செவ்வாய், 30 ஜூலை, 2013

நினைவோட்டம் 67





புகுமுக வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை, கல்லூரித் தலைவர் பெற்றுக்கொண்டிருந்த அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த நான், உள்ளே வரச்சொன்ன கம்பீரக் குரல் கேட்டு தயக்கத்தோடு நுழைந்தேன்

அங்கு இருந்த பெரிய மேசை அருகே இருக்கையில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் தும்பைப்பூ போன்ற தூய வெண்ணிறத்தில் மேல் அங்கி (Gown) உடுத்தி, இடுப்பில் சிகப்பு வண்ணத்தில் நாடா அணிந்து  சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார் கல்லூரி முதல்வர். (அவர் மதிப்பிற்குரிய அருட் தந்தை எரார்ட் 
(Rev Fr Ehrhart SJ) என பின்னர் தெரிந்துகொண்டேன்.)

அவரைப் பார்த்ததுமே அவர் வெளி நாட்டவர் என தெரிந்தது. அங்கு செல்லும் வரை எனக்குத் தெரியாது அந்த கல்லூரியின் முதல்வர் ஒரு வெளிநாட்டவராய் இருப்பார் என்று.

என்னைப் பார்த்ததும் ‘Come on my dear boy’ என்று அவர் அன்போடு அழைத்த போதும், எனக்குள் இருந்த பயம் இன்னும் அதிகமாயிற்று. காரணம் அவரோ ஒரு வெளிநாட்டுக்காரர்.அதுவரை நான் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு 
பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும் தமிழ் வழிக் கல்வியில் படித்திருந்ததால், ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமில்லை. அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் 
எப்படி ஆங்கிலத்தில் பதில் சொல்வது என்று  நினைத்தபடியே கதவருகேயே 
நின்றேன்.

அதற்குள் வெளியே இருந்தவர் நான் தயங்கி கதவருகேயே நிற்பதைப் பார்த்து. 
உள்ளே போய் விண்ணப்பத்தைக் கொடுங்கள். என்றார். தயங்கி உள்ளே சென்று முதல்வரிடம் எனது விண்ணப்பத்தை தந்தேன். எனது மதிப்பெண்களைப் 
பார்த்துவிட்டு முகத்தில் புன்னகை தவழ எந்த Group வேண்டும்?’ என ஆங்கிலத்தில் கேட்டார். நான் ஒரே வரியில் ’Science Group” என்றதும், ஏன் கணக்கில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்களே? Maths Group எடுத்துக்கொள்ளலாமே?’ என்றதும், எனக்கு திருப்பி எப்படி பதில் சொல்வதென தெரியவில்லை.

பிறகு திக்கித்திணறி ‘I want to study M.B.B.S.’ என்றேன். உடனே அவர் 
புன்முறுவலோடு, ‘O.K. You will receive the admission card in due course.’ 
என சொல்லிவிட்டு எனது விண்ணப்பத்தில் கையொப்பமிட்டார்.

மிக்க மகிழ்ச்சியோடு ‘Thanks sir.’ என்றேன்.உடனே அவர் சிரித்துக்கொண்டே 
'Don’t say Sir. Say Father.’ என்றார். ’Yes Father.’ என சொல்லிவிட்டு  தேர்வில் வெற்றிபெற்றது போன்ற உணர்வோடு வெளியே வந்தேன்.

பயந்துகொண்டே உள்ளே சென்ற என்னை, பள்ளியில் படித்து வரும் மாணவனுக்கு தயக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து, மதிப்பிற்குரிய  அருட் தந்தை எரார்ட் அவர்கள் சிரித்தமுகத்தோடு உள்ளே அழைத்ததையும், அன்போடு பேசி நான் கேட்ட Group ஐ தந்ததையும், 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நினைக்கும்போது, அளவில்லா மகிழ்ச்சியைத் தந்த அந்த நிகழ்வு, ஏதோ நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது.  

வெளியே காத்துக்கொண்டிருந்த, என்னை அழைத்து வந்த நண்பரிடம், கல்லூரியில் சேர இடம் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை சொல்லிவிட்டு, கல்லூரி முதல்வரை Sir’ என அழைத்ததையும், அதற்கு அவர் Father’ என அழைக்க வேண்டும் என சொன்னதையும் சொன்னேன்.

அதற்கு அவர் சொன்னார். பாதிரியார்களை Father என்றுதான் அழைக்கவேண்டும். உங்கள் ஊரில் Church இல்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே. என்றார். 

எங்கள் ஊரில் Church இருக்கிறது. ஆனால் நான் அங்கு போனதில்லையால் எனக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. மேலும் எனக்கு நெருங்கிய வகுப்புத்தோழனே ஒரு கிறித்துவர் தான். ஆனால் இதைப்பற்றியெல்லாம் பேசியதில்லை. என்றேன்.

பிறகு அவர் என்னை என் அண்ணன் வீடு வரை அழைத்து சென்று விட்டுவிட்டு திரும்பிவிட்டார்.அன்று மாலை அண்ணன் Camp இல்  திரும்பியவுடன் அவரிடம் கல்லூரியில் இடம் கிடைத்ததை சொல்லிவிட்டு,  மறு நாள் காலை இரயிலில் கிளம்பி விருத்தாசலம் வந்து ஊர் திரும்பிவிட்டேன்.  

ஊருக்கு வந்து அப்பாவிடம் செய்தியை சொன்னபோது சந்தோஷப்பட்டார்கள். நான்  அதுவரை அரைக் கால்சட்டையைத்தான் அணிந்திருந்தேன். கல்லூரிக்கு Pant அணிந்து செல்ல வேண்டும் என்பதால், என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள், Pant க்கு  துணி வாங்கி தைப்பதற்கு  அளவு கொடுக்க  என்னை விருத்தாசலம் அழைத்து சென்றார்.

அங்கு மாப்பிள்ளை செட்டியார் கடை என அழைக்கப்பட்ட துணிக்கடையில் இரண்டு Pant களுக்கான துணியையும், Slack Shirt என அழைக்கப்பட்ட அரைக்கை சட்டை நான்கு தைக்க, துணிகளையும் வாங்கிக்கொண்டு எங்களது ஆஸ்தான தையல்காரரான திரு விருத்தகிரியிடம் அழைத்து சென்றார்.  ஏன் அவரை  ஆஸ்தான தையல்காரர் என்றேன் என்றால், அவரது தந்தை காலத்தில் இருந்தே  எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடைகள் தைக்க அவர்களிடம் தான் கொடுப்போம்.

(எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.எங்களுக்கு தைக்க வேண்டிய துணிகள் நிறைய இருக்கும்போது எங்கள் ஊரிலிருந்து எங்கள் மாட்டு வண்டியை  அனுப்பினால், அவர்கள் இருவரும் தையல் இயந்திரத்தோடு எங்கள் ஊருக்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி அனைத்தையும் தைத்துக் கொடுத்து சென்றதுண்டு.)

பின்பு  எனது உடைகள் மற்றும் புத்தகங்களை வைக்க ஒரு டிரங்க் பெட்டி என்று சொல்லப்பட்ட இரும்பு பெட்டிக்கும் என் அண்ணன் ஆர்டர் கொடுத்தார். இப்போது Moulded பெட்டிகள், Stylish PP Moulded Products மற்றும்  Sky Bags உபயோகிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்த பெட்டிகள் எப்படி இருக்கும் எனத்தெரியாது என்பதால் அவர்களுக்காக அதனுடைய படங்களை கீழே தந்துள்ளேன்.









சாம்பல் வண்ணம் பூசப்பட்ட அந்த பெட்டியின் விலை அப்போது வெறும் பத்து ரூபாய்கள் தான்.அது இன்னும் என்னோடு இருக்கிறது பத்திரமாக. பழைய நினைவுகளின் சாட்சியாக!  

ஒரே வாரத்தில் Pant தைத்து திரு விருத்தகிரி கொடுத்துவிட்டார். அதைப் போட்டு சரி பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லில் அடங்காது. ஏதோ பெரிய மனுஷன் ஆனதுபோல பரவசம். கல்லூரியில் படிக்கப் போவதால் இனி நாம் அரைக் கால்சட்டையை அணிவதிலிருந்து விடுதலை என நினைத்தேன்.

ஆனால் பின்னர் வேளாண் அறிவியல் படிக்கும்போது, காலையில் பண்ணைப் பயிற்சிக்கு செல்லும்போது நான்கு ஆண்டுகள் அரைக் கால்சட்டையைத்தான் அணியப் போகிறேன் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!

புனித வளவனார் கல்லூரியிலிருந்து சேர்க்கை அட்டையை (Admission Card) எதிர்பார்த்துக்கொண்டு இருந்தபோது, திருச்சி தேசியக் கல்லூரியிலிருந்தும்  
S.S.L.C புத்தகத்தோடு வரும்படி அஞ்சல் வந்தது. ஏற்கனவே சேர்க்கை உறுதி ஆகிவிட்டபடியால் நான் அங்கு செல்லவில்லை.

மறு வாரத்தில் திருச்சி புனித வளவனார் கல்லூரியிலிருந்து, சேர்க்கை 
அட்டையோடு கல்லூரி திறக்கும் நாள் மற்றும் கல்லூரிக்கு கட்டவேண்டிய 
தொகை குறித்த கடிதத்தையும் அனுப்பியிருந்தார்கள்.
  
நானும் கல்லூரிக்கு செல்ல தயாரானேன்.


நினைவுகள் தொடரும்  

வே.நடனசபாபதி

வியாழன், 25 ஜூலை, 2013

எனது முதல் கணினி அனுபவம் – தொடர் பதிவு



2011 ஆம் ஆண்டில் தொடர்பதிவிட்டுக்கொண்டிருந்த வலையுலக நண்பர்கள், சமீபகாலமாக எந்த தலைப்பிலும் தொடர் பதிவு எழுதாமல் இருந்தபோது, அதை ஒரேயடியாக மறந்து விட்டார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த அலை ஓயவில்லை. என்பதை நண்பர் திரு குட்டனின் அழைப்பு உறுதி செய்திருக்கிறது. 

நண்பர் திரு குட்டன் அவர்கள் என்னையும் எனது முதல் கணினி அனுபவம் பற்றி தொடர் பதிவிட அழைத்துள்ளார். அவருக்கு எனது நன்றி.

நான் முதன் முதல் தொடர்பதிவிட்டது திரு சென்னை பித்தன் அவர்கள் அழைப்பிற்கிணங்கி நண்பேண்டா என்ற தொடர் பதிவுதான். பின் அவரது அழைப்பை ஏற்று முத்தான மூன்று மற்றும் மழலை உலகம் மகத்தானது  என்ற தொடர்பதிவுகளையும் மின்னல்வரிகள் திரு பால கணேஷ் அவர்கள் அழைப்பை ஏற்று மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்ற தொடர் பதிவையும் எழுதியுள்ளேன். திரும்பவும் தொடர் பதிவிட வாய்ப்பை ஆரம்பித்து வைத்த நண்பர்களுக்கு நன்றி.

முதன் முதலில் நான் கணினி பற்றி கேள்விப்பட்டது 1973 இல் புது தில்லியில் இருக்கும்போது தான். எனது நண்பர் ஒருவர் மைய அரசில் பணிபுரிந்துகொண்டு இருந்தவர், தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள கணினி பற்றி சொல்லும்போது, அது ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொண்டு இருக்கும் இயந்திரம் என்றும் அதில் புள்ளி விவரங்களை சேகரித்து வைக்கலாம் என்றும் தேவைப்படும்போது அந்த விவரங்களை எடுத்துக்கொள்ளமுடியும் என்று சொன்னபோது வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தது உண்மை.  

பொறியாளர்கள் மட்டுமே கணிணியைக் கையாளமுடியும்,என நினைத்ததால் மேற்கொண்டு அதில் நாட்டம் செலுத்தவில்லை.பின்பு சிண்டிகேட் வங்கியில் சேர்ந்த முதல் நாள், வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்த தகவல் தொகுப்புத் துறை (Data Processing Department) க்கு அழைத்து சென்றார்கள். அங்குள்ள கணினி இயந்திரங்களைக் காட்டி இங்குதான் ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் (Pay Roll) தயாரிக்கப் படுகின்றன என்றபோது அவைகளை வெறும் அச்சிடும் இயந்திரம்போலத்தான் எனக்குத் தோன்றின.

பின்னர் வங்கியில் ஒரு மாவட்ட கிளையில் முதுநிலை மேலாளராக பணியாற்றியபோது, ஒருநாள் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். 
தான் IBM இல் வேலை பார்த்து வந்ததாகவும், பிறகு பணியை விட்டு வந்து அந்த ஊரில் கணினியில் பயிற்சி தருவதாகவும் சொன்னார். மேலும் அரசு அப்போது நடத்தும் ஒரு தேர்வுக்கு தயார்செய்து சான்றிதழ் பெற உதவுவதாகவும் சொன்னார்.

வங்கிகள் கணினிமயமாக்கப்பட இருப்பதால், வங்கி ஊழியர்களுக்கு கணினி பற்றிய அறிவு அவசியம் இருக்கவேண்டும் என்றும், நாங்கள் ஒரு குழுவாக அவரது பயிற்சியில் சேர்ந்தால் கட்டணத்தில் சலுகை தருவதாகவும், தினம் மாலையில் பயிற்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் எங்களுக்கு கணினியைக் கையாளும் கலையைக் கற்றுத் தருவதாகவும் சொன்னார்.

உடனே கணினி வல்லுனராகப் போவதாக கற்பனையில் மிதந்தபடி, நான் எனது கட்டணத்தை தந்தேன். என்னைப்பார்த்து என்னோடு பணிபுரிந்த நண்பர்களும் பணத்தைக் கட்டினார்கள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் எங்களது பயிற்சி தொடங்கியது.முதல் நாளே எங்களை கணினி முன் உட்கார வைத்து கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பதுபோல் சொல்லித்தருவார் என நினைத்துக்கொண்டு சென்றபோது ஏமாற்றமே மிஞ்சியது அவரது பயிற்சிக்கூடத்தில் இருந்ததென்னவோ ஒரே ஒரு மேசைக் கணினிதான்.அதுவும் ஒரு நெகிழி(Plastic) உறையால்  மூடப்பட்டு இருந்தது.  

அவர் உங்களுக்கு முதலில் Programme எழுத சொல்லித்தருகிறேன் என்று ஆரம்பித்தபோது நான்  கேட்ட கேள்வி, “எப்போது எங்களை கணினிமுன் உட்கார வைப்பீர்கள்?’ என்பதுதான். அதற்கு அவர் முதலில் இதைக் கற்றுக்கொள்ளுங்கள். பின்பு உட்காரலாம். என்றார்.

ஒருவாரம் ஆயிற்று, இரண்டு வாரம் ஆயிற்று. அவர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தாரே தவிர கணினியை கண்ணில் காட்டவில்லை. சரி இவர் தெருவில் வித்தைகாட்டும் பாம்பாட்டி கீரிப்பிள்ளை பாம்பு சண்டையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு காண்பிக்காமல் இருப்பதுபோல், இவரும் நம்மை கணினி அருகே அண்டவிட மாட்டார் போலிருக்கிறதே என நினைத்துக்கொண்டு அந்த பயிற்சிக்குப் போவதையே நிறுத்திவிட்டேன்.

இருந்தாலும் கணினியில் எப்படியாவது பயிற்சிபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் அந்த ஆசை நிறைவேறியது பத்து ஆண்டுகளுக்குப் பின்தான். வங்கியின் பணிகளை அப்போது முழுமையாக கணினிமயமாக்க எண்ணியபோது நான் வட்டார மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் ஒரு மேசைக் கணினி தந்தார்கள். ஆனால் அதை எப்படி இயக்குவது எனத் தெரியாததால் அதை அப்படியே மேசையின் ஓரத்தில் வைத்திருந்தேன்,

காரணம் அந்த வயதில் எப்டி இயக்குவது என மற்றவர்களிடம் கேட்க தயக்கம் இருந்ததால்.ஆனால் தினம் காலையில் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் அந்த கணினி என்னைக் கவனி. சொல்வதுபோல் இருக்கும். ஒரு நாள் தயக்கத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு எனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலரைக் கூப்பிட்டு எப்படி இதை இயக்குவது என சொல்லிக்கொடுங்கள் என்றேன்.

அவர் சொல்லிக் கொடுத்தபின் நான் முதலில் செய்து பார்த்தது Desktop இல் படத்தை மாற்றியதுதான்! பின்பு செய்தது மின்னஞ்சலுக்காக கணக்கு தொடங்கியதுதான். அப்போது கூட Login Id க்கு எனது முழுப்பெயரையும் அதாவது V.Nadanasabapathy என்று கொடுத்தபோது எனக்கு உதவிய நண்பர் சொன்னார். சார்.இப்படி நீளமாக Login Id இருந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப மற்றவர்கள் சிரமப்படுவார்கள். எனவே சுருக்கமாகத் தாருங்கள். என்றார்.

அப்படி தத்துபித்தென்று கற்றுக்கொள்ள ஆரம்பித்த நான், ஓர் ஆண்டுக்குள் கற்றுக் கொள்ளவேண்டியதைக் கற்றுக்கொண்டு, எங்களது வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு K.V.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னால் Power Point Presentation தரும் அளவிற்கு முன்னேறினேன் என்பதில் எனக்கு பெருமையே. 

இது தொடர் பதிவென்றாலும் முடிவு ஒன்று என்று இருக்குமல்லவா? அதனால் யாரையும் தொடர் பதிவிட அழைக்காமல்,நான் கணினி பயிற்சி பெற சென்றபோது கேட்ட நகைச்சுவையைச் சொல்லி பதிவை முடிக்கலாமென  எண்ணுகிறேன். கணினிப் பொறியாளர்கள் மன்னிப்பார்களாக!

Question: What is the similarity between Computer Engineers and Beggars?

Answer:  Both are working on Platform.