புதன், 19 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 3


கோவை மாவட்டத்தில் இருந்த அந்த வங்கிக் கிளையில்
ஒருநாள் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது, ஒரு விவசாயி
என்னைப் பார்க்க வந்தார்.

நான் வேளாண்மைக் கடன் துறையைப் பார்க்க ஆரம்பித்த பின்
வந்த முதல் வாடிக்கையாளர் அவர். அவரை அன்போடு வரவேற்று,
உட்காரச்சொல்லி எங்கிருந்து வருகிறார்?’ என்றும் அவருக்கு
என்ன வேண்டும்?’ என விசாரித்தேன்.   

அவர் அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரிலிருந்து வருவதாகவும், தான் நிலக்கடலை பயிரிட்டு இருப்பதாகவும், 
வங்கிகள்பயிர் செய்ய விவசாயிகளுக்கு கடன் தருவதாக கேள்விப்பட்டதால் அது பற்றி விசாரித்து விட்டு, அது கிடைக்க 
என்ன செய்யவேண்டும்எனத் தெரிந்துகொள்ள வந்திருப்பதாக 
சொன்னார். 

அந்த விவசாயியைப் பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி
ஏற்பட்டது. அதற்கு காரணம் உண்டு. வேளாண் அறிவியல்
படித்திருந்த எனக்கு, மாநில அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றியபோது இருந்ததைவிட,தேசிய விதைக் கழகத்தில்
மூன்று ஆண்டுகள் பணியாற்றியபோது, நான் கற்றுக்கொண்ட
வீரிய விதைப் பெருக்கம் (Hybrid Seed Production) சம்பந்தப்பட்ட
தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்து
அவர்களுக்கு என்னால் உதவமுடிந்ததால், அங்கே பணியில்
மனநிறைவு (Job Satisfaction) அதிகம் இருந்தது.

பின்னர் தேசிய விதைக் கழகத்தில் பணியாற்றிவிட்டு,
சிண்டிகேட் வங்கியில் சேர்ந்தபோது நான் கற்றுக்கொண்ட/
தெரிந்துகொண்ட வேளாண் தொழில் நுட்பங்களை/உத்திகளை
வங்கியில் கடன் பெற வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
  
அதனால் தினம் வானொலியில் ஒலிபரப்பான விவசாய 
நிகழ்ச்சிகளைக் கேட்டும்,வேளாண்மை ஆய்விதழ்களைப் 
(Agricultural Journals) படித்தும்எனது உயர் தொழில்நுட்ப 
அறிவுப்பரப்பை விசாலப்படுத்திக் கொண்டு வங்கியின் விவசாய வாடிக்கையாளர்களுக்கு உதவக் காத்துக்கொண்டு 
இருந்தபோதுதான் அந்த விவசாயி வந்தார்.  

அவரைப் பற்றியும் அவரது பண்ணையில் (தோட்டத்தில்) உள்ள 
பயிர்கள் பற்றியும் விசாரித்துவிட்டு, அவரிடம் பயிர்க்கடன் விண்ணப்பத்தைக்  கொடுத்து அதை  பூர்த்தி செய்து, அதனுடன்
சிட்டா மற்றும்அடங்கல் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு
வருமாறு கேட்டுக்கொண்டேன்.

(சிட்டா என்பது  நிலத்தினுடைய உரிமையாளரின் பெயர்,
நில அளவை எண், மற்றும் பரப்பளவு இவைகளைக் கொண்ட
ஆவணம். அடங்கல் என்பது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிரின்
பெயர், அது பயிரட்டப்பட்டுள்ள பரப்பளவு, ஃபசலி ஆண்டு
(பயிரிடப்படும் ஆண்டு)  மற்றும் பயிர் செய்வோரின் பெயர்
அடங்கிய ஆவணம்)

அப்படி அவரால் அந்த  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய இயலாவிடில்/தெரியாவிடில் குறிப்பிட்ட ஆவணங்களுடன்
வரும்போது நான் அதை  பூர்த்தி செய்ய உதவுவதாகவும்  
சொன்னேன்.

அப்போதெல்லாம், தற்போது உள்ளது போல் வங்கியின்
வாடிக்கையாளராக ஏற்றுக்கொள்ள கடைப்பிடிக்கும்
Know Your Customer (KYC) போன்ற விதிகள் எதுவும் இல்லை.

கடன் கொடுக்குமுன்பு அந்த பயனாளியை ஒரு சேமிப்பு 
கணக்கை  ஆரம்பிக்க சொல்வோம். வங்கியில் கணக்கு 
வைத்துள்ள ஒருவர் அவரை அறிமுகப்படுத்தவேண்டும், அவ்வளவுதான்.வேறு எந்தவித ஆவணமும் தரத் 
தேவையில்லை.

சேமிப்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கான படிவத்தில் அவரை
அறிமுகப்படுத்த ஆட்கள் யாரும் இல்லாவிட்டால் 
என்னைப்போன்ற கள அலுவலர்களே அறிமுகப்படுத்தி கையொப்பமிடுவதுண்டு.

ஏனெனில் நாங்கள் அந்த வருங்கால வாடிக்கையாளரின் 
வீட்டிற்கும் பண்ணைத்தோட்டங்களுக்கும் சென்று 
வந்திருப்பதால் அவர்களது வசிப்பிடம் தெரியும் என்பதால் 
நாங்களே அறிமுகப்படுத்துவதுண்டு.

ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். வங்கிக்குத் 
தெரிந்தவர்தான் புதிய வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதன் நோக்கமே,ஒருவர் தவறாக அல்லது வேண்டுமென்றே வேறொருவர் பெயரில் கணக்கு தொடங்கக்கூடாது என்பதால்தான்.

அப்படி வேறொருவர் பெயரில் கணக்குத் தொடங்க அனுமதித்தால்
ஏற்படும் சிக்கலுக்கு வங்கியே பொறுப்பேற்க நேரிடும் 
என்பதால்தான் தங்களுக்கு தெரிந்தவர்கள், புதிய 
வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தாவிட்டால் வங்கிகள் 
அவர்களை வாடிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால் அப்போதெல்லாம் கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் 
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதில்லை. அதனால் முதன்முதல் 
ஒரு கிராமத்தில் உள்ள ஒருவர்  வங்கியில் கணக்கைத் தொடங்க விரும்பினால், அந்த கிராமத்தில் உள்ள வங்கிக்குத் தெரிந்தவர்தான் அவரை அறிமுகப்படுத்தவேண்டும் என்றால் அது நடவாத காரியம். அதனால் எங்களைப்போன்றோரே அவர்களை 
அறிமுகப்படுத்துவதுண்டு.

அன்று வங்கிக்கு வந்த அந்த விவசாயி  கடன் விண்ணப்பதைப் பெற்றுக்கொண்டு தேவையான சிட்டா மற்றும் அடங்கள் போன்ற ஆவணங்களோடு இரண்டொரு நாட்களில் வருவதாக சொன்னார்.
நானும் சரி.நல்லது. பிறகு பார்க்கலாம் என்றேன்.

என்னிடம் விடை பெறும்போது அவர் சாருக்கு எந்த ஊர்?’ 
என்றார்.எனது ஊர் விருத்தாசலத்தை அடுத்த சிறிய ஊர் என்றால் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என எண்ணி,‘சென்னைக்கு 
அருகே உள்ள ஊர் என்றேன்.

அதைக் கேட்டு அவர் சொன்னது என்னை அதிர்ச்சியில் 
ஆழ்த்தியது.


தொடரும்

சனி, 15 செப்டம்பர், 2012

வாடிக்கையாளர்களும் நானும் 2


வங்கியில் பணி புரியும்போது வாடிக்கையாளர்களோடு எனக்கு
ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுது முன், இந்த ஒரு சிறிய
அறிமுகத்தை தந்துவிட்டு தொடரலாம் என நினைக்கிறேன்.

நம் நாட்டில் இருந்த 14 பெரிய வணிக வங்கிகள் (Commercial Banks)  நாட்டுடைமையாக்கப்படுமுன் (அதாவது ஜூலை 19 ஆம் நாள்
1969 க்கு முன்) அவைகள் பெரிய நிறுவனங்களுக்கும்,வசதி
படைத்தோருக்கு மட்டுமே கடன் கொடுத்து வந்ததால் 
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அப்போது அதிக 
அளவில் இல்லை.அப்படி இருந்த வாடிக்கையாளர்களும், 
பெரும்பாலோர் மேல்தட்டு மக்களாகவே இருந்தனர் 
என்பதுதான் உண்மை
.
மேலும் சில தொழில் நிறுவனங்களை நடத்தியவர்களால்,
அவர்களது தேவைக்காக தொடங்கப்பட்ட வங்கிகளில், அந்த
வங்கிகளில் உரிமையாளர்களும்,அவர்களே வாடிக்கையாளர்களும்
அவர்களே!

ஆனால் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதும் தான் அரசின் கொள்கைக்கிணங்க விவசாயிகள் சிறுதொழில் புரிவோர்
போன்றோருக்கு வங்கிகள் கடன்கள் கொடுக்கத் தொடங்கியதால் வங்கிகளுக்கு பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்.

வங்கிகளில் அப்போது பணிபுரிந்தோர் அதுவரை Elite Customer
எனப்படும் ஒரு சில உயர் பிரமுகர்களுக்குமட்டும் அளித்து வந்த
சேவையை, புதிதாய் வரத்தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு
அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு நீட்டிப்பதில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டார்கள், ஏன் அவர்களிடம் பேசவே சிரமப்பட்டார்கள்
என்பதே உண்மை.

காரணம் அப்போது வங்கியில் பணியாற்றியவர்களில்
பெரும்பான்மையோர் நகர்ப்புற பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு கிராமப்புறத்தைப் பற்றி எதுவும் தெரியாததால்
அங்கிருந்து வரும் மக்களிடம் பேசவே தயங்குவார்கள்.
ஒருவேளை அவர்களிடம் பேசுவதையே இழுக்கு என
நினைத்தார்களோ என்னவோ! 

அந்த நேரத்தில் தான் என்னைப் போன்றோர்கள் (வேளாண்
அறிவியல் பட்டப் படிப்பு படித்தோர்) விவசாயிகளுக்கு கடன்
தருவதற்காக பணியில் அமர்த்தப்பட்டார்கள்.   

நான் சிண்டிகேட் வங்கியில் பணிக்கு சேர்ந்தபோது, வங்கிகள்
நாட்டுடைமை ஆக்கப்பட்டு ஆறு மாதங்கள் கூட 
ஆகியிருக்கவில்லை. வங்கியில் நான் முதலில் பணி ஆற்றியது 
கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்ட தலைமையகத்தில் 
(Taluk Head Quarters).

அப்போது அந்த ஊரில் ஸ்டேட் வங்கியையும் சேர்த்து ஆறுக்கு
மேற்பட்ட வங்கிகள் இருந்தாலும், வங்கிகள் நாட்டுடைமையாக்கு
முன்பே விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வந்த ஒரே வங்கி
எங்களது வங்கிதான் என்பதை பெருமையோடு 
சொல்லிக்கொள்வேன். 

ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கள் தர
கட்டுப்பாடு விதித்து இருந்தபோதிலும், அப்போது எங்கள்
வங்கியின் தலைவராக இருந்த திரு T.A.Pai அவர்கள்
(பின் நாட்களில் இவர் L I C நிறுவனத்தின் தலைவராகவும்,
மைய அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார்.) வங்கிகள் நாட்டுடைமையாக்கு முன்பே அதாவது 1964 லேயே
ரிசர்வ் வங்கியிடம் சிறப்பு அனுமதி பெற்று கடன்கள் வழங்கி விவசாயிகளுக்கு உதவினார் என்பது வரலாற்று செய்தி)  

ஆரம்பத்தில் அதாவது 1970 களின் ஆரம்பத்தில் நான் பணிபுரிந்த
வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் யாராவது கடன் கேட்டு
மற்ற வங்கிகளுக்கு சென்றால், அவர்களை எங்கள் வங்கிக்கு அனுப்பிவிடுவார்கள். காரணம் அப்போது அந்த வங்கிகளில்
அந்த வகை கடன்கள் தர அனுபவம் உள்ள அலுவலர்கள்
இல்லாததும் மற்றும் அந்த வங்கிகளுக்கே அந்த அனுபவம்
இல்லாததும் தான்.

எனவே எப்போதும் எங்கள் வங்கியில் விவசாய பெருமக்களின்
கூட்டம் அதிகமாகவே இருக்கும்.நான் விவசாயக் கடன் துறையை
கவனித்து வந்ததால், விவசாயிகள் யார் வந்தாலும் அவர்கள்
எதற்காக வந்திருக்கிறார்கள் எனக் கேட்காமலேயே Counter ல்
இருந்த நண்பர்கள் அவர்களை என்னிடம் அனுப்பிவிடுவார்கள்.

வந்தவர்களில் சிலர் நகைக்கடன் பெற வந்திருக்கலாம், சிலர்
வரைவுக் காசோலை (Demand Draft) பெறக்கூட வந்திருக்கலாம்.
அவர்கள் விவசாயக் கடன் கேட்டு வரவில்லை என்றாலும்
தயக்கத்தோடு வரும் அவர்களிடம் ஆதரவாகப் பேசி அவர்களுக்கு தேவையானவைகளை நான் செய்து தந்ததுண்டு.

Customer Relationship Manager என்று இப்போது வங்கிகளில்
சொல்கிறார்களே,அதுபோல விவசாயிகளின் அறிவிக்கப்படாத
தொடர்பு அலுவலராக இருந்தேன்.

கிராமத்திலிருந்து வந்தவன் என்பதாலும், வேளாண்மை அறிவியல் படிக்கும்போது பயிற்சிக்காக கிராமங்களுக்கு சென்று 
விவசாயிகளுடன் கலந்து  பழகியதாலும் என்னால் அவர்களோடு சுலபமாக உரையாடி அவர்களது அன்புக்கு பாத்திரமாகி 
அவர்களுக்கு உதவ முடிந்தது.

மூன்று ஆண்டுகள் கள அலுவலராக இருந்தபோது நான் சந்தித்த
கிராமப்புற வாடிக்கையாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்களில் 
பலர் மென்மையானவர்கள். வெகுளிகள் (வெள்ளந்தியானவர்கள்), தங்களின் உரிமையை அறியாதவர்கள், என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் நகர்ப்புறங்களில் மேலாளராகவும், முதன்மை 
மேலாளராகவும், வட்டார மேலாளராகவும் இருந்தபோது நான் 
சந்தித்த வாடிக்கையாளர்கள் வேறுவிதமானவர்கள். தங்களின் 
உரிமையை உணர்ந்தவர்கள் (Demanding Customers), அதை 
நிலைநாட்ட போராடுபவர்கள் எனலாம். என்னுடைய அதிர்ஷ்டம் 
பணியில் இருந்தபோது எல்லாவிதமான வாடிக்கையாளர்களையும் சந்தித்ததுதான்.

வாடிக்கையாளர்களில் பலர் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள்,
சிலர் என்னிடம் கோபப்பட்டிருக்கிறார்கள், சிலர்
அச்சுறுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் ‘All’s well that ends well’ என சொல்வதுபோல நான் செய்ததெல்லாம் அவர்கள் நன்மைக்கே 
எனத் தெரிந்ததும் என்னைத் தவறாக எண்ணியவர்கள் 
புரிந்துகொண்டுபின் நட்புடன் பழகியிருக்கிறார்கள்.



 தொடரும்