திங்கள், 30 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 9


நான் வேளாண் துறையில் இரண்டரை மாதங்களுக்கு குறைவாகத்தான்
பணி புரிந்தேன்.அப்போது ஏற்பட்ட சில அனுபவங்களை முந்தைய பதிவுகளில் எழுதியிருந்தேன்.விடுபட்ட அனுபவங்களை பின்னால் நினைவோட்டம் பகுதியில் எழுத இருக்கிறேன்.

வேளாண் துறையில், பண்ணை மேலாளராக நான்
பணிபுரியாவிட்டாலும் அங்கு பணிபுரிந்த என் நண்பர்களின்
 
சில அனுபவங்களை இங்கு எழுதலாமென நினைக்கிறேன்.

நான் முன்பே எழுதியிருந்தபடி வேளாண் துறையில் பணிபுரியும் வேளாண் அறிவியல் பட்டதாரிகள், வேளாண் துறைக்கு சொந்தமான பண்ணையில் குறிப்பிட்ட காலம் பண்ணை மேலாளராக பணிபுரியவேண்டும் என்பது கட்டாயம்.

அந்த பண்ணைகள் எல்லாம் மாவட்ட வேளாண் அலுவலரின் (D.A.O) நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும். D.A.O க்கள் வேளாண்
கிட்டங்கிகளுக்கு ஆய்வுக்கு செல்வது போல், இந்த
பண்ணைகளுக்கும் ஆய்வு செய்ய செல்வார்கள்.

.ஒரு சில D.A.O க்கள் மட்டும் பண்ணைக்கு அடிக்கடி ஆய்வுக்கு செல்வதில்தான் மிக அதிக ஆர்வம் காட்டுவார்கள்.காரணம் அங்குதான்
அதிக அறுவடை செய்யமுடியும் என்பதால்!

எனது நண்பர் ஒருவர் பண்ணையில், மேலாளராக இருந்தபோது,அவரது
D.A.O ஆய்வுக்கு வந்தாராம் மரியாதைக்காக அவருக்கு வீட்டிலிருந்து
காப்பி வரவழைத்துக் கொடுத்தாராம். (பண்ணைகள், கிராமங்களில் இருந்ததால், அருகில் எந்த உணவு விடுதியும் இருக்காது. ஆய்வுக்கு
வருகிற மேலதிகாரிகளுக்கு, பண்ணை மேலாளர்கள் திருமணமானவர்களாயிருந்தால்,அவர்களது வீட்டிலிருந்துதான்
சாப்பாடு மற்றும் காப்பி முதலியவை வரும்.)

அந்த D.A.O என்னடா இவர் இந்த பண்ணையில் இதாவது தர ஏற்பாடு செய்திருக்கிறாரே என எண்ணாமல், ’என்னப்பா.காப்பிதானா? அதுதான்
தினம் வீட்டில் சாப்பிடுகிறேனே.ஹார்லிக்ஸ் வாங்கி வைத்திருக்கக்
கூடாதா? (அவரது வீட்டில் வாங்க மாட்டாராம்!) அடுத்த தடவை நான் வரும்போது ஹார்லிக்ஸ் கொடுப்பா என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், ‘உத்திரவு போட்டு சென்றாராம்.

என் நண்பரும் தான் சாப்பிடாவிட்டாலும், தன் தலை விதியை நொந்துகொண்டு நகரத்திலிருந்து ஹார்லிக்ஸ் வாங்கி வந்து,அந்த
D.A.O அடுத்தமுறை ஆய்வுக்கு வரும்போது கொடுத்து
உபசரித்திருக்கிறார். .

அந்த ஆய்வுக்கு வந்த D.A.O ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு
கிளம்பும்போது, ‘என்னப்பா, நாட்டுக்கோழி முட்டை இங்கு கிடைக்குமா?’ என்று கேட்டிருக்கிறார். (தான் சொன்னபடி ஹார்லிக்க்ஸ் வாங்கி வைத்திருந்ததால், இவரிடம் மேலும் கறக்கலாம் என நினைத்திருப்பார் போலும்)

எனது நண்பர் தயங்கியபோது, அந்த பண்ணையின் மேஸ்திரி
குறுக்கிட்டு,கிடைக்கும் சார். என்றிருக்கிறார்.அப்படியானால்
ஒரு டஜன் முட்டைகள் வாங்கி அனுப்பும். என்று கூறி சென்றுவிட்டாராம்.

அவர் சென்றதும். நண்பர் அந்த மேஸ்திரியிடம்,’என்ன இப்படி சொல்லிட்டீங்க? இங்கு முட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்றதற்கு. அந்த மேஸ்திரி, ‘கவலை வேண்டாம் சார்.
நான் வாங்கி வர ஏற்பாடு செய்கிறேன். என்றாராம்.

அங்கே இங்கே என்று அலைந்ததில், அவருக்கு பத்து முட்டைகள்
தான் கிடைத்ததாம். உடனே ஒரு ஆள் மூலம் அதை D.A.O வீட்டுக்கு கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

அதற்கு பிறகு மாவட்ட அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு
நண்பர் சென்றபோது, அந்த D.A.O எல்லோர் முன்னிலையிலும்
என்னப்பா உனக்கு எந்த ஆசிரியர் கணக்கு சொல்லிக்கொடுத்தது? 
ஒரு டஜனுக்கு எவ்வளவு எண்ணிக்கை என்று கூட தெரியாதா?’
என கிண்டலாக கேட்டு இருக்கிறார்.

D.A.O கேட்டது 12 முட்டைகள். அதுவும் ஓசியாக!! அந்த சிற்றூரில் கிடைத்தது 10 தான் என்பதால், நண்பர் உடனே அவைகளை
கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

நாம் டஜன் கேட்டதற்கு 10 முட்டைகள் மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று D.A.O க்கு கோபம். முட்டைகள் 
அனுப்பியதற்கு நன்றி கூட சொல்லாமல், எல்லோர் 
முன்னிலையிலும் அவரது கணித அறிவு பற்றி,கேலியாக
சொன்னதும், நண்பர் சொன்னாராம்.சார் எங்கள் கணித ஆசிரியர்
ஒரு டஜனுக்கு 12 என்றுதான்  எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
அந்த கணக்கு பணம் கொடுத்து பொருள் வாங்குவோருக்கு
மட்டும் தான். பணம் கொடுக்காமல் ஓசியாக வாங்குவோருக்கு
எவ்வளவு கொடுத்தாலும் டஜன் தான். என்றதும், அந்த D.A.Oக்கு ஏன்கேட்டோம் என்றாகிவிட்டதாம்.

மற்ற நண்பர்கள் விசாரித்தபோது என் நண்பர் விலாவாரியாக
நடந்ததை சொன்னதும் எல்லோரும் நன்றாக பதில் சொன்னாய். 
என்று பாராட்டினார்களாம்.அதற்கு பிறகு அந்த D.A.O அவரிடம்
எதுவுமே கேட்டதில்லையாம்.

மற்றொரு D.A.O இதுபோல் ஆய்வுக்கு வேறொரு பண்ணைக்கு சென்றபோது அங்கிருந்த அங்கிருந்த பண்ணை மேலாளரிடம் என்ன நெல்லுப்பா போட்டிருக்கே?’ என்றாராம்.அந்த மேலாளருக்கு ஒரே சந்தோஷம், மேலதிகாரி தனது பண்ணையில் பயிரிட்டுள்ள நெல்
பற்றி விசாரிக்கிறாரே என்று.உற்சாகத்தோடு, ‘சார்.குதிரை வால்
(நெல்லில் ஒரு வகை) போட்டிருக்கேன். நன்றாக வந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்துவிடுவோம். சார். நல்ல விளைச்சலை எதிர்பார்க்கிறேன். என்றாராம் மேலதிகாரி பாராட்டை எதிர்பார்த்து.

அப்போது அந்த D.A.O சொன்னதைக்கேட்டு, அந்த பண்ணை
மேலாளருக்கு மயக்கம் வராத குறைதானாம்!


தொடரும்

புதன், 25 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 8


தலைஞாயிறும் திரும்பியதும் ஆணையர் என்னை தனது அறைக்கு வரச்சொன்னார்.உள்ளே சென்றதும்,இறுதியாக என்ன முடிவு செய்து
இருக்கிறீர்கள்?’ என்றார்.

நான் உடனே, ‘சார். நான் சொன்னபடி Fidelity Bond தருகிறேன் ஆனால். நிச்சயம் பணத்தைக் கட்டுவதாக இல்லை. என்றேன். சிறிது நேரம்
சும்மா இருந்துவிட்டு, ‘நீங்கள் போகலாம்.என்றார். வெளியே வந்ததும்
நண்பர்கள், உள்ளே என்ன நடந்தது?’என விசாரித்தார்கள்.ஒன்றுமில்லை
என சொல்லிவிட்டு இருக்கைக்கு திரும்பிவிட்டேன்.

நான் அவ்வாறு ஆணையரிடம் துணிவாகப் பேசியதற்கு பின்னணி
உண்டு. சென்னையில் இருந்த என் அண்ணன்
டாக்டர் வே.ஞானப்பிரகாசம் அவர்களிடம், இந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தபோது, அவர்நீ பணம் கட்டவேண்டாம். Madras Financial 
Act படி Bond கொடுத்தால்போதும். மேலும் பிணைக்கான பணத்தை, ஊராட்சி ஒன்றிய அளவில்உனது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யமுடியாது. அப்படி ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்கு
உடனே தந்தி கொடு.நான் இங்கு உள்ள வேளாண்துறை நண்பர்கள்
மூலம் ஆவன செய்கிறேன். என எழுதியிருந்தார். அந்த கடிதம்
கொடுத்த தெம்பில்தான் நான் அவ்வாறு பேசினேன்.

நல்ல வேளையாக அந்த ஆணையருக்கு சங்கடம் ஏதும் தராமல் அந்த பணியிலிருந்தே நான் அடுத்த மாதமே விலகிவிட்டேன்.

நான் பணியை விட்டு வந்தபிறகு, அந்த ஆணையர் என் நண்பர் வீராசாமியிடம் சொன்னாராம். நல்ல வேளை நெளிவு சுளிவு தெரியாத உங்கள் நண்பர் பணியை விட்டு போய்விட்டார். இருந்திருந்தால் எல்லோருக்கும் தொல்லைதான். என்று

நான் அந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரிந்தது இரண்டரை
மாதங்களுக்கும் குறைவுதான்.அந்த நாட்களில் பலமுறை
ஆணையரோடு வெவ்வேறு விஷயங்களில் வாக்குவாதம்
(என் பக்கம் நியாயம்இருந்ததால்) செய்திருக்கிறேன்.அதன்
காரணமாகவும் அவர்அவ்வாறு  சொல்லியிருக்கக்கூடும்.

அவருக்கும் எனக்கும் நடந்த விவாதம் பற்றி பின்னர்
நினைவோட்டத்தில் எழுத இருக்கிறேன்.

நான் பணியை விட்டு வர நினைத்தன் முதல் காரணம் அங்கு
சுமுகமாக பணிபுரியும் சூழ்நிலை இல்லாததும்மேலதிகாரிகளின்
அராஜக அதிகாரமும் தான்.

என்னைப்போல் கல்லூரியில் படித்து முடித்து,புதிதாக பணியில்
சேரும் வேளாண் பட்டதாரிகள் தாங்கள் பணிபுரியும் இடத்தில்
வேளாண் பெருமக்களுக்கு உதவவேண்டும் என்ற
எண்ணத்தோடுதான் பணியில் சேருவார்கள். ஆனால் அங்குள்ள
சூழ்நிலை அவர்களை பணி செய்ய விடாது.

மேலதிகாரிகளோடு ஒத்துப்போக முடியாதவர்கள் என்னைப்போல் வெளியே வந்து விடுவார்கள். ஊரோடு ஒத்து வாழ்என்ற பழமொழிக்கேற்ப, அநேகம் பேர் வெறும் அறிக்கை தரும்
அலுவலர்களாக மாறிவிடுவார்கள். அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. மேலதிகாரிகள் சொல்படி நடக்காவிட்டால், அவர்களுக்கு
தினம் நரகம் தான்.

முக்கால் வாசி மேலதிகாரிகள் தங்கள் கீழே உள்ள அலுவலர்களை தொந்தரவு (Harassment) செய்ததன் காரணம் அவர்கள் பணியில் புதிதாய் சேர்ந்தபோது அவர்களை, அவர்களது மேலதிகாரிகள் சரியாக
நடத்தாததுதான். நாம் கஷ்டப்பட்டோமல்லவா, இவர்களும் கஷ்டப்படட்டுமே என்ற நல்ல எண்ணம் தான்.

முதலில் பணியில் சேரும்போது, தங்கள் Boss கள் தங்களை கஷ்டப்படுத்தும்போது, நாம் Boss ஆனால் இவ்வாறு செய்யக்கூடாது
என நினைப்பார்கள்.ஆனால் பதவி உயர்வு பெற்றதும் அதை
மறந்து விடுவார்கள்.

என்னைக் கேட்டால் இதுவும் இப்போது கல்லூரிகளில் மூத்த மாணவர்கள், புதிதாய் சேரும் மாணவர்களை பகடி(Ragging) செய்வது போலத்தான்!

இன்னும் சில அதிகாரிகள் தங்கள் கீழே உள்ள அலுவலர்கள் தங்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். வேளாண் துறையில் பண்ணை மேலாளர்களாக (Farm Manager) இருப்பவர்களுக்குத்தான் இந்த வகைத் தொந்தரவு அதிகம் இருக்கும்.

வேளாண் விரிவாக்க அலுவலர்களாக பணியில் சேருபவர்கள் கட்டாயம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அரசின் பண்ணையில்
(State Agricultural Farm) மேலாளராக பணிபுரிய வேண்டும். அப்போது பண்ணைக்கு ஆய்வுக்கு(?) வரும் மாவட்ட வேளாண் அலுவலருக்கு
(DAO க்கு) இராஜ உபசாரம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
இந்த மாதிரி ஆய்வுக்கும் வரும் அதிகாரிகளின் உபசார எதிர்பார்ப்பு
மற்ற துறைகளிலும் இருந்தது என எனக்குத் தெரியும்.

வேளாண் துறையில் பணிபுரிந்த பண்ணை மேலாளர்களுக்கு
ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி அடுத்த பதிவில்...


தொடரும்

சனி, 21 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 7


RDO என்னைப்பார்த்து, ‘ஏன் Security Deposit கட்டவில்லை. என்றதற்கு
நான் சொன்ன பதிலைப் பார்க்குமுன், பிணைத்தொகை என்றால்
என்ன என்பதைப் பார்க்கலாம்.

நான் முன்பே எழுதி இருந்தது போல் வேளாண் விரிவாக்க
அலுவலர்களின்(AEO) கீழ், வேளாண் இடுபொருள் கிட்டங்கிகள்
இருந்ததால், அந்தகிட்டங்கியில் உள்ள இடுபொருட்களின் மதிப்புக்கு பிணையாக, பணியில் சேரும் ஒவ்வொறு AEO வும் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் அல்லது அந்த தொகைக்கு
சமமாக மெய்பற்று பத்திரம் (Fidelity Bond) தரவேண்டும்.

இந்த பத்திரங்களை ஒரு சிறிய தொகையை Premium ஆக செலுத்தினால்,
பொது காப்பீட்டு நிறுவனங்கள்(General Insurance Companies) நமக்காக
Fidelity Bond ஐ வழங்குவார்கள். அதை பணி செய்யும் இடத்தில்
கொடுத்தால் போதும்.

பணியில் சேரும்போது AEO க்களுக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்
என்பதால் பணியில் சேரும் புதியவர்களை சிரமப்படுத்தவேண்டாம்
என்று அரசே இந்த சலுகையை அளித்திருந்தது. ஆனால் எங்கள்
DAO மாத்திரம் அவரின் கீழ் பணியில் சேரும் AEO க்கள் பணத்தைத்தான் பிணையாக கட்டவேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார். .

புதிதாக பணியில் சேருபவர்கள் எப்படி ரூபாய் 500 ஐ கட்டமுடியும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.அந்த அளவுக்கு கொடூர மனப்போக்கு (Sadistic Mentality) கொண்டவராய் இருந்தார் என்பது அவர் பணத்தைக் கட்ட AEO க்களை வற்புறுத்தியதே சான்று.

நான் பணியில் சேர்ந்த அன்றே, ஒன்றிய ஆணையர் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் எனச் சொல்லி இருந்தார்.

இது குறித்து நான் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நோய் தீர்ப்பியலில் முது நிலை பட்டப்படிப்பு (M.V.Scபடித்துக்கொண்டு இருந்த
என் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசத்திற்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அவர் கால் நடைத்துறையில் கால் நடை மருத்துவராக 7 வருடங்கள்
பணி புரிந்திருந்ததாலும், ஒவ்வொரு அரசு ஊழியரும், Departmental
Examination எனப்படும் அரசின் நடைமுறை பற்றிய சட்டதிட்டங்கள்
பற்றிய தேர்வை கட்டாயம் எழுதி வெற்றி பெறவேண்டும் என்ற
விதிகளின் படி என்ற அவர் எழுதி வெற்றி பெற்று இருந்ததாலும்.
அவருக்கு இந்த விதி பற்றி தெரிந்திருக்கும் என்பதால் இது பற்றி
கேட்டு இருந்தேன்.

அவர் உடனே எனக்கு பணம் கட்டத்தேவையில்லை Madras Financial Code
படி ரூபாய் 500 க்கான Fidelity Bond கொடுத்தால் போதும் என எழுதி
இருந்தார்.அதனால் நான் பணம் கட்டாமல் Fidelity Bond தர இருந்தேன்.

ஏன் பிணைத்தொகை கட்டவில்லை என RDO கேட்டதும்,நான்,'சார்.
Madras Financial Code படி பணம் கட்டுவது கட்டாயமில்லாததால்
கட்டவில்லை.அதற்கு பதில் Fidelity Bond தர இருக்கிறேன்.என்றேன்.

உடனே DAO காட்டமாக என்னிடம் 'புதிதாய் பணியில் சேர்ந்த நீங்கள் எங்களுக்கு Madras Financial Code பற்றி சொல்கிறீரா?’ என்றார். RDO வும்
அவர் சொல்வதை ஆமோதிப்பது போல். 'நீங்கள் உடனே பணத்தைக் கட்டிவிடுங்கள். என்று கூறிவிட்டு ஒன்றிய ஆணையரைப் பார்த்து,
'இவர் பிணைத்தொகையை கட்டாவிட்டால் இந்த மாத சம்பளத்தை
பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். என்றார்.

உண்மையில் அந்த கூட்டத்தில்,நான் கட்டவேண்டிய பிணைத்
தொகையைப் பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை.
எதைப்பற்றி (உரம்) பேசவேண்டுமோ அதைப்பற்றி பேசாமல்
என்னுடைய விஷயம் பற்றி பேசியதான் காரணம் என் மேல்
DAO க்கு ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்புதான் என நினைக்கிறேன்.

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் எங்கள் ஆணையர் ஜீப் தலைஞாயிறுதான் போகிறது நீங்களும் வரலாம் என்று என்னையும்
நண்பர் வீராசாமியையும் அழைத்தார்.அவருடன் ஜீப்பில் போகும்போது, என்னைப்பார்த்து, ‘நடனசபாபதி, நீங்கள் RDO சொன்னபடி நாளையே
ரூபாய் 500 ஐ கட்டிவிடுங்கள். இல்லாவிடில் நான் இந்த மாத
சம்பளத்தை பிடித்து வைக்கவேண்டி இருக்கும். என்றார்.

அதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond
தான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள். என்றேன்.

உடனே அவர், ‘என்ன இப்படி பேசுகிறீகள்?. நான் RDO 
சொன்னதைத்தானே சொல்கிறேன். நீங்கள் பணத்தைத்தான் கட்டவேண்டும். இல்லாவிடில்நான் RDO சொன்னபடி
நடக்கவேண்டி இருக்கும். என்றார்.

சார். உங்களுக்கு எனது சம்பளத்தை பிடிக்கும் அதிகாரம் இல்லை.
காரணம் எனது சம்பளம் வேளாண்மைத் துறையால் வழங்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித் துறையால் அல்ல. நீங்கள் வெறும் சம்பளம் பட்டுவாடா (Salary Disbursement) அதிகாரி மட்டுமே. எங்கள் துறை எனக்குத் தரும் சம்பளத்தை பிடிக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது. அப்படி சம்பளத்தை நிறுத்தினால் உங்களுக்குத்தான் தொந்தரவு. பார்த்துக்கொள்ளுங்கள். என்றேன்.

கூட என்னோடு பயணித்தவர்களுக்கு, (ஜீப் ஓட்டுனர் உட்பட) எனது பதில் ஆச்சரியத்தை கொடுத்திருக்கக் கூடும். என்னடா இது பணியில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவ்வாறு சட்டம் பேசுகிறானே என நினைத்திருக்கக் கூடும்.

ஆணையர் மேற்கொண்டு அதைப்பற்றிய பேச்சை வளர்த்த விரும்பவில்லை. மற்ற அலுவலர்கள் முன்பு மேலும் பேசினால் தனக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகார மரியாதையும் போய்விடுமோ என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்.

பிறகு தலைஞாயிறும் திரும்பும் வரை நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

தொடரும்

திங்கள், 16 ஏப்ரல், 2012

Boss கள் பல விதம்! 6


நான் எழுந்து நின்றபோது, எண்ணை வித்துக்கள் வல்லுனர்
என்னைப் பார்த்து உங்கள் பகுதியில் எவ்வளவு ஏக்கரில் எள் பயிரிடப்பட்டிருக்கிறது?’ எனக் கேட்டார்.

நான் பதில் சொல்ல ஆரம்பிக்கு முன் எங்கள் DAO, அவரிடம்
இவர் நேற்று தான் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு தெரிய வாய்ப்பில்லை. என்றார்.

நான் உடனே, ‘இல்லை.சார். இந்த கூட்டத்திற்கு வருவதால்
எல்லா விவரங்களையும் சேகரித்துத்தான் வந்திருக்கிறேன்.
எனது பகுதியில் எங்கும் எள் பயிரிடப்படவில்லை. அதற்கு
வாய்ப்பும் இல்லை. என்றேன்.

நான் இவ்வாறு சொன்னதும் DAO கோபத்தோடு நேற்று சேர்ந்த பச்சிளங்குழந்தையான உமக்கு என்ன தெரியும் அந்த பகுதியைப்
பற்றி? அந்த பகுதியில் எள் பயிரிடப்பட்டிருப்பதாக ஏற்கனவே
விவரம் கொடுத்திருக்கும்போது, நீங்கள் எப்படி எள்ளே
பயிரிடப்படவில்லை என்றும் அதை பயிரிட முடியாது என்றும்
கூறுகிறீர்கள்? எனக் கடிந்தார்.

நான் அமைதியாக,’ சார். எனது பகுதி கடலை ஒட்டிய பகுதி.
முக்கிய பயிரே நெல் தான்.பயிரிடும் நெல் கூட உப்புத் தண்ணீரில்
வளரும் நெல்தான்.(Saline Water Paddy) எனவே தான் அங்கு எள் பயிரிட வாய்ப்பில்லை.நான் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே என்றேன்.

எனது பதிலைக் கேட்ட அந்த வல்லுனர், DAO முகத்தைப் பார்க்க,
அவர் நீங்கள் இதை குறிப்பில் எடுத்துக்கொள்ளவேண்டாம்.நான்
இன்னும் பத்து நாளில் அங்கு ஆய்வுக்கு செல்ல இருக்கிறேன்.
அப்போது ஆய்வு செய்துவிட்டு அறிக்கை தருகிறேன்.' எனக்
கூறிவிட்டு, என்னைப் பார்த்து,’நான் வரும்போது நீங்கள் சொன்னது
சரியா என சரி பார்ப்பேன்.அப்போது பார்த்துக்கொள்ளலாம்.’ என்று
ஒரு எச்சரிக்கை தரும் தொனியில் சொன்னார்.

நான் அமர்ந்ததும் என் அருகில் இருந்தவர்,’ என்ன, வந்த முதல்
நாளே DAO வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டீர்களே.இங்கெல்லாம்
சில சமயம் நாம் அனுசரித்து போகவேண்டும்.என்றார்.

நான் உடனே அதாவது பொய்யாய் இருந்தாலும் உண்மை என சொல்லவேண்டுமா. அது என்னால் முடியாது. என்றேன். அதற்கு
அவர், ‘நான் நடைமுறையச் சொன்னேன்.பிறகு உங்கள் இஷ்டம்.
என்றார்.கூட்டம் முடிந்ததும் சிலர் வந்து எனது தைரியத்தைப்
பாராட்டினார்கள்.

திரும்ப தலைஞாயிறு வரும்போது, எப்படி இந்த சூழலில்
பணியாற்றப் போகிறேன் நினைத்துக் கொண்டே இருந்தேன்.
அதற்கு பிறகு தினம் DAO வருகை பற்றிய அஞ்சலுக்காக நான் காத்திருந்தபோது, இன்னொரு ஒரு கூட்டத்திற்கான சுற்றறிக்கை
வந்தது.

(இன்றைக்கும் அரசுப் பணியில் இருப்பவர்கள் பாதி நாட்கள்
கோப்புகளை தூக்கிக்கொண்டு கூட்டத்திற்கு போவதிலேயே
நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.)

இம்முறை கூட்டம் திருத்துறைப்பூண்டியில் என்றும், கூட்டத்திற்கு
வருவாய் கோட்ட அலுவலர் (Revenue Divisional Officer) தலைமை
தாங்குவார் என்றும் அதில் உரத்தைப்பற்றி ஆய்வு செய்ய
இருப்பதாகவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த கூட்டத்திற்கு RDO வந்ததால், வேளாண் துறை மட்டுமல்ல
மற்ற துறைகளில் இருந்தும் அலுவலர்கள் வந்திருந்தார்கள்.நானும்
எங்கள் கிட்டங்கியில் இருந்த உரங்களின் இருப்பு கணக்கையும்,
எனது பகுதிக்கு தேவைப்படும் உரங்களின் அளவை பற்றிய புள்ளி
விவர கணக்கையும் எடுத்து சென்றிருந்தேன்.

(உண்மையில் அந்த கூட்டம் RDO கூட்டும் வழக்கமான கூட்டம்.அதில்
எந்த துறையின் செயல்பாடுகள் பற்றி வேண்டுமானாலும் அவர் ஆய்வு செய்யக்கூடும். அப்போது நெல் நடவு காலம் ஆதலால் உரம் பற்றி
ஆய்வு செய்யலாம் என எங்கள் DAO முடிவு செய்ததால், எங்களை
அதற்கான விவரங்களுடன் வரச்சொல்லி இருந்தார்.)

ஆனால் அந்த கூட்டத்தில் உரம் பற்றி பேசாமல்,வேறு துறைகளை சேர்ந்தவர்களின் செயல் பாடுகள் பற்றி பேசிவிட்டு RDO, எங்கள்
DAO வை பார்த்து, ‘வேறு ஏதேனும் உண்டா? என்றார்.

இல்லை சார் என்று சொன்னவர், என்னைப்பார்த்ததும் என்ன
நினைத்தாரோ தெரியவில்லை.எங்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையரைப் பார்த்து'என்ன நீர்மூளை AEO பிணைத்தொகை (Security Deposit) கட்டிவிட்டாரா?’ என்றார்.

அவர் இல்லை.சார். என்றதும், RDO, ‘நீர்மூளை AEO இங்கு
வந்திருக்கிறாரா?’ என்று கேட்டார்.

நான் எழுந்து நின்று, ‘எஸ்.சார்.என்றதும், RDO என்னைப்பார்த்து,   
ஏன் Security Deposit கட்டவில்லை. என்றார்.

தொடரும்