சனி, 28 பிப்ரவரி, 2015

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 24



மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றுபவர்கள் செய்வது சரியென்பது போலவும், தவறு பொது மக்களிடம் தான் இருக்கிறது என்பதுபோலவும் சென்ற பதிவில் நான் எழுதியிருப்பதாக சிலர் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.



உண்மையில் நான் சொல்ல வந்தது வேறு. சில நிறுவனங்கள் வங்கி விதிகள் படியோ அல்லது வேறு உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகவோ கடன்பெறுவதில் கஷ்டம் இருக்குமானால் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகள் (Deposits) பெற்று அதை தங்கள் நிறுவனத்திற்கு உபயோகப்படுத்துவதுண்டு.

அப்போது அவர்கள் அந்த வைப்புக்களுக்கு தரும் வட்டி, வங்கிகள் வைப்புக்களுக்கு தரும் வட்டியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் அப்படி தர முடிவதற்கு காரணம் அவர்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால் தரவேண்டிய வட்டியைவிட பொதுமக்களின் வைப்புக்களுக்கு தரும் வட்டி குறைவாக இருப்பதால் தான்.

எடுத்துக்காட்டாக வங்கியில் ஒரு ஆண்டு வைப்பிற்கான வட்டி 8.5 விழுக்காடும் 5 ஆண்டுகளுக்கான வைப்பிற்கு வட்டி 8 விழுக்காடும் தருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அதே நேரத்தில் அதே வங்கியில் கடனுக்கான வட்டி 12 விழுக்காடிலிருந்து 15 விழுக்காடு வரை இருக்கக்கூடும். வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான இந்த வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடக் கூடும்.

எனவே வங்கியில் 15 விழுக்காடுக்கு கடன் பெறுவதை விட பொது மக்களுக்கு 10 அல்லது 11 விழுக்காடு வட்டி தந்து வைப்புகளைப் பெறும்போது நிறுவனங்களுக்கு வட்டி சுமை குறைகிறது.அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் வங்கிகள் தரும் வட்டியை விட நிறுவனங்கள் தரும் வட்டி அதிகம் என்பதால் தனியார் நிறுவனங்களின் வைப்புத்திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

உண்மையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் தொழில் மேம்பாட்டிற்கே பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று தொழிலை நடத்துகின்றன.அரசின் கொள்கை காரணமாகவோ,பொருளாதார சூழ்நிலை காரணமாகவோ,பழமைப்பட்டுப்போன (Obsolete) தொழில் நுட்பம் காரணமாகவோ, நுகர்வோர்களின் ஆதரவு இல்லாததாலோ அந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் விலைபோகாத போது நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படும்போது பொது மக்களுக்கு அவைகளால் சொன்னபடி தங்களுடைய வாக்குறுதியை காப்பாற்ற முடிவதில்லை.

அந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த நிறுவனத்தில்முதலீடு செய்துள்ள பொதுமக்கள் அந்த நிறுவனத்தை அணுகி தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தைத் திருப்பித் தர கட்டாயப்படுத்தினால், அவர்கள் நிலைமையை சமாளிக்க, புதிதாய் அந்த நிறுவனத்தின் நிதி நிலை அறியாமல் சேருபவர்கள் தரும் பணத்திலிருந்து திருப்பிக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஒரு கட்டத்தில் திரும்பப்பெறுவோரின் எண்ணிக்கை கூடுதலாகவும் புதிதாய் சேருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும்போது தான் பிரச்சினையே ஆரம்பமாகும் என்பதைத்தான் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

பொதுமக்கள் தாங்கள் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனத்தின் பிந்தைய கால செயல்பாடுகள் (Past performance), அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது அதனுடைய நிறுவனத்தை இயக்கும் இயக்குனர்கள் பற்றிய விவரங்கள், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சந்தையில் உள்ள வரவேற்பு மற்றும் அந்த நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவைகள் பற்றி முழுமையாய் அறிந்த பின்னர் முதலீடு செய்தால் முதலீடு செய்த பணம் நல்ல ஆதாயத்தோடு (Returns) திரும்பப் பெறும் வாய்ப்பு உண்டு.

இரவோடு இரவாக மறைந்துபோகும் உரிமையாளர்கள் (Fly by night operators) நடத்தும் நிறுவனங்கள் தருவதாக சொல்லும் கவர்ச்சிகரமான வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தால் ஏமாற்றப்படுவது உறுதி! ஆனால் எல்லோராலும் எது நல்ல நிறுவனம் எனக் கண்டுபிடித்து முதலீடு செய்வது கடினம். எனவே அவர்கள் வங்கிகளில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது.

ஆனால் வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் கூட ஒரே நேரத்தில் சென்று தங்கள் பணத்தைக் கேட்டால் எந்த வங்கியாலும் எல்லோருக்கும் உடனே பணத்தை தர இயலாது. காரணம் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற வாய்ப்புகளை கடன் தேவைப்படுவோருக்கு கடனாக கொடுத்திருப்பார்கள். அந்த பயனாளிகள் பெற்ற கடனை தவணை முறையில் தான் தருவார்கள் என்பதால் வங்கிகளால் அனைத்து வைப்புதாரர்களுக்கும் ஒரே நேரத்தில் திருப்பித்தர இயலாது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தனியார் வங்கியில் வைப்புக்கள் வைத்திருந்த வாடிக்கையாளர்கள், அந்த வங்கியின் நிதி நிலை பற்றி ஒரு சிலரால் பரப்பட்ட தவறான வதந்தியின் காரணமாக தங்களது வைப்புகளை திரும்பப்பெற ஒரே நேரத்தில் வங்கியை அணுகியபோது என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(ஒரு நல்ல நிதி நிறுவனம் முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் தந்த நெருக்கடியால் எப்படி உடைந்துபோனது என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்)

தொடரும்







24 கருத்துகள்:

  1. ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் பதிவு.
    சொல்லப்போனால், பங்குகளில் முதலீடு செய்வது, அதைத் தொடகின்ற வழிமுறைகள் போன்றவற்றில் எனக்கு மிகக் குழப்பமே உள்ளது. தங்களின் பதிவுகள், ஏமாற்றுதல் கலை என கொண்டவரிடத்தில் இருந்து இதைப்படிப்போர் விழிப்புணர்வுடன் இருக்கத் துணைபுரியும் என நினைக்கிறேன்.

    அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    தொடருங்கள் அய்யா!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் ,காத்திருப்பதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

      நீக்கு
  2. நெருக்கடி என்றாலே பிரச்சனை தான்...

    அடுத்த பதிவை ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  3. எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் ஒரு கதையில் இம்மாதிரி வங்கிக் கணக்குகளை உடனே முடிக்கக் கோரி வாடிக்கையாளர்கள் கிளம்புவது திகிலாகச் சொல்லப் பட்டிருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  4. என்னுடைய நீண்ட நாள் நம்பிக்கையை உங்கள் கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது "பணம் சம்பாதிப்பது எளிது, அதைக் காப்பாற்றுவதுதான் கடினம்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  5. சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே!

      நீக்கு
  6. வணக்கம் அய்யா!
    புதிய தகவல்கள்
    புரிந்து கொண்டேன்,
    புற்றீசல் போல் இதுபோன்ற பதிவுகள் பல்கி பெருகிட வேண்டும்!
    சிந்தை தெளிவு பெறவே விருப்பம்!
    நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

      நீக்கு
  7. சாதாரணமக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் உள்ள பதிவு. ஆனால் அதிகமானோர் ஒதுங்கிவிடக்கூடிய சப்ஜக்ட். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பொதுவாக மக்கள் பரபரப்பூட்டும் செய்திகளையே விரும்பிப் படிப்பார்கள். இதுபோன்ற தகவல்களை படிப்போர் குறைவாக இருக்கலாம். இருப்பினும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். இந்த தகவல்கள் ஒரு சிலருக்காவது பயன்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு
  8. இவ்வாறான தங்களது பதிவுகள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் தெரிந்துகொள்ளாத பொருண்மை குறித்து நன்கு விவாதித்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. ''...தங்களது வைப்புகளை திரும்பப்பெற ஒரே நேரத்தில் வங்கியை அணுகியபோது என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன். ...'''
    நல்ல பாடங்கள்...
    சிந்திக்கலாம்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

      நீக்கு
  11. தனியார் நிறுவனங்களில் முதலீட்டு செய்து ஏமாறுவதைப் பற்றி மிகவும் எளிமையாகவும்,விளக்கமாகவும் இருக்கிறது தங்களின் இந்த பதிவு.
    பழைய பதிவையும் சென்று படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவரகளே!

      நீக்கு
  12. முதலீடு சம்பந்தமாக இன்னும் நிறைய கூடுதல் தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!

      நீக்கு
  13. அடேயப்பா இவ்வளவு விடயங்களா ? ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது நண்பரே தொடர்கிறேன்.
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு