செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 12



வங்கியில் கள அலுவலராக பணியாற்றியபோது
வாடிக்கையாளர்களோடு ஏற்பட்ட அனுபவம் எனக்கு நிறைய
பாடத்தைக் கற்றுத்தந்தது என்றாலும், கிளையின் மேலாளராக பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவம் அதைவிட அதிகமான
அளவுக்கு பாடத்தை சொல்லிக்கொடுத்தது என்பதுதான் உண்மை.  

அப்போது நான் சென்னையில் உள்ள ஒரு கிளையில்
சார்பு மேலாளராக (Sub Manager) பணியாற்றிக்கொண்டு இருந்தேன்.
ஒரு நாள் எங்கள் மண்டலத்தின் உதவிப் பொது மேலாளர்
தொலைபேசியில் என்னை கூப்பிட்டு, உங்களை ஒரு மாவட்டத்
தலைநகரில் உள்ள ஒரு கிளைக்கு மேலாளராக மாற்றல் செய்ய இருக்கிறோம். மேலாளராக செல்ல விருப்பமா?’ எனக் கேட்டார்.
வங்கிக் கிளைக்கு, அதுவும் மாவட்டத் தலைநகரில் உள்ள கிளை
என்றதும் சற்றும் யோசிக்காமல் உடனே சரி.என சொல்லிவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து எனக்கு தலைமை அலுவலகத்திலிருந்து
மாற்றல் ஆணை வந்தபோதுதான் தெரிந்தது. நான்
பணியாற்றவேண்டியை கிளை, எனது மாவட்டத்தின் தலைநகரில்
தான் என்று. படித்து முடித்து 14 ஆண்டுகள் வேறு மாநிலங்களிலும், தமிழகத்தின் வேறு மாவட்டங்களிலும் பணியாற்றிய பின், நான் கேட்காமலேயே எனது மாவட்டத்தில் பணி ஆற்ற வாய்ப்பு
கிடைத்ததால் எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

வங்கி குறிப்பிட்ட கடைசி நாளுக்கு முன்பாகவே சென்று அந்த
கிளையில் சேர்ந்து, அங்கிருந்த மேலாளரை விடுவித்தேன். அந்த
கிளை ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆறுமாதங்கள் தான் ஆகி இருந்தது.
அந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கிளையும் அதுதான்.
மாவட்டத்தில் வேறு கிளைகள் இல்லாததால் அருகில் உள்ள 
கிளைகள் என்றால் திருச்சிக்கும் சென்னைக்கும் தான் 
செல்லவேண்டும்.

பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் வங்கியின் பெயரே புதிதாய் இருந்ததால் வங்கியை அறிமுகப்படுத்தவே எனக்கு முன்பு இருந்த
மேலாளர் சிரமப்பட்டிருந்தார்.அவர் கேரளாவை சேர்ந்தவரானாலும்  
அவரால் முடிந்த அளவுக்கு கிளையை பிரபலப்படுத்தி  நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வந்திருந்தார்.

இருந்தாலும் செய்யவேண்டிய பணிகள் அதிகம் என்பது அங்கு
சென்றதும் தான் தெரிந்தது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் வங்கி வாடிக்கையாளர்களை சந்தித்து 
அறிமுகப்படுத்திக்கொண்டேன். 

நானும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்ததும் 
அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதற்குப் பிறகு 
ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் வங்கியில் 
வாடிக்கையாளராக இல்லாதவர்களையும் சந்தித்து எங்கள் 
வங்கி பற்றி எடுத்துச் சொல்லி எங்களிடமும் கணக்கு 
துவங்க கேட்டுக்கொண்டேன்.

எனது முயற்சியால் மேலும் பல புதிய வாடிக்கையாளர்கள் 
வங்கிக்கு கிடைத்தனர். அவர்களது மாவட்டத்தை சேர்ந்தவன் 
என்பதாலும் தமிழில் தயக்கமின்றி பேசலாமே என்பதாலும் 
கிளைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்  எனது அறைக்கு 
வந்து செல்லாமல் இருப்பதில்லை.  

நானும் இன்முகத்தோடு எல்லோரிடமும் பேசி எனக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் 
இல்லாதவாறு பார்த்துக் கொண்டேன்.

நான் பணியில் சேர்ந்து ஆறு மாதங்களில் வங்கியின் 
வருடாந்திர ஆய்வுக்காக சென்னையிலிருந்து வங்கி 
ஆய்வாளர்கள் வந்திருந்தனர். கிளையில் ஆய்வு நடக்கும்போது 
கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களில் சிலரை அவர்கள் 
விருப்பப்படி (at random)தேர்ந்தெடுத்து அவர்கள் இருப்பிடம் 
சென்று அவர்கள் வாங்கிய கடனை சரியாக பயன்படுத்தி 
இருக்கிறார்களா என ஆய்வு செய்வார்கள்.

பண்டங்கள் (Goods) மேல் மிகைப்பற்று (Overdraft) பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் கிட்டங்கி (Godown) க்கு சென்று வாங்கிய
தொகையின் மதிப்புக்குமேல் இருப்பு உள்ளதா என ஆய்வு
செய்வதுண்டு.

அவ்வாறு ஆய்வு செய்ய, உரங்களை சில்லறை விற்பனை
(Retail) செய்துவந்த ஒரு வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து
அவரது அங்காடிக்கு செல்ல விரும்பினார் வங்கிக்கு வந்திருந்த
அந்த ஆய்வுக்குழுவின் தலைவர். அவர் தேர்ந்தெடுத்த அந்த
வாடிக்கையாளர் அவரது கிட்டங்கியில் உள்ள உரங்கள் இருப்பின்
மேல் எங்கள் கிளையில் மிகைப்பற்று பெற்றிருந்தார். அவருடன்
நானும் சென்றிருந்தேன்.

நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அந்த
வாடிக்கையாளர் என்னையும், வங்கி ஆய்வாளரையும் மகிழ்வோடு
வரவேற்று அவரது கிட்டங்கிக்கு அழைத்து சென்று அங்குள்ள
இருப்பை சரிபார்க்க உதவினார்.

இருப்பை சரி பார்த்துக்கொண்டே ஆய்வுக்கு வந்திருந்த அலுவலர்
அந்த வாடிக்கையாளர் பற்றியும் அவர் எவ்வளவு மிகைப்பற்று
பெற்றுள்ளார் என்பது போன்ற விவரங்களை பற்றிக் கேட்க 
நானும் பதில்சொன்னேன்.

ஆய்வுக்கு வந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் எங்களது
உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்தது.அதைக் கேட்டுக்கொண்டு
இருந்த அந்த வாடிக்கையாளரின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு,
என்னவோ தெரியவில்லை திடீரென மறைந்து போய்விட்டது.

நாங்கள் அங்கு சென்றபோது இருந்த கலகலப்பாக பேசிய அவர்,
விடைபெற்றபோது முகத்தில் எந்த வித உணர்ச்சியுமில்லாமல்
தலையை ஆட்டி விடைகொடுத்தார். அதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் நானும் திரும்பினேன்.

தொடரும்

18 கருத்துகள்:

  1. தொடரும் என்றே சொல்லி விட்டீர்கள்! தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும். தொடர்வதற்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  2. நானும் இன்முகத்தோடு எல்லோரிடமும் பேசி எனக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே எந்த இடைவெளியும்
    இல்லாதவாறு பார்த்துக் கொண்டேன்.

    இந்த பண்பு அனைத்து அதிகாரிகளுக்கும் வருவதில்லை. பாராட்டுக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

      நீக்கு
  3. இது போல் யார் இப்போது இருக்கிறார்கள்...?

    தொடர்கிறேன்...
    tm3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. நாங்கள் அங்கு சென்றபோது இருந்த கலகலப்பாக பேசிய அவர்,
    விடைபெற்றபோது முகத்தில் எந்த வித உணர்ச்சியுமில்லாமல்
    தலையை ஆட்டி விடைகொடுத்தார். அதற்கு காரணமறீருவரும் ஆங்கிலத்தில் பேசுவது பற்றி தவறாகக்குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதியிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ‘தொழிற்களம்’ குழு நண்பர்களே!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! நீங்கள் யூகித்தது சரியான என சரி பார்க்க அடுத்த பதிவு வரை தயை செய்து காத்திருங்கள்

    பதிலளிநீக்கு
  7. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அப்பா துறை தான் உங்களதும்...வார இறுதி வாசிப்பு உங்கள் வலை தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ரெவரி அவர்களே! தங்கள் தந்தையும், வங்கித் துறையைச் சேர்ந்தவர் என அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  10. எனக்கும் அதுதான் தோன்றுகிறது. இனிய தமிழில் உரையாடிய நீங்கள் திடீரென்று ஆங்கிலத்துக்கு தாவியது அவமானப்படுத்துவதாக அவர் உணர்ந்திருக்கலாம். உங்களின் அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

      நீக்கு
  11. அன்பின் நடன சபாபதி - ந்ல்லதொரு அனுபவம் - பொதுவாக சொந்த மாவட்டத்தில் தமிழில் பேசிக்கொண்டிருந்தவர்கள் ஆங்கிலத்திற்கு மாறும் போது வாடிக்கையாளர்கள் ஐயப்படுவதுண்டு - அவர்கலூக்குப் புரியும் படி பேசினால் தான் நன்று - என்ன செய்வது - நம்மால் தவிர்க்க இயலாத சூழ்நிலை - ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நம்மைப்போன்று பல மாநிலங்களில் பணியாற்றியவர்கள், நம்மை அறியாமல் நம் மாநிலத்தில் பணியாற்றும்போது பழக்க தோஷம் காரணமாக ஆங்கிலத்தில் பேசிவிடுவது உண்டு. என் செய்ய!

    பதிலளிநீக்கு