புதன், 28 மார்ச், 2012

Boss கள் பல விதம்! 2

மனித வள ஆய்வாளர்கள் கூற்றுப்படி Boss கள்
அனைவரும் கீழ்க்கண்ட நான்கு பிரிவின் கீழ்
வருகிறார்களாம்.

1.ஆலமரம் போன்றவர்கள்



எப்படி ஆலமரத்தின் கீழ் எந்த செடியும் வளராதோ,
அதுபோல் இவர்களுக்கு கீழே உள்ளவர்கள் மேலே
வரமுடியாது.காரணம் எங்கே தனது முக்கியத்துவம்
போய்விடுமோ என்ற பயத்தில் அவர்களை
வளர விடமாட்டார்களாம்.

இவர்கள் எப்போதும் தாங்கள் தான் நிறுவனத்திற்கு
இன்றியமாதவர்கள் என்ற எண்ணத்தோடு
(Indispensability Syndrome) வாழ்பவர்களாம்.
இவர்கள் எப்போதும் தன்னோடு ‘ஆமாம் சாமி’
போடுபவர்களை அருகில் வைத்துக்கொண்டு
இருப்பார்களாம். மாறுபட்ட சிந்தனைகள் மற்றும்
கருத்துக்கள் உள்ள ஊழியர்களை அறவே
வெறுப்பவர்களாம்.


2. ‘பைன்’(Pine) மரம் போன்றவர்கள்




நம்ம ஊர் மரத்தை உவமையாக சொல்வதானால்,அசோகா
(Polyalthia longifolia) மரம் போன்றவர்கள் என்று கூட
சொல்லலாம்.இதை நெட்டிலிங்க மரம் என்றும்
சொல்வார்கள்.



இந்த மரம் ஆலமரம் போல் வளராமல் செங்குத்தாக
வளர்வதால் மற்ற செடிகளை அருகே வளரவிடும்.
இந்த வகை Boss கள் தன்னோடு பணிபுரியும்
ஊழியர்களின் வேலையில் அனாவசியகமாக
தலையிடமாட்டார்களாம். ‘வாழு வாழவிடு’
(Live and let live) என்ற கொள்கையை
உடையவர்களாம் இவர்கள்.

நீங்கள் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள் நான்
என் பங்களிப்பைத் தருகிறேன் என்ற கருத்தில்
நம்பிக்கை உடையவர்களாம்.இவர்கள்
கற்பனைத்திறனும்,புதுமையான எண்ணங்களை
உடைய ஊழியர்களை தன்னுடன் பணிபுரிய
அனுமதிப்போடு,அவர்களை ஊக்குவிப்பவர்களாம்.


3.வாழை மரம் போன்றவர்கள்



ஒரு வாழைக் கன்றை நட்டால்,அது மரமாகி,இலையும்,
பூவும்,பழமும் கொடுத்து அழியுமுன்பு,அதன்
தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாழைக்கன்றுகள் தோன்றி
பலன் கொடுத்துக்கொண்டே இருக்கும்.அதனால்தான்
‘வாழையடி வாழை’ என்ற சொல்லாட்சியே
வழக்கில் உள்ளது.

ஒரு வாழைமரம் தான் அழியுமுன்பு,தனது கன்றை
கொடுத்து மறைவதைப் போல,இந்த வகை Boss கள்
தனக்குப்பின் நிறுவனத்தை,நன் முறையில் நடத்த
அடுத்த தலைமுறையினரை தயார்படுத்துவேண்டும்
என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாம்.

தங்கள் நிறுவனத்தின் பண்பு நலம்(Ethos),
பண்பாடு(Culture),துறைமைத்திறம்(Professionalism),
ஆகியவை நிறுவனத்தின் மரபுரிமைப் பேறு(Legacy)
என்பதால் அவைகளை இளைய தலைமுறைக்கு
விருப்பக் கொடையாக விட்டு செல்ல
விரும்புவார்களாம்.அப்படிபட்ட Boss கள் ஒரு
குழுவாக ஒற்றுமையுடன் வேலை செய்வதையே
போற்றிப் பேண விரும்புவார்களாம்.


4.சுறுசுறுப்பான தேனீ போன்றவர்கள்




இந்த வகை Boss கள் ‘நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
எனவே நீங்களும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும் என்ற
கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களாம்.

இவர்கள் கண்டிப்பாக இருப்பதோடு மற்றும்
பணியை செம்மையாய் முடிக்கவேண்டும்
என எதிர்பார்ப்பவர்களாம்.பணியில்லாமல்
சும்மா இருக்க இவர்களால் இருக்கமுடியாதாம்.

தங்களுக்கும் பணியை ஏற்படுத்திக்கொண்டு
தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்க்கும் பணியை
ஏற்படுத்திக்கொடுப்பார்களாம்.மொத்தத்தில்
இவர்களுக்கு பணி செய்வது ஒன்றே குறிக்கோளாம்.

சில Boss கள் மேற்கூறிய பிரிவின் கீழ் வராமல்
இருக்கலாம். ஆனால் எப்போதுமே விதிகளுக்கு விலக்கு
உண்டு என்பதால் அவர்கள் சிறப்புப் பிரிவின் கீழ்
வருகிறார்கள்.

நம்மில் பலர் தங்களது Boss தங்களை சரியாக
நடத்துவதில்லை என்றும் மிகவும் கண்டிப்பானவராக
இருக்கிறார் என்றும் கூறுவதுண்டு.ஆனால் அவர்களே
Boss ஆகும்போது அவர்கள் தங்களின் கீழ்
பணிபுரிவோரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்
பார்த்தால் அது மாமியார் மருமகள் கதை போலத்தான்.

ஆனால் எனக்கு கிடைத்த அனுபவங்களோ
மறக்கமுடியாதவை.



தொடரும்

18 கருத்துகள்:

  1. பைன்,வாழை,தேனி எல்லாம் கலந்த சூப்பர் பாஸ் கூட எனக்குத்தெரியுமே!

    பதிலளிநீக்கு
  2. ஓ! சகோதரா! என்ன ஒரு அருமையான விளக்கம்!. கொஞ்சம் கொஞ்சம் இதை அறிந்திருந்தேன் .இப்படி விளக்கமாக இன்று தான் வாசித்தேன். உடனே ''..இங்கே வாங்கோ ஒரு அருமையான விளக்கம் கேளுங்கோ ''...என்று கடகடவென முழுதும் கணவருக்கு வாசித்துக் காட்டினேன் ஆலமரம் பற்றி வாசிக்கப் பெலத்துச் சிரித்து விட்டார். நான் கருத்து எழுதப் போகிறேன் என்று இதை எழுதுகிறேன் . மிக ரசித்தேன். வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களுக்கு தெரிந்த அந்த சூப்பர் பாஸ் பெயரை தெரிவித்து இருக்கலாமே?

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். ஒவ்வொருவரின் அணுகுமுறை கூட ஒவ்வொருமாதிரிதான்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! தங்கள் கணவரும் பதிவை இரசித்தமைக்கு எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கடம்பவன குயில் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. என்ன சொல்வதென்று தெரியவில்லை திரு சென்னை பித்தன் அவர்களே!
    அவர் சார்பில் உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பல நல்ல ‘பாஸ்’களின் குணங்களைப் படித்து ரசித்தேன். எல்லாக் குணங்களின் கலவையான ‘பாஸ்’ பற்றி நண்பர் செ.பி. மூலம் அறிந்தும் மகிழ்ந்தேன். நல்லதொரு பகிர்விற்கு நன்றி நண்பரே! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், பதிவை பாராட்டியதற்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் அதற்குரிய குணங்களை விளக்கிய விதம் அருமை அருமை . ஒரு பிரசங்கம் கேட்ட நிம்மதி .

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. எல்லாக் கருத்துகளும் படிக்கும் போது அதுவும் ஒரு இடுகை போல உள்ளது. பல மன வியூகங்கள். மீண்டும் வருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே! உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் நிச்சயமாக இடுகைகளுக்கு சமம்தான்.

    பதிலளிநீக்கு
  14. துவக்கமே சிறப்பாக இருந்தது ...இரண்டாம் பாகம் அதை கட்டிலும் இன்னும் பிரமாதமாக இருக்கிறது .. சில சொற்களை மொழி பெயர்ப்பது அரிது ; அப்படியே மொழி பெயர்த்தாலும் அசலில் உள்ள வீச்சு இருக்காது ..எவ்வளவோ உதாரணங்களை கூறலாம் ...ஆங்கில படங்களை தமிழில் பார்க்கும் போது இது புரியும் . சில சமயங்களில் ஹாஸ்யமாக கூட இருக்கும் ...
    நிற்க, நான்கு வகை பாஸ் களை பற்றிய விளக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமா இருந்தது ஒவ்வொருவரின் சிறப்புகளை கூறியுள்ளீர்கள் . அனால் சில நபர்களிடம் நற்பண்புகளும் இருப்பதை வேறு கோணத்திலும் காணலாம் என எண்ணுகிறேன் . உதராணமாக ஆலமரம் போன்றவர்கள் மற்றவர்களுக்கு நிழல் கொடுப்பவர்கள் என எடுத்து கொள்ளலாம் ..தேனீ போன்றவர்கள் மற்றவர்களை கொட்டலாமே !
    இது சும்மா வேறு கோணத்தில் காணும் முயற்சி !
    நாற்பது வருடங்கள், கிட்ட தட்ட , பல பாஸ் களின் கீழ் பணி புரிந்த உங்கள் அனுபவங்களை கேட்க ஆவலாக உள்ளோம் ..சிலவற்றை ஏற்கனவே படித்து உள்ளோம் ( உங்கள் ஆரம்ப கால அனுபவங்கள் )...
    உங்கள் அனுபவங்கள் நீங்கள் உங்கள் boss களை சமாளித்த விதம் அனைத்தையும் விவரிப்பீர்கள் என்று நம்புகிறேன் .....பலருக்கும் குறிப்பாக புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் ....வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! பணிக்காலத்தில் எனக்கு Boss களிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுதி, தங்களது எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள்.

    பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட BOSS களுடன் பழகி வேலை பார்த்து, கடைசி காலங்களில் நானும் கொஞ்ச காலத்திற்கு மட்டும் BOSS ஆகவே இருந்த அனுபவங்கள் ஏராளமாக என்னிடமும் உள்ளதால், இந்தப்பதிவுகளை இப்போது பொறுமையாக ரஸித்துப் படித்து இன்புற முடிகிறது.

    தங்கள் பாணியில் மிகப் பிரமாதமாகவும், மிகப் பொறுமையாகவும், மிக அழகாகவும் ஒவ்வொன்றையும் எழுதிப்போவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களின் அனுபவத்தையும் எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?

      நீக்கு