வியாழன், 7 ஜூலை, 2011

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

நண்பேன்டா-தொடர் பதிவு

என் அருமை நண்பர் திரு சென்னை பித்தன் அவர்களது
அன்பான அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவை
தொடர்கிறேன்.

என் நண்பர்கள் வட்டம் அடையார் ஆலமரத்தின்
கிளைகளப் போல் படர்ந்து விரிந்தது. எங்கள் ஊரில்
உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்தபோதும், பின்
அரியலூர், பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம்
உயர்நிலைப்பள்ளிகளில் படித்தபோதும், திருச்சி
புனித வளவனார் கல்லூரியில்(St.Joseph’s college)
புகுமுக வகுப்பு படித்தபோதும், அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல்
நான்காண்டுகள் படித்தபோதும் கிடைத்த நண்பர்கள்
ஏராளம்.

மாநில வேளாண் துறை,மைய அரசின் நிறுவனமான
தேசிய விதைக்கழகம், பொதுத்துறை வங்கியான
சிண்டிகேட் வங்கிஆகிய நிறுவனங்களில் பணி
ஆற்றியபோது,தலைஞாயிறு, தார்வார்,கதக்,புது தில்லி,
பெங்களூரு, மணிப்பால்,பொள்ளாச்சி,சென்னை,கடலூர்,
சேலம், கோட்டயம்,கோயம்புத்தூர்,கண்ணூர் போன்ற
இடங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது எனக்கு கிடைத்த நண்பர்கள் அநேகம்.

அனைவர் பற்றியும் எழுத ஆசை. ஆனால் அது
முடியாது என்பதால், என் நண்பர்களில் சிலர் பற்றி
எனது‘நினைவோட்டம்’தொடரில் எழுதி வருகிறேன்.
இந்த தொடர் பதிவில் மேலும் சிலரைப்பற்றி எழுத
நினைக்கிறேன்.

1.திரு கோ.இராதாகிருஷ்ணன். எனது பக்கத்து
வீட்டுக்காரரான இவர் என்னுடைய ஆரம்பப்பள்ளி
நண்பர். பள்ளி சென்று வந்ததும் தெருவில் நாங்கள்
விளையாடாமல் இருக்கமாட்டோம்.

கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் ஓடும்
வெள்ளாற்றுக்கு சென்றதும்,போகும் வழியில் உள்ள
மாமரத்தில், காவல்காரனுக்கு தெரியாமல் கல்லால்
அடித்து எனக்கு மாம்பழம் அவர் பறித்துக் கொடுத்ததும்,
இருட்டும் வரை ஆற்றின் மணலில் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பியதும்
மறக்கமுடியாத நினைவுகள்.

ஊரில் விவசாய பணிகளை செய்து வரும் அவர்,
இன்றைக்கும் ஊருக்கு செல்லும்போது
வாஞ்சையுடன் ‘எப்படி இருக்கீங்க?’
எனக்கேட்டுக்கொண்டு வந்து பேசி செல்வார்.நான்
முதன் முதல் கர்நாடகா சென்றுவிட்டு ஒருவருடம்
கழித்து வந்தபோது அவர் கேட்ட கேள்வி(!)யும்
அதை எதற்காக கேட்டார் என்பதையும்
‘நினைவோட்டத்தில்’ எழுத இருக்கிறேன்.

2. திரு சு.கிருஷ்ணன்.விருத்தாசலம் பள்ளியில் எனது
நெருங்கிய நண்பர் தற்சமயம் விருத்தாசலத்தில்
குழந்தை நல மருத்துவராக சேவை செய்து வருகிறார்.
இவரைப்பற்றி நினைவோட்டம் 40 ல் விரிவாக எழுதியுள்ளேன்
.
3.திரு இராம.நாச்சியப்பன்.என்னுடன் நான்கு ஆண்டுகள்
வேளாண் அறிவியல் படித்தவர். இரண்டு ஆண்டுகள்
விடுதியில் எனது அறை நண்பராகவும் இரண்டு
ஆண்டுகள் பக்கத்து அறை நண்பராகவும்
இருந்தவர்.பின்பு பூச்சியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்று வேளாண்
கல்லூரியில் பேராசிரியாக இருந்து ஓய்வு
பெற்று சிதம்பரத்தில் தற்சமயம் ஆலோசகராக
பணியாற்றி வருகிறார்.

இவருடன் நான் சண்டைபோடாத நாட்களே இல்லை.
காரணம் அறையில் எல்லாவற்றையும் ஒழுங்காக
வைக்க வேண்டும் என்பார். நான் வேண்டும் என்றே
எல்லாவற்றையும் கலைத்துப்போடுவேன். எவ்வளவு
சண்டை போட்டாலும் உடனே சமாதானமாகிவிடுவோம்.
அவர் ஊருக்கு (காரைக்குடிக்கு அருகில் உள்ள
ஆத்தங்குடி)சென்றுவரும்போது, நெய்யில் செய்த
சீடைகளையும் ‘சீப்பு சீடை’ எனப்படும்
சீப்பணியாரத்தையும் கொண்டுவந்து அன்புடன்
தருவார்.

3. திரு V.R. அரங்கநாதன்.வணிகவியலில் முதுகலை
பட்டம் பெற்ற இவர் தார்வாரில் வேலை செய்யும்போது
என்னோடு பணிபுரிந்தவர். பின்பு பெங்களூருவிலும்
என்னோடு வேலை செய்தவர். இருவரும்
சேஷாத்ரிபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தபோது,
சமைத்து சாப்பிட்டோம். அவர் சமைப்பார்.
நான் சாப்பிடுவேன்!!

Cost Accountant தேர்வு எழுத வேண்டும் என்ற ஆசையை
மனதில் விதைத்தவர் இவர். பின்னால் வங்கியில் சேர்ந்த
பிறகு C.A.I.I.B தேர்வு எழுத அவரும் ஒரு காரணம்.
இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

4.திரு S.சிவக்குமார்.புது தில்லியில் ‘கரோல்பாக்’கில்
இராமநாத ஐயர் மெஸ்ஸில் தங்கியிருந்த போது
அறைத்தோழனாக இருந்தவர். எனக்கு எல்லா
விதத்திலும் உதவியாக இருந்தவர்.எனது
சுக துக்கங்களில் பங்கேற்றவர். இவரை என்னால்
வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது.
இவரைப்பற்றி விவரமாக பின் எழுதுவேன்.

5.திரு V. கோவிந்தராஜன். பொள்ளாச்சியில் வங்கியில்
பணிபுரிந்தபோது இவர் ‘ஸ்டேட் பாங்க்’கில் பணிபுரிந்து
வந்தார். நெருக்கமான நண்பர். வேளாண் அறிவியல்
படித்த எனக்கு வணிகவியல் (Accountancy) பாடம்
சொல்லிக்கொடுத்து C.A.I.I.B தேர்வில் முதல்
தடவையிலேயே வெற்றி பெற காரணமாக இருந்தார்.
இவரைப்பற்றியும் பின் விரிவாய் எழுதுவேன்.

6. திரு க.சு. பரமேஸ்வரன். எங்கள் வங்கியில் எனது
துறையில் ஒன்றாக பணியாற்றியவர்.உடுப்பியில்
இருந்தபோது இவர் எங்களுக்கு செய்த உதவியை
மறக்கமுடியாது. தற்போது சென்னையில் உள்ளார்.
தினம் காலையில் தொலை பேசியில்
தொடர்புகொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்.

இன்னும் பல நண்பர்கள் பற்றி எழுத ஆவல். நிச்சயமாக
அவர்கள் பற்றி எழுதுவேன். இந்த தொடரை எழுத
அழைத்த நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கட்கு
நன்றி உரித்தாகுக.

இந்த தொடரை பின் தொடர நான் அழைப்பது:

1. Nighthawk .திரு க.வாசுதேவன்

2. இளந்தென்றல் திரு முரளி நாராயண்

4 கருத்துகள்:

  1. //கோடைக்காலங்களில் எங்கள் ஊரில் ஓடும்
    வெள்ளாற்றுக்கு சென்றதும்,போகும் வழியில் உள்ள
    மாமரத்தில், காவல்காரனுக்கு தெரியாமல் கல்லால்
    அடித்து எனக்கு மாம்பழம் அவர் பறித்துக் கொடுத்ததும்,
    இருட்டும் வரை ஆற்றின் மணலில் அமர்ந்து
    பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பியதும்
    மறக்கமுடியாத நினைவுகள். //நினைவுகள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி திரு Niroo அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. நண்பர்களை நினைவு கூர்ந்த விதம் அருமை.அன்பு நண்பர்கள்,சுகமான நினைவுகள்,இனிய பகிர்வு!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், கருத்துக்கும், நண்பர்களை இந்த பதிவு மூலம் நினைக்க வைத்ததற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு