சாகரம்
என்றால் மாக்கடல் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சகாரம் என்று சொன்னால் எல்லோருக்கும்
புரியுமா எனத் தெரியவில்லை.ஒருவேளை எழுத்து மாறாட்டம் அல்லது சொற்கள் மாறாட்டம்
என்று சொன்னால் புரிய வாய்ப்புண்டு. இதை Spoonerism என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
நம்மில் சிலர்
வேகமாக பேசும்போது தம்மையறியாமல் அடுத்தடுத்துள்ள சொற்றொடர்களின் எழுத்துக்களையோ அல்லது
அந்த சொற்றொடரையோ மாற்றிப்போட்டு பேசுவதுண்டு.
நமது
மூளையின் வேகத்தை விட சிலசமயம் நமது வாய் வேகமாக செயல்படுவதுதான் அவ்வாறு எழுத்துக்கள்
அல்லது சொற்கள் இடம் மாறுவதன் காரணம் என்கிறார்கள் அறிவியலார்.
இதை Slips of the tongue
என்பார்கள்.இதை வேடிக்கையாக Tips of the slung என்று
சொல்வதும் உண்டு.ஆனால் சிலர் வேண்டுமென்றே சிலசமயம் இது போன்று பேசுவதும் உண்டு.
ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக் கல்லூரியின் தலைவராக இருந்த Reverend William Archebald Spooner அவர்கள்
அடிக்கடி இது போன்ற தவறுதலான சொற்றொடர்களை உபயோகிப்பாராம். அதனால் இவ்வாறு மாற்றி
பேசுவதை அவர் பெயரால் Spoonerism என்று பெயரிட்டிருக்கிறார்களாம்.அவர் சொன்ன சொற்றொடர்கள் பல
உண்டு.அவற்றில் ஒன்று. “Mardon
me, Padam”
இந்த Spoonerism பற்றி திரு தருமி அவர்கள்
2005 ஜூலை 31 இல் ‘சுஜாதா சொன்ன Spoonerism’ என்ற தலைப்பிலும், திரு ஸ்ரீதர் நாராயணன்
அவர்கள் 2009 டிசம்பர் 30 இல் மாஸ்டர் என்ற தலைப்பிலும் வலைப்பதிவில்
எழுதியிருக்கிறார்கள். இன்னும் பலர் எழுதியிருக்கக்கூடும்.
இருப்பினும்
எனக்கும் இதுபோன்று பேசியவர்களின் பேச்சைக் கேட்ட அனுபவம் உண்டு.ஆனால் இவ்வாறு
பேசுவதற்கு பெயர் Spoonerism என எனக்கு அப்போது தெரியாது. அப்படி நான்
இரசித்த மூன்று சகாரங்களை இங்கே சொல்லலாமென நினைக்கிறேன்.
அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் (1962-66) படிக்கும்போது முதலாம்
ஆண்டில் வேதியல் செய்முறைத் தேர்வை செய்து
கொண்டு இருந்தேன். Salt Analysis க்குக்காக
கொடுத்திருந்த வேதிப்பொருளில் உள்ள Salt என்ன என்று கண்டுபிடித்து
எழுதவேண்டும்.
அதற்காக
செய்யவேண்டிய பரிசோதனைகளை செய்துகொண்டு இருக்கும்போது இடையில் அடுத்து
செய்யவேண்டிய பரிசோதனை மறந்து விட்டது. எனக்கு அடுத்து பரிசோதனையில் ஈடுபட்டிருந்த
எனது நெருங்கிய நண்பனான திரு நாச்சியப்பனிடம் ‘அடுத்து என்ன
செய்யவேண்டும்?’ என மெதுவாக கேட்டேன்.
(என்
நண்பர் திரு நாச்சியப்பன். பூச்சியியலில்(Agricultural Entomology)
முனைவர் பட்டம் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பூச்சியியல் துறையின் தலைவர்
மற்றும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் சிதம்பரத்தில் வசிக்கிறார்.)
அவர்
உடனே அவசரமாக ‘Wad Ater. Wad Ater.’
என்றார். அதாவது Add Water என சொல்வதாக
நினைத்துக்கொண்டு! இக்கட்டான நிலையில் இருந்த எனக்கு உதவி செய்த அவருக்கு,
நன்றி கூட சொல்லாமல், தேர்வு கூடத்தில் இருக்கிறோம் என்பதையும்
மறந்து வாய் விட்டு சிரித்துவிட்டேன்.
அவ்வளவுதான்.
அந்த ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக பரிசோதனையில் ஈடுபட்டிருந்த எனது
வகுப்புத்தோழர்கள் அனைவருமே, என்ன ஆயிற்று எனக்கு என்று வியப்போடு பார்த்தபோது, அங்கிருந்த External Examiner என் அருகில்வந்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்.
‘ஒன்றுமில்லை’ என்றதும், ‘கோபமாக இது ஒன்றும் விளையாட்டுத் திடல்
அல்ல. ஆண்டுத் தேர்வு என்பது நினைவிருக்கட்டும். அடுத்த தடவை இதுபோல் நடந்தால் தேர்வை
மேற்கொண்டு தொடர அனுமதிக்க மாட்டேன். வெளியேற்றிவிடுவேன்.’
என சொல்லிவிட்டு சென்றார்.
வந்த
சிரிப்பை அடக்கிக்கொண்டு தேர்வை முடித்தேன். பின்பு வெளியே வந்ததும் அது பற்றி
எல்லோரிடமும் சொல்லி நண்பர் நாச்சியப்பனை கேலி செய்து கொண்டு இருந்தேன். இப்போது
கூட நண்பர் நாச்சியப்பனைப் பார்க்கும்போது அதைப் பற்றி சொல்லித்தான் இருவரும்
சிரித்துக் கொண்டு இருக்கிறோம்.
அடுத்து
நடந்தது இறுதியாண்டு படிக்கும்போது. இறுதி ஆண்டில் வேளாண் விரிவாக்க (Agricultural Extension) பாடத் திட்டத்தின் படி, முதல் ஆறு மாதங்கள் கட்டாயம் அருகில் உள்ள சிற்றூர்களுக்கு சென்று அங்குள்ள
உழவர்களின் வயல்களில் Result Demonstration எனப்படும் செயல்முறை விளக்கம் நடத்தி பயிற்சி பெறவேண்டும்.
அதனால்
தினம் காலையில் கல்லூரி பேருந்தில் அழைத்து சென்று, கீரப்பாளையம்
ஊராட்சி ஒன்றியத்தில், அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஊர்களில் விட்டு செல்வார்கள். மதியம் வரை அங்கிருந்து, செய்முறை பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட வயல்களில் புதிய சாகுபடி முறைகளை
கையாள்வது பற்றி அங்குள்ள வேளாண்
பெருமக்களுக்கு எடுத்து சொல்லி, அதை அவர்கள் பின்பற்ற உதவ
வேண்டும்.
ஒவ்வொரு மாணவனும்
பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஊரில் Urea என்கிற
தழைச்சத்து உரம், Super Phosphate என்கிற மணிச்சத்து உரம், Muriate of Potash என்கிற சாம்பல் சத்து உரம் ஆகிய
உரங்களில் ஏதேனும் ஒன்றை, செயல்முறை விளக்கத்திற்காக (Demonstration) எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும்
சொல்லியிருந்தார் எங்களது வேளாண் விரிவாக்க (Agricultural
Extension) பேராசிரியர்.
முதல்
நாள் பயிற்சிக்கு கிளம்புமுன் எங்களது பேராசிரியர். ஒவ்வொரு மாணவனும் எழுந்து, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள
ஊரின் பெயரையும், அங்கு செயல்முறை விளக்கத்திற்கு
எடுத்துக்கொண்ட உரத்தின் பெயரையும் சொல்லச் சொன்னார்.
ஒவ்வொருவரும்
எழுந்து நின்று விவரங்களை சொன்னோம். என் முறை
வந்தபோது, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஊர் ஓரத்தூர் அருகே இருந்த பரதூர்
சாவடி என்றும், செயல் விளக்கம் தர இருக்கும் உரம் Urea என்றும் சொன்னேன்.
எனது
வகுப்பு நண்பர் ஒருவர், அவர் முறை வந்தபோது எழுந்து வேகமாக Muriate நல்லூரில், முடிகொண்ட Potash என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.அதாவது முடிகொண்டநல்லூர் என்ற ஊரில் Muriate of Potash என்று சொல்வதற்கு பதிலாக!
நாங்கள் அனைவரும், கண்டிப்புக்கு
பெயர் போன பேராசிரியரின் வகுப்பில் இருக்கிறோம் என்பதையும் மறந்து வாய்விட்டு
சிரித்தோம்.பேராசிரியரும்தான்.
அடுத்து நடந்தது
வங்கிப்பணியில் இருக்கும்போது. எனது சக ஊழியர் ஒருவர் வாடகைக்காரில் பயணம்
செய்தபோது ஒரு விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
அவரது நலம் குறித்து விசாரிக்க சென்றிருந்தேன். ‘எப்படி அந்த
விபத்து நடந்தது?’ என விசாரித்தபோது அவர் ‘சார். எங்களது காரோட்டுனர் மிக வேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை
இழந்து சாலை ஓரத்தில் இருந்த கம்பி தந்தங்களில் மோதிவிட்டார்.; என்றார்.
அவர்
சொல்ல நினைத்தது தந்திக் கம்பங்கள். ஆனால் சொன்னதோ
கம்பி தந்தங்கள்! அவர் சொன்னது சிரிப்பை வரவழைக்கக்கூடிய ‘சொற்கள் மாறாட்டம்’ என்றாலும், விபத்து பற்றி விசாரிக்க சென்ற இடத்தில் சிரிக்க முடியுமா என்ன?
கம்பி தந்தங்கள்! அவர் சொன்னது சிரிப்பை வரவழைக்கக்கூடிய ‘சொற்கள் மாறாட்டம்’ என்றாலும், விபத்து பற்றி விசாரிக்க சென்ற இடத்தில் சிரிக்க முடியுமா என்ன?
சென்ற வாரம்
நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.’எங்கே ஆளையே காணோம்?’ என்றதற்கு, அவர் ‘மழனி பலைக்குபோயிருந்தேன்.’ என வேகமாக சொன்னார். அதன் விளைவுதான் இந்த பதிவு!