புதன், 9 மே, 2012

Boss கள் பல விதம்! 12


வட்டார மேலாளரின் அறையில் நாங்கள் சிறிது நேரம் கழித்து
நாங்கள் கூடியபோது அது ஒரு வழக்கமான சம்பிரதாய
கூட்டம் போல் இல்லாமல் நண்பர்கள் சந்திப்பு போல் தான்
இருந்தது.

திரு மோகன் அவர்கள்,எங்கள் ஒவ்வொருவரையும் எங்களது படிப்பு,
சொந்த ஊர், NSC யில் நாங்கள் சேர்ந்த தேதி,எவ்வளவு காலமாக
மைசூர் மாநிலத்தில் (அப்போது கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்படவில்லை) பணி செய்கிறோம், பணிபுரியும் இடம், 
அங்குள்ள பிரச்சினைகள் முதலியவை பற்றி விரிவாக சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

எங்களில் ஒருவர் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலிருந்தும், ஒருவர் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்தும்,ஐவர் அப்போதைய
உத்திர பிரதேச மாநிலத்திலிருந்தும், ஒருவர் மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்தும்,என்னையும்  சேர்த்து இருவர் தமிழ்நாட்டில்
இருந்தும்  களத்தில்பணிபுரிந்து கொண்டு இருந்ததால் ஒரு குட்டி இந்தியாவே அங்கு இருப்பதுபோல் இருந்தது.  

நாங்கள் எல்லோரும் விவரமாக எங்களைப்பற்றி சொன்னதும் அவர் பேசும்போது சொன்னார். நண்பர்களே! இன்றுமுதல் இந்த தார்வார் வட்டாரத்தின் கீழ் கோயம்புத்தூர் அலுவலகமும் இணைகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த விரிவாக்கப்பட்ட வட்டார அலுவலகத்தில்,வட்டார மேலாளராக
நான் பணி ஏற்கும் நாளிலேயே உங்களை சந்திப்பது எனக்கு மிக்க
மகிழ்ச்சி.நானும் உங்களைப் போல் வெகுதூரத்தில்(பஞ்சாப் மாநிலம்)
இருந்து வந்திருக்கிறேன். முதலில் டில்லியில் பணிபுரிந்துவிட்டு,பின் கோயம்புத்தூர் சென்றுவிட்டு இங்கு பணிபுரிய வந்திருக்கிறேன்.பணியில் உங்களுக்கு முன்பு சேர்ந்ததால் வட்டார மேலாளராக இருக்கிறேனே
தவிர நானும் உங்களில் ஒருவன் தான்.

நீங்கள் எந்த கஷ்டத்தையும் பிரச்சினையும் என்னிடம் உங்களுடைய
மூத்த சகோதரனிடம் சொல்வதுபோல் எந்த நேரத்திலும் சொல்லலாம்.
நான் உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், தலைமையகம் நமது வட்டாரத்துக்கு இட்ட பணியை செவ்வனவே நிறைவேற்ற உங்களிடமிருந்து முழு ஒத்துழைப்பையும்
எதிர்பார்க்கிறேன்.

நாம் அனைவரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும், வெவ்வேறு மொழியை பேசினாலும் நமது குறிக்கோள், தரமான
வீரிய விதைகளுக்கு சான்றிதழ் தந்து, வேளாண் பெருங்குடி
மக்களுக்கு உதவுவதே.

இதில் யாரேனும் சுணக்கமாக இருந்தாலும், நேர்மையாக இல்லாவிட்டாலும் நான் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்
என்று எச்சரிக்கிறேன். நான் எந்த நேரத்திலும் உங்கள் இருப்பிடத்திற்கு வருவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

பிறகு Accounts Department ல் இருந்த அலுவலரைக் கூப்பிட்டு,
ஏன் இவர்களை அனாவசியமாக ஒவ்வொருமாதமும் இங்கு சம்பளம்
தர வரவழைக்கிறீர்கள்? சம்பளத்தை வரைவு காசோலை (Demand Draft)
மூலம் அனுப்பலாமே?  என்றார்.

அதற்கு அந்த அலுவலர் இவர்கள் யாருக்குமே வங்கியில் கணக்கு
இல்லை. எனவே தான் இந்த முறையை கடைபிடித்து வருகிறோம்.
மேலும் இவர்கள் வரும் நாளை வீணாக்காமல் மாதாந்திர கூட்டமும் நடத்துகிறோம். என்றார்.

உடனே திரு மோகன் அவர்கள் அந்த அலுவலரிடம், ‘இனி அடுத்த
மாதம் முதல் இவர்களுக்கு சம்பள பணத்தை வரைவு காசோலை
எடுத்து அனுப்பிவிடுங்கள். இதனால் இவர்கள் இங்கு வந்து நேரத்தை
வீணடிக்க வேண்டியதில்லை. அதோடு நமது நிறுவனத்திற்கும்
பயணப்படி போன்ற செலவுகள் குறையும். எப்போது கூட்டம் நடத்த வேண்டுமோ அப்போது நடத்திக்கொள்ளலாம். மாதாமாதம்
நடத்தவேண்டிய அவசியமில்லை.என்ற அதிரடி ஆணையையும் பிறப்பித்தார்.

பிறகு எங்களைப் பார்த்து, ‘நமது நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட்
வங்கியில் கணக்கு இருப்பதால் எல்லோரும் ஊர் திரும்பியதும்
உடனேஅந்த வங்கியிலேயே கணக்கைத் தொடங்கிவிடுங்கள். இனி சம்பளம்வாங்க இங்கு வரத் தேவையில்லை.என்றார்.

எங்களையெல்லாம்சிறப்பாக பணிபுரிய வாழ்த்திவிட்டு கூட்டத்தை முடித்து வைத்தார்.

பின் மதிய உணவுக்கும் (அவரது செலவிலேயே) ஏற்பாடு செய்து
இருந்தார்.

(மன்னார்குடியில் மாவட்ட வேளாண் அலுவலர் நடத்திய
கூட்டத்தையும், தார்வாரில் NSC வட்டார மேலாளர் நடத்திய
கூட்டத்தையும் அந்த நேரத்தில் என்னால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.)

மதிய உணவுக்குப் பின் திரு மோகன் அவர்களது அறைக்கு
தயக்கத்தோடு சென்றேன்.


தொடரும் 

14 கருத்துகள்:

  1. சிலர் இப்படி!சிலர் அப்படி!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!‘

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10 மே, 2012 அன்று AM 12:51

    தயக்கத்துடன் அறைக்குச் சென்றேன். அப்புறம் என்ன? ஆவலுடன்....
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. Wow… You are amazing. How could you remember all the single details? Once I met my batch mate at a train station, just after 3 years. I was so ashamed that I could not even recall his name. You remember like an elephant. Thanks.

    Packirisamy N

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் உங்களது இரசிப்புக்கும் நன்றி திருT.N.முரளிதரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் உங்களது எதிர்பார்ப்புக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் உங்களது பாராட்டுக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. இதில் யாரேனும் சுணக்கமாக இருந்தாலும், நேர்மையாக இல்லாவிட்டாலும் நான் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்
    என்று எச்சரிக்கிறேன். நான் எந்த நேரத்திலும் உங்கள் இருப்பிடத்திற்கு வருவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார். // பயமுறுத்துவதே உயர் அதிகாரிகளின் மிடுக்கு போலும் தொடருங்கள் .

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! மேலதிகாரிகள் நேர்மையாகவும் நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு உண்மையாக பாடுபடுபவராக இருந்தால் அவர் மிடுக்காய் இருக்கலாம் என நினைக்கிறேன்.அவர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு சிறு பாரத விலாஸ் படம் பார்த்த அனுபவம் .அதிரடி நடவடிக்கைகள் எடுத்த திரு மோகன் பாராட்டுக்குரியவர் .அந்த காலத்திலேயே இதையெல்லாம் சிந்தித்து இருப்பது மெச்சப்பட வேண்டிய ஒன்று . சிலவுகளை குறைக்க இப்போதெல்லாம் video conferencing என்ற முறை கடை பிடிக்க படுகிறேதே ...Flexible yet firm என்பதற்கு எடுத்துகாட்டு திரு மோகன் என்று கருதுகிறேன் . தங்கள் அனுபவங்களின் சுவை கூடி கொண்டே போகிறது ..தொடரும் விறு விறுப்பாக செல்கிறது ...அதிகம் ரசிக்கபடுகிறது என்பதற்கு அத்தாட்சி தமிழ் மணம் பட்டியலில் தர வரிசை எண் ! வாசு ( தற்காலிக வசிப்பிடம் :பெங்களுரு )

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! திரு மோகன் அவர்கள் பற்றிய கருத்து சரியே.

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொன்றையும் மிக அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்.

    திரு. மோஹன் அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரியாகவும், சக ஊழியர்களை மதிப்பவராகவும், அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் குறைப்பவராகவும், நட்புக்கு இலக்கணமாகவும் தோன்றுகிறார்.

    அதே நேரத்தில் நமக்கான கடமைகளை மிகச்சரியாகச் செய்யணும் என்பதிலும் கண்டிப்புடன் இருப்பவர் போலிருக்குது.

    மிகச்சிறப்பான அணுகுமுறை கொண்ட இது போன்ற அதிகாரிகள் அமைய நாமும் மிகவும் கொடுத்துத்தான் வைத்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் திரு மோகன் போன்ற Boss களை பெற்றது எனது பாக்கியம் என்றே சொல்வேன். அந்த நிறுவனத்தில் அவரைப்போல் கண்டிப்பானவரும் கிடையாது. அவரைப்போல் கனிவானவரும் கிடையாது என்பது என் கருத்து.

      நீக்கு