திங்கள், 12 டிசம்பர், 2011

படித்தால் மட்டும் போதுமா? 7

நண்பர் சங்கரன் அவரது இருக்கையை அடைந்ததும்,
என்னை அமரச் சொல்லிவிட்டு என்னைப் பற்றியும்,
என் பயணம் பற்றியும் கேட்டார்.எனது பயணம்
பற்றி எல்லாவற்றையும் விவரமாக சொல்லிவிட்டு,
தங்குவதற்கு நல்ல தங்குமிடம் ஏற்பாடு செய்து
தரமுடியுமா எனக் கேட்டேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் இன்று பயிற்சிக்குப் போய்
வாருங்கள்.அதற்குள் நான் விசாரித்து வைக்கிறேன்.’
என்றார். ‘காலை உணவு சாப்பிட்டீர்களா?’ என்று
அவர்கேட்டதற்கு நான் ‘இல்லை.’என்றதும்,‘இங்கு
இன்னும் கேண்டீன் நடத்தும் பையன் வரவில்லை.
வாருங்கள் வெளியே போய் வருவோம்.’ எனச்சொல்லி.
என்னை வெளியே அழைத்து சென்று அங்குள்ள ஒரு
தெருவோர சிற்றுண்டி சாலையில்(’டாபா’ வில்)
சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.

பின் பயிற்சி நடைபெறும் Pusa Institute எனச்
சொல்லப்படுக்கின்ற Indian Agricultural Research
Institute (I.A.R.I) வளாகத்திற்கு செல்ல,ஒரு
ஆட்டோவை கூப்பிட்டு அவரிடம், இந்தியில் என்னை
எங்கு விடவேண்டுமென்று சொல்லிவிட்டு,‘மாலையில்
பார்ப்போம்.’எனக்கூறி உள்ளே சென்றுவிட்டார்.

அங்கிருந்து IARI வெகு அருகில் என்பதால், அந்த
ஆட்டோ ஓட்டுனரும் வெகு விரைவில் என்னை
விட்டுவிட்டு மீட்டர் காட்டிய தொகையைப்
பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

பயிற்சி நடைபெறும் அறைக்கு சென்றதும் அங்கே
நின்றுகொண்டு இருந்தவர் என்னை அன்புடன்
வரவேற்று நான் எங்கிருந்து வருகிறேன் எனக்
கேட்டுவிட்டு,தான் விதை தொழில்நுட்பத்
துறையின் (Seed Technology) தலைவர் என்றும்,
தன் பெயர் Dr.அமர் சிங் என்றும் தன்னை
அறிமுகப்படுத்திக்கொண்டார்.

என்னை அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு
பதிவு செய்துகொண்டதும்,பயிற்சிக்கான Note Book
முதலியவகளைக் கொடுத்து உள்ளே அமரச்சொன்னார்.

அங்கே ஏற்கனவே சுமார் 25 பேர் வந்து இருந்தனர்.
நானும் காலியான ஒரு இருக்கையில் சென்று
அமர்ந்தேன்.சரியாக 10 மணிக்கு அப்போது IARI ன்
தலைவராக இருந்த வேளாண் விஞ்ஞானி
Dr.M.S.சுவாமிநாதன் அவர்கள் வந்து பயிற்சியைத்
தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேச்சை தொடங்குமுன் எங்களை யெல்லாம்
பெயர்,ஊர்,பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றை
சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார்.

அப்போதுதான் கவனித்தேன் இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் உள்ள வேளாண் துறையின் கீழ்
உள்ள விதை ஆய்வு மய்யத்தில்(Seed Testing Centre)
பணிபுரியும் இளம் வேளாண் விஞ்ஞானிகளும்,
எங்களது NSC நிறுவனத்தின் சார்பாக,எங்களது
உத்திர பிரதேச கிளைகளில் இருந்து இருவரும்,
அப்போதைய மைசூர் மாநிலத்திலிருந்து(தற்போதைய
கர்நாடக மாநிலம்) நானும் ஆக மூவர்
பங்கேற்கிறோம் என்று.

அறிமுகப்படலம் நடக்கும்போது,தமிழ் நாட்டிலிருந்து
யார் வந்திருக்கிறார்கள் என ஆவலாக கவனித்தபோது
கோவை விதை ஆய்வு மய்யத்திலிருந்து வருவதாக,
தர்மலிங்கம் என்ற நண்பர் சொன்னபோது ‘அப்பாடா.
நம் ஊர்க்காரர் ஒருவர் இருக்கிறாரே என எண்ணி
சந்தோஷப்பட்டேன்.

அறிமுகம் முடிந்து Dr.M.S.சுவாமிநாதன் சிறப்புரை
ஆற்றி எங்களை பயிற்சியை சிறப்பாக முடிக்க
வாழ்த்தி விடைபெற்ற பின் Dr.அமர்சிங் அவர்கள்
பயிற்சியின் நோக்கம் பற்றி சொன்னார்.(பயிற்சி
பற்றி பின் நினைவோட்டத்தில் எழுதுவேன்)

தேநீர் இடைவேளையின் போது நான் சென்று
திரு தர்மலிங்கம் அவர்களிடம் அறிமுகப்படுத்திக்
கொண்டேன்.அவருடன் பயிற்சிக்கு வந்த இன்னொரு
நண்பர்,தனது பெயர் இராதாகிருஷ்ணன் என்றும்,
தான் கேரளாவில் உள்ள பட்டாம்பி (ஷோரனூருக்கு
அருகில் உள்ளது) என்ற இடத்தில் வருவதாக
அறிமுகப்படுத்திக் கொண்டார்.

திரு தர்மலிங்கம் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என
விசாரித்தபோது நான் எனது தலைமை அலுவலகத்தில்
தற்காலிகமாக தங்கி இருப்பதையும், தங்க இடம் தேட
வேண்டி இருப்பதையும் சொன்னேன். அவர் எங்கு
தங்கி இருக்கிறார் எனக் கேட்டபோது அவர் தானும்
நண்பர் திரு இராதாகிருஷ்ணனும் ‘கரோல் பாக்’கில்
'இராமானுஜம் மெஸ்’ ஸில் தங்கி இருப்பதாக சொன்னார்.

உடனே நான் ‘அங்கு தங்க எனக்கு இடம் கிடைக்குமா?’
என்று கேட்டபோது அவர் ‘அங்கு ஒரு அறையில் மூன்று
பேர் தங்க அனுமதிக்கிறார்கள்.எங்கள் அறையில் நாங்கள்
இருவர் மட்டுமே இருக்கிறோம். நீங்கள் விரும்பினால்
எங்களுடன் தங்கலாம். ஆனால் பயிற்சி முடியும்
40 நாட்களும் அங்குதான் தங்கி இருக்கவேண்டும்.அப்படி
என்றால்தான் அவர்கள் அனுமதி தருவார்கள்.’என்றார்.

நானும் ‘சரி’ என்றதும்,அவர்‘இன்று ஒருநாள் மட்டும்
நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே
தங்கிக்கொள்ளுங்கள். நாங்கள் அந்த மெஸ்
உரிமையாளரிடம் இன்று மாலை அறைக்குத்
திரும்பியதும் கேட்டு வருகிறோம்.அவர் சரி
என்று சொன்னால், நீங்கள் நாளை மாலை அங்கு
வந்து எங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.’என்றார்.

ஒரு வழியாகத் தங்கும் இடத்திற்கு வழி செய்ததும் தான்
எனக்கு நிம்மதி வந்தது.பின் காலைபயிற்சி வகுப்புகள்
முடிந்தபிறகு நண்பர்கள் தர்மலிங்கத்தோடும்,
இராதாகிருஷ்ணனோடும் மதிய உணவு அருந்த அங்கு
உள்ள உணவகத்திற்கு சென்றேன்.

அதுதான் எனக்கு முதல் வட இந்திய பயணம் என்பதால்,
அங்கு ரொட்டி மற்றும் சப்பாத்தியையும் அதனுடன்
தரும் சப்ஜி எனப்படுகின்ற கூட்டு போன்றவைகளை
சாப்பிட விருப்பமில்லை.சாம்பார், ரசம் உண்டா எனக்
கேட்டதற்கு வெறும் சாதமும் பருப்பும் தான் உள்ளது
என்றனர்.

நண்பர் தர்மலிங்கம் காலையிலேயே இராமானுஜம்
மெஸ்ஸில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டதால், மதியம்
வெறும் பிரெட் & ஜாம் தான் சாப்பிட்டப் போவதாக
கூறினார். நானும் அவரோடு அதை சாப்பிட்டேன்.

மாலை வகுப்புகள் முடிந்து தலைமை அலுவலகம்
சென்றபோது திரு சங்கரன் எனக்காக காத்திருந்தார்.
அவரிடம் ‘கரோல் பாக்’ கில் தங்க ஏற்பாடு
செய்திருப்பதாக கூறியதும்,‘சந்தோஷம்’ எனக்கூறிவிட்டு,
‘இன்று இரவும் இங்கேயே தங்கிக்கொள்ளுங்கள்.நான்
இரவுக் காவலாளியிடம் சொல்லிவிடுகிறேன்.இரவு
உணவுக்கும்,நாம் காலையில் சாப்பிட்ட உணவகத்தில்
சொல்லி செல்கிறேன்.சப்பாத்திதான் கிடைக்கும்’
என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் திரும்பவும்
பயிற்சிக்கு சென்றபோது, நண்பர் திரு தர்மலிங்கம்,
இராமானுஜம் மெஸ்ஸில் தங்க எனக்கு ஏற்பாடு
செய்துவிட்டதாகவும். மாலையில் நேரே அங்கு
வந்துவிடும்படியும் சொன்னார்.மாலையில் வகுப்புகள்
முடிந்து தலைமை அலுவலகம் சென்று நண்பர்
சங்கரனிடமும் Dr.Joshi அவர்களிடமும் சொல்லிவிட்டு,
நண்பர் சங்கரன் ஏற்பாடு செய்த டாக்ஸியில் எனது
உடைமைகளோடு ‘கரோல் பாக்’கில்
சரஸ்வதி மார்க்’ கில் இருந்த இராமானுஜம் மெஸ்
சென்றேன்.


தொடரும்

4 கருத்துகள்:

  1. ம்... அனுபவ டைரி சுவாரஸ்யமாகவே விரிகிறது. படித்து ரசிக்கிறேன். பகிர்விற்கு நன்றி. (ஒரு தகவல்: என் நகைச்சுவை குரு எழுத்தாளர் கடுகு ப்ளாக்கில் நீண்ட நாளாக எழுதி வருகிறார். இங்கு சென்று நகைச்சுவை மழையில் நனையவும்)
    http://kadugu-agasthian.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் தங்களது இரசிப்புக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே! நிச்சயம் கடுகு அவர்களின் நகைச்சுவை எழுத்தில் நனைவேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அனுபவங்களை வாசிக்கிறேன் எப்பவும் பயண அனுபவங்கள் முக்கியமானவை தான்.
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு