திங்கள், 27 ஜூன், 2011

நினைவோட்டம் 49

என் அண்ணன் திரு சபாநாயகம்,நான் முன்பே
சொல்லியிருந்தது போல ஒரு சிறந்த ஓவியரும் கூட.
அவர் வண்ணப் படங்கள் மற்றும் கருப்பு வெள்ளை
படங்கள் வரையும்போது அருகில் இருந்து கவனித்ததும்
உண்டு.

அதனால் தானோ என்னவோ எனக்கும் படம்
வரைய ஆசை வந்தது போலும்.

அவர் Indian ink ல் வரைந்த புகழ் பெற்ற தத்துவ ஞானி
Bertrand Russell அவர்களின் படமும், எங்களது அம்மா
மற்றும் அப்பா புகைப் படங்களைப்பார்த்து Indian ink ல்
வரைந்த படங்களும் இன்றைக்கும் அவரது
ஓவியத்திறமையை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.

அவரது படத்தையே கூட சில ஆண்டுகளுக்கு முன்
வரைந்து இருக்கிறார்.

அவர் வரைந்தது போல, நானும் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் முதலாண்டு வேளாண்
அறிவியல் படிக்கும்போது, எங்களது துறை வெளியிட்ட
(1962-63) ஆண்டு மலருக்காக, மகாத்மா காந்தி
அவர்களின் படத்தை Indian ink ல்
வரைந்து கொடுத்தேன்.

அந்த படத்தின் கீழே தேசியக்கவி பாரதியின் வைர வரிகளான

‘பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை,
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!!


என எழுதிக்கொடுத்தேன்.

ஆண்டுமலர் கையில் வந்தபோது, நான் வரைந்த
படத்தை அச்சில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை
விவரிக்க இயலாது. துரதிர்ஷ்டமாக, அந்த ஆண்டு
மலரை பாதுகாக்க மறந்துவிட்டேன்.

எனது அண்ணன் ஒரு புகைப்பட கலைஞரும் கூட.
எங்கள் வீட்டு திருமணங்களில் புகைப்படம் அவர்தான்
எடுப்பார். வீட்டிலேயே புகைப்பட சுருள்களை கழுவி
படமாக்க ‘Dark Room’ வைத்திருந்தார்.

வீட்டில் ‘Enlarger’ ம் வைத்திருந்தார். அவர் எடுத்த
படங்களை கழுவி ‘பிரிண்ட்’ போடும்போது கூடவே
இருந்து பார்த்திருக்கிறேன். எனது திருமண
புகைப்படங்கள் கூட அவர்தான் எடுத்தார். ஏனோ
எனக்கு அந்த கலைமேல் எனக்கு நாட்டம்
ஏற்படவில்லை.

நான் 9 வது படிக்கும்போது எங்கள் பள்ளியில், அரசின்
ஐந்தாண்டு திட்டத்தைப்பற்றி பேச
மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்திருந்தார்கள்.
எனக்கு அதில் பங்கேற்க ஆசையாக இருந்தது. எனவே
நானும் அதில் பேச பெயர் கொடுத்துவிட்டு, பின்பு
என் அண்ணனிடம் நான் பேசுவதற்கான பேச்சை
தயார் செய்து தருமாறு கேட்டேன்.

காரணம் நான் முன்பே எழுதியிருந்தது போல
என் அண்ணன் சிறந்த பேச்சாளரும் கூட. அப்போதே
அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து, அவர்களது
இலக்கிய மன்றங்களில் பேச அழைத்திருக்கிறார்கள்.
(இன்றைக்கும் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு
பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.)

அவரும் நான் பேச வேண்டிய பேச்சை
எழுதிக்கொடுத்தார்.அதை,மனப்பாடம் செய்து
அவரிடம் பேசிக்காட்டியபோது, போட்டியில் எவ்வாறு
ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் எனப் பயிற்சி
கொடுத்தார். போட்டியில் என்னைப்போலவே எனது
வகுப்புதோழர் திரு பழமலை(கவிஞர் த.பழமலய்)யும்
கலந்துகொண்டார்.

குறிப்பிட்ட நேரத்தில்,நானும்,நண்பர் பழமலையும்
மற்றும் சிலரும் நடுவர்கள் முன்னாலும்,
பார்வையாளர்களாக அமர்ந்திருந்த எங்கள் பள்ளி
மாணவர்கள் முன்னாலும் பேசினோம்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது அரியலூரில்,மாணவர்கள்
முன்னால் பாட்டு ஒப்புவித்தல் போட்டியில்
கலந்துகொண்டு பரிசு பெற்றிருந்தாலும், இந்த
போட்டியில் பேசும்போது ஏதோ ஒரு நடுக்கம்
இருந்தது உண்மை.

ஆனால் என் அண்ணன் சொல்லிக்கொடுத்தது போல்
எப்படியோ பேசி சமாளித்துவிட்டேன்.

போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டபோது,
நண்பர் பழமலைமுதலாவதாகவும்,நான்
இரண்டாவதாகவும் வந்திருந்தோம்.

எங்கள் இருவருக்கும் ‘Writer’ ‘பேனா’ பரிசாக கொடுத்தார்கள்.



நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

2 கருத்துகள்:

  1. அப்போது writer பேனா பரிசாகக் கிடைத்ததால் இப்போது ஒரு writer ஆகி விட்டீர்கள்!நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே1

    பதிலளிநீக்கு