புதன், 25 மார்ச், 2009

குளத்துப்பறவைகள்

பணி மூப்பு எனபது பணியில் உள்ள அனைவருக்கும் வருவதே. ஆனால் சிலர் பணி மூப்பு காலம் நெருங்கும்போது ஒருவித சோகத்தோடு இருப்பார்கள்.
எனது பொது மேலாளர் சொல்லுவார் 'நாம் பணியில் சேரும்போதே எப்போது ஒய்வு பெறப்போகிறோம் என்பது தெரியும். அப்படி இருக்கையில் அதற்காக கவலைப்படுவானேன்?' என்று.

மத்திய, மாநில அரசுப்பணியில் உள்ள உயர் அதிகாரிகள் பணி மூப்பு அடைந்து ஓய்வு பெற்றதும் அவர்களால் யதார்த்த வாழ்க்கைக்கு வர பல நாட்கள் ஏன் பல மாதங்கள் கூட ஆகலாம். பணியிலே இருக்கும்போது கார் கதவைத்திறந்துவிட ஒருவர், கோப்புகளை தூக்கிவர ஒருவர், 
அறைக் கதவைத்திறந்துவிட ஒருவர் என அநேகம் பேர் இருப்பர். ஆனால் ஓய்வு பெற்ற மறுநாள் அவரை பார்க்ககூட வீட்டிற்கு ஒருவரும் வர மாட்டார்கள்.

அதேபோல பணமும் வசதியும் படைத்த பலர் ஒரு காலத்தில் அவைகளை இழந்து நிர்கதியாய் நிற்க வேண்டிய நிலை வரலாம்.
இதைத்தான் 'வெற்றிவேற்கை'யில் அதிவீரராமபாண்டியர் கூறுவார்.

'குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்'


இந்த 'அதிர்ச்சி'யை தாங்கமுடியாத பணி மூப்பு பெற்ற அலுவலர்களில் பல உடல் நிலை சரி இல்லாமல் போவதும் மிக விரைவில் இவ்வுலகை விட்டு போவதும் நாம் பார்க்கின்ற ஒன்றுதான்.

மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்கும் கூட பணி மூப்பு என்பதே இல்லை. மற்ற பணியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட வயதில் ஒய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. இதை மனதளவில் அறிந்துகொண்டு அதை எதிர் நோக்குபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் என்னைப்போன்று வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த கவலை இல்லை. ஏனெனில் வங்கியில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கு கூட இந்த 'வசதிகள்' கிடையாது. எனவே பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பணி மூப்பு எங்களில் அநேகம் பேரை பாதித்ததே இல்லை.

ஆனாலும் நாங்களும் ஒரு வித 'அதிர்ச்சியை'எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணியில் இருக்கும்போது நம்மை சுற்றி வந்த நண்பர்கள் நாம் ஒய்வு பெற்றதும் திடீரென காணாமல் போவதுண்டு. காரணம் நம்மால் அவர்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதுதான்.

எனக்கே அந்த அனுபவம் ஏற்பட்டது. பணியில் இருக்கும்போது இரவு பதினோரு மணிக்கு கூட என்னைக்கூப்பிட்டு அவர்களது மாற்றல் பற்றியும், அவர்களது பதவி உயர்வு பற்றியும், அவர்களுக்கு தரப்பட்ட Charge Sheet பற்றியும் மணிக்கணக்கில் பேசியவர்கள் உண்டு. விடுப்புக்காக சென்னை வந்திருந்த போது எனது சொந்த வேலையைக்கூட செய்யவிடாமல் தொந்தரவு செய்தவர்களும் உண்டு. ஆனால் ஒய்வு பெற்று வந்தவுடன் அவர்கள் நான் இருப்பதை மறந்தே போனார்கள்.

இப்படிப்பட்டவர்களைப்பற்றி ஔவை பாட்டி சொல்லும்போது, குளத்திலே நீர் இருக்கும்போது உள்ள பறவைகள் நீர் வற்றியதும் அந்த குளத்தைவிட்டு செல்வதை போன்றவர்கள உண்மையான நண்பர்கள் அல்லர். ஆனால் அந்த குளத்தில் நீர் உள்ள போதும், இல்லாத போதும் கூடவே இருக்கின்ற அல்லி, தாமரை போன்றவர்களே உண்மையான நண்பர்கள் என்கிறார்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

எனக்கு இந்த 'பறவைகளை' பற்றி முன்பே அறிந்திருந்ததால் நான் வருத்தப்படவோ கவலைப்படவோ இல்லை. ஆனாலும் கூட அல்லி, தாமரை போல நண்பர்கள் இன்னும் எனக்கு உண்டு எனபதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

16 கருத்துகள்:

  1. கூட வேலை பார்த்தவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு, வந்து விசாரிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்! சொந்தங்களே எப்படி நினைக்கும், நடத்தும் என்பதை 'வியட்நாம் வீடு' படத்திலும், நாடகத்திலும், திரு சுந்தரம் அழகாகக் கதை சொல்லியிருப்பாரே!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே.

    பதிலளிநீக்கு
  3. அல்லி தாமரை போன்ற நண்பர்களை நினைத்தால்.....நல்ல உவமை....பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. பறவைகளை அறிந்தேன்... ஔவை பாட்டி மூலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கள் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  6. அன்பின் நடன சபாபதி - காபின் என்பதற்கு அறை என எழுதி இருக்கலாமே - COFFIN என்றொரு தொனி ஒலிக்கிறதே !

    மற்றபடி பணி நிறைவு செய்த பின் இதெல்லாம் இயல்பாக ஆகிவிடும் - நண்பர்கள் வ்ட்டம் சுருங்கும் - நம்மால் நன்மை அடைந்தவர்கள் நம்மைக் கண்டும் காணாதது போல் செல்வர் - நாமும் வங்கிக்குச் சென்று சுய ப்ராணம் பாடுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகி விடும்.

    இதெல்லாம் இயல்புதான்

    நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொன்னபடி அறை என மாற்றிவிட்டேன்.

      நீக்கு
  7. பறவைகள் மற்றும் மலர்களை தரம் பிரிக்கும் சக்தி இருந்தால் போதும் ஐயா... நான் தளர்ந்து விட மாட்டோம்... உங்களின் காலமே இப்படி என்றால் இப்போது இருக்கும் சுய நல காலத்தை யோசிக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.. நல்ல பதிவு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி எழில் அவர்களே! நீங்கள் விசனப்படுவது சரிதான். இனி வருங்காலம் சுயநலம் பேணும் காலமாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  8. இங்கு வந்து பாருங்களேன். பயனுள்ளவற்றை பகிர்கிறேன்.

    https://plus.google.com/106911580216580723243/posts

    பதிலளிநீக்கு
  9. இங்கு வந்து பாருங்களேன். பயனுள்ளவற்றை பகிர்கிறேன்.

    http://www.suthanthira-menporul.com/

    https://plus.google.com/106911580216580723243/posts

    பதிலளிநீக்கு
  10. போட்டோஷாப் பாடங்கள் என்றாலே நினவுக்கு வருவது

    http://tamilpctraining.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி திரு மென்பொருள் பிரபு அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளங்களில் சுதந்திர மென்பொருள் பற்றிய வலைத்தளம் எனக்கு பரிச்சியமான ஒன்று. மற்ற தளங்களை அவசியம் சென்று பார்க்கிறேன்.

      நீக்கு
  11. நீங்கள் ஔவையின் இன்னொரு பாடல்,

    “மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
    இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
    கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
    உற்றார் உலகத் தவர்”

    இப்படிப்பட்ட இணைய உறவுகள் உங்களுக்கு வாய்த்தனரே ஐயா

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ஔவையாரின் இன்னொரு பாடலை தந்தமைக்கு நன்றி! வங்கியில் பணியாற்றியபோது என்னோடு பணிபுரிந்தவர்களில் பலர் இன்னும் என்னை மறக்காமல் (அண்டை மாநிலத்தில்உள்ள) அவர்கள் வீட்டு திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களைத்தான் அல்லி, தாமரை போன்ற நண்பர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
      நீங்கள் சொல்வது சரிதான். வலையுலகம் வந்தபின் காணாமலேயே என்னோடு நட்பு கொண்ட இணைய உறவுகள் பலர். நான் கொடுத்துவைத்தவன்.

      நீக்கு