ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்து !

அன்பென்ற உலைநீர் வைத்து,
அறிவென்ற அரிசி யிட்டுப்
பண்பென்ற வெல்லம் சேர்த்துப்
பரிவென்ற நெய்யை வார்த்துத்,
தின்கின்ற பொங்கல் ஆக்கும்
தினம் இந்தத் திருநாள் என்போம்!
இன்பென்ற பயனைக் காண்பீர்!
இன்றுபோல் வாழ்வீர் நன்றே!



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு
மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


(இன்று எனது வீட்டின் முன்பு எனது மனைவியும்
மருமகளும் போட்ட கோலங்களின் புகைப்படம் கீழே )








70 களில் பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது சீத்தாராம்
லாட்ஜில் தங்கியிருந்தேன்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் லாட்ஜின்
முன் புறம் இருந்த வரவேற்பு அறையில் அமர்ந்து
கொண்டு எனது நண்பர் திரு முத்துராம் அவர்களிடம்,
1972 ஆம் ஆண்டுக்கான பொங்கல் வாழ்த்து அட்டை
அடிக்கவேண்டும்.சென்ற ஆண்டு நானே கவிதை(?)
எழுதி அச்சடித்து அனுப்பிவிட்டேன். இந்த ஆண்டும்
அதே கவிதையை அனுப்ப விருப்பமில்லை.
வேறொரு கவிதை எழுத நேரமில்லை. என்ன செய்ய?’
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த லாட்ஜின் உரிமையாளரின்
மகன் திரு இராமமூர்த்தி ‘எனக்குத் தெரிந்த நண்பர்
ஒருவர் வெளியூர்க்காரர் இங்கே வந்து தங்கியிருக்கிறார்.
அவர் ஒரு தமிழ் புலவர்.அவரிடம் சொல்லி உங்களுக்கு
கவிதை வாங்கித் தரட்டுமா?’என்றார்.

நான் ‘சரி’ என்றதும் அவரிடம் என்னை அறிமுகப்
படுத்தினார்.அவரும் உடனே எனக்கு ஒரு பொங்கல்
வாழ்த்துக் கவிதையை ஊருக்குப்போய் எழுதி
அனுப்புவதாக சொன்னார். ஆனால் அவர் அனுப்பிய
அந்த வாழ்த்து குறித்த நேரத்தில் வரவில்லை.
அதனால் அதை அப்போது உபயோகப்படுத்திக்கொள்ள
முடியவில்லை.

ஆனால் அந்த தமிழ் புலவர் கைப்பட எழுதி
அனுப்பியிருந்த பொங்கல் வாழ்த்தை பத்திரமாக
40 வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தேன்.
இப்போது அந்த முகம் மறந்துபோன தமிழ் புலவருக்கு
நன்றி கூறி, அவர் என்னை உபயோகப்படுத்திக்
கொள்ளக் கொடுத்த அந்த கவிதையை மேலே
தந்திருக்கிறேன்.

8 கருத்துகள்:

  1. ஆஹா... அழகுத் தமிழ்க் கவிதையால் வாழ்த்திட்டீர். உமக்கும் உமது குடும்பத்தார்க்கும் உவப்புடனே என் உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை இயம்புகின்றேன். (பொங்கல் பானை கோலம் அருமை)

    பதிலளிநீக்கு
  2. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றியுணர்வுக் கவிதை நன்றாக உள்ளது. கோலங்கள் அழகு அனைத்திற்கும் வாழ்த்துகள் மறுபடியும் இனிய பொங்கல் வாழ்த்துகள் இங்கும் தருகிறேன்.
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பொங்கல் வாழ்த்துக்களுடன், நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. கருத்துக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அழகான கவிதையால் அன்பாக வாழ்த்தி வீட்டீர்.நன்றி.
    வாழ்த்துகள் உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு