திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 27

ஒரு வழியாக எனது அண்ணனுக்கு விருத்தாசலம்
பள்ளியில் கணித ஆசிரியராக வேலை நியமன ஆணை வந்தது.

விருத்தாசலம் பள்ளியில் எனது அண்ணன் வேலைக்கு சேர்ந்த அன்று, சொல்லிவைத்தாற்போல் அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் B.Ed. படிக்கும்போது மாணவர் திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு எழுதிய 'குழந்தை தெய்வம்' என்ற கதை 'ஆனந்த விகடனில்' பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கதையோடு அவரது புகைப்படமும் வெளியாகி இருந்ததால் பள்ளிமுழுவதும் அதைப்பற்றியே பேச்சு. நானும் எனது வகுப்பு நண்பர்களிடையே அந்த கதையை எழுதியவர் எனது அண்ணன்தான் என பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தேன்.

விருத்தாச்சலத்தில் தங்குவதற்கு அண்ணன் வீடு பார்க்க தொடங்கினார். அய்யனார் கோவில் தெருவில் கார்மாங்குடியைச்சேர்ந்த காண்ட்ராக்டர்
திரு சொக்கலிங்கம் பிள்ளை என்பவரது வீடு இருப்பதும் ,அவர் விருத்தாசலம் வரும்போது மட்டும் தங்குகிறார் என்பதை கேள்விப்பட்டு, அந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்தார்.

வாடகை மாதம் ரூபாய் பதினைந்து மட்டுமே.அந்த வீடு கிணறோடு கூடிய பெரிய வீடு.

சனி ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளி மாலை நான் மட்டும் எங்கள் ஊர் பையன்களுடன் ஊருக்கு சென்றுவிட்டு திங்கள் காலை வந்துவிடுவேன்.

நாங்கள் சாப்பிடுவதற்கு கடை வீதியில் இருந்த கோமள விலாஸ் ஹோட்டலில் கணக்கு தொடங்கினார்.

காலையில் எட்டு மணிக்கு ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து பின்பு ஒன்பது மணிக்குமேல் பள்ளிக்கு கிளம்புவேன். மதியம் சாப்பாடு எனக்கும் அண்ணனுக்கும் சேர்த்து டிபன் கேரியரில் பள்ளிக்கு வந்துவிடும். இரவும் சாப்பாடு வீட்டுக்கு வந்துவிடும். சாப்பாடு எடுத்துவர ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அன்று (1957 ஜூலை மாதம் ) இருந்த உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

ஒரு இட்லி -ஒரு அணா (6 பைசா),

ஒரு செட் பூரி- இரண்டு அணா(12 பைசா),

ஒரு வடை-ஒரு அணா(6 பைசா),

ஒரு ஸ்வீட் - மூன்று அணா(18பைசா),

ஒரு காரம்- ஒரு அணா(6 பைசா),

ஒரு காபி- இரண்டு அணா(12 பைசா),

அதாவது SKC என அழைக்கப்பட்ட ஸ்வீட்,காரம்,காபி வெறும் ஆறு அணா(36 பைசா) மட்டுமே.

சாப்பாடு 50 பைசா தான்.

(சமீபத்தில் விருத்தாசலம் சென்று வந்தபோது, தற்சமயம்
ஹோட்டல்களில் ஒரு காபி 12 ரூபாய் எனக்கேள்விப்பட்டேன்.
1957ல் 12 பைசாவாக இருந்த ஒரு காபி இப்போது 12 ரூபாய் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு விலைவாசி உள்ளது என்று புரிந்துகொள்ளலாம்!)



நினைவுகள் தொடரும்



வே.நடனசபாபதி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நினைவோட்டம் 26

நான் விருத்தாசலத்தில் மூன்று ஆண்டுகள் அதாவது 1957 ஜூன் முதல் 1960 பிப்ரவரி வரை படித்தேன்.

(அப்போதெல்லாம் S.S.L.C எனப்படும் பள்ளி இறுதி ஆண்டு படிப்புக்கான தேர்வு பிப்ரவரிலேயே முடிந்துவிடும்)

நான் படித்தபோது விருத்தாசலம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னும் இருக்கிறது. விருத்தாசலத்தை சுற்றி பல குடியிருப்புகள் புதியதாக ஏற்பட்டிருந்தாலும் கடைவீதி அப்படியே தான் இருக்கிறது.

என்ன காரணத்தாலோ விருத்தாசலம் மாற்றங்களை விரும்பவில்லை போலும்!

இந்த இடத்தில் நான் விருத்தாசலத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயகுரவர்களால் பாடப்பெற்ற, இந்த ஊரின் உண்மையான பெயர் பழமலை ஆகும்.

திருமுதுகுன்றம் என்றும் அழகு தமிழில் பெயர் உண்டு.பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால், இது விருத்தாசலம் ஆனது. (விருத்தம் என்றால் பழையது, அசலம் என்றால் மலை.) விருத்தகிரி எனவும் அழைக்கப்பட்டது.

இந்த ஊர் கோவிலுக்கு மற்றுமோர் சிறப்பு உண்டு. இங்கு எல்லாமே ஐந்துதான். கோபுரம் ஐந்து, கொடிமரம் ஐந்து, மூர்த்திகள் ஐந்து, பிரகாரம் ஐந்து, தேர்கள் ஐந்து, மண்டபங்கள் ஐந்து, வழிபாடு ஐந்து, இறைவனின் பெயர் ஐந்து, ஊரின் பெயரும் ஐந்து!

இந்த ஊர் கோவில் கட்டப்படும்போது வேலை செய்தோருக்கு கூலியாக, இந்த கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தின் இலைகளைக்கொடுத்தார்கள் என்றும், அதை வாங்கிச்செல்லும் தொழிலாளிகள் அவற்றை தலையணைக்கு கீழே இரவு வைத்துவிட்டு காலையில் எடுக்கும்போது அவை பொற் காசுகளாக மாறியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வேலை ஒழுங்காக செய்யாதோருக்கு, அவர்கள் வேலை செய்த அளவுக்குத்தான் பொற் காசுகள் மாறி இருக்கும் என்றும் மீதமுள்ளவை வன்னி இலையாகவே இருக்கும் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நான் கூட வேடிக்கையாக சொல்வதுண்டு. இப்போதும் அந்த நடை முறை பின்பற்றப்பட்டால், அந்த மாதிரி இலைகள் காசுகளாக மாறினால், நம்மில் பல பேர் வெறும் இலையோடுதான் இருக்கவேண்டியிருக்கும் என்று.

இந்த ஊரின் நடுவே ஓடும்(?) மணிமுத்தா நதி காசியில் ஓடும் கங்கையை விட புண்ணியமானது என்றும் சொல்வார்கள். ஆனால் இன்றோ மழைக்காலங்களை தவிர மற்ற நாட்களில் தண்ணீரே இருப்பதில்லை.

இந்த ஊரில் உள்ள மணிலா மார்கெட் மிகவும் பழமையானதும், முக்கியமானதும் கூட.

இவ்வளவு சிறப்புகளைக்கொண்ட இந்த ஊர் பலபேருக்கு தெரியாமல் இருந்து, 2006 ல் நடிகர் விஜயகாந்த் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் தெரிய வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி