திங்கள், 15 ஜூன், 2009

எனக்குப்பிடித்த பாடல்கள் 6

பசி வந்திட பத்தும் பறந்து போம் என்பது பழமொழி.
என்னதான் வேலையில் மூழ்கி இருந்தாலும் வேளா வேளைக்கு சாப்பிடாவிட்டால் வயிற்றுக்குள் போராட்டமே நடக்கும் என்பதுதான் உண்மை.

அதனால் தான் 'வயிற்றுக்கு சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்றான் தேசியக்கவி பாரதி. நாம் மாய்ந்து மாய்ந்து உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான்.

'ஒரு சாண் வயிறே இல்லாட்டா, உலகினில் ஏது கலாட்டா?' என்பதும் 'எல்லாமே வயிற்றுக்கு தாண்டா' என்பதும்தான் நிதர்சனம்.

ஆனால் நாம் உணவு கிடைக்கும்போதெல்லாம் நம்மால் வயிற்றை நிரப்பிக்கொள்ளமுடியாது.காரணம் நமது வயிற்றின் கொள்ளளவு 946 ml தான் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே கொள்ளளவுக்கு மேல் நம்மால் சாப்பிடமுடியாது. அப்படி அளவுக்கு மீறி சாப்பிட்டால் அவஸ்தைதான்.

அதனால்தான் வள்ளலார் 'பசித்திரு' என்றார்.ஆனாலும் மார்க் ட்வைன் வேடிக்கையாய் சொல்லுவார். " நீங்கள் விரும்புவதை சாப்பிடுங்கள். சாப்பிட்ட உணவு உள்ளே சென்று போராடட்டும்" என்று!

நம்முடைய ஔவை பாட்டிக்குகூட இந்த உணவு உண்ணும் விஷயத்தில் போராட்டம் இருந்தது போலும். ஔவைப்பாட்டி உணவு கிடைக்காதபோது பசியை பொறுத்துக்கொண்டும் , கிடைக்கும்போது வேண்டியமட்டும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் வாழ தன வயிறு ஒத்துழைக்கவில்லையே என
ஆதங்கத்தில்

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

என வயிற்றோடு வாழ்தலே அரிது என்கிறார்.

ஆனால் வயிறு என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்தலே அரிது என நம் பாட்டிக்கு தெரியாதா என்ன!

4 கருத்துகள்:

  1. நினைத்துப்பார்ப்பது மறந்து விட்டதா என்ன?

    பதிவுகளில் பகிர்ந்துகொள்வதில் ஏன் இவ்வளவு இடைவெளி?

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்,
    எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி. எனது மகளின் திருமணம் ஆகஸ்ட் 19 ல் நடந்ததால் கடந்த இரண்டு திங்களாக என்னால் 'திரும்பிப்ப்பார்க்க' இயலவில்லை. இன்னும் ஓரிரு வாரத்தில் எனது எண்ணங்களை பதிவு செய்ய இருக்கிறேன்.

    தங்களின் ஊக்கத்திற்கு நன்றி பல.

    வே.நடனசபாபதி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.

    இதோ அந்தப் பத்து,

    மானம் குலம்கல்வி வன்மை அறிவுடைமை
    தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திடப் போகும் பறந்து.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! அந்த பத்து என்ன என்பதை பகிர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு