புதன், 19 டிசம்பர், 2012

வீட்டுத் தோட்டத்தில் Bamboo வளர்த்தால் பாம்பு வருமா?




இரண்டு நாட்களுக்கு முன்பு, என்னுடன் பணியாற்றியவரும் 
எனது நண்பருமான திரு L.N.கோவிந்தராஜன் அவர்கள், 
வீட்டுத் தோட்டத்தில் மூங்கில் வைக்கலாமா வைத்தால் 
பாம்பு வரும் என்று சொல்வது உண்மையா என எங்கள் 
வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான  
Google குழுமத்தின் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். 

அவரது கேள்விகளுக்கான விடைகளை தெரிவித்திருந்தேன். 
அதை பதிவுலக நண்பர்களுக்கும் தெரிவிக்க நினைத்ததின் 
விளைவே இந்த பதிவு.

உண்மையில் மூங்கில் சுற்றுசூழலுக்கு தோதான (Eco-friendly), கட்டுமானத்திற்கு உபயோகமான, வேகமாக வளரும் ஒரு புல் 
வகையைச் சேர்ந்த தாவரம் தான் என்றாலும் வீட்டில் 
வளர்க்கக்கூடாது என்பதற்கான முக்கியமான 
காரணங்கள் ஐந்து. 

1.அடுத்த வீட்டை நோக்கி தாவும் அபாயம்:
சில மூங்கில்கள் ஒரே நாளில் மூன்றடிக்குமேல் வளரும் 
தன்மை உடையவை. அந்த அசுர வளர்ச்சியின் காரணமாக 
அவை எந்த வித எல்லைக்கும், வேலிக்கும் கட்டுப்படாமல் 
அடுத்த வீட்டை நோக்கிக் கூட படையெடுத்து வளர 
வாய்ப்புண்டு. அதனால் நமக்கும் அடுத்த வீட்டுக்காரருக்கும் 
மன வருத்தமும், ஒருவேளை அவர் நீதி மன்றம் சென்றால் 
நமக்கு பாதகமும் பண விரயமும் ஏற்பட வாய்ப்புண்டு.

2.பல் திறப்பட்ட பயிரினங்களை அழிக்கும் அபாயம்.
(Invasive threat to biodiversity)
அநேக மூங்கில் வகைகள் அயற் பண்புடைய 
படையெடுக்கும் தாவரங்கள் (Exotic Invasive Plants) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூங்கில்களின் கிழங்குகள்  
(Rhizomes) பக்கவாட்டில் அதிவேகமாக  ஊடுருவுவதால் 
தோட்டத்தில் உள்ள மற்ற செடிகளை வளர விடாமல் 
செய்ய வாய்ப்புண்டு. அவ்வாறு அவைகள் பரவுவதை, 
கற்காரை(concrete) அல்லது உலோகத்தகடு (Metal)  
அல்லது அழுத்தம் கொடுத்து பதப்படுத்தப்பட்ட 
மரத்துண்டு (Pressure-treated wood) போன்றவைகளை 
ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே மூங்கிலை சுற்றி 
வைத்து  தடுக்கமுடியும் என்றாலும் அதற்காகும் 
செலவு மிக மிக அதிகம்.

3.தேவையில்லாத வளர்ந்த மூங்கிலை அடியோடு 
நீக்க பல ஆண்டுகள் பிடிக்கும்: தேவையில்லாத 
மூங்கிலை அழிக்கவேண்டுமானால் கீழே உள்ள 
வேர்களையும், கிழங்குகளையும் அடியோடு எடுத்தால்தான் 
ஒழிக்கமுடியும். அப்படியே எடுத்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள கிழங்குகள் திரும்பவும் முளை 
விட்டு துளிர்க்க வாய்ப்புண்டு.எனவே இதை சொல்வது 
எளிது. செயலாக்குவது கடினம். தொடர்ந்து இரண்டு 
ஆண்டுகள் அந்த இடத்தை உழுதால் மட்டுமே   
இது சாத்தியம். 

4.பயிர்க்கொல்லி (Herbicide) உபயோகிப்பது கடினம்:   
மூங்கிலை அழிக்க பயிர்க்கொல்லி உபயோகிக்கலாம்.
ஆனால் ஒரு முறை தெளித்தால் மட்டும் போதாது. 
பல முறை தெளிக்கவேண்டும். இந்த முறையிலும் 
அழிக்க பல ஆண்டுகள் ஆகலாம். மேலும் 
இயற்கை(உயிரி)வேளாண்மை செய்பவர்களாயிருந்தால் 
இந்த முறையைப் பின்பற்ற முடியாது.

5.வீட்டில் வளர்க்க சரியான மூங்கிலைத் 
தேர்ந்தெடுப்பது கடினம்: பரவும் வகை மூங்கிலைவிட 
கொத்துகொத்தாக வளரும் மூங்கிலை சிலர் சிபாரிசு 
செய்தாலும் அவைகளும் பக்கவாட்டில் வளரும் என்பதும் 
உண்மை.



 


(படங்கள் தந்த கூகிளார்க்கு நன்றி)    


மூங்கில் வளர்த்தால் பாம்பு வருமா என்றால் வரும் 
என்கிறார் எனது நண்பரும் என்னோடு வங்கியில் பணிபுரிந்து 
தற்போது வேளாண்மை செய்து வரும் திரு மாணிக்க சுந்தரம் 
அவர்கள். அவர் தற்சமயம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே 
அவரது பண்ணையில் 5 ஏக்கரில் மூங்கில் நட்டிருக்கிறார். 

அதில் சாரைப்பாம்புகளும் நல்ல பாம்புகளும் அதிகம்
வருவதாக சொன்னார். அவைகள் வருவதற்கு காரணம் 
மூங்கில் உள்ள இடம் குளிர்ச்சியாக இருப்பதால், தங்க 
வசதியாய் இருப்பதாலும் மேலும் மூங்கிலில் கூடுகட்டும் 
பறவைகள் உணவாக கிடைப்பதாலும் வருகின்றனவாம். 

பாம்புகள் பற்றி அவர் கவலைப்படுவதில்லை காரணம் 
இயற்கையின் கொடையால் Biological Control எனப்படும் 
உயிரினக் கட்டுப்பாடு நடக்க, அங்கே மயில்களும் 
நிறைய வருகின்றவாம் பாம்புகளை பிடித்து சாப்பிட! 

வீட்டுத் தோட்டத்தில் மூங்கிலை வளர்த்தால் பாம்புகள் 
அங்கே புகலிடம் தேடி வர வாய்ப்புண்டு என்பதால் 
வீட்டருகே வளர்ப்பது நல்லதல்ல. வணிக ரீதியாக 
வளர்ப்போரும் வேளாண் பெருமக்களும் மூங்கிலை 
வளர்க்கட்டும். 

நாம் அந்த மூங்கிலால் கிடைக்கும் பயனை 
அனுபவிப்போம்!