செவ்வாய், 26 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 25


நான் அப்போது (1970 சனவரி) வங்கியில் சேர்ந்தபோது வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு ஆறு  மாதங்கள் கூட ஆகவில்லை.அந்த கிளையில் நான் பயிற்சிக்காக சேர்ந்தபோது வங்கிகள் அரசுடமையாக்கி ஒன்பது மாதங்கள் தான் ஆகியிருந்ததால்,வங்கி ஊழியர்கள் தனியார் வங்கியில் இருந்தது போன்ற மன நிலையிலேயே இருந்தார்கள்.

அப்போதெல்லாம் கிளை மேலாளர்கள்  வைத்தது தான் சட்டம் 
என்பதால் யாரும் அவர்களை எதிர்த்து பேச பயப்படுவார்கள்.மேலும் 
நான் சேர்ந்த கிளையில் இருந்தவர்களில் பலர் அந்த மேலாளரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவரது செய்கைக்கு எதிர்ப்பே 
இல்லை.

இந்த பின்னணி தெரியாமல் நான் அவர்களிடம் மதியம் நடந்த 
நிகழ்ச்சி பற்றி கேட்ட போது, புதியவனான என்னிடம் அதைப்பற்றி 
பேச முதலில் தயங்கினாலும் நான் வற்புறுத்திக் கேட்டபின் 
விவரம் சொல்ல  ஆரம்பித்தனர்.

மதியம் தினம் ஒருமணி நேரம் உங்களை வெளியில் காக்க 
வைப்பதுபற்றி எல்லோரும் ஒன்றுகூடி சென்று ஏன்அவரிடம் 
உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லைஎன்று அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள்,உங்களுக்கு இவரைப்பற்றி ஒன்றும் தெரியாது. 
இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை யாரும் எதிர்த்து 
பேசமுடியாது. அப்படி எதிர்த்து பேசுபவர்களின் கதி அதோகதிதான்.
மேலும் இது குறித்து நாங்கள் ஏதேனும் எங்களுக்குள் பேச 
நினைத்தால் கூட முடியாது.காரணம் அவருக்கு துதி பாடும் கூட்டம் ஒன்று இங்கு இருப்பதால்,அவரைப்பற்றி ஏதாவது பேசினால் கூட 
அவரது காதுக்கு  அது எட்டிவிடும். அதனால் நாங்கள் யாரும் 
வங்கியின் கிளைக்குள் எதுவும் பேசிக்கொள்வதில்லை.என்றார்கள்.

அதற்கு நான் சரி. இவரிடம் சொல்ல பயமாய் இருந்தால்,இவரது
அராஜகம் குறித்தும், ஊழியர்களை இவர் அடிமைபோல் நடத்துவது
பற்றியும், ஏன் தலைமை அலுவலகத்திற்கு எழுதக்கூடாது?‘என்றேன்.

அதற்கு அந்த நண்பர்கள்,’நாங்கள் அதையும் செய்து பார்த்துவிட்டோம். ஆனால் எங்களது துரதிர்ஷ்டம். நாங்கள் இவரைப்பற்றி எழுதிய அந்த
புகார் அஞ்சலை இவருக்கே திருப்பி அனுப்பி புகார் எழுதியவர்கள்
மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி தலைமை அலுவலகம்
அனுப்பிவிட்டது.அந்த அளவுக்கு இவருக்கு தலைமை அலுவலகத்தின் ஆதரவு  இருப்பதால் எங்களால் ஏதும் செய்யமுடியவில்லை.

அந்த கடிதம் வந்ததும் எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு, ‘பார்த்தீர்கள் அல்லவா.நீங்கள் அனுப்பிய புகாரை எனக்கே அனுப்பி ஆவன
செய்யும்படி தலைமை அலுவலகம் கட்டளை  இட்டுள்ளது. ஆனால் 
நான் இந்த விஷயத்தை போனால் போகிறது என்று இத்தோடு விட்டுவிடப் போகிறேன். இனி யாரேனும் இதுபோல் செய்தால், செய்பவர்கள் அனைவர் மேலும் நடவடிக்கை எடுப்பதோடு,  
இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் செய்துவிடுவேன்.’ 
என்று எச்சரித்து விட்டுவிட்டார்.

அனேகமாக எல்லோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள் ஆதலால் மாற்றலுக்கு பயந்து யாரும் இது பற்றி கேட்பது இல்லை. கிளைக்கு நீங்கள் புதியவர் என்பதால் உங்களுக்கு இது அநியாயமாகப்படுகிறது. எங்களுக்கு இது பழக்கமான ஒன்றுதான். நீங்கள் இருக்கப்போவதோ மூன்று மாதங்கள்தான்.எனவே இனி இதைப்பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.இல்லாவிடில் வீணாக நீங்கள் தான் கஷ்டப்படுவீர்கள். 
உங்கள் பயிற்சி காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.என்று சொன்னார்கள். 

அப்போதுதான் நினைத்தேன் இப்படிப்பட்ட மேலாளரின் கீழ் எப்படி பணிபுரியப்போகிறோம். ஒருவேளை வங்கியில் சேர்ந்தது தவறோ 
என்று. பிறகு நாம் இருக்கப்போவது சில மாதங்கள் மட்டுமே. மேலும் எல்லா மேலாளர்களும் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்று 
என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.

அன்றிரவே தலைமை அலுவலகத்தில் இருந்த வேளாண் நிதித்துறை (Agricultural Finance Department) யில் துணைத்தலைவராக இருந்த திரு K.M.உடுப்பா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனக்கு தலைமை அலுவலக ஊழியர் துறை (Staff Department) செய்த தவறால், திரும்பவும் எனக்கு கிளையில் எழுத்தர் பயிற்சி தரப்படுகிறது என்றும் அதற்குப் பதில் எனக்கு வேளாண் நிதித்துறையில் பயிற்சி தர மேலாளருக்கு ஆணை தர உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தேன்.

நான் கடிதம் எழுதியது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. நான் கேட்டுக்கொண்டது போலவே ஒரே வாரத்தில் தலைமை 
அலுவலகத்தில் இருந்து எனக்கு  வேளாண் நிதித்துறையில் 
பயிற்சி தரும்படி மேலாளருக்கு ஆணை வந்தது.

அக்கடிதம் வந்ததும் மேலாளர் என்னை அந்த கிளையில் வேளாண் நிதித்துறையில் இருந்த அலுவலரின் கீழ் பயிற்சி பெற அனுமதித்தார். ஆனால் என் துரதிர்ஷ்டம் அந்த அலுவலரும் மேலாளரின் ஆளாகவேஇருந்ததால் எந்த நேரமும் மேலாளரை புகழ்ந்தே பேசுவார். அவருக்கு தலைமை அலுவலக ஆதரவு உண்டு என்பதை மறைமுகமாக 
பலமுறை சொல்வார். நமக்கு ஏன் வீண் வம்பு என்று அவர் சொல்லும்போது எந்தவித கருத்தையும் வெளியிடமாட்டேன். 
(அவரோடு எனது அனுபவம் பற்றி பின் எழுதுவேன்)

மூன்று மாதம் கழிந்ததும் தலைமை அலுவலக ஊழியர் துறை நான் வேளாண் நிதித் துறையை சேர்ந்தவன் என்பதை மறந்து என்னை 
அருகில் இருந்த மாவட்ட முதன்மை கிளைக்கு அலுவலர் பயிற்சி (Supervisory Training) பெற மாற்றிவிட்டார்கள்.வேறு வழியின்றி அங்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டு திரும்பவும் திரு உடுப்பா அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவரது முயற்சியால் மறுபடியும் நான் பயிற்சி 
பெற்ற அதே கிளைக்கு மாற்றிவிட்டார்கள்!

ஏன் அதே கிளைக்கு மாற்றியுள்ளார்கள் என எண்ணிக்
கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாள் எனது பயிற்சியாளரான 
அந்த வேளாண் அலுவலரை தலைமை அலுவலகத்திற்கு 
தற்காலிகமாக மாற்றிய ஆணை வந்தது. அவர் திரும்பி வரும் வரை என்னை அந்த துறையை கவனிக்கும்படியான ஆணையும், அதோடு வந்தது. 

பயிற்சியின்போதே தனியாக ஒரு துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் இந்த கிளையில் இந்த மேலாளரின் 
கீழ் பணியாற்ற வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது. 

நான் கவலைப்பட்டது போலவே ஒரு நாள் மேலாளரின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டது.

தொடரும்


வியாழன், 21 ஜூன், 2012

Boss கள் பலவிதம்! 24

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு திரும்ப கிளைக்கு வந்தபோது
கிளையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பான்மையோர்
வங்கிக் கிளை இருந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த ஒரு
சைக்கிள் கடையருகே நின்றுகொண்டு இருந்தனர்.

(அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் தான் எங்கள் கிளை இருந்தது)

ஒருவேளை ஊழியார் சங்கம் நடத்தும் இடைவேளை நேர
போராட்டமோ என நினைத்து, நண்பர் மாத்யூசிடம் ஏன் இவர்கள் மேலே செல்லாமல் கீழே நிற்கிறார்கள்? ஏதேனும் போராட்டமா? ஆனால் மௌனமாக நின்றுகொண்டு இருக்கிறார்களே? என்று கேட்டதற்கு அவர் சொன்னார். மாடிக்கு செல்லும் கதவுகள் உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறது. உணவுஇடைவேளையின்போது கிளையில் இருக்க யாருக்கும் அனுமதியில்லை.மதியம் 3 மணிக்குத்தான் கிளையின்கதவுகள் திறக்கப்படும். அதுவரை எல்லோரும் கீழே காத்திருக்கவேண்டியதுதான். என்று.
மேலே யார் இருக்கிறார்கள்?’ எனக் கேட்டதற்கு, மேலாளருடன்,ஒரு உதவி மேலாளர், ஒரு சிறப்பு உதவியாளர், ஒரு சுருக்கெழுத்தர், ஒரு எழுத்தர், மற்றும் ஒரு கடைநிலை ஊழியர் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் உணவு இடைவேளையின்போது அங்கே இருக்க அனுமதி. மற்றவர்கள் எல்லாம். மதியம்3 மணிக்குத்தான் கிளைக்குள் செல்ல முடியும். என்றார் நண்பர் மாத்யூஸ்.
ஏன்.அப்படி?’ என்றதற்கு அதைக் கேட்க இங்கு யாருக்கும் தைரியம் இல்லை.பயிற்சியில் இருப்பதால் நாமும் எதுவும் பேசமுடியாது.என்றார்.
ஒரு நாட்டுமையாக்கப்பட்ட வங்கியில், உணவு இடைவேளையின்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் இருக்க அனுமதிப்பது ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் பட்டது எனக்கு.
நான் அந்த கிளக்குள் காலையில் நுழைந்தபோது இந்த மேலாளர் வித்தியாசமானவர்தான் என நினத்தது சரிதான் போலும் என நினைத்துக்கொண்டேன்.
நான் மேலும் விசாரிக்கத் தொடங்கியபோது மூடப்பட்டிருந்த அந்த 'வாசல்திறக்கப்பட்டதால், நண்பர் அது பற்றி மாலையில் பேசலாம் என்று கூறிவிட்டு மேலே செல்லத் தொடங்கினார்.நானும் அவர் பின் தொடர்ந்து கிளைக்குள் நுழைந்தேன்.
காலையில் எல்லோரும் வேலையில் மும்முரமாக இருந்ததால் உடன் பணியாற்றிய ஊழியர்களிடம் என்னால் பேச முடியவில்லை. மதியம் வாடிக்கையாளர் நேரம் இல்லையாதலால்,அப்போதாவது பேசலாம் என நினைத்தால் யாருமே என் பக்கம் திரும்பவில்லை.என் அருகில் இருந்த ஒருவர் (அவர் கர்நாடகாவை சேர்ந்தவர்) என்னைப்பற்றி விசாரித்தார். மற்றபடி வங்கிக் கிளையில் ஒரு அசாதாரணம் நிலவியதையும்,அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருப்பது போலவும் உணர்ந்தேன்.
மாலையில் 5.30 மணிக்கு வங்கியில் அலுவலக நேரம் முடிந்ததும், அறைக்கு திரும்பினேன். வங்கியில் என்ன நடக்கிறது மற்றும் அந்த மேலாளர் எப்படிப் பட்டவர் எனத்தெரிந்துகொள்ள ஆவல் இருந்ததால், அதைப்பற்றி அறிய அதே விடுதியிலேயே தங்கியிருந்த திரு மாத்யூஸ் அவர்கள் அறைக்கு செல்ல கிளம்பியபோது அவரே எனது அறைக்கு கிளையில் எழுத்தர்களாக பணிபுரியும் மூன்று நண்பர்களோடு வந்தார்.
என் வயதையொத்த அவர்களில் இருவர் அந்த ஊரை சேர்ந்தவர்கள்தான். ஒருவர் மட்டும் அருகில் இருந்த ஊரை சேர்ந்தவர். ஆனால் கிளை இருந்த ஊரில் சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அவர்கள் மூவரையும் அறிமுகப்படுத்திவிட்டு நீங்கள் உங்கள் சந்தேகங்களை இவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.” என்றார்.
நான் மதியம் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அதைப்பற்றி விசாரித்தபோது அவர்கள் மூவரும் நன்றாக பேசினார்களே தவிர நான் புதியவன் என்பதால் என்னிடம் நான் கேட்டதற்கு பதில்சொல்லாமல். நீங்கள் தான் இங்கு மூன்று மாத காலம் இருக்கப்போகிறீர்களே. எல்லாம் தங்களுக்குத் தானே தெரிய வரும். என்று பூடகமாக சொன்னார்கள்.
வற்புறுத்தி கேட்டதில், அவர்கள் சொன்னதை கேட்டதும் மகிழ்ச்சியாக தேசிய விதைக்கழகத்தில் சுதந்திரமாக பணியாற்றதை விட்டுவிட்டு, வங்கியில் சேர்ந்தது தவறோஎன்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது.

தொடரும்

செவ்வாய், 19 ஜூன், 2012

இனி கசந்த பாலும் இனிக்குமோ?

அறிவியல் வளர்ச்சியின் பயனால் தோற்றுவிக்கப்பட்ட மரபணு
மாற்றப்பட்ட பருத்திக்கும் (Bt Cotton) கத்திரிக்காயுக்கும் (Bt Brinjal) 
இன்ன பிற பயிர்களுக்கும்  ஏற்கனவே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி
உள்ள நிலையில் இப்போது சீன விஞ்ஞானிகள் செய்துள்ள
இன்னொரு மரபணு மாற்றம் மேலும் புதிய சர்ச்சையை
கிளப்பும்போல் தெரிகிறது.

சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் மூலம் (Genetically Modified)
சுக்களை இனப்பெருக்கம் செய்திருப்பதாகவும், இவை சாதாரண
பசுக்களை விட அதிக ஆரோக்கியமான பால் தரும் எனவும்  
18-06-2012 தேதியிட்ட ‘Business Line’ சொல்லுகிறது.

 Inner Mongolia University யில் நடத்திய இரு வேறு ஆராய்ச்சியின் பயனாக   விஞ்ஞானிகள், பசும்பால் சாப்பிடமுடியாமல், Lactose Intolerance (பாலில் உள்ள சர்க்கரையை ஏற்றுக்கொள்ளாத நிலை) எனப்படும் வியாதியால் ஆயுட்காலம் முழுதும் போராடுபவர்களும் குடிக்கக்கூடிய பால் தரும் ஹோல்ஸ்ட்டேன் (Holstein) பசுங்கன்று ஒன்றையும், மீன்களில் காணப்படுகின்ற ஆரோக்கியமான கொழுப்புச்சத்தை அதிக அளவில் கொண்டுள்ள பாலைத் தரும் இன்னொரு பசுங்கன்றையும்தோற்றுவித்திருக்கிறார்களாம்.

                                        (கூகிள் தந்த புகைப்படத்திற்கு நன்றி!)

நாம் விரும்பி சாப்பிடும் பாலில் உள்ள Lactose எனப்படும் சர்க்கரையை செரிமானம் செய்ய நமது இரைப்பை மற்றும் குடல்களில் உள்ள Lactase எனப்படும் நொதியம் (enzyme) தான் உதவுகிறது. ஆனால் சிலருக்கு 5 வயதுக்கு மேல் ஒரு சில காரணங்களால் அவர்கள் உடலில் இந்த enzyme இல்லாமால் போவதால் அல்லது குறைவதால்  இருப்பதால் ஏற்படும் Lactose Intolerance எனப்படும் இந்த வியாதியால் பாலை உட்கொள்ளும்போது வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.
(குறிப்பாக 90 விழுக்காடு கறுப்பின மக்கள்தான் இந்த தொந்தரவுக்கு ஆளாகின்றனராம்.)
பாலையும் பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் தவிர்ப்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ளமுடியுமாம்.சீன விஞ்ஞானிகள் தோற்றுவித்திருக்கின்ற இந்த மரபணு மாற்றப்பட்ட பசுக்கள் தரும் பாலில் Lactose இருக்காதாம் அல்லது மிக குறைவாக இருக்குமாம். எவ்வளவு Lactose இருக்கும் என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறதாம்.எனவே இந்த நோயால் அவதிப்படுவோருக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்திதான்.
மரபணு  மாற்றம்மூலம்  இன்னொரு  ஆராய்ச்சிக்குழுவால்
தோற்றுவித்திருக்கின்ற பசுவின் பாலில்,  Omega-3 என்கிற கொழுப்பு அமிலம் (Fatty Acids) அதிக அளவில் இருப்பதாகவும் இவை இதய நோய் வராமல் தடுக்கவும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் விமர்சர்களோ தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு அல்லாமல்  இந்த மரபணு மாற்றத்தால் உண்டாக்கப்பட்ட பசுக்கள் தரும் பாலின் ஆபத்தின்மை குறித்து கேள்விகளும் எழுப்பியுள்ளார்கள்.
எது எப்படியோ. வழக்கமான சீன தயாரிப்புக்களின் தரம் போல் அல்லாமல் இந்த புதிய கண்டுபிடிப்புகள் அவதிப்படுவோருக்கு உதவுமானால் இதுவரை அவர்களுக்கு கசந்த பால் இனிக்கும் தானே!

பி.கு:வழக்கமான எனது  அனுபவங்கள் பதிவுக்கு பதிலாக ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பதால் இந்த பதிவு.