புதன், 1 ஜூன், 2011

எல்லாமே நூறு தான்!!!!

எண் 100 என்பது ஒரு விசித்திரமான எண்.கணித
வல்லுனர்களைக் கேட்டால் அது விழுக்காடுகளின்
அடிப்படை என்பார்கள்.

நல்ல நீர் மற்றும் கடல் நீரின் கொதி நிலை கூட
100 டிகிரி செல்ஷியஸ்‌ என்றே
சொல்லப்படுகின்றது.

பல நாடுகளின் நாணயங்கள் கூட நூறு
பகுதிகளாகத்தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஏன் ஆண்டுகளை பிரிக்கும்போது கூட நூறு நூறு
ஆண்டுகளாக பிரித்து நூற்றாண்டு என்கிறோம்.

நூறு என்கிற எண்ணுக்கும் நமக்கும் ஏதோ சம்பந்தம்
இருக்கிறது என நினைக்கிறேன். நாம் கூட ஒருவரை
வாழ்த்தும்போது கூ.ட ‘‘நூறாண்டுகாலம் நோய்
நொடியின்றி வாழ்க’ என்றுதான் வாழ்த்துகிறோம்.

புள்ளி விவரங்களைக்கூட நூற்றுக்கு இத்தனை
விழுக்காடு என்றே சொல்கிறோம். மதிப்பெண்கள்
போடும்போது கூட நூறை அதிக பட்சமாக வைத்தே
கணக்கிடுகிறோம்.

அவ்வளவு ஏன் புதிய ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்கள்
கழித்தே அதனுடைய செயல்பாடுகள் குறித்து அலசப்படுகிறது.

திரைப்படங்கள் கூட நூறு நாள் ஓடினால்தான்
(ஓட்டினால் அல்ல) வெற்றிபடங்களாக
ஒத்துக்கொள்ளப்படுகின்றன. நான் சொல்வது
அந்த காலத்தில். இப்போதெல்லாம் ஒரு படம்
25 நாட்கள் ஓடுவதே ஒரு சாதனைதான்!

அவசர போலீஸ் உதவிக்கு நாம் கூப்பிடும் எண்ணும்
கூட 100 தான்.

ஒரு பொருளின் தரத்தை குறிப்பிடும்போது கூட நூறு
சதம் சுத்தமானது என சொல்வதன் காரணம் அது
முழுமையானது என்ற பொருளில்தான்.

தமிழில் அந்த காலத்தில் நூறு எண்ணிக்கை கொண்ட
பாடல்கள் இயற்றப்பட்டு அவை சதகம் என
அழைக்கப்பட்டன.(சதகம் என்றால் வடமொழியில்
நூறு உள்ளடக்கியது என்று பொருள்.)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில்
எழுந்தருளியுள்ள அருள்மிகு அறப்பளீஸ்வரரைப்பற்றி
பாடப்பட்ட அறப்பளீசுவர சதகம், வாழ்வியலைப்பற்றி
கூறும் குமரேச சதகம் போன்றவை இவற்றுள்
அடங்கும்.

100 ஐ பற்றி எழுதும்போது, ஜெர்மன் கணித மேதை
திரு Carl Friedrich Gauss அவர்களைப் பற்றி படித்த ஒரு
செய்தி நினைவுக்கு வருகிறது. திரு கார்ல் சிறிய
வயதிலேயே ஆச்சரியப்படத்தக்க திறமை உடையவராய்
இருந்தாராம். பள்ளியிலே இவர் மிகவும் சூட்டிகையாய்
இருந்ததால் இவரை ‘சமாளிப்பது’ ஆசிரியர்களுக்கு ஒரு
சவாலாம்.

ஒரு தடவை இவரிடம் கணித ஆசியர் ஒன்றிலிருந்து
நூறு வரை கூட்டி சொல்ல சொன்னாராம். காரணம்
அதைக் கூட்டி சொல்ல நேரம் ஆகும். அதுவரை அவரது
‘தொந்தரவு’ இல்லாமல் இருக்குமே என்றுதான்.

ஆனால் திரு கார்ல் ஒரு நிமிடத்துக்குள்ளேயே எழுந்து,
‘சார். நான் நீங்கள் சொன்னபடி செய்துவிட்டேன்.
கூட்டலின் மதிப்பு 5050’ என்றாராம்.

ஆசிரியருக்கோ ஆச்சர்யம்.’எப்படி இவ்வளவு
சீக்கிரத்தில் கூட்டினாய்’ என்றாராம்.

அதற்கு அவர், ‘சார். 1 யும் 100 யும் கூட்டினால் 101,
2 யும் 99 யும் கூட்டினால் 101,அதுபோல் 3 யும் 98 யும்
கூட்டினால் 101, 50 யும் 51 யும் கூட்டினால் 101.
ஆகமொத்தம் ஒன்றிலிருந்து நூறுக்குள் 50, 101 கள்
கிடைக்கும். ஆகவே 101 யும் 50 யும் பெருக்கினால்
வரும் விடை 5050’ என்றாராம்.

ஆசிரியர் மூர்ச்சை போடாத குறைதான்.

என்ன இது இந்த பதிவில் ஒரேயடியாய் 100 ஐ பற்றி
எழுதியுள்ளேனே என நினைக்கலாம்.

வேறொன்றுமில்லை.இது என்னுடைய நூறாவது பதிவு!!!

ஒருவழியாக 100 பதிவை எழுதிவிட்டேன் என
நினைக்கையில் மகிழ்ச்சியே.

2004 ஆகஸ்டில் பணி நிறைவு பெற்று சென்னை
வந்தவுடன், இணையத்தில் உள்ள தமிழ்
பதிவுகளை படிக்க நேரம் கிடைத்தது. பல
தரப்பட்ட பதிவுகளை படித்தபோது ஏன் நானும்
என்னுடைய அனுபவங்களை பதிவேற்றக்கூடாது
என்ற எண்ணம் வந்தது. ஆனால் எப்படி பதிவு
இடுவது எனத்தெரியாமல் சில நண்பர்களைக்
கேட்டபோது உதவுகிறேன் என்றார்களே தவிர,
வேலைப்பளு காரணமாகவோ என்னவோ உதவவில்லை.

அந்த சமயத்தில் நண்பர் திரு. மஸ்தூக்கா அவர்களின்
அதிரை வலைப்பதிவில் சொந்தமாக வலைப்பதிவு
தொடங்குவது எப்படி என்ற தொடரைப்படித்ததும்
தைரியமாக ‘நினைத்துப்பார்க்கிறேன்’
என்ற இந்த தொடரை தொடங்கிவிட்டேன்.

என்னுடைய அனுபவங்களை எழுதும்போது, அதை
படிப்பவர்களுக்கு அலுப்பாக இருக்கக்கூடாது என்பதற்காக
இடையிடையே வெவ்வேறு தலைப்புகளிலும் பதிவு
இட்டிருக்கிறேன்.மேலும் பதிவு எழுது முன்பே, எனது
பதிவில் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது
என்றும், கூடியவரையில் அரசியல் கலக்கக்கூடாது
என்றும், முடிவெடுத்து அதுபோலவே பின்பற்றியும்
வருகிறேன்.

இதுவரை எனது பதிவைப்படித்து பின்னூட்டம் இட்டு
என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும்,
பதிவைப்படித்துவிட்டு நேரம் குறைவு காரணமாகவோ
அல்லது வேறு காரணங்களாலோ பின்னூட்டம் இடாமல்
சென்றவர்களுக்கும், இனியும் படிக்க இருப்பவர்களுக்கும்
கோடானுகோடி நன்றிகள்.

இந்த நேரத்தில் இந்த வலைப்பதிவை தொடங்க
கிரியா ஊக்கியாக இருந்த நண்பர் திரு.மஸ்தூக்கா
அவர்களுக்கு திரும்பவும் என் மனமார்ந்த
நன்றிகள் பல.



பதிவேற்றம் தொடரும்

11 கருத்துகள்:

  1. நூறைப் பற்றி நூறாவது பதிவில் எழுதிய உங்களுக்கு மதிப்பெண் நூற்றுக்கு நூறு!
    தொடருங்கள் பயணத்தை!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும், வாழ்த்துக்கும், தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கும் நன்றிகள் திரு சென்னை பித்தன அவர்களே!.

    பதிலளிநீக்கு
  3. நூறில் இத்தனை உள்ளதா ? முக்கியமான ஒன்று விடுபட்டு விட்டது .. மட்டை பந்து விளையாட்டில் கூட நூறு ஓட்டங்கள் எடுத்தல் மிகவும் போற்றப்பட்டு வருகிறது .... நிற்க தங்கள் பதிவு நூறு முறை படிக்கலாம் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! நீங்கள் கூறியதுபோல் மட்டை பந்து விளையாட்டிலும் 100 ஓட்டம் எடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!.

    பதிலளிநீக்கு
  6. நூறு பதிவை முடித்துள்ள உங்களுக்கு என் வாழ்த்துகள்.நூறாவது பதிவிலும் சில விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. நூறாவது இடுகையிலும் நன்றியுடன் எம்மை நினைவுகூர்ந்த தங்கள் உயர்ந்த பண்பாடும், இடப்படும் ஒவ்வொரு கருத்துரைக்கும் உடனுக்குடன் நன்றி கூறும் தங்கள் நாகரிகமும், கடந்த கால நினைவுகளை படிப்பவருக்கு சலிப்பு ஏற்படாதவாறு பக்குவமாக வழங்கி வரும் தங்கள் எழுத்து நடையும்...... தமிழ் வலைப்பதிவர் உலகம் தங்களிடமிருந்து நியை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது அய்யா

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்கிறார் அய்யன் வள்ளுவர். அதைத்தான் செய்திருக்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு