ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 11



நண்பர்களில் சிலர் ஏரியில் படகு சவாரி செய்து வருவதாக சொல்லி 
சென்றதும், நாங்கள் அண்ணா பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு அவர்கள் 
வரும் வரையிலும் அங்கே காத்திருக்கலாம் என்று முடிவெடுத்து 
உள்ளே சென்றோம்.

தமிழ அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள இந்த பூங்கா 
நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டத்தான் வேண்டும். 
வகுப்பு தோழர் பேராசிரியர் முனைவர் நாச்சியப்பன் பூச்சியியல் நிபுணர் 
என்றாலும், தற்சமயம் பூச்செடிகள் மற்றும் பழச்செடிகள் வளர்ப்புப் பண்ணை 
(Nursery) வைத்திருப்பதால், படித்த பாடங்களை மறந்துபோன எங்களுக்கு, 
அங்குள்ள எல்லா செடிகளின் பொதுப் பெயர்களையும் (Common Names), 
தாவரப் பெயர்களையும் (Botanical Names) சொல்லி, கல்லூரி நாட்களில் 
கல்விச் சுற்றுலா செல்லும்போது பேராசிரியர்கள் செடிகளைக் காண்பித்து விளக்குவதுபோல் விளக்கி, எங்களை அந்த  நாட்களுக்கே அழைத்து 
சென்றுவிட்டார்!

அங்கு பார்த்த செடிகளில் என்னைக் கவர்ந்தது நடனமாடும் பொம்மைகள் 
(Dancing Dolls) என அழைக்கப்படும் பூக்களை உடைய செடிகள்தான். 
Fuchsia குடும்பத்தை சேர்ந்த இந்த மலர் செடிகளின் வகைகள் மட்டும்  
100 க்கு மேல் உண்டாம்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இவைகள் இந்தியாவில் 
மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இவைகள் உள்ளன. 
இவற்றில் சிலவகை செடிகள் போல் வளர்ந்தாலும் நியூசிலாந்தில் இந்த 
குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் மரம் போல் வளருமாம்.

அண்ணா பூங்காவில் அந்த மலரை நான் எடுத்த புகைப்படம் கீழே. 




வெவ்வேறு வண்ணங்களில் உள்ள மேலும் சில பூக்கள்  கீழே. 
(கூகிளாருக்கு நன்றி)





பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு எல்லோரும் ஓரிடத்தில் கூடினோம். 
நண்பர் நாச்சியப்பன் அப்போது நேரத்தை செலவிட புதிர் போட்டி நடத்த 
இருப்பதாக சொன்னபோது எல்லோரும் அதை உற்சாகத்தோடு 
வரவேற்றோம்.   

எல்லோருக்கும் பொதுவான ஒன்றும், தம்பதியர்களுக்கான ஒன்றும் மற்றும் மளிருக்கான போட்டியும் ஆக மூன்றுவிதமான புதிர் போட்டி நடத்த 
இருப்பதாக சொன்னார். மற்ற நண்பர்கள் வரும் வரையில் காத்திருக்கலாம் 
என்றதால் அனைவரும் அங்கிருந்த புல் தரையில் அம்ர்ந்து 
பேசிக்கொண்டிருந்தோம்.  

மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தபோது திருமதி அய்யம்பெருமாள் 
எடுத்த புகைப்படம் கீழே. 





சில நண்பர்களை நான் எடுத்த புகைப்படம் கீழே.






திருமதி அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படங்கள் கீழே.





 

அங்கிருந்த ஊஞ்சல் சிலருக்கு இளமைக்காலத்தை நினைவூட்டியது போலும். நண்பர்களின் துணைவியர்களில் சிலர் வயதை மறந்து ஊஞ்சலாடியபோது 
திருமதி அய்யம்பெருமாள் எடுத்த படம் கீழே.






எல்லோரும் வந்ததும் அனைவரும் புல் தரையில் அமர்ந்து போட்டியில் 
பங்குபெறத் தயாரோனோம்.

அப்போது திருமதி அய்யம்பெருமாள் எடுத்த புகைப்படம் கீழே.






நண்பர் நாச்சியப்பன்  புதிர் போட்டியை  ஆரம்பிக்குமுன் அதை நடத்த 
தனக்கு உதவியாக இருவர் வேண்டும் என்று கூறி நண்பர் முனைவர் கோவிந்தசாமியையும் என்னையும் அழைத்தார். என்னால் போட்டியில் 
கலந்துகொள்ள முடியவில்லையே  என்று ஆதங்கம் இருந்தாலும், 
நண்பரின் அழைப்பை மீறமுடியுமா என்ன?

முதலில் அனைவருக்கும் பொதுவான போட்டி என சொல்லிவிட்டு அதன் விதிமுறைகளை சொன்னார். மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்படும் என்றும் 
முதலில் யார் விடை தெரியும் என கையைத் தூக்குகிறார்களோ அவர்கள் பதில்சொல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.  

அவரது விடை சரியாக இருந்தால் அவருக்கு 50 ரூபாய் பரிசாகத் தரப்படும். 
அவரது விடை தவறாக இருந்தால் மற்றவர்கள் பதில் சொல்லலாம். ஆனால் 
அவர்கள் சரியாக பதில் சொன்னாலும் பரிசு கிடையாது என்றார்.எனக்கும் 
நண்பர் கோவிந்தசாமிக்கும் கையைத் தூக்குபவர்களில் யார் முதலில் கை 
தூக்கியது என்பதை சொல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டது.

நண்பர் நாச்சியப்பன் கேட்ட 10 கேள்விகளுக்கான பதில் சுலபம் போல் 
தோன்றினாலும் மூன்று கேள்விகளுக்கு மட்டுமே மூவர் சரியாக பதில் 
சொன்னார்கள். எல்லா கேள்விகளை இங்கே எழுதி இதை படிப்போரை 
சிரமப்படுத்த விரும்பாததால் மாதிரிக்கு நான்கு கேள்விகளை மட்டும் 
தருகிறேன்.

1.Peacock இன் முட்டையின் நிறம் என்ன?

2.சதுரங்கப்பலகையில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

3.'காதலெனும் வடிவம் கண்டேன்' என்ற வரிகள் கொண்ட பாட்டு இடம்
பெற்ற திரைப்படம் எது? (இந்த பாடலை அவரே ஒரு பாடகர் என்பதால் 
அந்த பாட்டைப் பாடிவிட்டு கேள்வியைக் கேட்டார்.)

4.கணிதமேதை இராமானுஜம் நோபல் பரிசு பெறாததன் காரணம் 
அ) அவர் இந்தியர் என்பதாலா? 
ஆ) அவரது கண்டுபிடிப்பு பரிசுக்குத் தகுதியில்லை என்பதாலா?   
அல்லது 
இ) அவர் அந்த பரிசு வேண்டாமென்று கூறிவிட்டாரா?

மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். 
விடை தர விரும்புவோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். 

தொடரும்

திங்கள், 23 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 10



அதுவரை சாப்பாட்டைப் பற்றியே நினைக்காமல் இயற்கை அழகை 
இரசித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்த நாங்கள். 
காஃபி போர்டின் அரங்கத்தை அடைந்தவுடன்தான் வயிறென்ற ஒன்று 
இருப்பதும், சாப்பிடவேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தன.

காலையில் எங்களுக்கு தேநீர் தந்த நிறுவனமான Ruchi  
உணவகத்திடமே  மதிய உணவையும் தயார் செய்து அந்த அரங்கத்திற்கு 
கொண்டு வர நண்பர் பழனியப்பனும் வெங்கடராமணனும் ஏற்பாடு
செய்திருந்தார்கள். 

குறித்த நேரத்தில் மதிய உணவை அங்கு கொண்டு வருவதற்காக 
எங்கள் வகுப்பு நண்பர் D.கோவிந்தராஜன் எங்களோடு சுற்றுலாத் 
தலங்களைப் பார்க்க வராமல் அந்த உணவகத்திலேயே தங்கி அவர்கள் 
உணவைத் தயார்செய்து மதியம் நாங்கள் அந்த அரங்கத்திற்கு வருமுன்பே 
அது வந்து சேருமாறு பார்த்துக்கொண்டார். 

அரங்கம் சிறியதாக இருந்ததால் அனைவரும் உட்கார்ந்து 
சாப்பிடமுடியாது என்பதால் எடுத்தூண் (Buffet) முறையில் 
சாப்பிடுவதற்காக உணவு வகைகள் அங்கிருந்த மேசைகள் மேல் 
வைக்கப்பட்டிருந்தன. வெஜிட்டபிள் பிரியாணியுடன் மதிய விருந்து 
தடபுடலாக செய்யப்பட்டிருந்தது.

அசைவம் உண்போருக்கும் அசைவ உணவும் இருந்தது.அனைவரும் 
தட்டுகளில் அவரவர் விரும்பியதை எடுத்துக்கொண்டு கூடிப்பேசியபடி  
நின்றுகொண்டே இரசித்து உணவை சாப்பிட்டு முடித்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே மணி 3 ஆகிவிட்டது. மாலை   
திரும்பவும்  4.30 மணிக்கு அதே அரங்கத்திற்கு திரும்பவும் 
வரவேண்டும் என்பதால் எங்கள் பயண திட்டத்தின் படி எல்லா 
இடங்களையும் பார்க்க முடியாது எனத் தெரிந்துவிட்டது. அதனால் 
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும் அண்ணா பூங்காவிற்கு 
செல்ல மட்டுமே முடிவு செய்தோம்.

நாங்கள் பார்க்க நினைத்த Pagoda Point சென்று வர நேரமில்லை. 
ஏற்காடு ஏரியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர்  தொலைவில் 
இருக்கும் இந்த இடத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இதை 
பக்கோடா முனை என்று சொல்வார்கள். பக்கோடாவிற்கும் இதற்கும் 
சம்பந்தம் இல்லையென்றாலும் தமிழில் Pagodaவை 
சொல்லும்போது அது பக்கோடா ஆகிவிட்டது!

இதை அங்குள்ள மலைவாழ் மக்கள் கருங்கற்களை வைத்து பிரமிட் 
போல் கட்டியதாக சொல்கிறார்கள். இது ஏதோ ஒரு நிகழ்வுக்காக 
கட்டியிருக்கவேண்டும். இங்கிருந்து பார்த்தால் வடக்கே தர்மபுரி 
மாவட்டத்தில் உள்ள ஹரூருக்கு(Harur) செல்லும் பாதையும் 
கிழக்கே ஆத்தூர் செல்லும் சாலையையும் பார்க்கலாம். வானம் மேக 
மூட்டமில்லாமலிருந்தால் அயோதத்தியா பட்டணத்தையும் 
பார்க்கலாம்.

இப்போது அதன் அருகே ஒரு இராமர் கோவிலும் 
கட்டியிருக்கிறார்களாம். இந்த இடத்தை எங்களால் பார்க்கமுடியாமல் 
போனது நேரமின்மையால் தான்.

Pagoda Point இன் படம் கீழே (கூகிளார்க்கு நன்றி.)




அடுத்து நாங்கள் பார்க்கத் தவறியது ஏற்காடு ஏரியிலிருந்து 
3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த  கிளியூர் நீர்வீழ்ச்சி! தமிழில் 
சரியாக சொல்லவேண்டுமென்றால் இதை கிளியூர் அருவி என்றே 
சொல்லவேண்டும். 

ஆனால் நாம் எல்லோரும் Water Falls என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 
நீர்வீழ்ச்சி என்று தவறாக சொல்வதால்,அரசின் தகவல் பலகையில் கூட 
அது கிளியூர் நீர்வீழ்ச்சி என்றே எழுதப்பட்டிருக்கிறது. 



ஏற்காடு செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய அருவி. ஏற்காடு 
ஏரியிலிருந்தும் சேர்வராயன் மலையின் மற்ற பகுதியிலிருந்தும் வரும் 
உபரி நீர் கிளியூர் பள்ளத்தாக்கில் 300 அடி உயரத்திலிருந்து விழுவதால் 
ஏற்படும் அருவி இது.  

இங்கு  குறைந்தது இரண்டு  நாட்களாவது தங்கினால்தான்   
இவைகளையெல்லாம் பார்க்க முடியும். நாங்கள் பார்க்காததை   
நீங்களாவது பாருங்களேன் கூகிளார் உதவியால்.





அண்ணா பூங்காவும் ஏற்காடு ஏரியும் அருகே இருந்ததால் நாங்கள் 
அனைவரும் நடந்தே அருகில் உள்ள அண்ணா பூங்காவை 
அடைந்தோம். எங்களில் சிலர் மட்டும் ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு   
பின் பூங்காவிற்கு வருவதாக  சொல்லிச் சென்றனர். நானும் 
என் துணைவியாரும் முன்பே படகு சவாரி செய்திருந்ததால் பூங்காவிற்கு சென்றுவிட்டு பின்பு வெளியே வரும்போது ஏற்காடு ஏரியை படம் 
எடுக்கலாம் என எண்ணி நேரே மற்ற நண்பர்களோடு பூங்காவினுள் 
நுழைந்தோம். 


தொடரும்

வியாழன், 19 டிசம்பர், 2013

மீண்டும் சந்தித்தோம்! 9



Lady’s Seat ்கு அருகில் இருந்த Gent’s Seat மற்றும் Children’s Seat பார்க்கலாம் 
என எண்ணியபோது அவையும் Lady’s Seat  போன்ற இடங்கள் தான் என்பதால் நேரமின்மை காரணத்தால் அவைகளைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு அருகில் 
இருந்த அரசினர் ரோஜா தோட்டத்திற்கு சென்றோம்.



இந்த தோட்டம் அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ளது. நாங்கள் 
சென்ற சமயம் ரோஜாக்கள் இல்லாத ரோஜாச் செடிகளைத் தான் பார்த்தோம். 
இந்த தோட்டத்தில் உள்ள பச்சை வண்ண ரோஜாவைப் பார்க்கலாம் என்ற 
எண்ணமும் நிறைவேறவில்லை. பச்சை வண்ண  ரோஜாவின் படம் 
உங்களுக்காக கூகிளார் உதவியுடன் கீழே







அதனால் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாததால் தோட்டத்தை ஒரு சுற்று 
சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அதற்குள் நண்பகல் ஆகிவிட்டபடியால் 
மதிய உணவை முடித்துவிட்டு மற்ற இடங்களை பார்க்கலாம் என நண்பர்கள் பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னதால் எங்கள் பேருந்து நின்றிருந்த இடத்திற்கு திரும்பினோம்.

எங்களது மதிய உணவு அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் 
உள்ள அறிஞர் அண்ணா பூங்கா மற்றும் ஏற்காடு ஏரிஅருகே இருந்த 
காபி போர்டின் (Coffee Board) செயல்முறை விளக்க பண்ணை 
(Demonstration Farm) யில் உள்ள முதுநிலை தொடர்பு அலுவலரின் 
(Senior Liaison Officer) அலுவலக கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

இந்த இடத்தில் நிச்சயம் எங்கள் வகுப்புத் தோழர் 
திரு R. பாலசுப்ரமணியத்திற்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். அவரது முயற்சியால் தான் எங்களுக்கு அந்த செயல் விளக்கப் பண்ணையில் 
மதிய உணவு அருந்தவும், இரவு வரை எங்களது கூட்டம் நடத்தவும் முடிந்தது.

காபி போர்டின் செயல்முறை விளக்க பண்ணையில் கூட்டம் நடத்தவும், 
மதிய மற்றும் இரவு உணவை அருந்தவும் தேவையான அனுமதியைப் பெற 
அவர் தஞ்சையிலிருந்து  சேலத்திற்கும் ஏற்காட்டிற்கும் பலமுறை வந்ததாக
நண்பர்கள்  பழனியப்பனும் வெங்கடரமணனும் சொன்னார்கள். அவரது 
பங்களிப்பு மட்டும் இல்லாதிருந்தால், அரங்கம் உள்ள ஏதேனும் ஒரு தங்கும் விடுதியில் தான் எங்களது கூட்டத்தை நடத்தியிருக்க கூடும்.

அரசினர் ரோஜா தோட்டத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் 15 மணித்துளிகள் 
பயணித்து மதியம் 1.30 மணிக்கு அறிஞர் அண்ணா பூங்கா அருகே மஞ்சகுட்டை சாலையில் உள்ள காபி போர்டின் பண்ணையை அடைந்தோம்.

பண்ணையின் வாயிலில் இருந்து நாங்கள் கூட்டம் நடத்த இருந்த அரங்கம் 
வரை இரு மருங்கிலும் இருந்த காஃபி செடிகளின் அழகை இரசித்துக்கொண்டே நடந்தோம். எனக்கு என்னவோ கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே 
இந்த மலைப் பயிர்களான காஃபி, தேயிலை போன்றவைகள் மேல் ஒரு ஈர்ப்பு.

படித்து முடித்ததும் ஏதேனும் ஒரு காஃபி அல்லது தேயிலை தோட்டத்தில் 
மேலாளராக சேரவேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை. ஆனால் 
குளிருக்கு பயந்துகொண்டு நான் அதற்கு முயற்சிக்கவில்லை.

இருப்பினும் விட்ட குறை தோட்ட குறை என்பார்களே அது போல 
வங்கியில் சேர்ந்த பிறகு வங்கியில் கடன் பெற்ற அல்லது கடனுக்கு 
விண்ணப்பித்த மலைத்தோட்ட பண்ணைகளுக்கு பல முறை ஆய்வுக்கு சென்றிருக்கிறேன். தலைமை அலுவலகத்தில் இருந்தபோது காஃபி தோட்ட 
கடன்கள் வழங்கும் துறையிலும் பணியாற்றியிருக்கிறேன். எனவே இந்த மலைப்பயிர்கள் பற்றிய விரிவான பதிவை பின்னர் எழுதலாமேன
இருக்கிறேன்.

எங்களுக்கு இடம் கொடுத்து உதவிய காஃபி போர்டு பற்றி சொல்லிவிட்டு 
மேலே செல்லலாமென நினைக்கிறேன். 1942 ஆம் ஆண்டு இந்திய 
பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டு, இந்தியா அரசின் வணிகம் மற்றும் 
தொழில் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக 
(Autonomous Body) இயங்கி வரும் காஃபி போர்டு, காஃபி பயிர்களை பற்றிய ஆராய்ச்சி,அவைகளின் தரத்தை மேம்படுத்துதல், காஃபியை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலப் படுத்தி சந்தை படுத்துதல் போன்றவைகளில் 
ஈடுபட்டு, காஃபி தொழிலுக்கு ஒரு நண்பனாய் வழிகாட்டியாய் இருந்து 
வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.


காஃபி போர்டினுடைய 50 க்கும் மேற்பட்ட விரிவாக்க செயல் விளக்க 
பண்ணைகளில் ஒன்று தான் ஏற்காட்டில் உள்ள பண்ணை. அந்த பண்ணையில் 
நான் எடுத்த சில புகைப் படங்கள் கீழே.







அங்குள்ள செடிகளில் கொத்துக்கொத்தாய் காய்த்திருந்த காஃபி காய்கள் 
எங்களைப் பறித்துக்கொள் என்று சொல்வது போல் இருந்ததை எனது 
காமிரா மூலம் நான்  பறித்துக்கொண்டவைகள்  கீழே





 



அங்குள்ள நெடிதுயர்ந்த மரமொன்றை பற்றிப்படர்ந்திருந்த மிளகுக் 
கொடியையும் எனது ஒளிப்படக்கருவி படம் பிடிக்க தவறவில்லை.








போகும் வழியில் Fabaceae தாவர குடும்பத்தைச்சேர்ந்த Calliandra 
haematocephala என்ற தாவரத்தையும் பார்த்தோம். இதனுடைய 
பூங்கொத்து (Inflorescence) நாம் முகத்திற்கு பவுடர் பூச உபயோகிக்கும் 
மிகச்‌ சிறிய மெத்தை போன்று இருப்பதால் இதை Powder Puff Plant என 
அழைப்பதுண்டு.

நான் எடுத்த அந்த பூவின் படத்தை  கீழே காணலாம்.





இந்த பூக்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமல்லாமல் சிவப்பு, இளஞ்சிவப்பு ஊதா வண்ணங்களிலும் இருக்கும்.

மற்ற வண்ண பூக்கள் கூகிளிலிருந்து கீழே















வழி நெடுக இயற்கை அழகை இரசித்துக்கொண்டே அங்கிருந்த அரங்கத்தை  அடைந்தோம்.அங்கே எங்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகை இதோ.




அதுவரை கண்களுக்கு விருந்து படைத்து வந்த  நாங்கள், வயிற்றுக்கு 
விருந்து படைக்கவேண்டிய நேரம் வந்ததை அறிந்து உடனே சாப்பிடத் தொடங்கினோம்.


தொடரும்