சனி, 22 அக்டோபர், 2011

நினைவோட்டம் 52

அப்போதெல்லாம், சிறப்பு கணிதத்தின்
(Composite Mathematics) கேள்வித்தாள் A,B என
இரு பிரிவாக இருக்கும்.A பிரிவில் ஒரு வரியில்
பதில் தரக்கூடிய 30 வினாக்கள் இருக்கும்.
ஒவ்வொரு வினாவிற்கும் 1 மதிப்பெண் உண்டு.
அனைத்து வினாக்களுக்கும் பதில் தரவேண்டும்.
மொத்தம் 30 மதிப்பெண்கள்.

B பிரிவில் நான்கு பகுதிகள் இருக்கும்.முதல்
பகுதியில் எண்கணிதம் எனப்படுகின்ற Arithmetic
பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு
கேள்விக்கும் 5 மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு
வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.ஆக மொத்தம்
முதல் பிரிவுக்கு 10 மதிப்பெண்கள்.

இரண்டாம் பகுதியில்,தேற்றம் எனப்படும் Theorem
பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஆனால்
இந்த பிரிவில் ஒவ்வொரு வினாவுடனும் Rider எனப்படும் துணை வினா உண்டு.ஒவ்வொரு
வினாவுக்கும் 10 மதிப்பெண்கள்(அதில் தேற்றத்திற்கு 4 மதிப்பெண்கள், Rider க்கு 6மதிப்பெண்கள்)
இங்கும் மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை
அளிக்கவேண்டும். ஆக மொத்தம் இரண்டாம்
பிரிவுக்கு 20 மதிப்பெண்கள்.

மூன்றாம் பகுதியில், இயற்கணிதம் (அ) அட்சர கணிதம்
எனப்படும் Algebra பாடத்தில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 10மதிப்பெண்கள்.
மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.

ஆக மொத்தம் மூன்றாம் பிரிவுக்கும் 20 மதிப்பெண்கள்.

நான்காம் பகுதியில்,வடிவியல் (அ) வடிவவியல்
எனப்படும் Geometry பாடத்தில் மூன்று வினாக்கள்இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும்
10 மதிப்பெண்கள்.மூன்றில் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும்.
ஆக மொத்தம் நான்காம் பிரிவுக்கும் 20 மதிப்பெண்கள்.

ஆக B பிரிவு கேள்விகளுக்கு மொத்தம் 70 மதிப்பெண்கள்.

பொதுவாக மாணவர்கள் கேள்வித்தாள் கையில்
கொடுத்ததும்,பிரிவு A ல் உள்ள ஒருவரி கேள்விகளுக்கு
பதில் எழுத ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று
கேள்விகளுக்கு மேல் பதில் தெரியாதபோது அதையே
யோசித்துக்கொண்டு இருக்கும்போது நேரம் போய்விடும்.

30 மதிப்பெண்களுக்காக நேரத்தை வீணடித்துவிட்டு
பிரிவு B க்கு வரும்போது நேரம் இல்லாமல் எல்லா
கணக்குகளையும் போடமுடியாது. அதனால்
மதிப்பெண்கள் குறைவதோடு கணிதத்தில் தோல்வி
அடைவதும் உண்டு.

அதனால் என் அண்ணன் என்ன சொல்வார் என்றால்,
‘யாரும் கேள்வித்தாள் கொடுத்ததும் A பிரிவு
கேள்விகளையே பார்க்காதீர்கள்.நேரே B பிரிவில்
உள்ள Geometry கணிதத்தில் கேட்கப்பட்ட கணக்குகளை
போடுங்கள்.’என்பார்.

காரணம் தேர்வு அறைக்குள் நுழையும் சமயம் பென்சில்
முனை கூராக இருக்கும். பின்பு பயத்தாலோ அல்லது
கைதவறியோ கீழே போட்டுவிட்டால் முனை மழுங்க
வாய்ப்பு அதிகம்.அதனால் முதலில்(அதுவும்
வரைப்படத்தில்)போடப்படும் கோடுகள்
துல்லியமாகவும், சரியான விடைகளைப்பெற
உதவியாய் இருக்கும் என்பதால்.

Geometry கேள்விக்கு படம் போட்டு விடை கண்டுபிடிக்கு
முன்பு எப்படி அந்த படத்தை போடப்போகிறோம்
என்பதை சுருக்கமாக மாதிரி படம் வரைந்து
எழுதவேண்டும் அதற்கு வரை முறை என்றுபெயர்.அதற்கு 3 மதிப்பெண்கள்.
Drawing க்கு 7 மதிப்பெண்கள்.இரண்டு கணக்கையும்
போட்டால் நிச்சயம் 9+9= 18 மதிப்பெண்கள் கிடைக்கும்.

பின் Arithmetic கணக்குகளை போட்டால் 10
மதிப்பெண்கள் கிடைக்கும்.பிறகு Theorem கேள்விகளில்
இரண்டுக்கு தேற்றம் எழுதினாலே 8 மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக நிச்சயம் 36 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.

பாஸ் மார்க் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும்,
(அப்போது 35 மதிப்பெண்கள் எடுத்தாலே ‘பாஸ்’ தான்.)
Rider மற்றும் அல்ஜீப்ரா கணக்குகளை தவறு செய்யாமல் போடும் தைரியம் வந்துவிடும்.

அப்படி தவறாக போட்டாலும் Steps க்கு மதிப்பெண்
உண்டு என்பதால் நிச்சயம் B பிரிவில் 45 மதிப்பெண்கள்
பெற்றுவிடலாம்.பின் A பிரிவு கேள்விகளில் 30 க்கு 10
கேள்விக்கு பதில் சரியாக எழுதினாலே,10 மதிப்பெண்கள் கிடைக்கும்.ஆக மொத்தம் 55 மதிப்பெண்கள் பெற்று விடலாம் என்பார்.

இது சராசரி மாணவன் எடுக்கும் மதிப்பெண்கள்.
நம்பிக்கையோடு, நிதானமாக கணக்கு போடுபவர்கள்
நிச்கயம் 80 மதிப்பெண்கள் எடுக்கமுடியும் என்பார்.

ஒருதடவை எங்கள் பள்ளியில் நடந்த S.S.L.C
கணிதத்தேர்வில் கேள்வித்தாள் கொடுத்ததும்,எல்லா
மாணவர்களும் சொல்லி வைத்தது(?) போல் கடைசி
பக்கத்திற்கு சென்றதும்,முதலாவதாக Geometry
கணக்கைப்போட ஆரம்பித்ததும் தேர்வு
கண்காணிப்பாளராக வந்த ஆசிரியருக்கு ஒரே
ஆச்சரியமாம்.(அந்த கண்காணிப்பாளர் வேறு
பள்ளியிலிருந்து தேர்வு பணிக்காக வந்தவர்.)
பின்பு விவரம் அறிந்து, தேர்வு முடிந்ததும்
பாராட்டினாராம்.

என் அண்ணன் ஆலோசனைப்படி தேர்வை எழுதிய
மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள்
பெற்றனர் என்பது உண்மை.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கு நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. நான் composite mathsதான் படித்தேன்.ஆனால் இந்த விவரங்கள் எதுவும் நினைவில்லை.உங்களுக்கு அபார நினைவாற்றல்!
    நன்று.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு