திங்கள், 9 செப்டம்பர், 2013

பொரி பொரித்தன்னைக்கும் பட்டினிதான்!



 சென்னை வாழ் மக்களை ஆட்டோ ஓட்டுனர்களின் அசுரப்பிடியிலிருந்து காப்பாற்ற 2000 ஆம் ஆண்டு வாக்கில் அவதாரம் எடுத்தவைதான் Call Taxi கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Call Taxi க்கும் எனக்கு ஏதோ ஏழாப்பொருத்தம் போல. முதன் முதல் இவ்வகை டாக்ஸிகள் சென்னையில் அறிமுகமானபோது, நான் பணி புரிந்துகொண்டிருந்த  கண்ணூரிலிருந்து சென்னைக்கு வந்தபோது  சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த ஒரு கால் டாக்ஸியை எனது இருப்பிடம் செல்ல கூப்பிட்டேன். அந்த டாக்ஸியை ஒட்டியவர்  இராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்ற திரு இராமநாதன் என்பவர்.அவரே சொந்தமாக வண்டியை வாங்கி, எந்த நிறுவனத்துடனும்  இணைக்காமல் ஒட்டிக்கொண்டிருந்தார்.

அவரது அணுகுமுறையும், பேச்சும் நல்ல முறையில் இருந்ததால் அவரது கைப்பேசி எண்ணை குறித்து வைத்துக்கொண்டு எப்போது சென்னை வந்தாலும் அவரைத்தான் அழைப்பேன். அவரும் சொன்ன நேரத்தில் வந்து உதவிக்கொண்டி இருந்தார்.

ஏனோ தெரியவில்லை பல மாதங்களுக்குப் பிறகு அவரை தொடர்பு கொண்டபோது தொடர்புகொள்ள முடியவில்லை. அவரால் தன்னந்தனியனாக மற்ற நிறுவனங்களின் கடும்போட்டியை எதிர்கொள்ள முடியவில்லை போலும்.

அதற்குப் பிறகு Chennai Call Taxi யின் சேவையை உபயோகப்படுத்த தொடங்கினேன். ஆரம்பத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்தவர்கள் பின்பு ஒரு தடவை அழைத்தபோது மழைக்காலங்களில் எங்கள் பகுதிக்கு (அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்) டாக்ஸி வர இயலாது என கறாராக சொல்லிவிட்டதால் Fast Track Call Taxi நிறுவனத்தின்  சேவையை நாட வேண்டியதாயிற்று.

அவர்களும் ஆரம்பத்தில் காண்பித்த, குறை காணமுடியாத சேவையை ஏனோ பின்பு தொடரவில்லை. காரணம் அவர்களோடு இணைத்துக்கொண்டிருக்கும் டாக்ஸி ஓட்டுனர்கள் தான். தங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் Fast Track Call Taxi அவர்களை நம் இடத்திற்கு வர சொன்னாலும் சொன்ன நேரத்திற்கு வராமல், நம்மை இக்கட்டில் விட்டுவிடுவார்கள். எனக்கே இது போல் மூன்றுமுறை நடந்தது.

ஒரு தடவை கொல்கத்தா செல்ல வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல Call Taxi யை Book செய்திருந்தேன். மாலை 4 மணிக்கு விமானம் புறப்படும் நேரமாக இருந்ததால் மதியம் 1.30 மணிக்கே வரச்சொல்லியிருந்தேன். 1.30 மணிக்கு வரவில்லை என்றதும் அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டபோது அவர்கள் எனக்காக வரும் டாக்ஸி ஒட்டுனரின் பெயரையும் அவரது கைபேசி எண்ணையும் கொடுத்தார்கள்.

அவரை தொடர்பு கொண்டபோது இதோ வந்துகொண்டு இருக்கிறேன். என்று சொன்னரே தவிர எங்கிருக்கிறார் என்று சொல்லவில்லை. திரும்பவும் 15 நிமிடம் கழித்து கேட்டபோது வேளச்சேரியில் இருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவதாகவும் சொன்னார்.  

வேளச்சேரியில் அவர் அண்ணா நகர் வந்து என்னை அழைத்துக்கொண்டு திரிசூலம் விமான நிலையம் செல்வதற்குள் விமானம் புறப்பட்டுவிடும் என்பதால் உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து  கூட்ட நெரிசலில் நீந்தி  விமான நிலையம் சென்று Boarding Pass எடுப்பதற்கும் Counter மூடுவதற்கும் சரியாக இருந்தது.

அடுத்த தடவை என் மகன் மும்பை செல்ல காலை 10 மணிக்கு வர சொல்லியிருந்தேன், ஆனால் 10.30 மணி வரை டாக்ஸி வரவேயில்லை. பின்பு 10.30 மணிக்கு எனது காரில் மகனை அழைத்துக்கொண்டு போய் விட்டு வந்தேன்.

மூன்றாவது தடவை கோவை விரைவு இரயிலில் செல்ல Call Taxi ஐ காலை 5 மணிக்கு வரச்சொல்லியிருந்தேன். 5 மணிக்கு டாக்ஸி வராததால் அவர்கள் கொடுத்திருந்த கைபேசியில் அழைத்தபோது, அந்த டாக்ஸி ஓட்டுனர் மிகவும் சாதாரணமாக வர இயலாது சார். என்று கூறிவிட்டார். அவரோடோ மற்றும் அந்த நிறுவனத்தோடு அப்போது மல்லுக் கட்ட நேரம் இல்லாததால், வழக்கம்போல் அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் சென்று  கிடைத்த ஆட்டோவில் அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்து இரயிலைப் பிடித்தேன்,

மேற்கூறிய அனுபவங்களால் Call Taxi என்றாலே எனக்கு ஒவ்வாமை   
(Allergy) தான். ஆனாலும் அவ்வப்போது இந்த Call Taxi களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று காலை ஒரு வேலையாக மதுரை போய்விட்டு, நான், என் மனைவி என் மகள் மற்றும் அண்ணி ஆகியோருடன் நேற்று இரவே பாண்டியன் விரைவு இரயிலில் சென்னை திரும்பி வந்துகொண்டிருந்தேன்.

இன்று அதிகாலை 5-15 க்கு இரயில் செங்கல்பட்டு சந்திப்பு வந்ததும், Call Taxi ஐ கூப்பிட்டு இரயில் நிலையத்திற்கு வர சொல்லலாமே என நினைத்து  Fast Track Call Taxi நிறுவனத்தை தொடர்பு கொண்டு மதுரையிலிருந்து இரயிலில் வந்துகொண்டிருப்பதாகவும், சுமார் 6-15 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு இரயில் வந்து சேரும் என எதிர்பார்ப்பதால் அப்போது டாக்ஸி வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அந்த நிறுவனத்தின் ஊழியர். சார். வண்டி ஏதும் இல்லை. காலை எட்டு மணிக்கு மேல்தான் வண்டி கிடைக்கும். எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

சரி இவர்களால் உதவ முடியாவிட்டால் என்ன, அடிக்கடி தொலைக்காட்சியில் நம்மிடம் தாங்கள் தான் சேவை செய்யவே பிறந்தவர்கள் என்பது போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் NTL Call Taxi ஐ கூப்பிடுவோமே என நினைத்து அழைத்தபோது அவர்கள்  சொன்னார்கள். 3 மணி நேரத்திற்கு முன்னால் பதிவு செய்தால்தான் வண்டியை அனுப்பமுடியும். இப்போது பதிவு செய்தால் 8 மணிக்கு மேல் தான்  அனுப்ப இயலும்.என்று

அதற்கு நான் வீட்டிலிருந்து கிளம்பினால் 3 மணி என்ன 5 மணிக்கு முன் கூட பதிவு செய்யலாம். ஆனால் இரயிலில் வரும்போது எப்போது வந்து சேருவோம் எனத் தெரியாதபோது, எப்படி 3 மணிக்கு முன்னால் பதிவு செய்யமுடியும்?’ என்றதற்கு அவர் உதவமுடியாததற்கு சாரி சார்.என்று பேச்சை முடித்துக் கொண்டார் அந்த தன் புகழ் பாடும் நிறுவனத்தின் ஊழியர்.  

என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் இரயில் மாம்பலம் வந்துவிட்டது. அப்போது அங்கு சுவற்றில் எழுதப்பட்டிருந்த Bharathi Call Taxi யின் தொலைபேசி எண்ணைப் பார்த்து என் மகள் அப்பா. இந்த நிறுவனத்தைக் கூப்பிட்டு பாருங்களேன். என்றாள். உடனே அந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விவரம் சொன்னேன். அவர் சார் இன்னும் 5 மணித்துளிகளில் உங்களுக்கு ஒதுக்கப்ப்ட்டிருக்கும் டாக்ஸியின் ஓட்டுனர் உங்களை தொடர்புகொள்வார். நீங்கள் எழும்பூர் வரும்போது எங்கு சந்திக்கவேண்டும் என்பதை அவர் சொல்வார் என்றார்.

எனக்கு மிக்க மகிழ்ச்சி. அப்பா. இவர்களாவது உதவ இருக்கிறார்களே என்று. எழும்பூர் நிலயத்தை அடைந்ததும் வெளியே வந்து 15 மணித்துளிகள் காத்திருந்தேன்.யாரும் என்னை கைபேசியில் கூப்பிடாததால் திரும்பவும் அந்த நிறுவனத்தை கூப்பிட்ட போது,’இருங்கள்.சார். பார்த்து சொல்கிறேன். என்றார்.

சில மணித்துளிகள் காத்திருந்த பின் இன்னும் 5 மணித்துளிகளுக்குள் உங்களை ஓட்டுனர் கூப்பிடுவார். என்றார் அந்த ஊழியர்.15 மணித்துளிகள் ஆகியும் யாரும் கூப்பிடாததால் திரும்பவும் கூப்பிட்டபோது திரும்பவும் அதே பல்லவி தான். சரி இவர்களும் நம்மை காலை 8 மணி வரை எழும்பூர் இரயில் நிலையத்தில் காத்திருக்க வைப்பார்கள் போல என எண்ணி அந்த நிறுவனத்தைக் கூப்பிட்டு நேரமாகுமானால் டாக்ஸி வேண்டாம் என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

வழக்கம்போல் ஆட்டோ நண்பர்கள் மொய்த்துக்கொள்ள, ஒரு ஆட்டோவை தேர்ந்தெடுத்து  அண்ணா நகரில் உள்ள என் இருப்பிட முகவரியை விவரமாக சொல்லி அங்கு வரமுடியுமா?’ என அந்த ஓட்டுனரிடம் கேட்டபோது சரி. போகலாம் ஏறுங்கள்.ஆனால் Fixed Rate தான்.என்றார் அவர்.  புதிய கட்டணப்படியல்லவா நீங்கள் கட்டணம் வசூலிக்கவேண்டும். என்றதற்கு, சார் அது அக்டோபர் 15 க்குப் பின் தான். இன்னும் மீட்டரை புதிய கட்டண விகிதத்திற்கு மாற்றவில்லை. என்று பதிலளித்தார்.

வேறு வழியின்றி அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுப்பதாகக் கூறி ஆட்டோவில் ஏறினோம்.வீட்டை நெருங்கும்போது இவ்வளவு தூரம் இருக்குமென்று நீங்கள் சொல்லவில்லையே?’ என்று சென்னை ஆட்டோ ஓட்டுனர்களில் பெரும்பாலோர் சொல்லும் வசனத்தை ஆரம்பித்தார்.

அவரிடம் இறங்கும் இடத்தையும் தூரத்தையும் விவரமாக சொன்ன பிறகுதானே வருவதாக சொன்னீர்கள்.இப்போது இப்படி சொல்கிறீர்களே.என்றேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் முணுமுணுத்துக்கொண்டே வந்தார். இறங்கியதும் மேலும் போட்டுக்கொடுங்கள். என்றதும்.தலை விதியை நொந்துகொண்டு, காலை வேளையில் சண்டை வேண்டாமே என்பதால் அவர் கேட்டதை  கொடுத்து அனுப்பினேன். Call Taxi யில் வந்திருந்தால் 260 ரூய்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் நான் கொடுத்ததோ ரூபாய்கள் 300.

தங்களால் வாடிக்கையாளர்களுக்கு சொன்ன நேரத்தில் டாக்ஸி ஏற்பாடு செய்யமுடியாதெனில் இந்த Call Taxi நிறுவனங்கள் எதற்காக வீண் தம்பட்டம் அடித்துக்கொள்ளவேண்டும்?

அரசு ஆட்டோ கட்டணம் நிர்ணயித்தும் ஏன் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அதை மதிக்காமல் பொதுமக்களிடம் தண்டம் வசூலிக்கிறார்கள்?

என்று இந்த விடை காணமுடியாத கேள்விகள் என்னுள் எழுகின்றன.

காலம்தான்  இதற்கு பதில் சொல்லவேண்டும்!




திங்கள், 2 செப்டம்பர், 2013

இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா?



பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் ஒருவர் வெற்றிபெற
வேண்டுமானால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 35 விழுக்காடு மதிப்பெண்களாவது பெறவேண்டும்.(முன்பு இது 40 ஆக இருந்தது) ஆனால் 
மருத்துவம், பொறியியல் போன்ற பட்டப் படிப்புகளில், 50 விழுக்காடு 
மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்வில் வெற்றி பெற்றவர்களாக 
அறிவிக்கப்படுவார்கள்.

தணிக்கையாளருக்கான (Auditor) பட்டயப் படிப்பான C.A வுக்கும், 
பணிபுரியும் வங்கியாளருக்கான சான்றிதழ் பதிப்பான CAIIB க்கான 
தேர்வுகளில் வெற்றி பெற அவசியம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் 
பெறவேண்டும். எனக்குத்தெரிந்து வங்கியில் என்னோடு பணிபுரிந்த 
நண்பர்கள் பலர், 49 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று CAIIB தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், மாணவர்களும் வங்கியாளர்களும், தணிக்கையாளர்களாக விரும்புவோரும் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு பெறவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, 
பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பதவிக்கு போட்டியிடுவோர் 
நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது, குறைந்த பட்சமாக எவ்வளவு 
மதிப்பெண்கள் பெறவேண்டும் என விதி இருக்கவேண்டுமா இல்லையா?

இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது Times of India தினத்தாளில் 
வந்த ஒரு அதிர்ச்சியான தகவலைப் படித்ததும்.அதனால் ஏற்பட்ட கோபம் 
மற்றும் வருத்தத்தின் விளைவே இந்த பதிவு.

நீங்கள் கேட்கலாம். உயர் பதவிக்கு செல்வோரை எதற்காக அவர்கள் நேர்முகத்தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் 
தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்களது செயல் திறன் கணிப்பில் 
(Performance Appraisal) பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்  
தேர்ந்தெடுக்கலாமே என்று.

அப்படியெனில் அவர்களை எதற்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவேண்டும். 
அதில் மதிப்பெண்கள் தரவேண்டும். அரசுப் பணியில் செய்வதுபோல் 
அவர்களது பணிக்கால செயல்திறனைப் பார்த்தே தேர்ந்தெடுத்துவிடலாமே 
என்பதுதான் எனது கேள்வி.  

பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டால் நான் சொல்ல வந்தது புரியும். நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில், வங்கியை நிர்வகிக்க, தலைவர் மற்றும் 
மேலாண்மை  இயக்குனர் (Chairman and Managing Director) ஒருவரும், 
அவருக்கு அடுத்து ஒன்று அல்லது இரு செயல் இயக்குனர்(கள்) 
(Executive Director) இருப்பார்கள்.

வங்கியின் தலைவருக்கான பதவிக்கு பொதுத்துறை வங்கிகளில் உள்ள 
செயல் இயக்குனர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். செயல் இயக்குனர் பதவிக்கு பொதுத்துறை 
வங்கிகளில் பணியாற்றும் பொது மேலாளர்களை (General Managers) 
நேர்முகத்தேர்வுக்கு அழைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பது 
வழக்கம்.

வழக்கமாக வங்கிகளின் தலைவர் மற்றும் செயல் இயக்குனர்களை 
தேர்ந்தெடுக்கும் நியமன குழுமத்திற்கு (Appointment Board)  ரிசர்வ் வங்கியின் தலைவர்தான் தலைமை வகிப்பார். அப்படி அவரால் அந்த குழுமத்தின் 
கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதபோது, நிதிநிலை பணித்துறை 
செயலரின் (Financial Services Secretary) தலைமையில் ஒரு சார்பு குழு 
(Sub Committee) கூடி தகுதியானவர்களை அந்த பதவிகளுக்காக 
தேர்ந்தெடுக்கும்.

சமீபத்தில் விஜயா வங்கி, இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி 
மற்றும் தேனா வங்கிகளுக்கான செயல் இயக்குனர்களை தேர்ந்தெடுக்க, 
நிதிநிலை பணித்துறை செயலர் திரு ராஜீவ் தக்ரு அவர்கள் தலைமையில் 
சார்பு குழுவினர் கூடி நேர்முகத்தேர்வு நடத்தி, நான்கு பேரை 
செயல் இயக்குனர்கள் பதவிக்கு தேர்ந்தெடுத்தார்களாம். தேர்ந்தெடுக்கப்பட்ட  அவர்களை செயல் இயக்குனர்களாக நியமிக்க  நிதி அமைச்சகமும் 
பரிந்துரை செய்துள்ளதாம்.

இது என்ன வழக்கமான நடைமுறைதானே. இதற்கு அதிர்ச்சியடைய 
வேண்டிய அவசியம் என்ன என சிலர் எண்ணலாம். சமீபத்தில் நடந்த 
அந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று செயல் இயக்குனர்களாக 
சிபாரிசு செய்யப்பட்ட அந்த நான்கு பொதுத்துறை வங்கிகளின் 
பொது மேலாளர்கள் நேர்முகத் தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் 
எவ்வளவு தெரியுமா? 

அதிகம் இல்லை நண்பர்களே. முப்பதுக்கு வெறும் ஒரு 
மதிப்பெண்தான் (1/30)! அதாவது 3.33 விழுக்காடு மதிப்பெண்கள்!

இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா என்ற நப்பாசை. ஆனால் 
Times of India போன்ற ஒரு நாளேடு முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிடும்போது பொய்யாக இருக்கமுடியாது என்பதுதான் உண்மை. 

இதைக் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதா இல்லையா? இவர்களைத் 
தேர்ந்தெடுத்த அந்த குழுவில் குறைந்தது மூன்று பேர் இருந்திருக்கக்கூடும். 
அவர்கள் ஒவ்வொருவரும் நேர்முகத்தேர்வில் பங்குபெறுவோருக்கு 10 
மதிப்பெண்கள் வரை தரலாம் என இருந்திருந்தால், வெற்றிபெற்ற 
நால்வருக்கும், அந்த மூவரில் ஒருவர் மட்டுமே ஒரு மதிப்பெண் 
தந்திருக்கிறார் எனத் தெரிகிறது. மற்ற இருவரும் 0 மதிப்பெண்ணைத் தந்திருக்கக்கூடும்.

இப்படி குறைந்த  மதிப்பெண்கள் பெற்றவர்களை வங்கியின் உயர் மட்ட 
பதவிக்கு தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று.தெரியவில்லை. நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் தேவையான திறனைப் 
பெற்றிருக்கவில்லை எனத் தெரிந்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு, 
புதியவர்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே?

இப்படி தகுதி பெற்றவர்களை செயல் இயக்குனர்களாக நியமித்தால், 
அந்த பொதுத்துறை வங்கிகளின் நிலைதான் என்ன? இவர்கள் வாங்கிய 
மதிப்பெண்கள் தெரிந்துவிட்டதால், இவர்கள் எந்த முகத்தோடு அந்த 
வங்கிகளில் தங்களுக்கு கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்கமுடியும்? 
அந்த வங்கிகளில் உள்ளவர்கள்தான் எப்படி இவர்களை மதிப்பார்கள்? 
இது போன்ற அதிசய நிகழ்வுகள் நம் நாட்டில் அதுவும் அரசுத் துறை 
நிறுவனங்களில் மட்டுமே நடக்கின்றன என்பதுதான் வேதனை.  

இந்த நிகழ்வை வேதனை என்றா சொன்னேன். இல்லை.இல்லை. 
வெட்கக்கேடு என்றுசொல்வதுதான் சரி என்றே தோன்றுகிறது.  

நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? கவலையாக இருக்கிறது.