செவ்வாய், 15 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3



A2 Counter க்கு சென்றபோது அங்கிருந்த பெண் ஊழியர் எங்களை 
புன்முறுவலோடு வரவேற்று அமரச் சொன்னபோதே எங்கள் வேலை 
முடிந்துவிட்டது போல உணர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா? 
அது உண்மைதான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதை 
உறுதி செய்தன.

என் மனைவியிடமிருந்த கோப்பையும் Token யும் வாங்கிக்கொண்டு 
 எங்கே உங்கள் Passport ஐயும் மற்ற மூல ஆவணங்களையும் தாருங்கள். 
என்றார் அந்த ஊழியர். அவரிடம் Passport ஐ கொடுத்துவிட்டு, Ration Card ஐ 
உள்ளே எங்கள் மகள் எடுத்துச் சென்றிருப்பதை சொன்னேன். அவர் அதற்கு பரவாயில்லை. வேறு ஏதேனும் முகவரி காட்டும் ஆவணங்கள் இருந்தால் கொடுங்ங்கள் என்றார் அவர்.
  
நல்ல வேளையாக இதுபோல் ஏதேனும் ஏற்படலாம் என எண்ணி 
புறப்படும்போதே என் மனைவியின் Pan Card, Election Commission 
Photo ID card, மற்றும் Adhar Card ஆகியவைகளின் படிகளையும், மூல 
ஆவணங்களையும் (Originals) எடுத்துச் சென்றிருந்தேன். (நாம் தான் முன்
ஜாக்கிரதை முத்தண்ணாவாயிற்றே!)
 
உடனே ஆதார் அட்டையையும் அதனுடைய படியையும் கொடுத்ததும், 
சரி பார்த்துவிட்டு அதனுடைய படியில் (Copy) என் மனைவியை 
கையொப்பமிடச் சொன்னார். அதுபோலவே கடவுச்சீட்டையும்   
கையொப்பமிட்டிருந்த அதனுடைய படியையும் சரி பார்த்துவிட்டு
கையொப்பமிட்டிருந்த (Self Attested) படிகளை என் மனைவியின்  கோப்பில்வைத்துவிட்டு, மூல ஆவணங்களைத் திருப்பிக் 
கொடுத்துவிட்டார்.

பிறகு கடவுச்சீட்டில் பதிவாக இருக்கின்ற நம்மைப் பற்றிய தகவல்களை 
நம் முன்னே உள்ளே கணினியில் பார்க்க சொல்லி அவைகள் சரிதானா 
என சரி பார்க்க சொன்னார். நான் அவைகளை சரி பார்த்துவிட்டு
சரிதான். என்று சொன்னதும் அவைகளை கணினியில் சேமித்து 
வைத்துவிட்டார்.

பின்பு என் மனைவியை நேரே அமரச்சொல்லி புகைப்படம் எடுத்தார். 
பின் தனித்துவ அடையாளத்தைக் கண்டறிய உதவும் உயிரியளவுகள் 
(Biometrics) செயற்கருவியில்(Instrument) தனித்தனியே வலது மற்றும் 
இடது கைவிரல்களை (கட்டைவிரல் தவிர்த்து) அழுத்தச்சொல்லி 
கைரேகைகளை படம் எடுத்துக்கொண்டார். பின் இரு 
கட்டை விரல்களையும் ஒன்றாக வைக்க சொல்லி அந்த 
கைரேகைகளையும் படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் கடவுச்சீட்டில் இடம் பெறுவதற்காக இரு படிவங்களில் 
கையெழுத்தை போடச்சொல்லிவிட்டு  குறுஞ்செய்தி அனுப்ப 
ரூபாய் 30 தருகிறீர்களா?’ எனக் கேட்டார். ஏன் அப்படி கேட்டார் 
என்பதற்கான காரணம் இதுதான்.

Online இல் விண்ணப்பிக்கும்போது கடவுச்சீட்டை புதிப்பிக்கும் பணி 
எந்த நிலையில் உள்ளதை குறுஞ்செய்தி மூலம் அறியவேண்டுமா என்ற
கேள்விக்கு ஆமாம் பதிலிட்டால் அதற்கான கட்டணமான ரூபாய் 30 ஐ   
Passport Seva Kendra வில் உள்ள Counter இல் கட்டவேண்டும் என 
விண்ணப்ப இரசீதில் குறிப்பிட்டிருக்கும். நாங்கள் குறுஞ்செய்தியில் தகவல் 
அறிய விருப்பம் தெரிவித்திருந்ததால் அவர் அவ்வாறு கேட்டார்.

நான் அந்த தொகையை கொடுத்ததும் என் மனைவியின் கைபேசி 
எண்ணையும் குறித்துக்கொண்டு,நான் கொடுத்த தொகைக்கான இரசீதைக் 
கொடுத்தார். பிறகு என் மனைவியின் கையில் அவரது Token யும் கோப்பையும் கொடுத்து அவ்வளவுதான் நீங்கள் B’ Counter க்கு போங்கள் என 
புன்னகையோடு சொன்னார்.அவரது Counter இல் நாங்கள் செலவிட்ட நேரம் 
வெறும் 10 மணித்துளிகள் மாத்திரமே!

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த அறையில் இருந்த B’ Counter க்கு 
சென்றோம். முதலில் இருந்த Token தரும் Counter லும் A’ Counter லும் 
தனியார் நிறுவன ஊழியர்கள் இருந்தாலும், B மற்றும் C counter களில் 
கடவுச்சீட்டுத் துறையின் அலுவலர்களே இருக்கின்றனர்.

B counter சென்றபோது அங்கு உள்ள இருக்கையில் எங்கள் மகள் அவளது 
முறைக்காக காத்திருப்பதைக் கண்டு விசாரித்தபோது, உணவு 
இடைவேளைக்கு அரசு அலுவலர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தன்னைப்போல் பிறரும் காத்திருப்பதாக சொன்னாள்.

நமக்கு எவ்வளவு நேரமாகுமோ என நினைத்து உட்காரப் போனபோது எதிரே 
உள்ள மின்னணு திரையில் என் மனைவியின் Token ஆன S 29 போகவேண்டிய  
Counter B2 என காட்டியது.

ஆச்சரியத்தோடு, எங்களுக்கு முன் வந்த எங்கள் மகள் அங்கே காத்திருக்க 
நாங்கள் அந்த Counter க்கு சென்றோம். அங்கிருந்த பெண் அலுவலர் முகத்தில் 
எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை. முக்கால்வாசி அரசு ஊழியர்கள் புன்னகையோடு பொது மக்களை வரவேற்று அவர்களுக்கான பணியை   
செய்வது தங்கள் கடமையல்ல என நினைப்பார்கள் போலும்! 
 
மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உணர்ச்சிகளைக் காட்டாத முகங்களை Concrete முகங்கள் என சொன்னது ஏனோ அப்போது நினைவுக்கு 
வந்தது!

அவர் உட்காருங்கள் என சொல்லவில்லை. இருப்பினும் எவ்வளவு நாழிகை 
நிற்பது என எண்ணி  என் மனைவி இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அங்கு 
ஒரு இருக்கைதான் இருந்ததால் என் மனைவி அமர, நான் நின்றுகொண்டேன். 
மூத்த குடிமக்களுடன் துணைக்கு ஒருவர் வரலாமென அவர்களே 
அனுமதித்தும் கூட வருபவர் நிற்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் 
இன்னொரு இருக்கை போடப்படவில்லை போலும்! 

A Counter இல் அந்த தனியார் நிறுவன ஊழியர் எங்களை புன்னகையோடு 
வரவேற்று எங்களை அமரச்சொன்னதை அப்போது என்னால் நினைத்துப் 
பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

அவரிடம் Token யும் கோப்பையும்  கொடுத்ததும், எங்கே உங்கள் 
கடவுச்சீட்டு?’ என்றார்.அதைக் கொடுத்ததும் அதை வாங்கி கோப்பில் உள்ள 
படியோடு சரி பார்த்துவிட்டு கொடுத்தார். பின் ஆதார் அட்டையையும் வாங்கி அதனுடைய படியோடு சரிபார்த்துவிட்டு, அந்த கோப்பில் இருந்த தாளில் என் மனைவியை கையொப்பமிடச் சொன்னார். 

என் மகளிடம் பேனா இருந்ததால் நான் தனியாக வேறொரு பேனா கொண்டு  செல்லவில்லை. அந்த அலுவலரிடம் பேனா இருந்தும் அவர் தரவில்லை. 
நான் உடனே என் மகளிடம் சென்று பேனா வாங்கி வந்து கையொப்பமிடச் சொன்னேன். பிறகு அவர் கையொப்பமிட்டு அந்த கோப்பையும் Token யும் என் மனைவியிடம் கொடுத்து C’ Counter க்கு போகச் சொன்னார்.

அடுத்த அறையில் இருந்த C’ Counter க்கு நாங்கள் போனபோது அது சிறிய 
அறையாக இருந்ததால் உட்காரமுடியாமல் பலர் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சென்று அங்கு நின்ற சில மணித்துளிகளில் அங்கிருந்த மின் திரை 
எனது மனைவியின் Token எண் S 29 போகவேண்டிய Counter C 3 எனக் காட்டியது.

அந்த Counter இல் இருந்த ஆண் அலுவலரும் முகத்தை   
கல்லாக்கிக்கொண்டுதான் அமர்ந்திருந்தார். அங்கும் ஒரு இருக்கைதான். 
என் மனைவி அமர்ந்ததும் B counter இல் செய்தது போலவே 
மூல ஆவணங்களையும் அதனுடைய படிகளையும் சரி பார்த்துவிட்டு 
பழைய கடவுச்சீட்டில் Cancelled என்ற முத்திரையை பதித்து திருப்பிக்
கொடுத்தார். அந்த Token யும் கொடுத்து எதிரே இருந்த ஒரு ஊழியரிடம் 
போக சொன்னார்.

நாங்கள் அவரிடம் சென்றதும் Token எண்ணைப் பார்த்துவிட்டு என் மனைவி 
PSK  வந்ததற்கான ஒப்புகை சீட்டை (Acknowledgement Letter) கொடுத்தார். உடனே அருகில் நின்றிருந்த கடைநிலை ஊழியர் ஒருவர் அந்த Token ஐ 
வாங்கிக்கொண்டு அருகில் இருந்த  கதவைத் திறந்து  வெளியே 
கீழ் தளத்திற்கு செல்லும் வழியைக் காட்டினார்.

நாங்கள் வெளியே வந்தபோது மதியம் மணி 2.21. அதாவது 20 மணித்துளிகளில் எங்களது வேலை முடிந்துவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. 
வெளியே வந்து எங்கள் மகளுக்காக காத்திருந்தோம். அவளும் மதியம் 
2.40 மணிக்கு வந்தாள். முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் 
முன்னுரிமை என்பதால்தான் எங்களுக்கு வேலை விரைவாக முடிந்ததாக 
எங்கள் மகள் சொன்னாள்.

திரும்ப ஆட்டோவில் வரும்போது என் மனைவி மற்றும் மகளின் கைபேசிக்கு 
இரண்டு குறுஞ்செய்திகள் வந்தன. ஒன்றில் Passport Seva Kendra வின் சேவையை உபயோகித்தற்காக நன்றியும், இரண்டாவதில் அவர்களது புதிய 
கடவுச்சீட்டு அச்சிடும் பணி தொடங்கிவிட்டதாகவும் 
சொல்லப்பட்டிருந்தது.

மறுநாள் அதாவது 9 ஆம் தேதி கடவுச்சீட்டு அச்சிடப்பட்டு விட்டதாகவும் 
அதை அனுப்பியபின் தகவல் தெரிவிப்பதாகவும் குறுஞ்செய்தி வந்தது.  
11 ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியில் கடவுச்சீட்டை துரித அஞ்சல் (Speed Post) 
மூலம் அனுப்பியுள்ளதாகவும் அதனுடைய எண்ணையும் கொடுத்திருந்தார்கள். 
12 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை மதியம் புதிய கடவுச்சீட்டு என் 
மனைவிக்கும் மகளுக்கும் அஞ்சல் துறையால் ஒப்படைக்கப்பட்டது. 

செவ்வாயன்று PSK க்குபோய் முன்னிலையாகி மூல ஆவணங்களைக் காட்டி 
வந்த பிறகு ஐந்தாம் நாளன்றே சாதாரண(Normal) முறையில் 
விண்ணப்பித்ததற்கே கடவுச்சீட்டு வீட்டிற்கு வருகிறது என்பது நம்பமுடியாத ஒன்றுதானே.இருப்பினும் இந்த துரித சேவையைத் தரும் Passport Seva Kendra வை எத்தனைமுறை வேண்டுமானாலும் பாராட்டலாம். இதுபோல் அரசின் 
மற்ற துறைகளும் செயல் பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். 
அந்த நன்னாள் விரைவில் வரும் என நம்புவோம். 

பின் குறிப்பு: அனுபவப் பட்டதால் சொல்கிறேன். உங்களுக்கு ஒதுக்கப்பட 
நேரத்திற்கு முன்பு PSK செல்லாதீர்கள். அங்கு உட்கார இடம் இல்லை. 
குறுஞ்செய்தி சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அது உங்கள் 
கடவுச்சீட்டின் மறுபதிப்பு நிலை என்ன என்பதை உடனுக்குடன் சொல்லும்.  





14 கருத்துகள்:

  1. உங்களுக்கு ஒதுக்கப்பட நேரத்திற்கு முன்பு PSK செல்லாதீர்கள்.//
    அது நம்மால் (தமிழர்கள்) முடியாதே! எங்கும் எதிலும் முதலில் வர வேண்டும் என்று நினைப்பவர்களாயிற்றே. மும்பை ஏர்போர்ட்டில் விமானம் புறப்பட அரை மணி நேரம் வரையிலும் பயணிகள் வந்து செக்கின் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னால் அப்படி செய்ய முடிந்ததில்லை :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!சொல்கிறேனே தவிர எனக்கும் இரயில் மற்றும் விமானப் பயணத்தின்போது முன்பே செல்லும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த PSK வில் உட்கார இடம் இல்லாத காரணத்தால் முன்பே சென்று படியில் காத்திருக்கவேண்டாம் என்பதற்காக அவ்வாறு எழுதினேன்.

      நீக்கு
  2. உங்கள் அனுபவம் எங்களுக்குபாடம் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  3. GMB ஐயா சொன்னது போல் பலருக்கும் உதவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் மதிப்பெண்களைப்பொறுத்துதான் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு என்று வைத்தால் கொஞ்சமாவது தரமான சேவை கிடைக்க வாய்ப்பு இருக்குமென்று நினைக்கிறேன். தனியார்களுக்கு ஒன்றும் அரசாங்கத்தைவிட அதிகமான சம்பளம் என்று இருக்காது. இருந்தும்,அரசுப் பணியில் ஏன் கடனே என்று சிலர் வேலை செய்கிறார்கள் என்று புரியவில்லை. தாங்கள் கூறியிருக்கும் நிலையாவது பிரச்சனையின்றி தொடர்ந்தால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அரசு ஊழியர்களின் பணி நிரந்தரமானது(!) என்பதால் அவர்கள் பணியில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. மேலும் பணி புரிந்தாலும் பணி புரியாவிட்டாலும் மாதக் கடைசியில் சம்பளம் வருவதும் மற்றொரு காரணம் என நினைக்கிறேன். மேலும் வேலை புரிவோருக்கே சம்பளம் என்பது அரசுப் பணிகளில் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு சில அரசுத் துறைகளில் பணிகள் வேகமாக நடக்கிறது என்பதும் உண்மை. ஆனால் தனியார் துறையில் ஊழியர்களின் நிலை ‘நித்திய காண்டம் பூர்ண ஆயுசு’ என்பது போல் இருப்பதால் அவர்கள் அவ்வாறு இருக்கமுடியாது.

      நீக்கு
  5. கடைசியில் சொல்லியிருக்கும் தகவல் மிக முக்கியம்தான்;போய்க் காத்திருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நாம் அங்கு முன்னிலையாக வேண்டிய நேரம் கொடுத்திருக்கும்போது வீணே அங்கு முன்பே போய் மாடிப்படியில் காத்திருக்கவேண்டாம் என்பதே எனது கருத்து.

      நீக்கு
  6. நல்ல அனுபவம். சுவையாக விவரித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  7. நல்ல அனுபவம் தான்.

    நான் முதல் பதிவில் சொன்ன விஷயம்: இணையத்தில் தத்கால் முறையில் முன்பதிவு செய்யும் போது, நமக்கான நேரத்தினை தேர்ந்தெடுக்க இவர்கள் தரும் சமயம் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் மட்டுமே.... தில்லியில் மாலை 06.00 முதல் 06.10 வரை. இந்த நேரத்திற்குள் வேண்டிய நேரத்தினைப் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.....

    நல்ல முன்னேற்றம், இன்னும் நன்றாக வரும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
      தட்கல் முறையில் ஏற்கனவே நான் சொல்லியபடி குறிப்பிட்ட நேரத்தில் தான் விண்ணப்பிக்கமுடியும் என்ற குறை உண்டு. ஆனால் சாதாரண (Normal) முறையில் அது இல்லை என்பது எனது அனுபவம்.

      நீக்கு