புதன், 22 ஏப்ரல், 2015

கசக்கும் உண்மை!



வெண்பாவும் நானும் என்ற தலைப்பில் பிப்ரவரி 15 ஆம் நாளன்று எழுதிய பதிவில் இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலி வெண்பா ஆகியவைகளை எழுதிப் பார்க்கப் போவதாக எழுதியிருந்தேன்.



தொடர்ந்து வெளியூர் செல்ல வேண்டியிருந்ததாலும், மடிக்கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் தொடர்ந்து பதிவில் எழுத இயலவில்லை.

சமீப காலமாக தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து என்னுள் எழுந்த வேதனை காரணமாகவே கசக்கும் உண்மை என்ற தலைப்பில் கீழே தந்துள்ள பஃறொடை வெண்பாவை எழுதியுள்ளேன். ஏனோ தெரியவில்லை ஆரம்பத்திலிருந்தே பஃறொடை வெண்பா தான் எழுத வருகிறது!

சங்க கால புலவரான கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய புறநானூற்றுப் பாடல் அந்த காலத்திற்கு பொருத்தமாயிருந்ததோ என்னவோ, தற்போது அது பொருந்தவில்லை என நினைக்கிறேன் நான். ஏனெனில் அண்டை மாநிலங்களில் கூட நம்மை பகைவர்கள் போலவே பார்க்கிறார்கள்.

முப்பதாண்டுகளுக்கு மேலாக பணியில் இருந்தபோது பல் வேறு மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது யாருமே தமிழர்களை மனதார விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையை நேரடியாக உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் வெளி மாநிலத்தில் பணிபுரியும் தமிழன் எந்த விதத்திலும் யாருக்கும் பணியில் சோடை போகவில்லையென்றாலும் ஏனோ தெரியவில்லை இன்றைக்கும் அவன் வேண்டா விருந்தாளியாகவே அங்கே கருதப்படுகிறான்.
(எனது அனுபவம் பற்றி பின்னர் எழுதுவேன்)

என்னுடைய கருத்து சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். தமிழர்கள் பழகும் விதத்தில் குறை இருப்பதால்தான் இந்த நிலை என்று கூட சொல்லலாம். ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களிடமும் அதே குறை உண்டு அல்லவா?

சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் என்னை பாதித்ததின் விளைவே இந்த வெண்பா.


எந்நாடும் நம்நாடு எல்லோரும் நம்மவரே
என்பதெல்லாம் ஏட்டளவே என்ற றியாமல்
வந்தாரை வாழவைத்து வாழும் தமிழினமே
எல்லோரும் உன்னை விரும்பவில்லை என்பதனை
என்றறியப் போகிறாய் நீ

(எதுகை மோனை சரியாக அமையவில்லை என நினைக்கிறேன்.)


மாற்றுக் கருத்துள்ளோரும் ஒத்த கருத்துள்ளோரும் தங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டுகிறேன்.




36 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    எழுதுங்கள் படிக்க காத்திருக்கோம்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!

      நீக்கு

    2. Hindi padikkathathae nammai veruppatharkku kaaranam.
      Nammai pirivinai vaathiyagavae paarkkinranar.
      Andai maanilaththavar hindi padiththuviduvathaal nammai thimiraaga ninaikkindranar.




      நீக்கு
    3. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு மஞ்சப்பன் பெருமாள் அவர்களே! ஐயா. அவர்கள் வெறுத்ததற்கு முக்கியமான காரணம் நாம் அவர்களைவிட ஆங்கிலம் நன்றாக பேசுகிறோம் என்பதால். (நான் கூறுவது பல ஆண்டுகளுக்கு முன்னால்).

      நீக்கு
  2. அனுபவங்கள் இதுபோன்ற மரபுக் கலைவடிவங்களில் படைக்கப்பட வேண்டும்.

    தொடர்கிறேன் அய்யா!


    நன்றி.

    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! என்னால் முடிந்தவரை மரபுக் கலைவடிவங்களில் படைக்க முயற்சிப்பேன்.

      நீக்கு
  3. நண்பரே எனது 100 சதவீதமான ஒத்தக்கருத்து தங்களுக்கு தமிழன் எவ்வளவு தூரம் ஓரங்கட்டப்படுகிறான் என்ற தங்களின் அனுபவத்தை படிக்க காத்திருக்கிறேன் நன்றி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், எனது கருத்தோடு உடன்படுவதற்கும், தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  4. எனக்கு வெளி மாநிலங்களில் பணி புரிந்த அனுபவம் இல்லை. உங்கள் கருத்துக்களைப் படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். ஏன் இப்படி தமிழனை மற்ற மாநிலத்தவர்கள் வெறுக்கிறார்கள் என்பதைப் பற்றி இணையத்தில் ஒரு கருத்தரங்கு நடத்தினால் எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! தங்களது ஆலோசனையை நிறைவேற்ற முயல்வேன்.

      நீக்கு
  5. எல்லோரும் உன்னை விரும்பவில்லை என்பதை
    என்றறியப் போகிறாய் நீ
    உண்மை ஐயா உண்மை
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நீக்கு
  6. எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனாலும் பலர் கூற கேள்விப்பட்டிருக்கிறேன். நம்மவர்களுக்கு இந்தி தெரியாததே நம்மை தனிமை படுத்துவது போல் தோன்றும். மற்றபடி அனுபவஸ்தர்கள் தான் சொல்லவேண்டும்.
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு K.P.செந்தில்குமார் அவர்களே! வடக்கே உள்ளவர்களைவிட நாம் நன்றாக ஆங்கிலம் பேசுவதால் நம்மை அவர்கள் கிண்டலாக ஆங்கிலேயர்கள் (அங்கிரேஜ் கி ஆத்மி) என இந்தியில் அழைப்பதும் உண்டு. ஆனால் அண்டை மாநிலத்தவர் ஏன் நம்மை வேறுவிதமாக பார்க்கவேண்டும் என்பதுதான் புதிராக உள்ளது.

      நீக்கு
  7. "ஏன் இப்படி...?" என்று புரியவில்லை...

    உங்கள் அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  8. தங்களின் எழுத்து மூலமாக தாங்கள் பல தேவையற்ற அனுபவங்களை எதிர்கொண்டதை அறியமுடிகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்குப் பாடமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!

      நீக்கு
  9. தமிழன் என்றோர் இனமுண்டு. அவர்க்கே தனியே ஒரு குணமுண்டு.அந்த குணத்துக்கும் அவர்களின் அனுபவங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ.?என் அனுபவப் படி மரபுக் கவிதை எழுத முற்படும்போது சிந்தனைக்கேற்ற வார்த்தைகள் மரபு விதிகளுக்கு ஏற்றபடி கிடைப்பது கடினமாயிருக்கிறது. முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!

    ‘’தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு;’’ என்ற நாமக்கல் கவிஞர் அவர்கள் அடுத்து சொன்ன ‘’அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். ‘’ என்ற வரிகள் தான் முக்கியமானவை. அதனால் தாங்கள் சொல்வது சரிதான். குணங்கள் தான் அனுபவத்தை பெற உதவுகிறது என்பதால் இரண்டுக்கும் தொடர்பு உண்டு.

    //மரபுக் கவிதை எழுத முற்படும்போது சிந்தனைக்கேற்ற வார்த்தைகள் மரபு விதிகளுக்கு ஏற்றபடி கிடைப்பது கடினமாயிருக்கிறது.//

    ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகப்போக சொல்வளம் பெருகி மரபு விதிக்கேற்ப சொற்கள் கிடைக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  11. ஒரு தமிழரின் கண்ணோட்டத்தில் தாங்கள் கூறுவது சரியாகப்படலாம். ஒரு பீகாரி, மலையாளி, கன்னட, தெலுங்கு ஆளைக் கேட்டாலும் இது போலவே சொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு கூட்டமாக வேறுவிதமான மக்கள் இருக்குமிடத்தில் இருந்தால் யாருக்கும் இதுபோல நடக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தாங்கள் கூறுவதில் சிறிது உண்மை இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது நாம் தான். தென் மாநிலங்களிலே கூட வட மாநிலத்தவரை அனுசரித்துப்போவது போல நம்மிடம் இருப்பதில்லை

      நீக்கு
  12. வெண்பா பாடுவதில் வல்லவராகி விட்டீர்கள். வாழ்த்துக்கள். தமிழன் என்றைக்கும் ஏமாளியே என்பதனை தங்கள் பஃறொடை வெண்பா பகருகிறது.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வெண்பா இயற்றுவதில் நான் இன்னும் வல்லவனாகிவிடவில்லை. இது ஒரு ஆரம்ப முயற்சியே. தங்கள் போன்றோரின் ஆதரவுடன் மேலும் எழுத முயற்சிப்பேன்.

    பதிலளிநீக்கு
  14. ஐயா

    எல்லோரிடமும் எதாவது ஒன்று இரண்டு குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்தக் குறைகள்
    அவர்களுக்குப் புலப்படாது. மற்றவர்களுக்கே அது தெரிய வரும். இதை நினைவில் கொண்டால் மற்ற மாநிலத்தவர் தமிழர்களை நடத்தும் முறை புரிய வரும். மேலும் சொந்த மாநிலத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை வந்தேரிகளாய் தான் பார்கிறார்கள்.

    வட மாநிலத்தவர் இந்தியா முழுதும் அவர்களுக்குத் தான் சொந்தம் என்று நினைப்பவர்கள். இந்தி தெரியாதவன் இந்தியன் அல்ல என்று கேலி குறை சொல்பவர்கள். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த மாநிலத்தவர் போலும் நம்மை விரோதிகளாகப் பார்கிறார்கள். பிராந்திய உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தலை எடுக்கிறது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. குறைகள் எல்லோரிடமும் உண்டு. ஆனால் அடுத்த மாநிலத்தவரை அன்னியராக பார்ப்பதும் அவர்களை இழித்தும் பழித்தும் பேசுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எனது ஆதங்கம். முதன் முதலாக புது டில்லியில் 1968 இல் பணியில் சேர்ந்தபோது ஒரு வட இந்திய நண்பர் ‘நீங்கள் ஏன் மதராசை விட்டு இங்கு வந்தீர்கள்?’ என இளக்காரமாக கேட்டார். நான் சொன்னேன்.’நண்பரே இந்தியாவின் தலை நகரம் சென்னையில் இருந்திருந்தால் நீங்கள் அங்கு வந்திருப்பீர்கள். ஆனால் நான் அப்படி கேட்டிருக்கமாட்டேன்.’ என்று. 1955 ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலம் பிரித்ததே தவறு என்பது என் கருத்து.

      நீக்கு
  15. வட இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளாக பணி புரிகிறேன். அவ்வப்போது ”மதராசி”என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுவதைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன். நிறைய சமயங்களில் அவர்களிடம் வாக்குவாதமும் செய்வதுண்டு.

    இங்கே அனைவரையும் அப்படியே தான் நடத்துகிறார்கள். பீஹாரிகளை கேவலமாகப் பேசுவதும், பெங்காலிகளை மட்டும் தட்டுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிற்து. நம்மை மட்டுமே தரக்குறைவாக நடத்துவது இல்லை! இத்தனைக்கும் தில்லியை யாருமே தன்னுடையது எனச் சொல்லிக் கொள்ள முடியாது! ஒவ்வொன்றுக்குமே அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது!

    அங்க்ரேஜ் கா ஔலாத்! ஆத்மி அல்ல! ஆங்கிலத்தில் பேசும் பலரை அங்க்ரேஜ் கா ஔலாத் என்று தான் கிண்டல் செய்வார்கள்.

    போங்கடா நீங்களும் உங்க எண்ணங்களும் என விட்டுவிட்டு நம் வேலையைத் தொடர்வது வழக்கமாகி விட்டது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
    2. Thought provoking blog. Northerners have always harbored superiority complex may be due to the political power enjoyed by them in the past without any dependence on South. Things have changed now. In my opinion we ( Tamilians) are not paragons of virtue. We are also to be blamed to some extent . This opinion of mine might be debatable.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! தங்களின் கருத்தை படித்ததும் ‘அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.’ என்ற வரி நினைவுக்கு வருகிறது. நான் சொல்ல வந்தது நம்மிடையே குறைகள் இல்லை என்று அல்ல. நம்மை எல்லோரும் வெறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தால் வந்தது.

      நீக்கு
  16. என்னுடைய கருத்து சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். தமிழர்கள் பழகும் விதத்தில் குறை இருப்பதால்தான் இந்த நிலை என்று கூட சொல்லலாம். "
    உங்களின் இந்த எண்ண ஓட்டம் தான் சரி. நான் இந்தியன் வங்கியில் அதிகாரி பதவியில் சுமார் 31 வருடங்கள் வடக்கே மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பணி புரிந்தேன். அவர்கள் முதலில் வெறுப்பு தொனிக்க தான் பழகுவார்கள். பின், நம் அணுகு முறை அறிந்த பின், அவர்கள் மாறுவார்கள். நமது அரசியல் வாதிகள் வெறுப்பு விதை ஊன்றியதன் விளைவு தான் அது. இப்போதும், இந்தியாவில் நமது தமிழகம் தான் அண்டை மாநிலங்களுடன் ஏதேனும் ஒரு கருத்து வேறுபாடு வைத்துக் கொண்டு இருப்பது ஆக உணர்கிறேன். ஒரு பிரச்னையை இரண்டு விதமாக அணுகலாம். நாம் செய்வது ஒரு முறை. சுமுகமாக பேசி தீர்வு காண்பது இன்னொரு முறை. இதில் MGR காலம் வரை இரண்டாவது முறை மூலம் அமைதி இருந்தது. ஆனால், அதன் பின் ?? அங்கு வேலை மற்றும் தொழில் சார்ந்து இருப்போர் தான் இதனை அனுபவிக்கிறார்கள். என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே! ‘’இந்தியாவில் நமது தமிழகம் தான் அண்டை மாநிலங்களுடன் ஏதேனும் ஒரு கருத்து வேறுபாடு வைத்துக்கொண்டு இருப்பது ஆக உணர்கிறேன்.’’ என சொல்லியுள்ளீர்கள். இந்த கருத்து வேறுபாடு நம்மால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் சொல்லியும் கேட்காத கர்நாடகத்தாலும் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்ற ஆணைக்கெதிராக சட்டம் இயற்றிய கேரளாவுமே கருத்து வேறுபாட்டை உண்டாக்கியுள்ளார்கள். இப்போது ஆந்திரா பாலாற்றில் அணை கட்டப்போவதாக கூறி புதிய பிரச்சினையை உண்டாக்குகிறார்கள். Riparian rights ஐ மதிக்காத அண்டை மாநிலங்கள் செய்வது சரியா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்.

      நீக்கு
  17. அன்புள்ள அய்யா!
    வணக்கம்!
    ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று சொல்லுவார்கள்
    22ந்தேதியிட்ட பதிவுக்கு 30ந்தேதி கருத்துரை வழங்க
    மனம் வருந்துகிறது. எப்படி மறந்தேன் இந்த நல்ல பதிவை
    என்று எனக்கெ தெரிய வில்லை.
    குறிப்பாக நண்பர் வெங்கட் நாகராஜ் மற்றும் பரமசிவம் இருவரது கருத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு அய்யா!

    இனி வரும் பதிவுகளில் முன்னணியில் இடம்பிடிக்க முயல்கின்றேன். நன்றி!
    த ம 12
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! தாமதித்து வருவதில் தவறில்லை. Better late than never என்பது தான் முக்கியம். தொடர்வதற்கு நன்றி!

      நீக்கு
  18. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் ‘உழைப்பாளர் நாள்’ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு