வியாழன், 22 ஜூன், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 26

ஓட்டலில் உள்ள உணவகத்தில் காலை சிற்றுண்டி எடுத்தூண் (Buffet) முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இடம் குறைவாக இருந்ததால் வரிசையில் நின்று தேவையானதை எடுத்து சாப்பிட நின்றுகொண்டிருக்கும்போது, அடுத்த சந்திப்பை எங்கு வைத்துக்கொள்ளலாம் என்பது பற்றி எங்களில் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.




உடனே சில நண்பர்கள் சென்னையில் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு என்னைப் பார்த்து ‘சென்னை வாழ் நண்பர்கள் நிச்சயம் இந்த பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். என்ன சரிதானே.’ என்றனர்.

தஞ்சையில் சந்திப்பை இவ்வளவு பிரமாதமாக நடத்திய பின், இதைப்போல் நம்மால் நடத்தமுடியுமா என யோசித்து சென்னைவாழ் நண்பர் செல்லையாவிடம் அவரது கருத்தைக் கேட்டேன். அவர் உடனே ‘நடனம்.கவலை வேண்டாம்.நான் இருக்கிறேன். நண்பர்கள் முத்தய்யா,பிச்சைதுரை,சேதுராமன் போன்ற நண்பர்கள் துணையோடு ஜமாய்த்துவிடுவோம். நண்பர்கள் கேட்டால் சென்னையில் அடுத்த சந்திப்பை நடத்த நாங்கள் தயார் என சொல்லிவிடுங்கள்’ என்று தைரியமூட்டினார்.

அடுத்த சந்திப்பு பற்றி மாலையில் ஆலோசனை நடக்கும்போது அப்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு வரிசையில் நகர்ந்தேன்.
அங்கிருந்த மேசையில், பழச்சாறு, பல்வேறு பழத்துண்டுகள்,ஓட்ஸ் பால், அசோகா அல்வா, ரொட்டி ,வெண்ணைய், பழப்பாகு (Jam), ஊத்தப்பம்-சட்னி, பூரி-மசால், ஆம்லெட், காஃபி மற்றும் தேநீர் வைக்கப்பட்டிருந்தன.

தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பின்னர் காஃபி அருந்திவிட்டு வெளியே வந்தேன். ஓட்டலுக்கு வெளியே எங்களை அழைத்து செல்ல வாகனங்கள் காத்திருந்தன. முத்துபேட்டைக்கு எங்களை அழைத்துசெல்ல ஒரு பேருந்து ஒன்றும் சிற்றூந்து ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாக்குழுவினர்.

நண்பர்களுக்காக காத்திருந்தபோது, 2013 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த சந்திப்பு மனதில் நிழலாடியது. அந்த சந்திப்பில் ஏற்காடு சென்றபோது நடந்த கலந்தாய்வில் அடுத்த சந்திப்பு தஞ்சையில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்ததும்,அப்போது எந்தெந்த இடங்களைப் பார்க்கலாம் என்ற பேச்சு வந்தபோது, முத்துப்பேட்டை அருகே உள்ள காயல் அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்றும், அங்கு சென்று பார்க்க தான் ஏற்பாடு செய்வதாகவும் நண்பர் நாகராஜன் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

சில நண்பர்கள் நம்மால் படகில் வெயிலில் வெகுதூரம் பயணம் செய்யமுடியுமா என்ற ஐயத்தை எழுப்பியபோது, நண்பர் நாகராஜன் விடாப்பிடியாக நம்மால் பயணம் மேற்கொள்ள இயலும். எனவே அவசியம் முத்துபேட்டை காயலுக்கு செல்கிறோம் என வற்புறுத்தி எல்லோரையும் சம்மதிக்க வைத்ததும் நினைவுக்கு வந்தது.

ஆனாலும் இந்த சந்திப்பு பற்றி திட்டமிட்டபோது தஞ்சை நண்பர்கள் காயல் பயணத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நண்பர்கள் வராவிட்டால் வேறு எந்த இடங்களைப் பார்க்கலாம் என எல்லோரையும் கேட்டிருந்தனர். எல்லோரும் தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களை சொல்லியிருந்தாலும்,காயல் பயணம் மேற்கொள்ள பெரும்பான்மையோர் விருப்பம் தெரிவித்திருந்ததால் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் தஞ்சை பொன்விழாக் குழுவினர்.!

இந்த காயல் பயணம் ஏற்படக் காரணமாக இருந்த நண்பர் நாகராஜனுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும், இந்த காயல் பயணத்திற்கான ஏற்பாடுகளை நண்பர் நாகராஜன் செய்தார் என்றாலும், இந்த பயணம் சிறப்பாக நடக்க காரணமாக இருந்த இன்னொரு முக்கியமானவரை இங்கு குறிப்பிடாமல் இருக்கமுடியாது. அவர் வேறு யாருமல்லர். நண்பர் நாகராஜனின் மகன் திரு சாமிநாதன் தான் அவர். அவர் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும், நல்கிய உதவிக்கும் இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்வது அவசியம் என எண்ணுகிறேன். .

நான் முன்பே சொன்னதுபோல இந்த விழாவில் பங்கேற்ற தஞ்சை வாழ் நண்பர்களின் சொந்தங்கள், எங்கள் பொன் விழாவை தங்கள் விழாபோல் எண்ணி பொன்விழா சிறப்பாக நடைபெற பெரும்பங்கு ஆற்றியதை என்னவென்று சொல்ல. அவர்களின் தன்னார்வ தொண்டை எங்களால் என்றென்றும் மறக்க இயலாது.

நண்பர் நாகராஜனின் மகன் திரு சாமிநாதன் தன் துணைவியாரோடு முதல்நாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு முத்துப்பேட்டைக்கு சென்றுவிட்டார் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைக் கவனிக்க.


திருமதி மற்றும் திரு சாமிநாதன் ஆகியோரிடம் நண்பர் பாலு தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போது எடுத்த படம்.


நண்பர்கள் வந்ததும் நானும் என் துணைவியாரும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். எங்கள் பேருந்தில் எங்களுடன் வரமுடியாத நண்பர்கள் சிற்றூந்தில் வந்தனர்.


நாங்கள் பயணம் செய்த பேருந்து

சரியாக காலை 8.30 மணிக்கு இரண்டு ஊர்திகளும் 71 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்துப்பேட்டையை நோக்கி நகரத் தொடங்கின.


தஞ்சை - முத்துப்பேட்டை சாலை வழிப் படம்

பேருந்தில் இருந்த எல்லோருடைய கண்களிலும் எப்போது முத்துப்பேட்டை சென்று அந்த காயலை (Lagoon) காண்போம் என்ற ஆவல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. சேலம் சந்திப்பின் போது, ஹொகனக்கல் செல்லும் பேருந்தில் இருந்த அனைவரையும் ஒருங்கிணைத்து கலகலப்பு உண்டாக்கி, பயணத்தை இரசிக்க வைத்ததைப்போல, இந்த தடவையும் எங்களோடு பேருந்தில் பயணம் செய்த திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் அவர்கள் சில முக்கிய ஆலோசனைகளை சொல்லி எங்கள் பயணத்தை பயனுள்ளதாக்கினார்.

அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்

20 கருத்துகள்:

  1. அபுதாபியில் என்னுடன் தங்கி இருந்த முத்துப்பேட்டை நண்பர் அடிக்கடி சொல்வார் எங்கள் ஊருக்கு வாருங்கள் காயல் பார்க்கலாம் என்று..

    இன்று அவரின் நினைவைத் தூண்டி விட்டது தங்களது பதிவு அவர் விடுமுறைக்கு வந்தால் சென்று வரணும்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும். தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! அவசியம் முத்துப்பேட்டை சென்று அந்த காயலைப் பாருங்கள். காயலில் படகில் பயணம் செய்வது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

      நீக்கு
  2. அடுத்த சந்திப்பில் நானும் கலந்துப்பேன். என்னையும் கூட்டிப்போங்கப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தாங்கள் எங்களது சந்திப்பில் கலந்துகொள்ள காட்டும் ஆர்வத்திற்கும், நன்றி திருமதி ராஜி அவர்களே! இந்த சந்திப்பு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1962-66 ஆண்டுகளில் வேளாண்மை அறிவியல் படித்த மாணவர்களுக்கிடையே நடைபெறும் சந்திப்பு. எங்களது விதிமுறைகள் அனுமதித்தால் தங்களையும் அடுத்த சந்திப்பிற்கு அழைப்பதில் எனக்கு விருப்பமே.

      நீக்கு
  3. அப்படி என்னதான் காயலில் உள்ளது என்று காயலாக உள்ளேன், அடுத்து வரும் பதிவினை எதிர் பார்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! காயலில் கயல்களும் உண்டு. அருகே வயல்களும் உண்டு. எனவே காயலில் பயணிக்க காத்திருங்கள்!

      நீக்கு
  4. காயலுக்காகக் காத்திருக்கிறேன்.(கைபேசியில் எழுதுகிறேன்.எனவே வாக்கு பின்னர்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதும் ஒரு சுகம் தான். எனவே காத்திருங்கள் காயல் பற்றி அறிய!

      நீக்கு
  5. சுற்றுலா அனுபவ பதிவு நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!

      நீக்கு
  6. பொன்விழா சந்திப்பின் தொடர்ச்சி, சுவையாக எங்கோ எங்களையும் முத்துப்பேட்டை - காயல் என்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டுள்ளது. ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  7. (Lagoon என்ற சொல்லுக்கான) காயல் சொல்லாடலை ரசித்தேன். சுமார் 35 வருடங்களுக்கு முன் நான் பார்த்த Blue Lagoon திரைப்படம் நினைவிற்கு வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! எனது காயல் பற்றிய பதிவு, நீங்கள் பார்த்த Blue Lagoon திரைப்படத்தை நினைவூட்டியமை அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    மறக்க முடியாத நினைவுகள் தொகுப்பாக வெளிவருவது மகிழ்வுதான் தொடருகிறேன் த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே!

      நீக்கு
  9. ஆவலுடன் அடுத்த பகிர்வது எதிர்ப்பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  10. மயிலாடுதுறையில் எவ்வளவு வருடம் இருந்தோம் முத்துப்பேட்டை பார்க்கவில்லையே என்று எண்ண வைத்து விட்டது பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! இப்போதும் நீங்கள் முத்துப்பேட்டை சென்று பார்க்கலாமே?

      நீக்கு