செவ்வாய், 11 அக்டோபர், 2011

பிரிந்தவர் கூடினால் ....???????? 9

பகல் 12.30 மணிக்கு திரும்பி வந்த படகு ஒன்று
12.45 மணிக்கு கிளம்பத்தயாரானது.அந்த படகில்,
திருமதி & திரு T.N.பாலசுப்ரமணியன்,
திருமதி & திரு G.இராமச்சந்திரன்,திரு செல்லப்பா,
திரு முத்துகிருஷ்ணன்,ஆகியோரோடு என்னையும்,
என் துணைவியாரையும் செல்லுமாறு,
நண்பர் நாச்சியப்பன் சொன்னார்.

எங்களுக்கு குடிக்கத் தண்ணீரும், பிஸ்கட்டும்
கொடுத்து, அந்த குழுவை நடத்தி செல்லவும்
என்னைப் பணித்தார்.அதுவரை கேமராவை
வைத்திருந்த நான் அதை நாச்சியப்பனிடம்
கொடுத்துவிட்டு படகில் ஏறினேன்.

எங்களுக்கு பாதுகாப்பு மேல் சட்டை கொடுத்து
அணிந்துகொள்ள சொன்னார்கள்.பயண நேரம்
அரை மணி என்பதால் அதற்குள் எல்லாவற்றையும்
பார்க்கமுடியுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

அந்த விசைப்படகு மெதுவாக நகர்ந்து,அந்த
அலையாத்தி காடுகள் உள்ள பகுதிக்கு
சென்றபோது, அந்த படகோட்டி என்னிடம்,
‘சார், திட்டப்படி நான் நேரே சென்றுதான்
திரும்பவேண்டும். நீங்கள் விரும்பினால் நான்
உள்ளே அழைத்து சென்று நெருக்கமாக உள்ள
தாவரங்களை காண்பிக்கிறேன். நாம்
திட்டமிட்டபடி அரை மணிக்குள் கரை
திரும்பிவிடலாம்’ என்றார்.

ஆனால் நண்பர்கள்‘சுற்றுலாத்துறை அனுமதித்த
திட்டத்தை மாற்றவேண்டாம். அதனால்
வீண் பிரச்சினை வரலாம்.’என்றார்கள்.

அவர்கள் சொன்னதே நல்லதாகிவிட்டது.
வேறு படகில் சென்ற நண்பர்கள் அதுபோல்
உள்ளே சென்றதும் அந்த படகோட்டி அதிக
பணத்தை அவர்களிடம் ‘கறந்து’விட்டதாக
அறிந்தோம்.

அந்த அரை மணி நேரம் உச்சிவெயிலில்
பயணித்தாலும்,அந்த அழகிய காட்சிகளை
இரசித்துக்கொண்டு இருந்ததால், வெயிலின்
தாக்கம் எங்களுக்கு தெரியவில்லை.

எழுத்தாளர் அகிலன் அவர்களின்
‘பாவை விளக்கு’ திரைப்படமாக வந்தபோது,
அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
அவர்களுக்கு, இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன்
அவர்கள் ‘ஆயிரம் கண் போதாது
வண்ணக்கிளியே,
என்று,பாடியது ஏனோ,
அப்போது என் நினைவுக்கு வந்தது.

உண்மையில் அந்த அலையாத்தி தாவரங்களின்
அழகைக் காண இரு கண் போதாதுதான்.
ஒருவேளை வண்ணத்து பூச்சிக்கு இருப்பதுபோல்
நமக்கும் Compound Eyes இருந்தால் ஒரே நேரத்தில்
முன்புறம், பின்புறம் மேலே,கீழே உள்ளவைகளை
ஒரே நேரத்தில் பார்த்து களிக்கமுடியும்.

வேளாண்மை அறிவியலில், இறுதி ஆண்டு
படிக்கும்போது வேளாண் விரிவாக்கம் பாடத்தில்
சொல்வார்கள்.‘Seeing is Believing’ என்று.
உண்மையில் அந்த உப்பக்கழியின் நீரோட்டத்தையும்,
அதன் இரு மருங்கிலும் படை வீரர்கள் போல்
அணி வகுத்து நிற்கும் அந்த அரிய வகைத்
தாவரங்களின் அழகையும் கண்ணால் கண்டுதான்
இரசிக்க வேண்டும். பிறர் விவரித்து அல்ல!

நான் அவைகள் படை வீரர்கள் போல் அணி
வகுத்து நிற்பதாக கூறியதன் காரணம்,படைவீரர்கள்
எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியது போல்
இந்த தாவரங்களும் ‘ஆழிப்பேரலை’(சுனாமி) என்ற
அழிவு சக்தி வந்தபோது சிதம்பரத்தையும்,அதை
சுற்றியுள்ள ஊர்களையும் காப்பாற்றியதால் தான்.
உண்மையில்,வேகமாக வந்த பேரலைகளை மாற்றி,
வந்த திசைக்கே திருப்பி விட்டதால், இவைகளை
அலையாத்திக்காடுகள் என்பதை விட
அலைமாத்திக்காடுகள் என்று அழைப்பதே சரி.

(இந்த தாவரங்களைப்பற்றிய சுவையான
தகவல்கள் உண்டு.ஆனால் பதிவு நீண்டுகொண்டு
போவதால் அது பற்றி பின்னர்
 எழுதுகிறேன்.)

ஆனால் நம்மவர்களில் சிலர் இதனுடைய உபயோகம்
தெரியாமல் தங்கள் சுயநலத்திற்காக இவைகளை
அழிக்கதொடங்கியபோது, விழித்துக்கொண்ட அரசு
தற்சமயம் வனத்துறையின் மூலம், காடுகள்
அழிக்கப்பட்டஇடத்தில் புதிய கன்றுகளை நட்டு,
அவைகளை பராமரித்து வருகிறது.

எங்கள் படகோட்டி,சுமார் 15 மணித்துளிகள்,
உப்பக்கழியின் நடுவில் சென்றுவிட்டு திரும்பும்போது,
அடுத்த 15 மணித்துளிகள்,படகை ஓரமாக ஒட்டி
அந்த தாவரங்களை அருகில் இருந்து
பார்க்க உதவினார்.

குறித்தபடி அரை மணிநேரத்தில் பயணத்தை
முடித்து எங்களை படகுத்துறைக்கு
கொண்டுவந்து விட்டார் நாங்களும்
மனமில்லாமல் படகிலிருந்து இறங்கினோம்.

எங்களுடன் வந்த திருமதி T.N.பாலசுப்ரமணியன்
அவர்கள், தான் கொண்டுவந்த கேமராவில் எடுத்த
சில புகைப்படங்கள் கீழே.














திரும்ப கரைக்கு வந்து,மற்ற நண்பர்கள்
பயணத்தை முடிக்கும் வரை கரையில்
காத்திருந்தோம்.அப்போது நான் நண்பர்கள்
T.N.பாலசுப்ரமணியத்தோடும்
முத்துகிருஷ்ணனோடும் ‘கதை’த்து கொண்டு
இருந்தேன்.

எல்லோரும் வந்ததும்,சரியாக 2.30 மணிக்கு
பிச்சாவரத்தை விட்டு கிளம்பி அண்ணாமலை நகர்
விருந்தினர் விடுதிக்கு சுமார் 3.15 மணிக்கு வந்து
மதிய உணவு அருந்தினோம்.


தொடரும்

6 கருத்துகள்:

  1. //அலையாத்திக்காடுகள் என்பதை விட
    அலைமாத்திக்காடுகள் என்று அழைப்பதே சரி.//
    அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!
    உங்களுடன் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி விட்டீர்கள்!நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கு நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே! ஆனால் இந்த பாராட்டு திருமதி T.N. பாலசுப்ரமணியன் அவர்களுக்கே போய் சேரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.
    அருமையான புகைப்படங்கள்.
    நன்றி ஐயா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு