வியாழன், 25 மார்ச், 2010

நினைவோட்டம் 19

நான் படித்த பள்ளி எனது பெரியம்மா வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தது. தினம் காலையில் 9 மணி அல்லது 9.15 மணிக்கு கிளம்பி பள்ளிக்கு செல்வேன்.

பள்ளியில் போதிய இடம் இல்லாததால் மூன்று பிரிவுகளை கொண்ட எட்டாம் வகுப்பு மாணவர்களான எங்களுக்கு மட்டும் பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு தனியார் கட்டிடத்தில் வகுப்பறைகள் ஒதுக்கியிருந்தார்கள். காலையில் பள்ளியில் 9 .45 மணிக்கு இறைவணக்கம் முடிந்ததும் நாங்கள் எங்களது வகுப்புக்கு செல்வோம்.

காலையில் 10 மணியிலிருந்து 1மணிவரை நான்கு பாடங்களும் மதியம் 2 மணியிலிருந்து 4.15 மணிவரை மூன்று பாடங்களும் இருக்கும்.(அப்போதெல்லாம் ஒரு பாடத்திற்கு 45 மணித்துளிகள் தான்.) மதிய இடைவேளை 1 மணியிலிருந்து 2 மணிவரை. அதற்குள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஆசிரியர்கள்நடந்துதான் பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் பள்ளியிலிருந்து எங்கள் கட்டிடத்திற்கு நடந்து வருவதற்கே பத்து மணித்துளிகள் ஆகிவிடும். அப்போது அனேகமாக யாரும் கைக்கெடிகாரம் அணியும் வழக்கம் இல்லாததால், நேரம் முடிந்தது தெரியாமல் பாடம் நடத்திக்கொண்டு இருப்பார்கள்.

பள்ளியில் ஒரு வகுப்பு முடிந்ததும் அடிக்கும் மணிச்சத்தம் எங்கள் கட்டிடம் வரை கேட்காதென்பதால் அடுத்த பாடம் எடுக்கும் ஆசிரியர் வந்தவுடன் தான் பாடம் நடத்துவதை முடிப்பார்கள். இதில் எங்களுக்கு என்ன கஷ்டம் என்றால் காலையில் கடைசி வகுப்பு எடுக்கும் ஆசிரியர் நேரம் போனது தெரியாமல் 2 மணிக்குள் முடிக்காவிட்டால் நாங்கள் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக சென்று சாப்பிட்டுவிட்டு வரவேண்டும்.

ஆனால் மதியம் கடைசி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் சிலபேர் தோராயமாக நேரத்தை கணக்கிட்டு எங்களை விட்டுவிடுவார்கள். அதனால் பல நாட்கள் நாங்கள் சீக்கிரமே வீட்டிற்கு வந்தது உண்டு. விளையாட்டு வகுப்பு இருக்கும் நாட்களில் நாங்கள் பள்ளிக்கு வந்துவிடுவோம்.அதுவுமல்லாமல் கைத்தொழில் வகுப்புக்கும் பள்ளிக்குத்தான் வரவேண்டும்.


அரியலூர் பள்ளியில் இரண்டு வருடம் தச்சு வேலையை கைத்தொழில் பாடமாக எடுத்து படித்த நான், பெண்ணாடத்தில் அந்த பிரிவு இல்லாததால் நெசவு பாடத்தை படிக்கவேண்டியதாயிற்று. அதுவும் ஒரு வருடம்தான். அதனால் அவைகள் இரண்டையுமே முழுவதாய் கற்றுக்கொள்ளவில்லை.


'தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா'வால்நடத்தப்பட்ட 'பிராத்மிக்' தேர்வு எழுதுவதற்காக, எங்கள் இந்தி ஆசிரியரால் பள்ளி முடிந்தபின் நடத்திய இந்தி வகுப்பில் நான் சேர்ந்திருந்ததால், நான் மட்டும் மாலையில் பள்ளிக்கு வந்து இந்தி 'டியூஷன்' முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவேன்.

எனக்கு அப்போது தெரியாது, பின்னால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இந்தி திணிப்பை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளபோகிறோமேன்று!


நினைவுகள் தொடரும்
வே.நடனசபாபதி

திங்கள், 1 மார்ச், 2010

காலத்தினால் செய்த நன்றி 3

அந்த பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரில், பழுது நீக்கும் பணியில் தீவிரமாக இரு பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

பக்கத்தில் ஒருநாற்காலியில் ஒருவர் அமர்ந்துகொண்டு என்ன செய்யவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்.


அவர் என்னைப்பார்த்ததும் தமிழன் என தெரிந்துகொண்டு 'என்ன வேண்டும்சார்?' என்றார். அப்போதுதான் கவனித்தேன் அவருக்கு ஒருகால் ஊனம்

என்பதை. 'மோட்டார் சைக்கிளில் 'கிளட்ச் கம்பி' அறுந்துவிட்டது. சரி செய்து தரவேண்டும்' என்றேன்.


'சார் இங்கே கார்களுக்கு மட்டும்தான் சர்வீஸ் செய்யப்படும்.

மோட்டார்சைக்கிள்,ஸ்கூட்டர் சர்வீசுக்கு நீங்கள் ஹரிநகர்

போகவேண்டும்.இருந்தாலும் இந்தநேரத்தில் நீங்கள் அம்மாவுடன் அங்கு போகவேண்டாம். இங்கேயே உட்காருங்கள்.நான் மெக்கானிக்கை இங்குஅழைத்துவர ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த ஒரு பணியாளரிடம் 'நீ ஹரி நகர் போய் மெக்கானிக்கை அழைத்துவா.வரும்போது புதிய கிளட்ச் கம்பி ஒன்றையும் வாங்கி வா' என சொன்னார்.


பிறகு எங்களிடம் ' ரொம்பவும் குளிராயிருக்கிறது. கொஞ்சம் டீ சாப்பிடுங்கள்.' என வற்புறுத்தி டீ வாங்கி கொடுத்தார்.


ஹரி நகரிலிருந்து மெக்கானிக் வந்து கிளட்சை சரி செய்து கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

'சார், நீங்கள்எந்தஊர்?என்றதும் நான்'விருத்தாசலம் அருகில் உள்ள தெ..புத்தூர்' என்றேன்.


உடனே அவர், 'சார் நீங்க நம்ம ஊர்காரர் ஆகிட்டீங்க. என் ஊர் கூட விருத்தாசலத்தைஅடுத்த முகசாபரூர்தான்.

நான்கூடவிருத்தாசலத்தில் காமாட்சி மோட்டார் சர்வீசில்மெக்கானிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன்.

ஒருவிபத்தில் காலை இழந்ததால் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து இந்த பணிமனையை ஆரம்பித்து நடத்திவருகிறேன்' என்றார்.


அவர் பெயர் கேசவன் என்றும் சொன்னார்.


மெக்கானிக் 'வேலை முடிந்துவிட்டது' என்றவுடன், நான் அவரிடம் 'எவ்வளவு தரவேண்டும்?' எனக்கேட்டதற்கு, 'இதற்கெல்லாம் ஒன்றும் வேண்டாம்சார்,நீங்கள்பத்திரமாக அம்மாவை கூட்டிகிட்டு வீட்டுக்கு போங்க' என்றார்.


நான் 'மெக்கானிக்கு தரவேண்டும் அல்லவா?' என்றதும்

'மெக்கானிக்கு மெக்கானிக் ஒன்றும் வாங்க மாட்டார்கள். நீங்கள் போய்வாருங்கள்' என்றார்.

'சரி, கிளட்சுக்கான பணத்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள்' என்றதும்

'அது ஒன்றும் அதிக விலையில்லை.நேரம் ஆகிவிட்டது, நீங்கள் போய் வாருங்கள்' என்றார்.


எவ்வளவோ சொல்லியும் பணம் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.


முன் பின் அறியாமல் இருந்தும், எந்தவித சேவைக்கட்டணமும் பெறாமல், அந்த நேரத்தில் அவர் செய்த உதவிக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பினேன். வீட்டுக்கு வந்து அவர் செய்த உதவியைப்பற்றி எண்ணியபோது,



காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.


என்ற குறட்பாக்கள்தான் நினைவுக்கு வந்தன.


இன்றைக்கும் கூட திரு கேசவன் அவர்கள், பலனை எதிர்பாராது செய்த அந்த உதவியை நினைத்துப்பார்க்கிறேன்.


அவர் எனக்கு உதவி செய்தது அவருள் இருந்த மனிதாபிமானமா?

அல்லது ஒரே ஊரைச்சேர்ந்தவன் என்பதால் ஏற்பட்ட பாசமா?

அல்லது தமிழன் என்ற உணர்வா?


என யோசிக்கும்போது மூன்றும்தான் என்பதே எனது எண்ணம்.