வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 11



FIR வாங்கி வர அந்த காவல் நிலையத்திற்கு சென்றபோது கிடைத்த 

வரவேற்பு முன்பு கிடைத்ததிலிருந்து மாறுபட்டிருந்ததை என்னால் 

அறியமுடிந்தது. என்னை அழைத்து சென்ற எங்களது வாடிக்கையாளரைக் 

கண்டதும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் முகத்தில் புன்முறுவலோடு 

எழுந்து நின்று வாங்க அண்ணே. வணக்கம்.உட்காருங்கள் என்று 

சொல்லி வரவேற்றார். பிறகு எங்களுக்கு தேநீர் வாங்கித் தந்து 

உபசரித்தார்.

 

நாங்கள் அமர்ந்ததும் என்ன அண்ணே. எப்படி இருக்கிறீர்கள்? எங்கே 

இந்த பக்கமே வரக்காணோமே. என்றார். அதற்கு எங்கள் வாடிக்கையாளர், 

சாரைத் தெரியுமில்லையா? சற்றுமுன் உங்களிடம் தொலைபேசியில் 

சொன்னேன் அல்லவா. இவரது ஒலிப்பேழை இயக்கி திருட்டுப்போனது 

பற்றிய புகாருக்கான FIR தயாராக இருக்கிறதென நீங்கள் சொன்னதால் 

இவரை அழைத்துவந்தேன். என்றார்.

 

சார் தந்த புகாருக்கான FIR படி தயாராக உள்ளது. அதோடு அந்த 

அறிக்கையின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையும் 

உள்ளது. வேலைப் பளு காரணமாக உடனே நடவடிக்கை எடுக்க 

இயலவில்லை. இதோ கொண்டு வந்து தர சொல்கிறேன். என்றார். 

பின் அங்குள்ள தலைமைக் காவலரிடம் அவைகளைக் கொண்டு 

வர சொல்லி என்னிடம் கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லி 

அவைகளை வாங்கிக் கொண்டு இருவரும் திரும்பினோம்.

 

என்னை அழைத்து சென்ற வாடிக்கையாளர் என்னை வங்கியில் 

விட்டுவிட்டு சென்றபின் அந்த முதல் தகவல் அறிக்கையின் 

படியையும் அதன் மேல் எடுக்கப்பட நடவடிக்கையையும் படித்தபோது அதிர்ச்சிக்குள்ளானேன்.

 

அந்த காவல் நிலைய ஆய்வாளர் தந்திருந்த மேல் நடவடிக்கை 

அறிக்கையில் எனது புகாரை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட காவலர் 

சம்பவம் நடந்த இடம் சென்று பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது 

அது போன்ற சம்பவமே நடக்கவில்லையென்று கூறியதாகவும் 

என் மனைவியிடம் விசாரித்தபோது ஒலிப்பேழை இயக்கி எனது 

காரில் பொருத்தப்படவே இல்லையென்றும் கூறியதாலும் எனது 

புகார் முடித்துவைக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அப்போது தான் நினைத்தேன் அந்த அறிக்கையை காவல் 

நிலையத்திலேயே எங்களது வாடிக்கையாளரான முன்னாள் 

காவல் துறை ஆய்வாளார் முன்னால் பார்க்கத் தவறியது எவ்வளவு 

தவறு என்று. ஒரு வேளை பார்த்திருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது. 

ஏனெனில் எனது புகாரின் பேரில் ஏற்கனவே மேல் நடவடிக்கை 

எடுத்து கோப்பை முடித்து விட்டதால் ஒன்றும் செய்யமுடியாது என சொல்லியிருப்பார் அந்த காவல் துறை ஆய்வாளர்.

 

உண்மையில் ஒலிப்பேழை இயக்கி வாங்கிப் பொறுத்தாமல் பொய்யான 

புகாரை நான் கொடுத்திருந்தால் என்னை கூப்பிட்டு விசாரித்து அல்லவா இருக்கவேண்டும்? அப்படி செய்திருந்தால் நான் அதை வாங்கியதற்கான ஆவணங்களை காட்டி நிரூபித்திருப்பேன். ஆனால் அப்படி செய்யாமல் 

மாவட்ட அலுவலகம் மூலம் நான் அழுத்தம் கொடுத்தேன் என்பதற்காக 

எனது புகாரை பொய் புகார் போல ஜோடித்து முடித்துவிட்டார் அந்த 

காவல் நிலைய ஆய்வாளர்.

 

உடனே எங்கள் வாடிக்கையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு 

விவரத்தை சொன்னதும் அவர் சார். புகார் கொடுக்குமுன்பே என்னிடம் சொல்லியிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. இப்போது அவர்கள் 

கோப்பை முடித்து வைத்துவிட்டபடியால் ஒன்றும் செய்ய இயலாது. 

என சொல்லிவிட்டார்.

 

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் உண்மையிலேயே பொருளை 

இழந்து புகார் தந்தால் இதுதான் நடக்கும் என்றால் சாதாரண குடிமகன் 

காவல் நிலையம் சென்றால் என்ன நடக்கும் என்பதை அப்போது   

என்னால் உணர முடிந்தது.பொருளை இழந்தபோதே உதவ வராதவர்கள் 

பணத்தை இழக்காதபோது வரமாட்டார்கள் என்பது தெரிந்ததால்தான் 

என்னை அந்த ஏமாற்றுப்பேர்வழி என்னை ஏமாற்ற நினைத்ததை புகார் 

செய்ய விரும்பவில்லை.

 

அதற்குப் பிறகு என்னை ஏமாற்ற நினத்தவரை பிறகு அடியோடு 

மறந்தேவிட்டேன் சில நாட்களுக்குப் பிறகு திரும்பவும் அதுபோன்ற 

நிகழ்வு ஒன்றை செய்தித்தாளில் படிக்கும் வரை.

 

என்னை ஏமாற்ற நினைத்த அதே நபர் தான் இந்த தடவையும் 

அதே உத்தியை கையாண்டிருக்கிறார் என்பது அந்த செய்தியைப் 

படித்ததும் தெரிந்தது. ஆனால் இந்த தடவை அவர் ஏமாற்றியது 

சாதாரண மனிதரை அல்ல. ஒரு மாவட்ட ஆட்சியாளரை! ஒரு 

மாவட்ட ஆட்சியாளாரையே அந்த நபர் ஏமாற்றியிருக்கிறார் 

என்பதை அறிந்தபோது அந்த ஆள் பலே கில்லாடி தான் 

என புரிந்துகொண்டேன்.

 

என்னிடம் கையாண்ட அதே பாணியைப் பின்பற்றி அந்த மாவட்ட 

ஆட்சியாளரை ஒரு நாள் காலை அழைத்திருக்கிறார் அந்த ஆள்.   

சென்னையிலிருந்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பேசுவதாக 

சொல்லி என்னிடம் சொன்னது போலவே அவரிடம் தனது மைத்துனர் 

பெங்களூரு செல்லும்போது பணம் மற்றும் உடைமைகளை 

தொலைத்துவிட்டதால் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் அவரிடம் 

ரூபாய் 5000 த்தை கொடுக்கும்படியும் காலையில் அலுவலகம் 

சென்றதும் பணத்தை அனுப்பிவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

 

அப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியாளர்களின் மந்தண அறிக்கையை 

(Confidential Report) ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் தான் எழுதுவார். சொல்லப்போனால் அவர்தான் நேரடி Boss போல. எனவே செயலாளரே 

கூப்பிட்டு பணம் தருமாறு சொன்னதும்,பேசுபவர் செயலாளர் போல் 

இருந்ததால் மேற்கொண்டு யோசிக்காமல் தனது உதவியாளரிடம் 

பணத்தைக் கொடுத்து தொலைபேசியில் செயலாளர் சொன்ன 

அடையாளம் உள்ளவரிடம்  சேர்ப்பிக்க சொல்லிவிட்டார்.

 

பின்பு காலையில் தலைமை அலுவலகத்தில் செயலாளரைக் 

கூப்பிட்டு பணம் கொடுத்ததை சொல்லலாம் என தொலைபேசியில் 

தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது செயலாளர் 

சென்னையிலேயே இல்லையென்றும் தன்னை யாரோ செயலாளர் 

குரலில் பேசி ஏமாற்றியிருக்கிறார்கள் என்று.

 

மாவட்ட ஆட்சியாளரிடம் செயலாளர் போல் பேசி ஏமாற்றியதை 

அறிந்ததும் காவல் துறையினர் சும்மா இருப்பார்களா என்ன. 

அவர்களும் தங்கள் வலையை விரித்து காத்திருந்தார்கள் அந்த 

பல குரல் மன்னனை பிடிக்க.

 

இதை அவர்கள் அந்த ஆள் காப்பீட்டு நிறுவன மேலாளரை 

ஏமாற்றியபோதே செய்திருக்கலாம். ஆனால் வழக்கம்போல் 

‘’விசாரித்துக்கொண்டு இருந்ததால் அந்த நபருக்கு துணிவு வந்து 

ஒரு மாவட்ட ஆட்சியாளரிடமே பணத்தை பறித்துவிட்டார்.

 

அந்த நபர் மேற்கொண்டு என்ன செய்தார்? காத்திருங்கள்!   

 

 

 

 

தொடரும்

24 கருத்துகள்:

  1. நம் நாட்டின் நிலை என்றுமே இதுதான் நண்பரே,,, தங்களைப் போன்றவர்களுக்கே இப்படியென்றால் ? சதாரண குடிமக்களின் நிலைப்பாடு எப்படி?
    நண்பரே எனது புதிய பதிவு காணவும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! நம் நாட்டில் அரசியல் கட்சியினரைத் தவிர அனைவருக்கும் இதே நடத்துமுறை தான்.

      நீக்கு
  2. வாங்கும் சம்பளம் எப்படித்தான் இந்த ஜென்மங்களுக்கு செரிக்குதோ? பணபலமும், ஆள்பலமும் இல்லாமல் இருக்கும் மக்கள் தவறு செய்வதற்கு இப்படிப்பட்ட காவல் துறை அதிகாரிகளே பொறுப்பு. இவனே இப்படி இருக்கும்பொழுது தன்னைத்தானே பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. ஏமாற்றுப் பேர்வழி பிடிபட்டானா என்று அறியத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! காவல் துறையை நம்பி பிரயோஜனம் இல்லை. நீங்கள் சொன்னதுபோல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டியதுதான். ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.’ என்பது பழமொழியாயிற்றே. அது பொய்க்குமா என்ன? காத்திருங்கள் நடந்ததை அறிய.

      நீக்கு
  3. அங்கு முறைப்படி எல்லாமே நடந்து இருந்தால் காணாமல் போன பொருளைவிட கைச்செலவு அதிகம் செய்து இருப்பீர்கள். அந்த திருடனை ரொம்ப ரொம்ப நல்லவனாக்கி விட்டார் அந்த காவல் நிலைய ஆய்வாளர். ஏனெனில் இது மாதிரியான அனுபவம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று கதையாக காவல்நிலைய அனுபவம் கிடைத்துள்ளது.
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. எல்லாம் முறைப்படி நடந்திருந்தால் வீண் செலவு தான் ஆயிருக்கும்.

      நீக்கு
  4. ஏமாற்றி பிழைப்பதில் கெட்டிக்காரர்கள் போல! காவல்துறை திருடனுக்குத்தான் காவலாக இருக்கிறது இப்போதெல்லாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  5. எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள்? உண்மையில் இவற்றை ஒரு கலை போலவே பயில்கிறார்கள் போலிருக்கிறது. காவல் துறையின் மெத்தனமிவர்களை இன்னும் ஊக்குவிக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! காவல் துறையின் மெத்தனமே இது போன்ற மோசடிக்காரர்களை ஊக்குவிக்கிறது என்பது சரிதான்.

      நீக்கு
  6. உங்களுடைய இந்த "ஏமாற்றுவதும் ஒரு கலை" தொடர்பதிவை படிக்கும்போது, எனக்கு நடிகர் வடிவேலு சொன்ன ஒரு வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது - "எப்படியெல்லாம் ஏமாத்துராய்ங்க, ரூம் போட்டு யோசிப்பானுங்களோ".

    நாட்டில் இந்த மாதிரி திரியும் ஆட்களை எல்லாம் கல்லால் அடிக்க வேண்டும். முதலில் ஏமாறாமல் இருந்தாலே, ஏமாற்றுபவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! நமது நாட்டு சட்டம் இது போன்றவர்களுக்கு சாதகமாகவே இருப்பதாக நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  7. இந்தியாவிலும் ஏன்இலங்கையிலும் இவை மிக மலிந்துவிட்டன.
    வேறு இடங்களிலும் உண்டு. இது ஒரு தலைவிதி போல என்றே கூறலாம்.
    அனுபவத் தெளிப்பிற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா. இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு
  8. இந்த நிலைக்கு உட்பட்டு வாழ்வதென்றால் வாழுங்கள். இல்லையென்றால் சொர்க்கத்தில் நிறைய இடம் இருக்கிறதாமே, அங்கு சென்று விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும். அதற்கும் நேரம் வரவேண்டுமே!

      நீக்கு
  9. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பதிவு வழி பல விடயங்களை அறியக்கிடைத்துள்ளது படிப்பவர்களுக்குஒரு அனுபவமாக இருக்கும்... நன்றி ஐயா
    த.ம3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு
  10. எப்படியெல்லாம ஏமாற்றுகிறார்கள்...... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  11. இன்றைய 08.09.2014 வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே.... எனது புதிய பதிவு.

    பதிலளிநீக்கு
  12. தகவலுக்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே! திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களும் இதுபற்றி தெரிவித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. ‘’அன்பு நண்பரே வணக்கம் விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்ருக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருது அளித்து கௌரவித்தமைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு