திங்கள், 11 ஜூன், 2012

நினைத்துப் பார்ப்பது ஏன்?


பணி நிறைவு பெற்று 2004 ஆகஸ்ட் திங்களில் சென்னைக்கு
வந்து தங்கிய பிறகு இணையத்தில் உலாவர நேரம்
கிடைத்ததால், அநேக பதிவர்களின் பதிவுகளை படிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. வலைப்பதிவில் எழுதுவோர் அனைவருமே
பல்வேறு துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றவர்களாக
இருப்பதால்,புதிய புதிய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் ஏன் நாமும் நம்முடைய அனுபவங்களை பதிவில்
எழுதக்கூடாது என்று எண்ணினாலும், எப்படி வலைப்பதிவை
ஆரம்பித்து பதிவிடுவது எனத் தெரியாததால்,உடனே அதை
செயலாக்க முடியவில்லை.

பின்பு அதிரை வலைப்பதிவில் நண்பர் திரு மஸ்தூக்கா
அவர்களின்' சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி?'
என்றதொடரைப் படித்ததும் தைரியமாக நினைத்துப்பார்க்கிறேன் 
என்றதொடரை 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள்
தொடங்கினேன்.(அவருக்கு திரும்பவும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்)

கடந்த மூன்றரை ஆண்டுகள் காலமாக எனது வாழ்வில் நடந்த
நிகழ்வுகளை நினைவுகள்’  மற்றும் நிகழ்வுகள் என்ற
தலைப்புகளிலும், இடையிடையே எனக்குபிடித்த கவிதைகள்
மற்றும் செய்திகளை வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிட்டு வந்திருக்கிறேன்.

ஒரு சிலருக்கு எனது பதிவுகள் சலிப்பை தந்திருக்கலாம். நான்
எனது பதிவில் சுய புராணம் படிக்கிறேன் என்று கூட அவர்கள்
நினைத்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் வலைப்பதிவில்
எழுதத் தொடங்கியபின், எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்தனர்
என்பதும் அவர்கள் கொடுக்கின்ற ஊக்கங்களும் பாராட்டுகளும்
என்னை மேலும் எழுத தூண்டுகிறது என்பதும் உண்மை.

நான் பதிவில் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்கு என்று பொய்
சொல்ல விரும்பவில்லை. வேறொரு முக்கிய காரணம் உண்டு.
அது வெறும் சுய நலம் சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கவே விரும்புகிறேன்.

முதுமையில் அறிவாற்றல் சார்ந்த செயல்களான
(Intellectual activities),புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு(Social connections) கொண்டிருப்பது போன்றவை
முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை
தடுக்கும் அல்லது குறைக்குமாம்.

ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய  மொழியைக்
கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) 
வைத்துக் கொள்ள உதவுமாம்.

பணியில் சுறுசுறுப்பாக இருந்தது போல,இப்போதும் சுறுசுறுப்பாக
இருக்க விரும்புவதால் பதிவில் எழுதுகிறேன். மற்றபடி புகழ்
பெற அல்லது பாராட்டு பெற அல்ல.

பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து எழுதும்போது,
மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்ட(Activate) படுவதால்
அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும் அதனால்
முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது 
என்பதும் உண்மை.

இறுதியாக முடிக்கு முன்: இது எனது 200 ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்து
நினைத்துப் பார்த்துஎழுத இருக்கிறேன் உங்கள் ஆதரவோடு!




23 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஐயா 200-ஆவது பதிவிற்கு ., தொடருங்கள் தொடர்கிறோம் ..!

    பதிலளிநீக்கு
  2. Best wishes Sir. Pls continue, I am a regular reader and enjoy your style of writting.
    With thanks
    R.Ravichandran

    பதிலளிநீக்கு
  3. Best wishes Sir. Pls continue, I am a regular reader and enjoy your style of writting.
    With thanks
    R.Ravichandran

    பதிலளிநீக்கு
  4. //முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை
    தடுக்கும் அல்லது குறைக்குமாம்.//

    இதே காரணத்திற்காகத்தான் நானும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன், நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ பதிவின் நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், வாழ்த்துக்கும், எனது பதிவை தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி திரு R. இரவிச்சந்திரன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும்,எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் எழுத்தை சுயபுராணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே கொண்டாலும், சுயபுராணம் பாடாதவர்கள் எவர் இங்கு? உங்களின் அனுபவங்களை நீங்கள் விரிவாகப் பகிர்வதால் அதிலிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கான விஷயங்கள் ஏதேனுமொன்று நிச்சயம் இருக்கும். ஆகவே அவை பயனுள்ளவையே. முதுமை என்ற விஷயத்தையே நினைவில் கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள். நான்லாம் மனசுல இப்பவும் 24ஐக் கடந்து வரலை, தெரியுமோ? அப்புறம்... 200 என்ன 2 ஆயிரத்திற்கும் மேல நீங்க அடிச்சு ஆடுவீங்க. நாங்க கூட இருந்து பாப்போம். அதுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும்,கருத்துக்கும்,
    வாழ்த்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!

    நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  10. 200 விரைவில் 2000 ஆக வாழ்த்துகள்.நினைத்துப் பாருங்கள்.நாங்கள் படித்து ரசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. சகோதரா தங்கள் 200வது படைப்பிற்கு நல்வாழ்த்து. எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள்.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  13. சகோதரர் கணேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். தங்கள் இடுகைகள் தங்களுக்கு சுயபுராணமாக இருக்கலாம் ஆனால் வாசகர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்தது. தங்களின் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்துவரும் ஏராளமான வாசர்களில் நானும் ஒருவன்.
    தங்கள் முதல் பதிவிலும் நன்றியுடன் எம்மை நினைவு கூர்ந்தீர்கள். இப்போது வெற்றிகரமான தங்கள் 200 ஆவது பதிவிலும் எம்மை மறக்காமல் நன்றியுடன் நினைவு கூர்ந்த தங்களின் உயர்ந்த நாகரிகத்துக்கும், மேலான பண்பாட்டுக்கும் நான் தான் தங்களுக்கு நன்றி கூறவேண்டும் அய்யா!
    தமிழ் இணைய உலகின் அரிச்சுவடி மட்டுமே அறிந்த நான் எனது ஆரம்ப கால சிற்றறிவைக் கொண்டு எழுதிய 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? என்னும் கட்டுரை தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் அறிஞரை அறிமுகம் செய்து 200 அற்புதமான பதிவுகளை இடச்செய்திருக்கின்றதென்றால் கட்டுரை எழுதியதற்கான பலன் எனக்குக் கிடைத்துவிட்டது இது போதும் அய்யா! தங்கள் பதிவுகள் மென்மேலும் தொடர தங்களின் வாசகர்ளுடன் நானும் சேர்ந்து வாத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும்,வாழ்த்துக்கும்,எனது பதிவை தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களே!

    200 ஆவது பதிவில் மட்டுமல்ல ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் தங்களை நினைத்துக்கொண்டு தான் எழுதுகின்றேன்.

    இது நான் தங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் என் நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  16. Your style of writing can be compared to the flow of a silent and tranquil river. Your reminiscences are well received. I agree with your views. An idle mind is a devils workshop .
    Continue writing .

    Vasudevan

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  18. அன்பின் நடன சபாபதி - 200வது பதிவு அருமை - மஸ்தூக்காவிற்கு நன்றி கூறுவது பல இடங்களில் பார்த்து விட்டேன் - தங்களின் நற்குணத்தைக் காட்டுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே! திரு மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றி கூற மறந்தால் நான் நன்றி கெட்டவன் ஆவேன்.நன்றி மறப்பது நன்றல்ல அல்லவா?

      நீக்கு
  19. ஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவுமாம்.

    நல்லதொரு விடயத்தை தந்தமைக்கு நன்றி
    200 வது பதிவுக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! ஏற்கனவே 381 பதிவுகளை தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் வெளியிட்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. நண்பரே எனக்கு தெரியும் ஐயா ஜியெம்பி அவர்களின் பதிவில் தாங்கள் கொடுத்த பின்னூட்டத்தில் கிடைத்த இணைப்பின் வழியே வந்தேன் இது பழைய பதிவு 80ம் தெரியும் நன்றி.

      நீக்கு
    3. நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு