கள்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்வதும்,
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்வது
அந்த வயதில் கடினமான காரியமாகத் தோன்றியது.
காரணம் அப்போது சொல்வளம் (Vocabulary) எனக்கு
குறைவாக இருந்ததால் அல்லது இல்லாமலே
இருந்ததால்!

எப்படியோ அந்த தேர்வை முடிந்தவரை நன்றாக
எழுதினேன்.மதியம் இந்தி பாடத்தில் தேர்வு.அதை
எழுதவேண்டாம் என நாங்கள் முன்பே முடிவு
செய்து இருந்ததால் அநேகமாக எல்லா மாணவர்களும்
அன்று தேர்வுக்கு செல்லவில்லை


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. இவை எவையுமே எனக்கு நினைவில்லை.வியக்க வைக்கும் நினைவாற்றல் உங்களுக்கு.

    இன்று என் தொடர் பதிவில் உங்களை இணித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நிச்சயம் தொடர் பதிவிடுவேன்.பதிவிட அழைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு