திங்கள், 13 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 4

நண்பர் திரு வீராசாமி திகைத்து நின்றதற்கு
காரணம் உண்டு.

அப்போதெல்லாம்,வேளாண் விரிவாக்க அலுவலராக
(Agricultural Extension Officer) ஊராட்சி
ஒன்றியங்களில் பணி புரியும் வேளாண் அறிவியல்
பட்டதாரிகளின் முதற் பணி,அந்த ஒன்றியத்தில்
உள்ள விவசாயிகளுக்கு புதிய வேளாண் சாகுபடி
உத்திகளை அறிமுகப்படுத்தி, ஒருங்கிணைந்த
வேளாண் பயிர் பாதுகாப்பு மூலம் தானிய
விளைச்சலை அதிகரிக்க உதவுவதுதான்.

ஆனால் அதற்கு மேலாக அவர்களுக்கு இன்னொரு
பணியும் ஒதுக்கப்பட்டு இருந்தது.வேளாண்
இடுபொருட்களான (Agricultural Inputs)
வீரிய விதைகள்(Hybrid Seeds) பூச்சி மற்றும்
பூசாண மருந்துகள் (Insecticides & Fungicides)
உழவுக்கருவிகள் போன்றவைகள் விவசாயிகளுக்கு
மானிய விலையில் விற்பதற்காக அமைக்கப்பட்ட
வேளாண் கிட்டங்கி (Agricultural Depot) யையும்
அவர்களே நிர்வகிக்கவேண்டும்.

அந்த கிட்டங்கியில் உள்ள மொத்த பொருட்களின்
மதிப்பு பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.அவைகளுக்கு
அந்த கிட்டங்கியை நிர்வகிக்கும் வேளாண் விரிவாக்க
அலுவலரே பொறுப்பு.

கிட்டங்கியில் உதவிக்கு ஒரு மேல்நிலை எழுத்தர்
(Upper Division Clerk) இருப்பார். வேளாண் விரிவாக்க
அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட சிற்றூர்களுக்கு
காலை வேளையிலேயே சென்று அங்கு
பயிரிடப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்து,ஏதேனும்
பூச்சி அல்லது பூசாண நோய் தாக்கி இருந்தால்
அவைகளை எவ்வாறு ஒழிப்பது அல்லது வராமல்
தடுப்பது என்று விவசாயிகளுக்கு அறிவுரை
சொல்லவேண்டும். அதனால் கிட்டங்கிக்கு வந்து
பொருட்களை விற்பனை செய்து கொண்டு
இருக்கமுடியாது.

அதனால் உதவிக்கு(?) உள்ள மேல்நிலை எழுத்தர்தான்
இடுபொருட்கள் விற்பனையை பார்த்துக்கொள்வார்.
ஆனால் அந்த பொருட்களின் இருப்பு அல்லது
அவைகளை விற்ற பணம் குறைந்தாலும்,
இடுபொருட்கள் விற்பனையில் நேரடித்தொடர்பு
இல்லாத வேளாண் விரிவாக்க அலுவலர்தான்
அவைகளுக்கு பொறுப்பு!

மாதத்தில் முக்கால் வாசி நாட்கள் வேளாண்
விரிவாக்க அலுவலர்கள் களப்பணிக்குப்
போய்விட்டு மாலை திரும்புவதற்குள் எழுத்தர்
அதற்குள் விற்பனையை முடித்து இருப்பார்.

அந்த நேரத்தில், அன்று விற்பனை செய்ததற்கான
Cash Receipts ன் கூட்டுத்தொகையும் கையில் உள்ள
ரொக்கமும் சரியாக இருக்கிறதா எனப்
பார்க்கத்தான் முடியும்.பொருட்களின் இருப்பை
சரி பார்க்க இயலாது.

ஒருவேளை உதவிக்கு இருக்கும் எழுத்தர்
ஞாபகமறதியாக(!) வாங்கிய பணத்திற்கு இரசீது
தராதிருந்தால்,(பெரும்பாலும் அப்படித்தான் )அந்த
பணம் கணக்கிற்கு வராது!

ஆனால் பொருட்களில் இருப்பு குறைந்திருக்கும்.
அது ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போதுதான்
தெரியவரும். பலர் நினைக்கலாம். ஏன் வேளாண்
அலுவலர்கள் கிட்டங்கிக்கு வந்து இருந்து
விற்பனையை நேரடியாக கண்காணித்து விட்டு
வெளியே செல்லலாமே என்று.

அப்படி செய்தால் களப்பணிக்கு செல்ல இயலாது.
நாள் முழுவதும் விற்பனை இருப்பதால் அங்கேயே
இருக்க வேண்டியிருக்கும்.அப்போது வேளாண்
பணிகளை செய்யாததற்காக அவர் மேல் நடவடிக்கை
எடுக்க வாய்ப்பு உண்டு. எனவே தங்களது
தலை விதியை நொந்துகொண்டு அலுவலர்கள்
கிட்டங்கியை எழுத்தரிடம் விட்டுவிட்டு வெளியே
செல்லவேண்டி வரும்.

எனக்குத்தெரிந்து அநேக வேளாண் விரிவாக்க
அலுவலர்கள் வருடாந்திர ஆய்வின் போது
கண்டறியப்பட்ட இருப்பு குறைவிற்காக
(Shotage of Stock) தங்கள் சம்பளத்திலிருந்து
பல வருடங்கள் ‘தண்டம்’ கட்டிக்கொண்டு
இருந்தார்கள்.

(நல்ல வேளையாக 1967 ஆம் ஆண்டில் இந்த
கிட்டங்கி நிர்வாகிக்கும் பொறுப்பை தனியாக ஒரு
மேலாளரிடம் கொடுத்து வேளாண் விரிவாக்க
அலுவலரை அந்தபணி(சுமை)யிலிருந்து
விடுவித்துவிட்டார்கள்.)

எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த கிட்டங்கியில் எனது
உதவியாளராக இருந்தவர்,ஒரு மேல் நிலை எழுத்தர்.
அவர் இந்த கிட்டங்கி வேலையில் பழம் தின்று
கொட்டை போட்டவர்! நான் அங்கு சேர்ந்தபோது
நான் எப்படி அவரை வைத்துக்கொண்டு, எனது
சம்பளத்தில் பிடித்தம் இல்லாமல் வேலை
செய்யப்போகிறேன் என்று என்னைப் பார்த்து
பரிதாபப்பட்டவர்கள் பலர். காரணம் அவரால்
பதிக்கப்பட்டவர்கள் அநேகம்.

ஆனால் நான் வேலைக்கு புதிதாய் இருந்தும்,அந்த
இரண்டரை மாதங்களில் தினம் களப்பணிக்கு
சென்றாலும் பொருட்கள் இருப்பு குறையாமல்
எப்படி பார்த்துக்கொண்டேன் என்பதை
‘நினைவோட்டம்’ தொடரில் எழுத இருக்கிறேன்.

அப்படிப்பட்ட உதவியாளர் இருக்கும்போது,பல்லாயிரம்
ரூபாய்கள் மதிப்புள்ள பொருட்கள் உள்ள கிட்டங்கியை
அடுத்து வரும் அலுவலரிடம் முறைப்படி
ஒப்படைக்காமல் விட்டுவிட்டு ஊருக்கு செல்கிறேன்
எனக்கூறியது நண்பர் வீராசாமிக்கு திகைப்பை
தந்திருக்கக்கூடும்.

நான் அவ்வாறு முடிவு செய்தது அசட்டு துணிச்சல்
என இப்போது நினைக்கிறேன்.ஒருவேளை அடுத்த
அலுவலர் பொறுப்பு ஏற்குமுன் பொருட்களின் இருப்பு
குறைந்திருந்தால் நான் தான் அவற்றிற்கு பணம்
செலுத்தவேண்டி இருந்திருக்கும்.ஆனால் அப்போதிருந்த
மன நிலையில் அவ்விடத்தை விட்டு வெளியேற
எவ்வித விலையையும் தர தயாராயிருந்தேன்
என்பதே உண்மை.

நண்பரிடம் சொன்னேன்,'வீராசாமி, நான் சொல்லாமல்
ஊருக்கு போனது தெரிந்ததும், ஆணையர் அதுபற்றி
மாவட்ட வேளாண் அலுவலருக்கு தந்தி கொடுப்பார்.
உடனே அவர் அருகில் உள்ள உங்களைத்தான்
கூடுதல் பொறுப்பாக இந்த கிட்டங்கியையும் பார்த்துக்
கொள்ள சொல்வார். எனவே தயை செய்து முழு
இருப்பையும் சரி பார்த்து பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்.
ஏதேனும் குறைந்திருந்தால் எனக்கு எழுதவும்.’ என்றேன்.

அவரால் ஓன்றும் சொல்லமுடியவில்லை.'சரி.உங்கள்
இஷ்டம்’ என்றார்.அன்று மாலை 5 மணிக்குமேல் எனது
பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு
திருத்துறைப்பூண்டிக்கு பேருந்தில் புறப்பட்டேன். நண்பர்
வீராசாமியும் என்னை வழி அனுப்ப உடன் வந்தார்.

யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே
பேருந்தில் ஏறினேன்.திருத்துறைப்பூண்டியில் இறங்கி
உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது
எனது கிட்டங்கியின் காவலாளி என்னைப்
பார்த்துவிட்டு.’சார்.எங்கு பெட்டி படுக்கையோடு
கிளம்பிவிட்டீர்கள்?’என்றதும்,இது ஏதடா
வம்பாகிவிட்டது என நினைத்துக்கொண்டு
‘அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால்
பத்து நாள் ஊருக்கு போகிறேன்.’எனக்கூறி
சமாளித்தேன்.

பின்பு இரயில் நிலையம் வந்து சிதம்பரம் செல்ல
பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு,நண்பர் வீராசாமி
உதவி செய்ய, இரவு சுமார் 10 மணிக்கு
இராமேஸ்வரத்திலிருந்து வந்த சென்னை செல்லும்
இரயிலில் கூட்டம் இருந்தும், ஒரு வழியாக
ஏறிக்கொண்டு நண்பரிடம் இருந்து விடைபெற்றேன்.

தொடரும்

7 கருத்துகள்:

  1. மிக பிரச்சனை நிறைந்த ஒரு சூழலில்தான் பணி புரிந்திருக்கிறீர்கள்.மிகத்துணிச்சலான முடிவை நீங்கள் எடுத்ததில் எனக்கு ஆச்சரியம் இல்லை.எப்போதுமே அப்படித்தானே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ராஜா அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. வேலை , பொறுப்பு ,பிரச்சனை மொத்தமாக இணைந்தவை. அதை சமாளிக்கும் சாமர்த்தியம் எமது திறமை. இதில் எனக்குப் பிடித்தது ஆங்கில வேலை மொழிகளின் தமிழாக்கம். மிக எளிமையாக (எழுத்து நடை) அனுபவம் செல்கிறது நன்றி. வாழ்த்துகள் சகோதரனே. மீண்டும் வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு