சனி, 10 ஜனவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21

மக்கள் தங்களது பணத்தை கட்டி ஏமாந்த சில திட்டங்கள்... ஏன் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Ponzi Scheme என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு நிறுவனமோ ஏற்கனவே உள்ள முதலீட்டார்களுக்கு அவர்களின் முதலீட்டுக்கான ஆதாயத் தொகையை (Returns) அவர்களது முதலீட்டீன் மூலம் ஈட்டிய இலாபத்திலிருந்து தராமல் புதிய முதலீட்டார்களின் முதலீட்டிலிருந்து தரும் மோசடியான முதலீட்டு திட்டமே பொன்ஃஜி திட்டம் (Ponzi Scheme) ஆகும். அதாவது விதையை விதைத்து பயிர் செய்து விளைச்சலை பெருக்காமல் விதையையே சாப்பிடுவது போல...!

இது போன்ற திட்டங்களை இயக்குபவர்கள்/அறிமுகப்படுத்துபவர்கள் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதாக ஆசை காட்டி புதிய முதலீட்டார்களை கவர்வதில் வல்லவர்கள்.

இவர்களது குறிக்கோளே மற்றவர்களுடைய பணத்தை வைத்து தொழில் செய்வதுதான்.(விளையாடுவதுதான்!) கவர்ச்சிகரமான வட்டியையும், ஆடம்பரமான அலுவலகத்தையும், அங்கு தரும் உபசரிப்பையும், ஆரம்பத்தில் தரும் இலவசத்தையும் பார்த்து ஏமாந்து முதலீடு செய்வோரின் பணம், உண்மையில் ஆக்கவளமுடைய (Productive) தொழில்களில் முதலீடு செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. பெரும்பகுதி தனிப்பட்டோரின் அல்லது நிறுவனத்தின் ஆடம்பர செலவுகளுக்கும், பலன் தரா முதலீடுகளிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் முதலீட்டுக்கான ஈவுத்தொகையை தர முடியும். முதலீட்டார்களின் பணத்தை இம்மாதிரி நிறுவனங்கள் தங்களின் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டாலோ அல்லது உடனே இலாபம் ஈட்டக்கூடிய தொழிலில் முதலீடு செய்யாமல்,ஊக வாணிப நோக்கத்தோடு (Speculative), நில உடமைகள் (Real Estate)போன்றவற்றில் முதலீடு செய்தாலோ முதலீட்டார்களுக்கு ஆண்டுக்கான ஈவுத்தொகையை தர இயலாது. அப்போது அவர்கள் புதிய முதலீட்டார்களின் முதலீட்டைத்தான் ஈவுத் தொகையாகத் தருவார்கள்.

இப்படி புதிய முதலீட்டார்களின் பணத்தை முன்பே முதலீடு செய்பவர்களுக்கு இந்த திட்டங்களில் ஆதாயத் தொகை தருவது தொடர்ந்து நடக்கும் அதாவது புதிய முதலீட்டார்கள் தொடர்ந்து இந்த திட்டங்களில் சேரும் வரை. இது ஒரு தொடர் சங்கிலி போல. எப்போது இந்த சங்கிலி அறுபடுகிறதோ அப்போது தான் சிக்கலே. தொடர்ந்து புதிய முதலீட்டார்கள் சேர்ந்தால் தான் அவர்களது பணத்தை ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு பகிர்ந்து தர இயலும்.

எப்போது அவர்கள் சேருவது நிற்கிறதோ அப்போது அந்த நிறுவனங்கள் திடீரென பணப் பட்டுவாடாவை நிறுத்திவிட்டு தனது நிறுவனத்தை மூடி விடும்.அதனுடைய நிறுவனர்கள் சுலபமாக தப்பி சென்றுவிடுவார்கள். பாவம் அகப்பட்டுக்கொள்வது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் அந்த நிறுவனத்தின் முகவர்களும் தான்.

அது சரி. ஏன் இது பொன்ஃஜி திட்டம் (Ponzi Scheme) என அழைக்கப்படுகிறது தெரியுமா? இது ஒரு காரணப்பெயர். (காரணப்பெயர் என்றால் என்ன என்று இங்கு விளக்கத் தேவையில்லை என எண்ணுகிறேன்)

1920 களில் இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்றழைக்கப்பட்ட Carlo Pietro Giovanni Guglielmo Tebaldo Ponzi, என்ற வணிகர் அமெரிக்காவில் செய்த நம்பிக்கை மோசடி திட்டத்திற்குப் பிறகு இது போன்ற தில்லுமுல்லு திட்டங்கள் Ponzi Scheme என அவர் பெயரிலேயே அழைக்கப்பட்டன.

முன்பே சொன்னது போல் முதலீட்டார்களுக்கு புதிய முதலீட்டார்களின் முதலீட்டிலிருந்து பணம் தரும் மோசடியான முதலீட்டு திட்டத்தின் முன்னோடி அவர்தான் என்பதால் அவர் பெயரால் இது போன்ற திட்டங்கள் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன.

Charles Ponzi யின் புகைப்படம் கீழே (நன்றி கூகிளாருக்கு)


இத்தாலியில் லூகோ என்ற இடத்தில் 1982 இல் பிறந்த Charles Ponzi 1903 இல் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனுக்கு வந்து உணவகங்களில் தட்டுக்களை கழுபவராகவும் மேசைப் பணியாளராகவும் வேலை செய்துவிட்டு பின் நான்கு ஆண்டுகள் கனடாவிற்கு சென்று அங்கு வங்கியில் வேலைபார்த்து, காசோலை மோசடி காரணமாக மூன்று ஆண்டுகள் சிறையிலும் இருந்துவிட்டு அமெரிக்காவிற்கு திரும்பவும் வந்தார்.

அமெரிக்கா வந்தவுடன் அவருக்கு International Reply Coupon என சொல்லப்படுகின்ற அஞ்சல் சீட்டுக்கள் ஸ்பெயின் நாட்டிலிருந்து அவருக்கு கிடைத்தபோது அதை அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றலாம் எனவும் அதில் உள்ள அமைப்பு குறைபாடுகளால் (System weakness) அதிக இலாபம் பெறலாம் எனவும் கண்டுகொண்டார்.

அவைகளை வெளி நாட்டில் வாங்க பணம் தேவைப்பட்டதால் மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதன்படி வெளி நாட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் முக விலையில் (Face value) தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்தார்.

(Arbitrage என்பது இரண்டு சந்தைகளுக்கிடையே (Market) உள்ள விலை வித்தியாசத்தை சாதகமாக்கிக் கொள்வது. அதாவது குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது. ஆனால் சிலசமயம் இது ஆபத்திலும் முடியக்கூடும்.)

ஏன் அவரது திட்டம் தவிடுபொடியாகியது என்பதையும் International Reply Coupon என்றால் என்பதையும் பார்க்கலாம் அடுத்த பதிவில்...

தொடரும்...

26 கருத்துகள்:

  1. மக்கள் மூளை எவ்வாறெல்லாம் வேலை செய்கிறது? ஆச்சரியம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  2. விழிப்புணர்வு தரும் சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  3. எல்லாமே படிக்கப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. மிகவும் பயனாக உள்ள பதிவு. வித்தியாசமான செய்திகளை அறியமுடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  5. நல்ல தகவல்கள் . இந்த ஏமாற்று வேலை இப்போதும் நடந்து கொண்டிருப்பது வேதனை. இதன் மூலம் என்ன என்பதை அறிந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  6. மேலும் விளக்கங்களை அறிய காத்திருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  7. இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் அதிகம் லாபமூட்டும் துறைகள், எனக்குத் தெரிந்தவரை எந்த உருப்படியான பொருளையும் உற்பத்தி செய்யும் தொழில்களல்ல. கள்ளப் பணத்தைக் கொண்டே சில பணக்கார நாடுகள் இயங்குகின்றன. திருடர்கள் அனைவரும் கூடி, இரண்டாம் உலகப்போரின்போது யாரும் சுவிட்சர்லாந்தை ஒன்றும் செய்யக்கூடாது என்று எழுதாத ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர்.
    பொன்ஃஜி திட்டம் எப்படி தோற்றது என்று அறியக் காத்திருக்கிறேன்.
    “பொன்ஜி” , நல்ல தமிழ் பெயராகத்தான் உள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது ஓரளவிற்கு சரி என்றாலும் நேர்மையான முறையில் இலாபம் ஈட்டும் தொழில்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பான்மையோர் குறுகிய காலத்தில் பொருளீட்ட விரும்புவதுதான் பிரச்சினையே.

      நீக்கு
  8. உள்ளூர் ஏமாற்று பேர்வழிகளில் ஆரம்பித்து இப்போது வெளிநாட்டு ஏமாற்று பேர்வழிகளில் தொடர்கிறது. புதிய புதிய சொற்றொடர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
    தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  9. நன்றி அய்யா!
    விழிப்புணர்வை விதைத்துள்ளீர்கள்
    இதுபோன்ற மோசடி விதைகள் வீரியம் இழப்பதற்கு
    இதுபோன்ற அரும் படைப்புக்கள் பெருகி பொங்கட்டும்!
    சிந்தைக்கு விந்தையான மோசடி செயலை வெளிச்சம் போட்டது இந்த சூரியப் பொங்கல் படைப்பு!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  10. பல கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படை விளக்கம் உபயோகமாய் இருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே!

      நீக்கு
  11. Charles Ponzi என்ற ஆசாமி பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கிறார். செய்த வேலைகள் கில்லாடித்தனமாக இருக்கின்றன. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஆளை பார்த்து ஏமாறக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தமிழ் மண வாக்கிற்கு நன்றி!

      நீக்கு
  12. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களும்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  13. பயன் தரும் தொடர் பதிவு! இன்றைய தலைமுறை படிக்க வேண்டும்! நலமா! நண்பரே! முதுமை! முன்போல் எழுத இயலவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! நலமே. முடிந்தவரையில் எழுதுங்கள். அதற்காக உடலை வருத்திக்கொள்ளவேண்டாம்

      நீக்கு