திங்கள், 26 நவம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 17



கல்விக்கடனை 72 மாதத் தவணைகளில் திருப்பி செலுத்தலாம்
என்கிறபோது, ஏன் 36 மாதங்களில் கட்டி கடனை முடிக்க
விரும்புகிறீர்கள்?’ என அந்த  கல்விக் கடன் பெற்றிருந்த இளம் பொறியாளரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சார். உங்கள் வங்கி கடன் தந்திருக்காவிட்டால்,
என்னால் படிப்பை முடித்திருக்கமுடியாது. மேலும் நல்ல
சம்பளத்தோடு கூடிய வேலையும் கிடைத்திருக்காது.

வங்கி உதவியால் பெற்ற படிப்பால் எனக்கு நல்ல
மாத வருமானம் கிடைக்கும்போது, வங்கிதான் நீண்ட கால  
தவணை தருகிறேதே என்று கடனை கட்டாமல்,
கடனாளியாக இருக்க நான் விரும்பவில்லை.

மேலும் நான் சீக்கிரம் கடனை கட்டினால் என்னைப் போன்ற
மற்றைய மாணவர்களுக்கு நீங்கள் மேலும் கடன் தரலாமே
என்பதால்தான் கடனை சீக்கிரம் முடிக்க விரும்புகிறேன்.
என்றார்.

வங்கிக் கடனைபெற்று அதனால் பயன் அடைந்த சிலர்
அந்த கடனையே மறந்துவிடுகின்றபோது உலக அனுபவமே
இல்லாத அந்த இளைஞர் சொன்ன அந்த பதில் உண்மையில்
நான் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் தான், வயதுக்கும்,
அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை என முன்பு
எழுதியிருந்தேன். (கல்விக் கடன் பெற்று அதை ‘மறந்த’வர் பற்றி
அடுத்து எழுத இருக்கிறேன்.)

நான் அவரை அந்த நல்ல எண்ணத்திற்காக பாராட்டிவிட்டு,
நீங்கள் இவ்வாறு முன்கூட்டியே கடனை திருப்பிசெலுத்த
இருப்பது உங்கள் தந்தைக்குத் தெரியுமா?’ எனக் கேட்டேன்.

அப்படி கேட்டதன் காரணம், அந்த கடன் அவர் பேரிலும் மற்றும்
அவரது தந்தை பேரிலும் தான் கொடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் கடன் தரும்போதே அவர் தந்தையிடமும் கடனை
படித்து முடித்து வேலை கிடைத்ததும் 7 ஆண்டுகளில் திருப்பி
செலுத்தலாம் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவர் எனது தந்தையிடம் சொல்லிவிட்டேன்.
“இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நாம் வங்கியில் வாங்கிய
கடனை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை என்னிடம்
இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.அதுவரை நான்
வேலையில் இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள்.” என
சொல்லிவிட்டேன் சார்.

எனது தந்தையும், “அதுதான் சரி. வங்கி, நாம் கேட்டபோது
உடனே கடன் கொடுத்து உதவியது போல, நாமும் நம்மிடம்
பணம் இருக்கும் போது வாங்கிய கடனை திருப்பிக்
கட்டுவதுதான் சரி.” என சொல்லிவிட்டார். என்றார்.

உங்களைப்போல் கடன் பெற்ற பயனாளிகள் எல்லோரும்
நினைத்தால் என்னைப்போல் உள்ள வங்கி மேலாளர்களுக்கு
வாராக்கடன்கள் பற்றிய கவலையே இருக்காது. என்றேன்.

மூன்று வருடங்களில் அந்த கடனை முடிக்க மாதம் எவ்வளவு கட்டவேண்டும் எனக் கணக்கிட்டு வைத்திருந்ததை அவரிடம்
கொடுத்தேன். பின்பு அவர் நன்றி சொல்லி விடைபெற்று
சென்ற பின் சில மணி நேரம் அவரைப் பற்றியே
நினைத்துக்கொண்டு இருந்தேன்.

அந்த இளம் வயதில் வாங்கிய கடனை உடனே
அடைக்கவேண்டும் என்று நினைக்கத் தூண்டியது எது?
கேட்டவுடன் கடன் தந்து உதவிய எங்கள் வங்கியின் செயலா?
அல்லது அவர் இளமையில் கஷ்டப்பட்டு வளர்ந்த
குடும்ப சூழ்நிலை கற்றுத்தந்த பண்பா? என யோசித்தபோது
இரண்டாவது தான் சரியான காரணமாக இருக்கமுடியும்
எனத் தோன்றியது.

அவரது குடும்பத்தில் வறுமை இருந்திருக்கலாம் ஆனால்
அவரது நல்ல எண்ணத்தில் வறுமை இல்லை
என்பது தான் எனது கருத்து.    


தொடரும்

14 கருத்துகள்:

  1. உங்கள் வங்கி மூலம் ஒரு என்ஜீனியரை உருவாக்கி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்து இருக்கிறீர்கள். நாம் சம்பளத்திற்கு வேலை செய்தாலும், இருக்கின்ற வேலையில் சமூக சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவே எண்ணி பணிபுரிந்து இருக்கிறீர்கள். ஏனெனில் உங்களைப் போல மற்றவர்களும் இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. (நானும் உங்களைப் போலவே என்னால் முடிந்ததை பணிக் காலத்தில் செய்தேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தாங்களும் பணி காலத்தில் உதவி செய்தது அறிந்து மகிழ்ச்சி,

      நீக்கு
  2. வங்கி உதவியால் பெற்ற படிப்பால் எனக்கு நல்ல
    மாத வருமானம் கிடைக்கும்போது, வங்கிதான் நீண்ட கால
    தவணை தருகிறேதே என்று கடனை கட்டாமல்,
    கடனாளியாக இருக்க நான் விரும்பவில்லை

    ஆஹா! அற்புதமான வார்த்தைகளின் தொகுப்பு என்றே சொல்லலாம். அருமை அந்த நண்பருக்கும் எனது வாழ்த்துகள்.

    இந்த தொடரை முழுவதும் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது,
    இதோ உங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

    அப்படியே நீங்களும் எங்கள் பக்கம் வந்து போங்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு செம்மலை ஆகாஷ் அவர்களே!

      நீக்கு
  3. என் கருத்தும் அதே தான்... வறுமை, எண்ணத்தில் இல்லாமல் இருந்தால் சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  5. ஒரு முன்னுதாரணம் அவர்.நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

      நீக்கு
  6. குடும்பத்தில் வறுமை இருந்திருக்கலாம் ஆனால்
    நல்ல எண்ணத்தில் வறுமை இல்லை

    உணர்ந்து மகிழத்தக்க அருமையான பண்பான குடும்பத்தினர்...

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

      நீக்கு
  7. அன்பின் நடன சபாபதி - எண்ணத்தில் வறுமை இல்லாத இளைஞரும் அவரது தந்தையும் - நூற்றிலொருவர் - இவரை எல்லாம் எளிதில் மறக்க இயலாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! அவர்களை மறக்க இயலாததால் தான், இன்னும் நினைவுகூர்கிறேன்.

    பதிலளிநீக்கு