புதன், 22 பிப்ரவரி, 2012

எல்லோரும் நல்லவரே! 7

22ஆம் தேதி காலை தார்வார் கிளம்பத்
தயாரானபோது, சென்னை கால்நடை
மருத்துவக்கல்லூரியில், நோய் தீர்ப்பியலில்
முதுநிலை பட்டப்படிப்பு (M.V.Sc in
Therapeutics) படித்துக்கொண்டு இருந்த
என் அண்ணன் டாக்டர்.ஞானப்பிரகாசம்,
கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக
அப்போதுதான் சென்னையிலிருந்து வந்தார்.

அவரிடம் சனிக்கிழமை அன்று ஊர் வந்து
சேர்ந்ததுமே,எனது தார்வார் பணி பற்றி எழுதி அது
பற்றி விசாரிக்க சொல்லி கடிதம் எழுதியிருந்தேன்.
நல்ல வேளையாக அவருடன் படித்துக்கொண்டு
இருந்த ஒருவர் தார்வாரை சேர்ந்தவர் என்பதால்
அவரிடம் அந்த ஊர் பற்றி விசாரித்து வந்திருந்தார்.

அந்த ஊர் நல்ல தட்பவெப்பநிலை உள்ள ஊர்
என்றும் மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்
என்ற நல்ல செய்தியை சொன்னார்.

மதியம் விருத்தாசலத்திற்கு 1 மணிக்கு வரும்
கொல்லம்- சென்னை இரயிலில் சென்னை செல்ல
இருந்ததால் காலை 10 மணிக்கே சாப்பிட்டுவிட்டு,
அப்பா அம்மா காலில் விழுந்து அவர்களின்
ஆசி பெற்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு
கிளம்பினேன்.

வீட்டிலிருந்து நேரே விருத்தாசலம் இரயில் சந்திப்பு
நிலையத்திற்கு(10 கிலோ மீட்டர் தூரம் தான்)
எனது சைக்கிளில் சென்றால் பேருந்திற்கு
காத்திருந்து நேரத்தை வீணாக்காமல் விரைவில்
செல்லலாமே என்று, எனக்கு ஆரம்பப் பள்ளியில்
Junior ஆக இருந்த நாகராஜனை எனது சைக்கிளில்
வந்து என்னை விட்டுவிட்டு வரமுடியுமா
எனக் கேட்டேன்.

அவனும் சரி என்றதும்,இருவரும் எனது சைக்கிளில்
கிளம்பினோம்.எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ
மீட்டர் தூரத்தில் இருந்த கருவேப்பிலங்குறிச்சி
தாண்டி சின்ன சறுக்கல் என்ற தரைப்பாலத்தின் அருகே
சென்றதும், ஒரே கூட்டமாயிருந்தது. என்னவென்று
அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஓடும்
காட்டு ஓடையில் திடீரென வெள்ளம் வந்து
முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது.

(இந்த ஓடை பற்றி நான் முன்பே 15-07-2010 ல்
நினைவோட்டம் தொடர் எண் 25 ல்
எழுதியிருக்கிறேன்.)

அதில் எப்போது தண்ணீர் ஓடும் என்று
சொல்லமுடியாது.தண்ணீர் முழங்கால்
அளவுதான் என்றாலும் சுலபமாக அதைக்
கடந்து அக்கரை செல்ல முடியாது.ஓடும்
தண்ணீரில் ‘இழுப்பு’ அதிகமாக இருக்கும்.

அதனால் போக்குவரத்து சிலமணி நேரம்
நிறுத்தப்படும்.அதைப்பார்த்ததும் எனக்கு
வயிற்றில் அமிலம் சுரக்காத குறைதான்.
இந்த ஓடையைத் தாண்டி எப்படி சென்று
இரயிலைப் பிடிக்கப்போகிறோம் என்று
கவலைப்பட்டேன்.

நல்ல வேளையாக நடந்து செல்லும்
மக்களுக்காக குறுக்கே ஒரு ‘தாம்பு கயிறு’
(தேங்காய் நாரினால் முறுக்கப்பட்ட கயிறுதான்)
கட்டியிருந்தார்கள். அதைப் பிடித்துக்கொண்டு
அக்கரை செல்ல, அங்கிருந்தவர்கள்
உதவிக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவர்
என்னைப்பார்ததும்,‘என்ன தம்பி ஊருக்கா?’
எனக் கேட்டுவிட்டு,எங்களை அந்தக் கயிற்றைப்
பிடித்துக்கொண்டு அந்த ஓடையைக் கடக்க
உதவி செய்தார்.

அவரும் எனது சைக்கிளை வாங்கி தலைக்குமேல்
தூக்கிக்கொண்டு வந்து அக்கரையில் கொடுத்தார்.
அவருக்கு நன்றி சொல்லி,அங்கிருந்து கிளம்பி
விருத்தாசலம் இரயில் சந்திப்புக்கு குறித்த
நேரத்திற்கு முன்பே வந்து விட்டோம்.

நாகராஜன் இரயில் வரும் வரை இருப்பதாக
சொல்லியும், அவனது உதவிக்கு நன்றி சொல்லி,
‘நான் போய்க்கொள்கிறேன் நீ போய் வா’ என
போக சொல்லிவிட்டேன்.

(எனக்குத்தெரியாது,நான் நாகராஜனைப் பார்ப்பது
அதுதான் கடைசி என்று.எட்டு மாதங்கள் கழிந்து
ஊருக்கு வந்தபோது நாகராஜனைப் பார்க்க
எண்ணியபோது சொன்னார்கள் வீட்டில் ஏற்பட்ட
ஒரு தகராறில் ‘ஃபாலிடால்’ பூச்சி மருந்தைக்
குடித்து தற்கொலை செய்து கொண்டானென்று.
செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.)

சென்னைக்கு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு
சென்று பயணியர் நடைமேடையில் இரயிலுக்காக
காத்திருந்தபோது சென்னையில் இரவு இரயிலுக்கு
போகுமுன் எங்கு தங்குவது என யோசித்தேன்.

சென்னையில் அண்ணன் இருந்தாலாவது இரவு
இரயிலுக்குப்போகும் வரை எழும்பூர் இரயில்
நிலையத்திற்குப் பின் இருந்த அவரது
விடுதி அறையில் தங்கியிருக்கலாம்.அவரும்
விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டதால் நேரே
சென்ட்ரல் ஸ்டேஷன் சென்றுவிடவேண்டியதுதான்
என நினைத்துக்கொண்டேன்.

சரியாக ஒரு மணிக்கு வந்த சென்னை விரைவு
வண்டியில், கூட்டம் இல்லாத பெட்டியாக பார்த்து
உட்கார்ந்துகொண்டேன்.


தொடரும்

12 கருத்துகள்:

  1. ஒரு சிறு நிகழ்வைக்கூட நினைவில் வைத்திருந்து அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.நண்பரின் மறைவு கலங்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. சிங்காரச் சென்னை வருக வருக என வரவேற்றதோ ..?
    அருமையான பகிர்வு தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
    திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. நண்பனின் மறைவு என்றுமே மனதை அழுத்தும் துக்கம்தான். கணநேரம் உணர்ச்சி வசப்பட்டதன் விளைவு- ஒரு உயிர்! என்ன செய்ய... எது நம் கையில் இருக்கிறது? சென்னை உங்களுக்கு எப்படி வரவேற்பளித்தது? தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலாஅவர்களே! அன்று சென்னையில் நான் இருந்தது சில மணி நேரம் மட்டுமே.ஆனால் 1980 ல் தான் சென்னையிலே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  6. நாகராஜன் ஐயா இறந்துபோனாலும் இன்னும் மறக்காமல் இருக்கிறீர்களே..
    (சரியாக ஒரு மணிக்கு வந்த சென்னை விரைவு வண்டியில், கூட்டம் இல்லாத பெட்டியாக பார்த்து உட்கார்ந்து கொண்டேன்)
    உங்களோடு நானும் உட்கார்ந்து கொண்டேன்..தொடர்ந்து பயணிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. தண்ணீருக்குள் கயிறு பிடித்து நடந்தது நல்ல அனுபவம். தொடருங்கள் காத்திருப்போம்.....வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. எளிய நடையில் சுவை பட எழுதி இருப்பதால் மேலும் படிக்க தூண்டுகிறது.
    ஓடை என்றவுடன் படம் உள்ளதா என பார்க்கும் ஆவலை தூண்டியது!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
    திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும், தொடர்ந்து பயணிப்பதற்கும் நன்றி திரு மதுமதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி வெற்றி மகள் அவர்களே!

    பதிலளிநீக்கு