வெள்ளி, 27 ஜனவரி, 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 9

‘நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் அனைவரும் எழுந்து நின்றபோது திடீரென பாடல் தடைப்பட்டு புரியாத சில ஒலிகளை வெளியிட்டு பின்னர் பாடலைத் தொடங்கியது. வாழ்த்துப் பாடல் முடிந்தபோது அது முழுப் பாடலாக இல்லாமல் சுருக்கிய (Abiridged) பாடல் போல் ஆகிவிட்டது.





இந்த விழா என்றில்லை எந்த விழாவிலும், அது தமிழ்த்தாய் வாழ்த்தானாலும் சரி தேசிய கீதம் ஆனாலும் சரி ஒலி நாடா அல்லது குறுந்தகடு ஆகியவைகளில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் இது போன்று முக்கிய தருணத்தில் தகராறு செய்வதுண்டு. அதற்கு காரணம் அந்த ஒலி நாடா அல்லது குறுந்தகடு பலமுறை பல்வேறு விழாக்களில் பயன்படுத்தி அவை தேய்ந்து போய் இருப்பதுதான்.

இதைத் தவிர்க்க விழாக்களில் ஒருவர் அல்லது இருவர் மேடையேறியோ அல்லது விழாவில் பங்கேற்கு அனைவரும் சேர்ந்தோ வாழ்த்துப் பாடல்களைப் பாடுவது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் எங்களை விட்டு மறைந்த 17 வகுப்புத் தோழர்களுக்கும், எங்களுக்கு கல்வி கற்பித்து மறைந்த பேராசிரியர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு மணித்துளிகள் எழுந்து நின்று அஞ்சலி செய்தோம். .

இயற்கை எய்திய வகுப்புத் தோழர்களில் இருவர் சென்ற முறை சேலத்தில் 2013 ஆம் ஆண்டு சந்தித்தபோது கலந்துக்கொண்டவர்கள். அப்போது அடுத்த சந்திப்பில் சந்திப்போம் என்று சொல்லி விடை பெற்ற அந்த நண்பர்கள் இந்த பொன் விழா சந்திப்பில் எங்களோடு கலந்து கொள்ளமுடியாமல் இவ்வுலகை விட்டு மறைந்தது எங்கள் அனைவருக்கும் தாங்கவொணா துயரத்தை தந்தது உண்மை.

சில மணித்துளிகள் அமைதியாய் இருந்த எங்களை, திரும்பவும் விழா சூழ்நிலைக்கு வர நண்பர் முருகானந்தத்தின் கலகலப்பான வரவேற்புரை உதவியது. அனைவரையும் தஞ்சை நண்பர்கள் சார்பில் வரவேற்று பேசிய அவர், சென்ற சந்திப்புகளை விட இந்த சந்திப்பில் பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கையும் குடும்பத்தினர் எண்ணிக்கையும் அதிகம் என்றும் அதற்காக பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.




வரவேற்புரை நிகழ்த்தும் நண்பர் முருகானந்தம்

வரவேற்புரை முடிந்ததும் அடுத்த நிகழ்ச்சி தொடங்கு முன்பாக, எங்களுக்கு இசை விருந்து அளிவித்து மகிழ்வித்த இசைக் கலைஞர்களை சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.




முதலில் வீணை வாசித்து எங்களை இசையால் கட்டிப்போட்ட திரு S.K.வேதய்யன் அவர்களுக்கு நண்பர் பாலு பரிசு அளிக்க நண்பர் அய்யம்பெருமாள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.



அடுத்து புல்லாங்குழல் வாசித்தும், வாய்ப்பாட்டு பாடியும் மகிழ்வித்த திரு J.செல்வம் அவர்களுக்கு நண்பர் P.T.நடராஜன் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.




அடுத்து தபேலா வாசித்த திரு T.சேவியர் அவர்களுக்கு நண்பர் சரவணன் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

இங்கு நான் பொன்னாடை எனக் குறிப்பிட்டது வெண்ணிற ‘டர்க்கிஷ் துண்டு’(Turkish Towel) களைத் தான். (18 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் உள்ள Bursa என்ற ஊரில் தயாரிக்கப்பட்ட பருத்தித் துண்டுகள், இந்தியா,ஈரான், சிரியா,எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாம். இவைகள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் முதன் முதல் துருக்கியிலிருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டதால் டர்க்கி(ஷ்) துண்டுகள் என்ற பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகின்றன.)

இந்த பொன் விழா சங்கமத்திற்கு வரும் வகுப்புத்தோழர்கள் அனைவரையும் சிறப்பிக்க நண்பர் சரவணன் 60 உயர் இரக டர்க்கி(ஷ்) துண்டுகள் வாங்கி வந்திருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த விழா நடக்க தஞ்சை நண்பர்கள் கடுமையாய் உழைத்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் பங்காக பெருந்தொகையை விழா செலவிற்காக தந்திருந்தார்கள்.அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல் மற்ற நண்பர்களும் தங்களது பங்களிப்பை தந்து உதவினார்கள். அது பற்றி பின்னர் எழுதுவேன்.

இசைக் கலைஞர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நிகழ்சிசி ‘வகுப்புத்தோழர்கள் அறிமுகம்’ செய்யும் நிகழ்ச்சி என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் நண்பர் நாச்சியப்பன் சொன்னதும், வகுப்புத் தோழர்களை அறிமுகம் செய்ய நண்பர் கோவிந்தசாமி மேடை ஏறினார்.




வகுப்புத் தோழர்களை அறிமுகம் செய்யும் நண்பர் கோவிந்தசாமி


நண்பர் கோவிந்தசாமி பேசும்போது தானும் நண்பர் நாச்சியப்பனும் சேர்ந்து நண்பர்களை, பெயர்களின் அகர வரிசைப்படி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், முதலில் ஒரு பகுதி நண்பர்களை தானும் பின்னர் இன்னொரு பகுதி நண்பர்களை நண்பர் நாச்சியப்பனும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சொல்லிவிட்டு தனது பணியைத் தொடங்கினார்.


தொடரும்








18 கருத்துகள்:

  1. //விழாவில் பங்கேற்கு அனைவரும் சேர்ந்தோ வாழ்த்துப் பாடல்களைப் பாடுவது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து//

    அருமையான ஆலோசனை நண்பரே தொடர்கிறேன்.

    புகைப்படங்கள் களை கட்டுகிறது வாழ்த்துகள்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கு நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

      நீக்கு
  2. விழாவில் பங்கேற்போரே பாடுவது என்பது இன்னொரு வகையிலும் உதவும். பள்ளிக் காலங்களில் பாடிவிட்டு பின்னர் நீண்ட இடைவெளி ஆகிவிடுவதால் நிறைய பேர்களுக்கு தேசிய கீதம் கூட பாதியில் தடுமாறுகிறது. அதற்கு இந்தப் பயிற்சி உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  4. //தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலி நாடாவில் ஒலிக்க ஆரம்பித்தவுடன் திடீரென பாடல் தடைப்பட்டு புரியாத சில ஒலிகளை வெளியிட்டு... //

    'நீராரும் கடலுடுத்த' பாடலை நினைத்தாலே அந்த நீக்கப்பட்ட வரிகள் நீங்காது நினைவுக்கு வந்துவிடும்' என்று சென்ற பதிவில் நான் சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.

    புத்தகமென்றால் அச்சில் சில வரிகளாய் நீக்கி விடலாம். ஒலித்தகடு, ஒலிநாடா என்றால் பதிவாகி விட்டால் எப்படி நீக்குவார்களோ, அந்த முயற்சி நடந்திருக்கலாம். அதனால் தான் அந்த இடைத்தடங்கலோ என்னவோ!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! இந்த குறுந்தகட்டில் நீக்கப்பட்ட வரிகள் போக மீதி உள்ளவைகளில் சிலவும் குறுந்தகட்டின் தேய்மானம் காரணமாக வெளியாகவில்லை

      நீக்கு
  5. // விழாக்களில் ஒருவர் அல்லது இருவர் மேடையேறியோ அல்லது விழாவில் பங்கேற்கு அனைவரும் சேர்ந்தோ வாழ்த்துப் பாடல்களைப் பாடுவது சாலச் சிறந்தது என்பது எனது கருத்து.//

    ஆம். அடிக்கடி இப்படிச் செய்தால், ஸ்ரீராம் சொல்வதுபோல அனைவருக்கும் மறக்காமலும் இருக்கும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  6. மறைந்தோர் நினைவாக அஞ்சலி செலுத்தியது,

    சந்திப்பில் பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கையும் குடும்பத்தினர் எண்ணிக்கையும் அதிகம் என்றும் அதற்காக பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தது,

    ‘டர்க்கிஷ் துண்டு’(Turkish Towel) எனப் பெயர் வந்த காரணம்,

    இசைக்கலைஞர்களை கெளரவப்படுத்தியது

    என ஒவ்வொன்றாக விவரித்துள்ளது அழகாக உள்ளது. ஒரே பகுதியில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  7. விழா நிகழ்வுகள், கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள் பகிர்ந்து எங்களையும் விழாவில் பங்கெடுக்க வைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

      நீக்கு
  8. பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் முகம் நினைவுக்கு வருவதில் சிரமம் இருக்கலாம் ஆகவே இந்த அறிமுக ஏற்பாடும் பாராட்டத்தக்கதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இந்த சந்திப்பில் இதுவரை கலந்துகொள்ளாத நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருந்தார். அவரை அறிமுகப்படுத்துவதோடு மற்றவர்களையும் அறிமுகப்படுத்தலாமே என்று ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாக்குழுவினர்.

      நீக்கு
  9. தங்கள் கருத்து (விழாவில் பாடுவது) நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!

      நீக்கு