பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேற்பு அறை சென்றபோது, அங்கே அந்த ஓய்வக மேலாளர் திரு செல்வம் அவர்களுடன் தஞ்சை நண்பர் R பாலசுப்பிரமணியனும் இருந்தார். வரும் நண்பர்களுக்கு அறை ஒதுக்குவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தார்.
நண்பர் பாலுவின் ஆலோசனைப்படி எனது PAN அட்டையின் நகலை முன்பே திரு செல்வம் அவர்களுக்கு அனுப்பிவிட்டபடியால், எனக்கான அறை ஒதுக்கப்படிருந்தது. அறை சாவியையும் WIFI க்கான கடவு சொல்லையும் தந்த திரு செல்வம், ஓய்வக ஊழியர் ஒருவரை எனது அறையை காண்பிக்க அனுப்பினார்.
வரவேற்பு கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததும் கண்ட காட்சிகள் கண்ணுக்கு இனியவைகளாக இருந்தன, வரிசையாய் இருந்த குடில்களும் அழகான நீச்சல் குளமும், அதற்கு அருகே இருந்த பெரிய குளமும் சுற்றி இருந்த தங்கும் விடுதிகளும் தென்னை மரங்களும் என்னை ஏதோ ஒரு புதிய உலகிற்கு அழைத்து சென்றது போல் இருந்தது.
அவைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டே, அந்த ஓய்வக ஊழியரை பின் தொடர்ந்தேன். எனக்காக ஒதுக்கப்பட்ட அறையைத் திறந்து காட்டிவிட்டு ஏதேனும் தேவையெனில் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டார்.
உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறையும் அடுத்து படுக்கை அறையும் எல்லா வித வசதிகளோடும் இருந்தன. இரண்டு அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரண்டு குளியல் அறைகளும் இருந்தன.
அறைக்கு வெளியே இருந்த குளத்தை அமர்ந்து பார்த்து இரசிக்க ஒரு அமைப்பும் இருந்தது.
அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு சுமார் 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியில் கூடவேண்டும் என நண்பர் பாலு கேட்டுக் கொண்டதால் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்.
பின்னர் குளித்து உடை மாற்றிக்கொண்டு 4 மணிக்கு நீச்சல் குளம் அருகே உள்ள புல்வெளியை அடைந்தேன்.
தொடரும்