புதன், 9 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1



எனது கடவுச்சீட்டை 2011 இல் புதுப்பிக்க நான் பட்ட பாடு பற்றி 2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ?  என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.


2011 ஆம் ஆண்டிற்கு பிறகு திரும்பவும் கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை  புதிப்பிக்க வேண்டியிருந்தது எனது மனைவிக்காக. எனது மனைவி மற்றும் மகளின்  கடவுச்சீட்டு  இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்களில் காலாவதி ஆக இருந்ததால் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்பே புதிப்பிக்க விண்ணப்பிக்கலாமே என்று முடிவு செய்தேன்.

ஆனால் சென்ற முறை பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தாலும் இம்முறை அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்பதை பதிவர் திரு செந்தில்குமார் அவர்கள் அவரது உறவுகள் என்ற வலைப்பதிவில் 2012 ஆம் ஆண்டு ஜூலை 26 இல் பாஸ்போர்ட் -புதிய முறை-அருமை  என்ற தலைப்பில் எழுதியிருந்த பதிவு நம்பிக்கையைத் தந்தது.

இருப்பினும் அந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டிருந்த முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் ‘’நம்பவே முடியலீங்க.’’ எனக் குறிப்பிட்டிருந்ததைப்போல  நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் நேற்று வரை. Seeing is believing என்ற சொற்றொடரின் பொருளை அறிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டாமா? அதனால் தான் இந்த பதிவு.
  
திரு செந்தில்குமார் அவர்கள் தெரிவித்திருந்தது போல On line இல் கடவுச்சீட்டின் மறுபதிப்புக்கு(Re-issue) விண்ணப்பிப்பது மிகவும் சுலபம். நாம் எந்த தரகரையும் அணுகத் தேவையில்லை. இணையத்தில்  http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை சொடுக்கினால் மய்ய அரசின் வெளியுறவுத்துறையின் கீழ் உள்ள தூதரக, கடவுச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டு(Visa) பிரிவின் Passport Seva என்ற தலைப்பில் இணையதளம் வரும். அதில் Login to file your application online என்ற இடத்தில் Register Now என்பதை சொடுக்கி நாம் ஒரு புதிய கணக்கைத் துவங்க வேண்டும்.

பிறகு Fresh/Reissue of Passport என்பதின் கீழ் உள்ள e-form submission(Recommended) என்பதில் நுழைந்து அதில் தரப்பட்டுள்ளபடி e-form ஐ பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து validate & save எனபதை அழுத்தினால் அது XML கோப்பாக கிடைக்கும் அது பின்பு பதிவேற்றம் (Upload)  செய்ய உதவும். பின்பு Register என்பதை அழுத்தி நமது கடவுச்சொல்லை(Password) கொடுத்து உள்ளே நுழைந்து, XML கோப்பாக உள்ள விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவேண்டும்.

அதற்கு முன்பு நமது பழைய கடவுச்சீட்டின் முதல் இரண்டு பக்கங்கள் மற்றும் கடைசி இரண்டு பக்கங்கள் ஆகியவைகளையும் பங்கீட்டு அட்டையின்  (Ration card) முன் மற்றும் பின் அட்டையில் உள்ளவைகளையும் படி(Copy)எடுத்து அதில் கையொப்பம் இட்டு அவைகளை Scan செய்து PDF கோப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும்போது மேற்குறிப்பிட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

பிறகு Pay and schedule appointment என்பதை அழுத்தி விண்ணப்ப தொகையை Debit/Credit Card மூலம் செலுத்தவேண்டும். விண்ணப்பத்தொகை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு, கடவுச்சீட்டு காலாவதி ஆகாதிருந்தால்,  36 பக்கங்கள் கொண்ட புத்தகத்திற்கு ரூபாய் 1500 (60 பக்கங்களுக்கு ரூபாய் 2000) இதுவே Thatkal விண்ணப்பமாயிருந்தால் முறையே ரூபாய் 3500 மற்றும் 4000 ஆகும். மேலும் Credit Card மூலம் பணம் செலுத்தும்போது வங்கிகட்டணமாக ரூ.25.35 யும் சேர்த்து ரூ.1525.35 செலுத்தவேண்டும்.

நாம் பணத்தை செலுத்தியதும் எந்த தேதியில் Passport Seva Kendra செல்லலாம் என வரும். பிறகு நமக்கு அருகில் உள்ள Passport Seva Kendra  எது என்பதை கண்டறிந்து (சென்னையில் சாலிகிராமம் அமிஞ்சிக்கரை தாம்பரம் ஆகிய இடங்களில் PSK உள்ளது.)அதை தேர்வு செய்தால் நமக்கு நேரத்தை ஒதுக்கி விண்ணப்ப எண்ணுடன் கூடிய இரசீது வரும். அதை நாம் படி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  
குறிப்பிட்ட நாளன்று  Online மூலம் கிடைத்த விண்ணப்ப படிவ இரசீதோடு, நாம் பதிவேற்றம் செய்த ஆவணங்களின் மூலப்படிவம் (Original) மற்றும் கையொப்பமிட்ட அவைகளின் படிகளையும் எடுத்துக்கொண்டு Passport Seva Kendra  செல்லவேண்டும்.

23-03-2014 அன்று நான் எங்களது மருமகன் திரு அருண் பிரகாஷ் அவர்களின் உதவியுடன் online இல் விண்ணப்பித்தபோது, எனது மனைவிக்கும் மகளுக்கும் 08-04-2014 தேதியன்று சந்திப்பு முன்பதிவு (Appointment) கிடைத்தது. எங்கள் வீடு அமைந்துள்ள அண்ணா நகர் அமிஞ்சிகரைக்கு அருகே என்பதால், அங்கு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள Navins Presedium கட்டிடத்தில் உள்ள PSK வையே தேர்ந்தெடுத்தேன்.

எனது மகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மதியம் 1 மணி என்றும் 12.45 மணிக்கே முன்னிலை ஆக வேண்டும் என்றும் என் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மதியம் 2 மணி என்றும் 1.45 மணிக்கே முன்னிலை ஆக வேண்டும் என்றும் விண்ணப்ப படிவ இரசீதில் குறிப்பிட்டிருந்தது.

மூத்த குடிமக்களுடன் துணைக்கு ஒருவர் செல்லலாம் என்பதால் என் மனைவிக்கு துணையாக நானும், என் மனைவி மற்றும் மகளோடு நேற்று அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11.௦௦ மணிக்கே PSK  செல்ல மூவரும்  தயாரானோம்.

விண்ணப்ப படிவ இரசீதோடு இருவருடைய கடவுச்சீட்டுகள் மற்றும் இருவருக்கும் ஒரே பங்கீட்டு அட்டை என்பதால் அதையும், அவைகளோடு மேற்கூறிய ஆவணங்களை படி (Copy)எடுத்து அவைகளில் அவர்களது கையொப்பத்தையும் இடச்சொல்லி எடுத்துக்கொண்டேன்.

எனது மகள் முதன் முதல் கடவுச்சீட்டு விண்ணப்பித்தபோது திருமணமாகவில்லை. இப்போது திருமணமாகிவிட்டபடியால் அவளது கணவரின் பெயரையும் இம்முறை சேர்க்க வேண்டியிருந்ததால் மறு பதிப்புக்கு விண்ணப்பிக்கும்போதே திருமணப் பதிவாளர் தந்த திருமணச் சான்றிதழின் படியை பதிவேற்றம் செய்திருந்தோம். அதனால் அந்த சான்றிதழையும் அதன் படியையும் கூடுதலாக அவள் எடுத்துக்கொண்டாள்.

காலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க 11.30 மணிக்கே கிளம்பிவிட்டோம். அங்கு செல்ல ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் போகவேண்டிய இடத்தை சொல்லி மீட்டர் போடுவீர்களா?’  எனக் கேட்டபோது,அந்த ஓட்டுனர் தயங்கினார். உடனே நான் சரி நீங்கள் போங்கள்.நாங்கள் வேறு ஆட்டோவில் போய்க்கொள்ளுகிறோம் என்றதும் அவர் சார் மேலே 10 ரூபாய் போட்டுக்கொடுங்கள் சார். என்றார்.

என் மகளும் பரவாயில்லை அப்பா. 10 ரூபாய் தானே கூட கேட்கிறார். இதிலேயே போகலாம். என்றதும் சரி என்று அதிலேறி புறப்பட்டோம். எதிர்பார்த்த போக்குவரத்து நெரிசல் இல்லாததால், 11.55 மணிக்கே அமிஞ்சிக்கரையில் உள்ள Ampa Skywalk க்கு அடுத்து உள்ள Navins Presedium கட்டிடத்தில் இயங்கும் Passport Seva Kendra வில் அந்த ஒட்டுனர் எங்களை விட்டுவிட்டார்.

தொடரும்

14 கருத்துகள்:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பதிவிற்கு நன்றி! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  2. என்னென்ன சிரமங்கள் என்பதை அறிய காத்திருக்கிறேன்...

    பழனி கந்தசாமி ஐயாவிற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. ஓ, சஸ்பென்ஸ், காத்திருக்கிறேன். எனக்கு ஒரு விளம்பரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?

      நீக்கு
  4. நான் வாழ்க்கையில் செல்ல விரும்பாத இடங்கள், சந்திக்க விரும்பாத மனிதர்கள், செய்யக்கூடாத செயல்கள், நினைத்துப்பார்க்க வேண்டாத நினைவுகள் என்று சிலவற்றைக் கொண்டுள்ளேன். இந்தியன் எம்பஸி செல்ல விரும்பாத இடத்தில் முதலிடத்தில் உள்ளது. நுகர்வோர் சேவைக்கு எதிர்மறையில் உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு அவர்கள் சேவை இருக்கும். தங்களது அனுபவம் எப்படியென்று பார்க்கலாம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இப்போது வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு வழங்கும் பணியில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. அனுபவித்து இதை சொல்கிறேன்.

      நீக்கு
  5. தொடர்கிறேன்.

    இந்த பாஸ்போர்ட் தளத்தில் நேரம் தேர்ந்தெடுப்பதில் சில சிக்கல்கள் உண்டு. அடுத்த பதிவு பார்த்த பிறகு என்ன என்று சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! Thatkal முறையை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு PSK க்கும் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் தான் (எடுத்துக்காட்டு:சென்னையில் மதியம் 2.30 மணி) விண்ணப்பிக்க முடியும். Normal முறையில் அவ்வாறு அல்ல என அறிகிறேன். நீங்கள் சொல்லும் சிக்கல் என்னவென்று அறிய காத்திருக்கிறேன்.

      நீக்கு
  6. பயனுள்ள பகிர்வு;தொடருங்கள்;தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  7. எனக்கும் இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும். ஆகவே எனக்காகவே துவக்கப்பட்டதுபோலுள்ளது இந்த தொடர். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! கணினி மூலம் கடவுச்சீட்டு புதுப்பிக்க விண்ணப்பிப்பது ஒரு Hassle free அனுபவம். அதற்குக் காரணம் Passport Seva வின் Customer Friendly அணுகுமுறைதான். நீங்கள் விண்ணப்பிக்கும்போது அதை நிச்சயம் உணருவீர்கள். ஒரே ஒரு வேண்டுகோள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே Passport Seva Kendra விற்கு போகாதீர்கள். ஏனெனில் அங்கு வெளியே நிற்க இடமில்லை. இது பற்றி அடுத்த பதிவில் எழுதியுள்ளேன்.

      நீக்கு